எஸ். எஸ். மேனகா
4
"அந்த சந்தேகக்காரன் அப்படிச் சொல்லாமல்
போய்விட்டதைப் பற்றி அவனைக் காதலித்த பெண் ரொம்பவும் துக்கப்பட்டாளா?"
என்று ஜான் கேட்டான்.
"ஆமாம்; அவன் போய்விட்டதைப் பற்றி அவள் துக்கப்பட்டாள்; கண்ணீர் விட்டாள்! பைத்தியம் பிடித்தவள் போலானாள். அவளுடைய துக்கத்தை ரொம்ப அதிகமாக்கியது என்னவென்றால், தன்னைக் கேவலம் திருடி என்பதாக நினைத்துக் கொண்டு அவர் போய்விட்டாரே என்பதுதான்" என்றாள் ரஜனி.
"பிறகு அந்தப் பெண் என்ன செய்தாள்?" என்று ஜான் தழுதழுத்த குரலில் கேட்டான்.
"அப்புறம் அந்த பெண்ணின் வாழ்க்கை ஒரே துன்பமும் பயங்கரமும் தான். அதைப்பற்றி சொல்வதற்கு இஷ்டமில்லை. தயவு செய்து கேட்கவேண்டாம்."
"அப்படியானால் கேட்கவில்லை" என்றான் ஜான்.
"நீங்கள் கதை சொல்லப் போகிறீர்களா? இல்லையா?" என்று ரஜனி கேட்டாள்.
"நீ சொன்ன கதையைப் பூர்த்தி செய்யட்டுமா?"
"ஆகா!"
"சரி, கேள்."
"மாடி அறையில் அந்தப் பெண் பெட்டியைத் திறந்து வைத்துக் கொண்டு கையில் பணத்துடன் இருந்ததைப் பார்த்ததும், அந்த வாலிபனுக்கு மண்டை வெடித்து விடும் போல் ஆகிவிட்டது. தன்னுடைய இருதயத்தைக் கொள்ளை கொண்ட மோகினி, அத்துடன் திருப்தியடையாமல், தன் பணத்தையும், திருடுகிறாள் என்பதை அவனால் பொறுக்க முடியவில்லை. யாருக்குத் தன்னுடைய உடல் பொருள் ஆவியெல்லாவற்றையும் தத்தம் செய்ய எண்ணியிருந்தானோ, அவள் கேவலம் இருபது ரூபாய்க்கு ஆசைப்பட்டுத் தன் பெட்டியை மறுசாவி போட்டுத் திறக்கிறாள்! அவளுடைய காதல் கடைக்கண் பார்வையெல்லாம் வெறும் பாசாங்கு! பொய் வேஷம்! மோசம்! இந்த எண்ணத்தினால் வெறி பிடித்தவன் போலாகி அந்த வாலிபன் விரைந்து ஓடினான். அந்த வீட்டின் முகாலோபனமும் இனிமேல் செய்வதில்லை என்று தீர்மானித்தான். பெண் குலத்தையே சபித்தான். தான் அவ்விதம் ஏமாந்து போனதைப் பற்றித் தன்னையே சபித்துக் கொண்டான். ஆனால் நாள் போகப் போக அவனுடைய மனது மாறியது. ஆத்திரம் தணிந்தது. நிதானமாக யோசனை செய்யத் தொடங்கினான். அந்தப் பெண் செய்தது அவ்வளவு கொடிய காரியமா என்பதைப் பற்றி அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று."
"தரித்திரத்தின் கொடுமையினால்தானே அப்படி அவள் செய்திருக்க வேண்டும்? அவளுடைய தாயார் தகப்பனாரைக் காப்பாற்றுவதற்காகத்தானே செய்திருக்க வேண்டும்? இந்த எண்ணம் வலுப்பட்டதும், அவள்மேல் அவனுக்கிருந்த அன்பு இரு மடங்காயிற்று. கொஞ்ச நாள் கழித்து அந்த வீட்டை மறுபடியும் தேடிக்கொண்டு வந்தான். வீட்டில் வேறு யாரோ குடியிருந்தார்கள். ஏற்கனவே குடியிருந்தவர்களைப் பற்றி அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்ததும் தகவல் கிடைக்கவில்லை. இதனால் அந்த வாலிபனுக்கு உலக வாழ்க்கையின் மேலேயே வெறுப்பு உண்டாகிவிட்டது. துக்கத்தை மாற்றிக் கொள்வதற்காக அவன் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தான். ஜானகி ராமன் என்ற பெயரை ஜான் என்று மாற்றிக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு மனச்சாந்தி உண்டாகவில்லை. ஒரே இடத்தில் இருக்க அவனுக்கு பிடிக்காதபடியால் கொஞ்ச நாளைக்குப் பிறகு ஹார்பர் வேலையிலிருந்து கப்பல் வேலைக்குப் போனான். ஆகா! அப்படி அவன் கப்பல் வேலைக்குப் போனது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று? இல்லாவிட்டால், இருபது வருஷத்துக்குப் பிறகு அவனுடைய காதலி ராஜத்தை அவன் நடுக்கடலில் சந்தித்திருக்க முடியுமா?"
"நடுக்கடலில் சந்தித்தவள் அந்தத் துரதிர்ஷ்டம் பிடித்த ராஜம்மாள்தான் என்று எப்படித் தெரிந்து கொண்டீர்கள்" என்று ரஜனி கேட்டாள்.
"எப்படித் தெரிந்து கொண்டேனா? என் உடம்பிலுள்ள ஒவ்வொரு அணுவும் இவள் தான் ராஜம் என்று எனக்குச் சொல்லிற்று. மேலும் அவள் அதிகமாக உருமாறவும் இல்லையே! இருபது வருஷத்துக்கு முன்னால் நான் பார்த்தபடியே தான் இருக்கிறாள். ஆனால் ராஜம் என்னை எப்படித் தெரிந்து கொண்டாள் என்பது தான் அதிசயமாயிருக்கிறது. நான் அடியோடு உருமாறிப் போயிருக்கிறேனே?"
"உருமாறியிருந்தால் என்ன? கண்களை வேணுமானால் ஏமாற்றலாம்; மனதை ஏமாற்ற முடியுமா? நான் சாவதற்குள்ளே அவரை ஒரு தடவை கண்டிப்பாய் பார்க்க வேண்டும். பார்த்து நான் திருடியில்லையென்பதைத் தெரியப்படுத்த வேண்டுமென்னும் தாபம் என் மனதில் இடைவிடாமல் இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பம் கிடைக்கும் என்ற உறுதியான நம்பிக்கையும் இருந்தது. இந்தக் கப்பல் பிரயானந்தான் என்னுடைய கடைசிப் பிரயாணம் என்பதாகவும் எனக்குள் ஏதோ சொல்லிற்று. அப்படியானால், இந்தக் கப்பலில் தானே அவரை நான் சந்தித்தாக வேண்டும்? ஜான் என்ற பெயர் காதில் விழுந்ததும், என்னை இருபது வருஷத்துக்கு முன்னால் கைவிட்டுப்போன ஜானகிராமன் தான் என்று என் மனது சொல்லிவிட்டது." வான வட்டத்தில் கால் பங்கு தூரம் சந்திரன் பிரயாணம் செய்து மேலே வந்திருந்தான். அலை அடங்கி அமைதியான கடலில், அவனுடைய வெள்ளி உருவம் ஸ்வச்சமாகப் பிரதிபலித்து, கடலுக்குள்ளே ஒரு சந்திரன் உண்டோ என்ற பிரமையை உண்டாக்கிற்று.
சந்திரன் உதித்த திசையை நோக்கிப் படகு மெதுவாய் மிதந்து சென்றது.
"ஒரு நாள் ராயபுரத்துக் கடற்கரையில் இதே மாதிரி பால் நிலவு எரித்தபோது நாம் இருவரும் உட்கார்ந்து பாடிக்கொண்டிருந்தது ஞாபகம் இருக்கிறதா!" என்று ஜானகி ராமன் கேட்டான்.
"பேஷாய் ஞாபகம் இருக்கிறது" என்றாள் ராஜம்மாள்.
"இன்றைக்கு மறுபடியும் பாடலாமா?"
"ஆகா!"
சாந்தம் குடிகொண்டிருந்த சமுத்திர மத்தியில் இளஞ்சந்திரன் சொரிந்த மோகன நிலவொளியில் ஒரு ஸ்திரீயின் இனிய குரலிலும், ஒரு புருஷனின் கம்பீரமான குரலிலும், பின்வரும் இன்ப கீதம் எழுந்தது.
நாதர் முடி மேலிருக்கும்
வெண்ணிலாவே - அங்கே
நானும் வரவேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
நானும் வரவேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
சச்சிதானந்தக் கடலில் வெண்ணிலாவே - நானும்
தாழ்ந்து விழ வேண்டுகின்றேன் வெண்ணிலாவே!
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ். எஸ். மேனகா - S.S.Menaka - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்த, தான், நான், ஜான், பெண், இருபது, வேண்டும், அவள், பற்றி, வெண்ணிலாவே, அவன், கப்பல், எப்படித், சந்திரன், தெரிந்து, அந்தப், அவளுடைய, கேட்டான், ரஜனி, பிறகு, நாள், அவனுடைய