தற்கொலை
3
"ஆம், மூன்று ஆண்டுகளாக நான் அலையாத இடமில்லை.
நான் போகாத ஆபீஸ் இல்லை. விண்ணப்பம் எழுதி எழுதி கையும் சலித்துவிட்டது.
நடந்து நடந்து காலும் ஓய்ந்து விட்டது. மனைவியையும், இரண்டு குழந்தைகளையும்
காப்பாற்றியாக வேண்டும். பாங்கியில் இரண்டாயிரம் தான் பாக்கி. அதை வைத்துக்
கொண்டு எங்கேயாவது கிராமத்திற்கு போய் அவர்களாவது சௌக்கியமாயிருக்கட்டும்
என்ற முடிவுக்கு வந்தேன். இன்னும் இரண்டு வருஷம் நான் இந்த நகரத்தில்
இருந்து வேலை தேடிக் கொண்டிருந்தால், அந்தப் பணமும் தொலைந்து போய் விடும்.
பின்னர், என் மனைவி குழந்தைகளின் கதி என்ன? ஆகையினாலேயே இன்று முடிவாக
பி.ஏ. பட்டத்துக்குரிய பத்திரத்தை சர்வகலாசாலை ரிஜிஸ்ட்ராருக்கே திருப்பியனுப்பிவிட்டு,
உயிரைவிடும் துணிவுடன் புறப்பட்டு வந்தேன். நீர் அதற்குக் குறுக்கே நின்றீர்"
என்று கூறி முடித்தார் மகாதேவஐயர். ஜகந்நாதன் கொல்லென்று சிரித்தான்.
அவர்கள் பாலத்தின் மீது உட்கார்ந்திருந்தார்கள். "என் வரலாற்றை உம்மிடம்
கூறியது குறித்து வருந்துகிறேன். பிறர் துன்பத்தைக் கேட்டு சிரிக்கும்
குணமுள்ளவர் நீர் என்பதே எனக்குத் தெரியாது போயிற்று" என்று மகாதேவ ஐயர்
சற்றுக் கோபத்துடன் கூறினார்.
"தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் கூறப்போவதைக் கேட்டால் நான் சிரித்ததற்குக் காரணம் உண்டென்று நீங்களே சொல்வீர்கள். நான் சென்ற வருஷமும் இவ்வருஷமும் பி.ஏ. பரீட்சைக்குச் சென்று தவறிவிட்டேன். இதன் பொருட்டு தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்துடனேயே நானும் இங்கு வந்தேன். நீங்கள் திடுக்கிடுகிறீர்களல்லவா! எந்த இடத்தில் நீங்கள் படுத்துக்கொண்டீர்களோ, அதே இடத்தில் ஒரு நிமிஷத்திற்கு முன்பு நான் படுத்துக்கொண்டிருந்தேன். தங்களைக் கண்டு பயந்துகொண்டு கீழிறங்கினேன். பி.ஏ. பரீட்சையில் முதன்மையாகத் தேறிய தாங்கள் அப்பட்டத்தினால் ஒரு பயனுமில்லையெனக் கண்டு அதைத் திருப்பி அனுப்பி விட்டு உயிர் துறக்கத் துணிந்திருக்கையில், அப்படிப்பட்ட பட்டம் கிடைக்கவில்லையேயென்பதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்ததை எண்ணிய போது, என்னையறியாமல் சிரிப்பு வந்துவிட்டது. இப்பொழுது சொல்லுங்கள். நான் சிரித்ததில் தவறு உண்டா என்று" என்றான் ஜகந்நாதன்.
இதைக் கேட்டதும் மகாதேவ ஐயருக்கு கூட நகைப்பு வந்துவிட்டது. சற்றுநேரம் இருவரும் இடி இடியென்று சிரித்தார்கள். அந்த நிர்மானுஷ்யமான இடத்தில், அந்த நள்ளிரவில் அவர்களுடைய சிரிப்பின் ஒலியைக் கேட்டு, அதுவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்த பூச்சிகள், தவளைகள் முதலியன பயந்து வாய் மூடிக் கொண்டன. அருகிலிருந்த புளிய மரத்தில் உறங்கிக் கொண்டிருந்த ஒரு பறவை கண் விழித்துக் 'கிறீச்' என்று கத்திற்று.
"உயிர் விடும் யோசனையை மறந்துவிடுவோம்" என்று மகாதேவ ஐயர் கூறினார்.
"ததாஸ்து" என்றான் ஜகந்நாதன். பின்னர் அவன் சொன்னான்:- "இன்றிரவிலிருந்து, நாம் இருவரும் உயிர் நண்பர்களானோம். நாமிருவரும் ஒரே நோக்கங்கொண்டு இருவரும் ஒருவரது உயிரை ஒருவர் காப்பாற்றினோம். இருவரும் ஏறக்குறைய ஒரே நிலையில் இருக்கிறோம். நம்மிருவரையும் சேர்த்து வைக்க வேண்டுமென்பது கடவுளுடைய திருவுள்ளம்போல் தோன்றிற்று."
"ஆம். நண்பர் ஒருவர் இல்லாத காரணத்தினாலேயே, நான் இவ்வளவு விரைவில் மனஞ் சோர்ந்து விட்டேன் என்று இப்போது தோன்றுகிறது. தங்களுடைய நிலையும் அப்படித்தான் இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். இனி இருவரும் சேர்ந்து புதிய பலத்துடனும் உற்சாகத்துடனும் வாழ்க்கைப் போராட்டத்தில் இறங்குவோம்."
"அப்படியேயாகட்டும். ஆனால், என்ன செய்வது என்பதுதான் எனக்கு விளங்கவில்லை."
"இனி பரீட்சைக்குப்போகும் எண்ணத்தை விட்டு விடுங்கள். என்னிடம் இரண்டாயிரம் ரூபாய் இருக்கிறதென்று சொன்னேனல்லவா? அதை வைத்துக் கொண்டு ஏதேனும் தொழில் நடத்துவோம்." இவ்வாறு சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இருவரும் கை கோர்த்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தற்கொலை - Tharkolai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், இருவரும், இடத்தில், உயிர், செய்து, மகாதேவ, கொண்டு, வந்தேன், ஜகந்நாதன்