முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.030.திருஅரதைப்பெரும்பாழி
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.030.திருஅரதைப்பெரும்பாழி
3.030.திருஅரதைப்பெரும்பாழி
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பரதேசுவரர்.
தேவியார் - அலங்காரநாயகியம்மை.
3118 | பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.1 |
இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி, கோவணமும் புலித்தோலும் அணிந்து, பூதகணங்கள் சூழ்ந்து, முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி, திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும்.
3119 | கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும் பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார் இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும் பெயர ர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.2 |
கயல்மீன் போன்றும், சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மையுடையவர் சிவபெருமான். அவருடைய தன்மைகள் வானவர்களும், அடியவர்களும் எண்ணுதற்கு அரிய. பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
3120 | கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின் மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.3 |
அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர். கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர். அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
3121 | மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார் மூவிண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள் பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும் பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.4 |
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர். வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர். மெய்ப்பொருளாகியவர். பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவர். அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே.
3122 | மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக் கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும் நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல் பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.5 |
சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர், மானும், வெண்மழுவும், சூலமும் ஏந்திய கையர். கார் காலத்தில் மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர். சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே.
3123 | புற்றர வம்புலித் தோலரைக் கோவணம் தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப் பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.6 |
புற்றில் வாழும் பாம்பையும், புலித்தோலையும், கோவணத்தையும் இடையில் அணிந்து, இரவில் நடனமாடும் சிவபெருமான், பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர். அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
3124 | துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி கணையினான் முப்புரம் செற்றவர் கையினில் பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.7 |
அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும், திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர், ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும், அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும், கையினில் இளமான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திரு அரதைப் பெரும்பாழியே ஆகும்.
3125 | சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல் அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும் பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.8 |
தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரியதோள்களும், தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான், அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந் தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
3126 | வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும் ப எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர் கரியமா லோடயன் காண்பரி தாகிய பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.9 |
வரிகளையுடைய பாம்பு, எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர். கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர். கருநிறத் திருமாலும், பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமையுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே.
3127 | நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும் ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர் சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர் பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே |
3.030.10 |
சமணர்களும், புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர். அவற்றை ஏலாது அழகுடையவ ராய், ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே.
3128 | நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப் பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச் சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய் ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே |
3.030.11 |
கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத்தோரால் போற்றி வணங்கப்படும் திரு அரதைப் பெரும்பாழியைப் போற்றி, புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 28 | 29 | 30 | 31 | 32 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருஅரதைப்பெரும்பாழி - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தைப்பெரும், யில்அர, கோயில், பாழியே, பெரும்பாழியே, சிவபெருமான், கொண்டருளுவது, திருஅரதைப், இறைவர், கொண்டு, விளங்குபவர், அப்பெருமான், அரதைப், விரும்பி, லவ்வுடை, சூடியவர், பிறைச்சந்திரனைச், பாகமாகக், செற்றவர், கையினில், வீற்றிருந்தருளும், போற்றி, சடையில், தாங்கிய, முப்புரங்களை, மார்பினர், திருமேனியில், உமாதேவியைத், அணிந்து, போன்றும், பூதகணங்கள், சூழ்ந்து, சுடுகாட்டில், நாள்தோறும், கோவணம், பெருமையுடைய, திருமுறை, திருச்சிற்றம்பலம், யானையின், திருஅரதைப்பெரும்பாழி, அணிந்த