தற்கொலை
2
இரவு ஒன்பது மணி அமாவாசை இருட்டு. தென்
இந்திய ரயில் பாதையில் ஒரு சிறு வாய்க்காலின் பாலத்தின் மீது ஜகந்நாதன்
உட்கார்ந்து கொண்டிருந்தான். நிர்மலமான நீல வானத்தில் நட்சத்திரங்கள்
கண்சிமிட்டி மனிதர்களின் அறியாமையைக் குறித்துக் கேலி செய்து கொண்டிருந்தன.
மேல்வான வட்டத்தின் அடிவாரத்தைக் கரிய மேகத்திரள் மறைந்திருந்தது. ஒவ்வொரு
சமயம் அம்மேகத்திரளை மீறிக்கொண்டு ஒரு பொன் மின்னற்கொடி வெளிக் கிளம்பி
ஒரு கணம் கண்ணைப் பறித்துவிட்டு உடனே மறைந்தது. கிழக்கே வெகு தூரத்தில்
பட்டணத்தில் மின்சார விளக்குகள் மங்கலாகக் காணப்பட்டன. வெறுப்புத் தரும்
வாடைக் காற்றில் கலந்து, காட்டில் ஊளையிடும் நரியின் கூக்குரல் வந்து
கொண்டிருந்தது. அவ்வப்போது மத்திம ஸ்தாயியில் இடிகள் உறுமின. பக்கத்திலிருந்த
புளிய மரத்தில் ஒரு கோட்டான் கோரமாகக் கத்திக் கொண்டிருந்தது.
அடுத்த ஸ்டேஷனிலிருந்து போட்மெயில் புறப்பட்டுவிட்டதென்பதற்கு அறிகுறியான ஊதல் சத்தம் கேட்டது. ஜகந்நாதன் எழுந்து சென்று தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்துக்கொண்டு கண்ணை இறுக மூடிக் கொண்டான். இதயம் 'பட்பட்' என்று அடித்துக் கொண்ட சத்தம் அவன் செவியில் நன்றாகக் கேட்டது. அவன் மனைவியும், மாமனாரும், மாமியாரும், தந்தையும், தாயும், தம்பியும், தங்கைகளும் ஒவ்வொருவராக அவன் முன்பு தோன்றி, "ஐயோ பைத்தியமே! இப்படி செய்யாதே" என்று கெஞ்சுவதுபோல் அவனுக்குத் தோன்றிற்று. இந்தப் பிரமையினின்று விடுபடும் பொருட்டு அவன் கண்களைத் திறந்து ரயில் வரவேண்டிய திக்கை நோக்கினான். அவ்விடத்தில் இரயில் பாதை நேராக அமைந்திருந்தபடியால் வெகுதூரத்தில் ரயில் வருவது காணப்பட்டது. குழந்தைப் பருவத்தில் கொள்ளிக் கண்ணன் என்னும் இராட்சதனைப் பற்றிக் கேட்ட கதை அவனுக்கு நினைவு வந்தது. பெரிய கரிய வடிவமும் கொள்ளிக் கண்களும் உடைய ஒரு பூதம் பயங்கரமாக உறுமிக் கொண்டு தன்னை விழுங்க வருவது போல் அவனுக்குத் தோன்றிற்று. இத்தோற்றத்தினால் பீதியடைந்து அவன் மீண்டும் கண்களை மூடிக் கொள்ளப் போனான். ஆனால், அச்சமயத்தில் சுமார் ஐம்பது அடி தூரத்தில் ரயில் பாதை ஓரமாக வெள்ளைத் துணியால் முக்காடணிந்த உருவம் ஒன்று தன்னை நோக்கி வருவதைக் கண்டுவிட்டான்.
பேய், பிசாசுகளிடம் ஜகந்நாதனுக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் அப்போது அவன் உடலும் நடுங்கிவிட்டது. வியர்வை வியர்த்து துணிகள் எல்லாம் ஒரு கணத்தில் சொட்ட நனைந்து போயின. அச்சமயத்தில் அவன் உணர்வு போனவழி காரியம் செய்தானேயன்றி, அறிவைப் பயன்படுத்தி யோசித்து எதுவும் செய்யவில்லை. அவ்விடத்திலிருந்து உடனே போய்விட வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. மெதுவாக நகர்ந்து பக்கத்திலிருந்த பாலத்துக்கு வந்து அங்கிருந்து கீழே வாய்க்காலில் சத்தமின்றி இறங்கி விட்டான். ஏற்கெனவே காரிருள்; அதிலும் பாலத்தின் நிழல். அங்கிருந்து அவ்வுருவத்தைப் பார்த்துக் கொண்டே நின்றான். என்ன அதிசயம்! அவ்வுருவம் சற்று முன் ஜகந்நாதன் படுத்திருந்த இடத்துக்கே வந்து நின்றது. முக்காடு போட்டிருந்த துணியை எடுத்துக் கோவிலில் ஸ்வாமி தரிசனம் பண்ணும்போது செய்வது போல் இடுப்பில் வரிந்து கட்டிக் கொண்டது. பின்னர் தண்டவாளத்தின் மீது குறுக்காகப் படுத்தது.
அத்தகைய நிலைமையிலும் ஜகந்நாதனால் புன்னகை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. அவ்வுருவம் தன்னைப் போலவே ஏதோ ஒரு காரணத்தினால் தற்கொலை செய்து கொள்ள வந்த துரதிர்ஷ்டசாலியான ஒரு மனிதனே என்பதை அவன் தெள்ளத் தெளியக் கண்டான். அவனுயிரை அச்சமயம் தான் காப்பாற்றாவிட்டால், அக்கொலை பாதகத்துக்கு உடந்தையாயிருந்த பாவம் தன்னைச் சாரும் என்று அவனுக்கு ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. ரயிலோ சமீபத்தில் வந்து விட்டது. அவன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்தேறிச் சென்று படுத்திருந்த உருவத்தை முதுகில் தொட்டான். அவ்வுருவம் அப்படியே வீறிட்டுக் கொண்டு துள்ளி விழுந்தது. பாவம்! ரயில் வண்டி தன்மீது ஏறிவிட்டதாக அந்த துரதிர்ஷ்டசாலி நினைத்திருக்க வேண்டும். ஜகந்நாதன் அதனைப் பாதிதூக்கிக் கொண்டும் பாதி இழுத்துக் கொண்டும் கீழே பாலத்தின் அடியில் கொண்டு வந்து சேர்த்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தற்கொலை - Tharkolai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், ரயில், வந்து, ஜகந்நாதன், அவ்வுருவம், கொண்டு, பாலத்தின், மீது, அவனுக்குத்