முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 1.093.திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 1.093.திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
1.093.திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
பண் - குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது - இதுவே விருத்தாசலம்.
சுவாமிபெயர் - பழமலைநாதர்.
தேவியார் - பெரியநாயகியம்மை.
1003 |
நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை நன்று மேத்துவீர்க், கென்று மின்பமே. |
1.093.1 |
இன்றே திருமுதுகுன்றம் சென்று, அங்குள்ள இறைவரை மலரால் அருச்சித்து நின்று நல்லமுறையில் துதிப்பீராயின் உமக்கு எக்காலத்தும் இன்பம் உளதாம்.
1004 |
அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர் நித்த மேத்துவீர்க், குய்த்தல் செல்வமே. |
1.093.2 |
நீர் திருமுதுகுன்றத்துத் தலைவனாய் விளங்கும் இறைவன்மீது பக்தி செலுத்தி நாள்தோறும் வழிபட்டு வருவீராயின் உமக்குச் செல்வம் பெருகும்.
1005 |
ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று கைகள் கூப்புவீர், வைய முமதாமே. |
1.093.3 |
திருமுதுகுன்றத்துள் விளங்கும் தலைவனாகிய சிவபிரானை நீர் பலவகையான பொய்கள் இன்றி மெய்மையோடு நின்று கைகளைக் கூப்பி வழிபடுவீர்களாயின் உலகம் உம்முடையதாகும்.
1006 |
ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர் வாச மலர்தூவப், பாச வினைபோமே. |
1.093.4 |
திருமுதுகுன்றத்து ஈசனை நீர் அன்போடு மணம் பொருந்திய மலர்களால் அருச்சித்துவரின் உம் பாசங்களும் அவற்றால் விளைந்த வினைகளும் நீங்கும்.
1007 |
மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர் பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. |
1.093.5 |
அழகிய திருமுதுகுன்றத்து இறைவரைப் பணிபவர்கள், பிணிகளிலிருந்து விடுபட்டு உலகில் அமைதியோடு வாழ்வார்கள்.
1008 |
மொய்யார் முதுகுன்றில், ஐயா வெனவல்லார் பொய்யா ரிரவோர்க்குச், செய்யா ளணியாளே. |
1.093.6 |
அன்பர்கள் நெருங்கித் திரண்டுள்ள திருமுதுகுன்றத்து இறைவனை, நீர், ஐயா என அன்போடு அழைத்துத் துதிக்க வல்லீர்களாயின் இரப்பவர்க்கு இல்லை என்னாத நிலையில் திருமகள் நிறை செல்வத்தோடு உமக்கு அணியள் ஆவாள்.
1009 |
விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார் படையா யினசூழ, உடையா ருலகமே. |
1.093.7 |
திருமுதுகுன்றத்து விடை ஊர்தியை உடைய சிவபிரானை இடையீடுபடாது ஏத்துகின்றவர், படைகள் பல சூழ உலகத்தை ஆட்சிசெய்யும் உயர்வை உடையவராவர்.
1010 |
பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும் அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. |
1.093.8 |
பத்துத் தலைகளை உடைய இராவணனை அவன் கதறி அழுமாறு கால் விரலை ஊன்றி அடர்த்த திருமுதுகுன்றத்துத் தலைவனாகிய சிவபிரானை நெருங்கிச் சென்று பணிவீராக.
1011 |
இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. |
1.093.9 |
திருமால் பிரமர்களாகிய இருவரும் அறியவொண்ணாத திருமுதுகுன்றத்தில் விளங்கும் பெருமானை மனம் உருகி நினைப்பவர் பெருக்கத்தோடு வாழ்வர்.
1012 |
தேர ரமணரும், சேரும் வகையில்லான் நேரில் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே. |
1.093.10 |
புத்தர் சமணர் ஆகியோர்க்குத் தன்னை வந்தடையும் புண்ணியத்தை அளிக்காத சிவபெருமானுடைய திருமுதுகுன்றத்தை வாய்ப்பு நேரின் நீர் நின்று உள்குவீராக.
1013 |
நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன் ஒன்று முரைவல்லார், என்று முயர்வோரே. |
1.093.11 |
திருமுதுகுன்றம் சென்று நின்று பெருமை உடையவனாகிய ஞானசம்பந்தன் ஒன்றி உரைத்த இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் எக்காலத்தும் உயர்வு பெறுவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 91 | 92 | 93 | 94 | 95 | ... | 135 | 136 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமுதுகுன்றம் - திருவிருக்குக்குறள் - முதல் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - முதுகுன்றை, நின்று, திருமுதுகுன்றம், திருமுதுகுன்றத்து, முதுகுன்றைப், சென்று, சிவபிரானை, விளங்கும், அன்போடு, பொய்கள், பத்துத், தலைவனாகிய, எக்காலத்தும், திருமுறை, திருவிருக்குக்குறள், திருச்சிற்றம்பலம், மேத்துவீர்க், அத்தன், உமக்கு, திருமுதுகுன்றத்துத்