முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.020.திருப்பூவணம்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.020.திருப்பூவணம்
3.020.திருப்பூவணம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பூவணநாதர்.
தேவியார் - மின்னாம்பிகையம்மை.
3009 | மாதமர் மேனிய னாகி வண்டொடு போதமர் பொழிலணி பூவ ணத்துறை வேதனை விரவலர் அரண மூன்றெய்த நாதனை அடிதொழ நன்மை யாகுமே |
3.020.1 |
உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக்கொண்டு, வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும்.
3010 | வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை ஆனநல் லுருமறை அங்கம் ஓதிய ஞானனை அடிதொழ நன்மை யாகுமே |
3.020.2 |
வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்தோங்கிய, வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள அழகிய சோலையையுடைய திருப்பூவணத்தில் வீற்றிருந்தருளுகின்ற, நலம் தரும் நான்கு வேதங்களையும், அவற்றின் ஆறு அங்கங்களையும் ஓதியருளிய ஞானவடிவினனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, எல்லா நலன்களும் உண்டாகும்.
3011 | வெந்துயர்
உறுபிணி வினைகள் தீர்வதோர் புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை அந்திவெண் பிறையினோ டாறு சூடிய நந்தியை அடிதொழ நன்மை யாகுமே |
3.020.3 |
கொடுந்துன்பம் தரும் நோயும், அதற்குக் காரணமான வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை நிச்சயித்து, அவனைத் தொழுது போற்றுகின்றவர்கள் வசிக்கும் திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்பிறையோடு கங்கையும் சூடிய சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, எல்லா நலன் களும் உண்டாகும்.
3012 | வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப் பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை நாசனை யடிதொழ நன்மை யாகுமே |
3.020.4 |
நறுமணம் கமழும் மலர்மாலைகளை அணிந்துள்ள மார்பில், திருவெண்ணீற்றினைப் பூசி, சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான், மலர்புனைந்து ஏத்தும் அன்பர்களின் வினையைப் போக்குவான். அப்பெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நன்மைகளும் உண்டாகும்.
3013 | குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை பொருந்திய பொழிற்றிருப் பூவ ணத்துறை அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த பெருந்தகை அடிதொழப் பீடை யில்லையே |
3.020.5 |
குருந்து, மாதவி, கோங்கு, மல்லிகை மலர்ந்துள்ள சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அரு வலிமையுடைய அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த பெருந் தகையான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ, துன்பம் யாவும் நீங்கும்.
3014 | வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன் நறுமல ரடிதொழ நன்மை யாகுமே |
3.020.6 |
நறுமணம் கமழும் புன்னை, புலிநகக் கொன்றை முதலான மரங்கள் நிறைந்த அழகிய சோலையையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற, கோவண ஆடை தரித்த, அழிதலில்லாத கொள்கைகளை உடைய சிவ பெருமானின் நறுமணமிக்க மலர் போன்ற திருவடிகளைத் தொழ, எல்லா நலன்களும் உண்டாகும்.
3015 | பறைமல்கு
முழவொடு பாட லாடலன் பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன் அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே |
3.020.7 |
பறையின் ஒலியும், முழவின் ஓசையும் ஒலிக்கப் பாடி ஆடுபவன் இறைவன். அமைதி தவழும் சோலையையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவன். நால்வேதங்களையும் பாடுபவன். உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அப்பெருமானின் ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளைத் தொழத் துன்பம் சிறிதும் இல்லை.
3016 | வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன் பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப் பரவிய அடியவர்க் கில்லை பாவமே |
3.020.8 |
கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிமை வாய்ந்த அரக்கனான இராவணனின் நீண்ட முடிகளைத் தம் காற் பெருவிரலை ஊன்றி அடர்த்தவர் சிவபெருமான். தம் திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றினைப் பூசி, ஒலிக்கின்ற கங்கையைத் தம் சடைமுடியின் ஒரு பக்கத்தில் அணிந்து திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களின் பாவம் நாசமாகும்.
3017 | நீர்மல்கு மலருரை வானும் மாலுமாய்ச் சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர் போர்மல்கு மழுவினன் மேய பூவணம் ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே |
3.020.9 |
நீரில் வளரும் தாமரைமலரில் வீற்றிருக்கின்ற பிரமனும், திருமாலும், தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப் படுத்தும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு இயலாதவராயினர். போர்த் தன்மையுடைய மழுப்படையுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூவணத்தை அழகிய மலர் கொண்டு போற்றுதல் இன்பம் தரும்.
3018 | மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும் குண்டருங் குணம்அல பேசுங் கோலத்தர் வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம் கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே |
3.020.10 |
மண்டை என்னும் ஒருவகைப் பாத்திரத்தை ஏந்திப் பிச்சையெடுத்துத் திரிகின்ற புத்தர்களும், சமணர்களும், இறையுண்மையை உணராது கூறும் பயனற்ற பேச்சைக் கேளாது, வண்டுகள் மொய்க்கின்ற வளமுடைய சோலைகள் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றுதல் நம் கடமையாகும்.
3019 | புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள் நண்ணிய அருமறை ஞானசம் பந்தன் பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே |
3.020.11 |
புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி, அழகிய, குளிர்ச்சியான சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை ஓதவல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 18 | 19 | 20 | 21 | 22 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பூவணம் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருப்பூவணம், என்னும், திருவடிகளைத், வீற்றிருந்தருளுகின்ற, ணத்துறை, திருத்தலத்தில், சிவபெருமானின், தொழுது, உண்டாகும், யாகுமே, நலன்களும், சோலையையுடைய, அடிதொழ, கோங்கு, துன்பம், மல்லிகை, அப்பெருமானின், சோலைகளையுடைய, சிவபெருமான், யாவும், நிறைந்த, தேத்தல், போற்றுதல், பூவணம், வீற்றிருக்கின்ற, திருவெண்ணீற்றினைப், ஒலிக்கின்ற, நீங்கும், கமழும், பொழிலணி, வண்டொடு, மூன்றெய்த, அழித்த, மூன்று, கோட்டைகளையும், பொழிற்றிருப், திருச்சிற்றம்பலம், மலர்புனைந், நறுமணம், மார்பில், திருமுறை, தொழுதெழு, உமாதேவியைத்