முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 3.018.திருவைகல்மாடக்கோயில்
மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 3.018.திருவைகல்மாடக்கோயில்
3.018.திருவைகல்மாடக்கோயில்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரபஞ்சமம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வைகனாதேசுவரர்.
தேவியார் - வைகலம்பிகையம்மை.
2987 | துளமதி யுடைமறி தோன்று கையினர் இளமதி யணிசடை யெந்தை யாரிடம் உளமதி யுடையவர் வைக லோங்கிய வளமதி தடவிய மாடக் கோயிலே |
3.018.1 |
இறைவன், துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன். இளம்பிறையை அணிந்துள்ள சடையன். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும்.
2988 | மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர் மையகண் மலைமக ளோடும் வைகிடம் வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச் செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே |
3.018.2 |
இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர். வேதத்தை அருளிச்செய்தவர். அவர், மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது, இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில், சிவந்த கண்ணுடைய கோச்செங்கட்சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும்.
2989 | கணியணி
மலர்கொடு காலை மாலையும் பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர் தணியணி யுமையொடு தாமும் தங்கிடம் மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே |
3.018.3 |
வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும், மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர். அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவமாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும்.
2990 | கொம்பியல்
கோதைமுன் அஞ்சக் குஞ்சரத் தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம் வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச் செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே |
3.018.0 |
பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும்.
2991 | விடமடை மிற்றினர் வேத நாவினர் மடமொழி மலைமக ளோடும் வைகிடம் மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க் குடதிசை நிலவிய மாடக்கோயிலே |
3.018.5 |
இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர். வேதங்களை ஓதும் நாவினர். அவர், இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம், இள அன்னப்பறவைகள் நடைபயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும்.
2992 | நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரிப மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில் திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே |
3.018.6 |
புனிதமான கங்கையையும் பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது, மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும்.
2993 | எரிசரம்
வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம் வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை வருமுகில் அணவிய மாடக் கோயிலே |
3.018.7 |
அக்கினியாகிய அம்பை, மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரியுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது, வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும்.
2994 | மலையன
இருபது தோளி னான்வலி தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம் மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலையன மாடக் கோயிலே |
3.018.8 |
மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து, பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது, மலர்கள் நிறைந்த சோலைகளை யுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும்.
2995 | மாலவன்
மலரவன் நேடி மால்கொள மாலெரி யாகிய வரதர் வைகிடம் மாலைகொ டணிமறை வாணர் வைகலில் மாலன மணியணி மாடக் கோயிலே |
3.018.9 |
திருமாலும், பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள, நெருப்பு மலையாய் நின்ற, வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது, பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து, வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில், மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும்.
2996 | கடுவுடை
வாயினர் கஞ்சி வாயினர் பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம் மடமுடை யவர்பயில் வைகல் மாநகர் வடமலை யனையநன் மாடக் கோயிலே |
3.018.10 |
கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும், கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும், புத்தர்களின் பிடக நூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது, மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும்.
2997 | மைந்தன
திடம்வைகல் மாடக் கோயிலைச் சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம் பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே |
3.018.11 |
அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 16 | 17 | 18 | 19 | 20 | ... | 124 | 125 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவைகல்மாடக்கோயில் - மூன்றாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - என்னும், திருவைகல், வீற்றிருந்தருளும், கோயிலே, இடமாவது, மாடக்கோயில், திருத்தலத்தில், இறைவர், சிவபெருமான், கொண்டு, வைகிடம், இறைவன், வாழ்கின்ற, வாயினர், நாவினர், வேதங்களை, மேற்குத்திசையில், திருத்தலத்திலுள்ள, கோயிலைச், திருத்தலத்தின், வைகலில், பொழிலணி, பழகுகின்ற, இருபது, அழகுபடுத்தப்பட்ட, மேருமலையை, நிறைந்த, யவர்பயில், அந்தணர்கள், மாடக்கோயிலாகும், மேற்றிசைச், கண்ணுடைய, மலைமகளான, ளோடும், அணிந்துள்ள, திருமுறை, திருச்சிற்றம்பலம், யாரிடம், மேற்குத், திசையில், தங்கிடம், மணியணி, வழிபாடு, தாமும், மாலையும், முற்காலத்தில், திருவைகல்மாடக்கோயில், உமாதேவியோடு