முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.013.திருக்கோழம்பம்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.013.திருக்கோழம்பம்
2.013.திருக்கோழம்பம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - கோகுலேசுவரர்.
தேவியார் - சவுந்தரியம்மை.
1601 | நீற்றானை
நீள்சடை மேனிறை வுள்ளதோர் ஆற்றானை யழகமர் மென்முலை யாளையோர் கூற்றானைக் குளிர்பொழிற் கோழம்ப மேவிய ஏற்றானை யேத்துமின் நும்மிட ரேகவே. |
2.013. 1 |
திருநீறு அணிந்தவன். நீண்ட சடைமுடி மீது பெருகி வந்த கங்கை ஆற்றைத் தாங்கியவன். அழகமைந்த மெல்லிய தனங்களைக் கொண்ட உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன். அத்தகையோன் பொழில் சூழ்ந்த கோழம்பம் என்னும் தலத்தில் விடை யூர்தியனாய் உள்ளான். நும் துன்பங்கள் நீங்க வேண்டு மாயின் அவனை ஏத்துங்கள்.
1602 | மையான
கண்டனை மான்மறி யேந்திய கையானைக் கடிபொழிற் கோழம்ப மேவிய செய்யானைத் தேனெய்பா லுந்திகழ்ந் தாடிய மெய்யானை மேவுவார் மேல்வினை மேவாவே. |
2.013. 2 |
கருமைநிறம் பொருந்திய கண்டத்தினன். மான் கன்றை ஏந்திய கையினன். மணம் கமழும் பொழில் சூழ்ந்த கோழம்பத்தில் விளங்கும் செம்மையன். தேன், நெய், பால் முதலியவற்றை ஆடிய மெய்யினன். அவனை இடைவிடாது நினைப்பவர் மேல் வினைகள் மேவா.
1603 | ஏதனை
யேதமி லாவிமை யோர்தொழும் வேதனை வெண்குழை தோடுவி ளங்கிய காதனைக் கடிபொழிற் கோழம்ப மேவிய நாதனை யேத்துமின் நும்வினை நையவே. |
2.013.3 |
நாம் செய்யும் குற்றங்கட்குக் காரணமானவன். குற்றம் அற்ற இமையா நாட்டமுடைய யோகியர்களால் வழிபடப் பெறும் வேதவடிவினன். வெண்குழையும் தோடும் அணிந்த செவிகளை உடையவன். விளக்கமான பொழில்கள் சூழ்ந்த கோழம்பம் மேவிய தலைவன். அவனை உம் வினைகள் நைந்து கெடுமாறு ஏத்துமின்.
1604 | சடையானைத்
தண்மல ரான்சிர மேந்திய விடையானை வேதமும் வேள்வியு மாயநன் குடையானைக் குளிர்பொழில் சூழ்திருக் கோழம்பம் உடையானை யுள்குமின் உள்ளங் குளிரவே. |
2.013.4 |
சடைமுடியை உடையவன். குளிர்ந்த தாமரை மலரில் விளங்கும் பிரமனின் தலையோட்டைக் கையில் ஏந்திய விடை ஊர்தியன். வேதமும் வேள்வியுமாய நன்மைகளை உடையவன். குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தனக்கு ஊராக உடையவன். உள்ளங்குளிர அவனை நினைவீர்களாக.
1605 | காரானைக்
கடிகமழ் கொன்றையம் போதணி தாரானைத் தையலொர் பான்மகிழ்ந் தோங்கிய சீரானைச் செறிபொழிற் கோழம்ப மேவிய ஊரானை யேத்துமின் நும்மிட ரொல்கவே. |
2.013.5 |
மேகமாக இருந்து மழை பொழிபவன். மணம் கமழும் கொன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையை அணிந்தவன். உமையம்மையை ஒருபாலாகக் கொண்டு மகிழ்ச்சி மிக்கவனாய் விளங்கும் புகழினன். செறிந்த பொழில்கள் சூழ்ந்த திருக்கோழம்பத்தைத் தன் ஊராகக் கொண்டு அதன்கண் உறைபவன். நும் இடர்கள் நீங்க அவனை ஏத்துங்கள்.
1606 | பண்டாலின்
னீழலா னைப்பரஞ் சோதியை விண்டார்கள் தம்புர மூன்றுட னேவேவக் கண்டானைக் கடிகமழ் கோழம்பங் கோயிலாக் கொண்டானைக் கூறுமி னுள்ளங் குளிரவே. |
2.013. 6 |
முற்காலத்தே ஆலின் நிழலில் இருந்து அறம் உரைத்தவன். மேலான ஒளிவடிவினன். பகைவராகிய அசுரர்களின் முப்புரங்களும் ஒருசேர வெந்தழியுமாறு செய்தவன். மணம் கமழும் திருக்கோழம்பத்தைக் கோயிலாகக் கொண்டவன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.
1607 | சொல்லானைச்
சுடுகணை யாற்புர மூன்றெய்த வில்லானை வேதமும் வேள்வியு மானானைக் கொல்லானை உரியானைக் கோழம்ப மேவிய நல்லானை யேத்துமி னும்மிடர் நையவே. |
2.013.7 |
எல்லோராலும் புகழப்படுபவன். அனல் வடிவான கணையைத் தொடுத்து முப்புரங்களை எய்தழித்த வில்லை உடையவன். வேதமும் வேள்வியும் ஆனவன். தன்னைக் கொல்ல வந்த யானையை உரித்து அதன் தோலைப் போர்த்தவன். திருக்கோழம்பத்தில் எழுந்தருளிய மங்கல வடிவினன். நும் இடர் கெட அவனை ஏத்துவீராக.
1608 | விற்றானை
வல்லாரக் கர்விறல் வேந்தனைக் குற்றானைத் திருவிர லாற்கொடுங் காலனைச் செற்றானைச் சீர்திக ழுந்திருக் கோழம்பம் பற்றானைப் பற்றுவார் மேல்வினை பற்றாவே. |
2.013. 8 |
விற்படையை உடைய வலிய இராக்கதர்களின் வலிய வேந்தனாகிய இராவணனைத் தன் அழகிய கால் விரலால் நசுக்கியவன். கொடிய காலனைச் செற்றவன். புகழ் விளங்கும் திருக்கோழம்பத்திற் பற்றுதல் உடையவன். அவன்மீது பற்றுக் கொள்வாரை வினைகள் பற்றா.
1609 | நெடியானோ
டயனறி யாவகை நின்றதோர் படியானைப் பண்டங்க வேடம் பயின்றானைக் கடியாருங் கோழம்ப மேவிய வெள்ளேற்றின் கொடியானைக் கூறுமின் உள்ளங் குளிரவே. |
2.013. 9 |
நீண்ட வடிவெடுத்த திருமாலும் பிரமனும் அறியமுடியாத வகையில் ஓங்கி நின்ற உருவத்தை உடையவன். பாண்டரங்கம் என்னும் கூத்தை ஆடும் கோலம் பூண்டவன். மணம் கமழும் திருக்கோழம்பம் மேவிய இடபக் கொடியினன். உள்ளம் குளிர அவன் புகழைக் கூறுங்கள்.
1610 | புத்தருந்
தோகையம் பீலிகொள் பொய்ம்மொழிப் பித்தரும் பேசுவ பேச்சல்ல பீடுடைக் கொத்தலர் தண்பொழிற் கோழம்ப மேவிய அத்தனை யேத்துமின் அல்லல் அறுக்கவே. |
2.013. 10 |
புத்த சமயத்தினரும், மயில் தோகையாலாகிய பீலியைக் கையில் கொண்டுள்ள பொய்ம்மொழி பேசும் பித்தர்களாகிய சமணர்களும் பேசுவன பயன்தரும் உண்மையான அறவுரைகளாகா. பெருமை பொருந்திய பூங்கொத்துக்கள் அலரும் குளிர்ந்த பொழில் சூழ்ந்த திருக்கோழம்பம் மேவிய அத்தனை அல்லல்கள் அகலப் போற்றுங்கள்.
1611 | தண்புன
லோங்குதண் ணந்தராய் மாநகர் நண்புடை ஞானசம் பந்தனம் பானுறை விண்பொழிற் கோழம்ப மேவிய பத்திவை பண்கொளப் பாடவல் லார்க்கில்லை பாவமே. |
2.013. 11 |
குளிர்ந்த நீர் மிகுந்த தண்ணிதான அழகிய தராய் என்னும் மாநகரில் தோன்றிய, எல்லோரிடமும் நட்புக்கொண்டு ஒழுகும் ஞானசம்பந்தன் சிவபிரான் உறையும் வானளாவிய பொழில் சூழ்ந்த கோழம்பத்தைப் புகழ்ந்து போற்றிய இப்பதிகப்பாடல்கள் பத்தையும் இசைபொருந்தப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கோழம்பம் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோழம்ப, சூழ்ந்த, உடையவன், பொழில், கோழம்பம், கமழும், திருக்கோழம்பம், குளிர்ந்த, வேதமும், விளங்கும், யேத்துமின், வினைகள், குளிரவே, என்னும், இருந்து, கையில், திருக்கோழம்பத்தைத், கடிகமழ், கொண்டு, காலனைச், அத்தனை, கூறுங்கள், புகழைக், உள்ளம், திருமுறை, வேள்வியு, ஏந்திய, பொருந்திய, மேல்வினை, கடிபொழிற், அணிந்தவன், நும்மிட, கொண்டவன், திருச்சிற்றம்பலம், பொழில்கள், உள்ளங்