எஸ். எஸ். மேனகா
1
அலைகடலின் நடுவில், 'எஸ். எஸ். மேனகா'
என்னும் கப்பல் போய்க் கொண்டிருந்தது. அந்தக் கப்பல் அதற்கு முன் எந்த
நாளிலும் அவ்வளவு பாரம் ஏற்றிக் கொண்டு பிரயாணம் செய்தது கிடையாது. இந்தத்
தடவை அதில் ஏற்றியிருந்த பாரம் முக்கியமாகப் பிரயாணிகளின் பாரமேயாகும்.
கப்பலின் அடித்தளத்திலிருந்து மேல் தளம் வரையில் எள்ளுப் போட்டால் எள்ளு
விழாதபடி பிரயாணிகள், தேனடைகளை மொய்க்கும் தேனீக்களைப் போல் நெருங்கியிருந்தார்கள்.
அவர்கள் பல தேசத்தினர்; பல சாதியினர்.
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்புகளில் வெள்ளைக்காரர்கள் மட்டும் காணப்பட்டார்கள். அவர்களில் ஸ்திரீகளும் குழந்தைகளும் அதிகமாயிருந்தனர். மற்ற பகுதிகளில் கறுப்பு மனிதர்கள் இருந்தார்கள். அவர்களில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், தமிழர்கள், வங்காளிகள், மலையாளிகள், பஞ்சாபியர், யாழ்ப்பாணத்தார் முதலியோர் கலந்து காணப்பட்டார்கள். ஸ்திரீகள், புருஷர்கள், குழந்தைகள், கிழவர்கள் ஆகிய எல்லா வயதினரும் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் கப்பலில் படுப்பதற்கு இடமோ, ஸ்நான வசதியோ ஒன்றும் கிடையாது. அந்த ஜனங்கள் குளித்து நாட்கணக்கில் ஆகியிருக்க வேண்டும். அத்தகைய அழுக்குப் பிடித்த ஜனக்கூட்டத்தை வேறெங்கும் காண்பது துர்லபம். அவரவர்களுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியோ, மூட்டையோ வைத்துக் கொண்டு 'சிவ சிவ' என்று உட்கார்ந்திருந்தார்கள். தண்ணீரைக் கண்டு பல தினங்களான அவர்களுடைய முகங்களில் குடிகொண்டிருந்த சோர்வையும், துயரத்தையும் பயங்கரத்தையும் விவரிக்க முடியாது. சிலர் பேயடித்தவர்களைப்போல் இருந்தார்கள். வேறு சிலர் இராத்திரியெல்லாம் கண் விழித்து மயான காண்டம் பார்த்துவிட்டு வந்தவர்களைப்போல் காணப்பட்டார்கள்; இன்னும் சிலரின் முகத்தில் பிரம்மஹத்தி கூத்தாடிற்று; பசி கொடுமையினால் பாதிக்கப்பட்டவர்களாகவும் தோன்றினர். சாதாரணமாக இவ்வளவு நெருங்கிய கூட்டத்தில் இரைச்சல் அசாத்தியமாய் இருக்குமல்லவா? இங்கேயோ, ஜனங்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளக் கூட இல்லை. யாராவது பேசினால், கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் ஈனஸ்வரத்தில் பேசினார்கள். அவ்வப்போது கிளம்பிய குழந்தைகளின் மெலிந்த, அழுகுரல் இருதயத்தை வேதனை செய்வதாயிருந்தது.
கப்பலில் எந்தப் பக்கம் பார்த்தாலும், கண்வலி வரும்படியாக ஆபாசமும் அழுக்கும் நிறைந்திருந்தன. ஒழுங்கு, சுத்தம் என்பதையே அங்கே காணமுடியாது. துர்க்கந்தமோ கேட்க வேண்டியதில்லை. கப்பலின் புதியபெயிண்டின் நாற்றம், மூலையில் அழுகிக் கிடந்த வெங்காயத்தின் நாற்றம், பழைய ரொட்டித் துண்டுகளின் நாற்றம், மனிதர்களின் வியர்வை நாற்றம், சுருட்டு நாற்றம், குழந்தைகள் ஆபாசம் செய்த நாற்றம் அம்மம்மா! எத்தனை விதமான நாற்றங்கள்? - நரகம் என்பது இதுதானோ?
எஸ். எஸ். மேனகா இந்தக் கதியை அடைந்திருந்ததன் காரணம் என்னவென விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அது 1942-ஆம் வருஷம் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் சிங்கப்பூரிலிருந்து கிளம்பிய கப்பல் என்று சொன்னாலே போதும். சிங்கப்பூரை ஜப்பானியர் தாக்குவதற்குச் சில நாளைக்கு முன்புதான் அது கிளம்பிற்று. கிளம்பி இப்போது ஆறு நாளாகி விட்டது. ஆனால், கப்பல் தற்சமயம் கடலில் எந்த இடத்துக்கு வந்திருக்கிறதென்று பிரயாணிகளில் யாருக்கும் தெரியாது. அது எங்கே போகிறதென்றுகூட ஒருவருக்கும் நிச்சயமில்லை. அநேகமாகக் கொழும்புக்குப் போகலாமென்று கருதப்பட்டது. ஆனால், எப்போது போய்ச் சேருமோ கடவுளே அறிவார். போய்ச் சேரும் என்பதுதான் என்ன நிச்சயம்? பிரயாணிகள், கப்பலின் வசதிக் குறைவுகளால் அடைந்த கஷ்டங்களைக் காட்டிலும், மனோபீதியினால்தான் அதிகக் கலக்கம் அடைந்திருந்தார்கள். அவர்களில் பலர், மலாய் நாட்டில் ஜப்பானுடைய வெடிகுண்டுகளினால் நேர்ந்த விபரீதங்களை நேரில் பார்த்தவர்கள். அந்த பயங்கரங்களை இந்த ஜன்மத்தில் அவர்களால் மறக்கவே முடியாது. தரையிலேயே ஜப்பானுடைய வெடி குண்டுகளினால் அப்படிப்பட்ட பயங்கரங்கள் நேரிடக் கூடுமென்றால், நடுக் கடலில் கப்பலின்மேல் குண்டு விழுந்தால் கதி என்ன? அதோ கதிதான்!
ஆகவே, பிரயாணிகளிற் பலர், அடிக்கடி ஆகாயத்தை அண்ணாந்து பார்த்த வண்ணமிருந்தனர்.
ஆனால், ஆகாயத்திலிருந்து மட்டுந்தானா அபாயம் வரக்கூடும்? அபாயம், கடலில் மிதந்தும் வரலாம்! கடலுக்கடியிலிருந்து திடீரென்று வந்தும் தாக்கலாம் ஜப்பானுடைய யுத்தக் கப்பல்களும் நீர்மூழ்கிகளும் இந்துமகா சமுத்திரத்திலும் வங்காளக் குடாக் கடலிலும் சஞ்சரிப்பதாகச் சில நாளாகவே வதந்தி இருந்தது. ஆகவே, உயிருடன் ஊருக்குத் திரும்பிப் போவோம் என்கிற நம்பிக்கை யாருக்குமே இல்லை. இப்படிப்பட்ட நிலைமையில், யாருடைய முகந்தான் களையாக இருக்கமுடியும்.
என்றாலும் அந்த ஆயிரம் பிரயாணிகளுக்குள்ளே ஒரு ஸ்திரீயின் முகம் மட்டும் அப்போது கூட களையாகத் தான் இருந்தது. களை எப்போதாவது குறைந்தால் அந்த ஸ்திரீ தனக்கருகில் வைத்திருந்த பெட்டிக்குள்ளிருந்து களையை எடுத்து முகத்தில் பூசிக்கொண்டாள்! அவள் கண்ணிலே இலேசாக மை தீட்டியிருந்தது. நெற்றியிலே பொட்டு இருந்தது. கூந்தல் பின்னி விடப்பட்டிருந்தது. பிரதி தினமும் மூன்று, நாலு தடவை, அவள் எப்படியோ நல்ல ஜலம் சம்பாதித்து முகத்தை அலம்பிப் பவுடர் பூசிக் கொண்டதுடன், மற்ற அலங்காரங்களையும் செய்து கொண்டாள். தலையில் வைத்துக் கொள்ளப் புதிய பூ இல்லாத ஒரு குறைதான். அதற்குப் பதிலாக, வர்ணநெட்டிப் பூ தலையில் வைத்துக் கொண்டிருந்தாள். அவள் அங்குமிங்கும் உலாவும் போது, மெல்லிய மல்லிகை ஸெந்தின் வாசனை மற்ற நாற்றங்களையெல்லாம் விலக்கிக் கொண்டு வந்தது.
இந்த ஸ்திரீயின் விஷயத்தில் மற்றப் பிரயாணிகளெல்லாம் எவ்வளவு அருவெருப்புக் கொண்டிருப்பார்களென்று சொல்ல வேண்டியதில்லை. அவளைப் பார்க்கும் போதே, பலருடைய முகம் சுணுக்கமடைந்தது. அவளைச் சுட்டிக்காட்டி, அநேகர் காதோடு காதாய் இரகசியம் பேசிக் கொண்டார்கள். இன்னும் சிலர், அவள் காதில் விழும்படியாக "சனியன்!" "மூதேவி!" "தரித்திரம் இங்கே என்னத்திற்கு வந்தது?" "பிராணன் போகிற போது கூடப் பவுடர் பூசிக் கொள்ளுவாளோ? யமனையே மயக்கி விடலாமென்ற எண்ணம் போலிருக்கு!" என்று இவ்விதமெல்லாம் பேசினார்கள்.
மற்றும், அந்தப் பிரயாணிகள் பேசிக் கொண்டதிலிருந்து, மேற்படி ஸ்திரீயின் பெயர் ரஜனி என்றும், சிங்கப்பூரில் அவள் துன்மார்க்க வாழ்க்கையில் 'பெயர் எடுத்தவள்' என்றும் தெரியவந்தது. அவள் அருகில் இருந்த பெட்டியின் மேல் 'மிஸ் ரஜனி' என்று அச்சிட்டிருந்தது. அவளுடைய வயது என்ன இருக்கும் என்று ஊகிப்பது மிகவும் கடினம். ஒரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயது ரொம்ப ஆகியிருக்க வேண்டும்; பவுடரை அப்பிக் கொண்டு பால்யம் மாதிரி நடிக்கிறாள்" என்று தோன்றும். இன்னொரு சமயம் பார்த்தால், "இவளுக்கு வயசு கொஞ்சம்; துர்நடத்தை காரணமாக வயது அதிகம் காட்டுகிறது" என்று தோன்றும்.
இப்படிப்பட்ட ஸ்திரீயைப் பார்த்து யார் தான் அருவருப்புக் கொள்ளாமலிருக்க முடியும்? அதுவும், அடுத்த நிமிஷத்தில் உயிரோடிருப்போமோ என்பது நிச்சயமில்லாத அந்த சமயத்தில்?
எனினும் அவளிடம் அருவருப்புக் காட்டாத ஒரே ஒரு ஆத்மா அந்தக் கப்பலில் இருக்கத்தான் இருந்தது. அவன் அவளிடம் அருவருப்புக் காட்டாததோடு இல்லை, அவசியத்துக்கு அதிகமான அபிமானம் காட்டுவதாகவும் தோன்றியது. பிரயாணிகளில் ஒருவர் அவ்விதம் நடந்து கொண்டாலே அது ஆச்சரியத்தைத் தரும். அவனோ, கப்பல் உத்தியோகஸ்தரில் ஒருவன், உதவி என்ஜினீயர். பார்ப்பதற்கு ஆங்கிலோ இந்தியன் மாதிரி இருந்தான்.
அவன் பெயர் ஜான் என்று மற்ற உத்தியோகஸ்தர்கள் அழைத்ததிலிருந்து தெரிந்தது. ஆனால் சுத்தமான தமிழ் பேசினான்.
ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது கப்பல் மேல் தளத்துக்கு உதவி என்ஜினீயர் ஜான் வருவான். ரஜனியும் உடனே அவனை நோக்கிப் போவாள். இரண்டு பேரும் கப்பல் தளத்தில் கிராதியில் சாய்ந்து கொண்டு நிற்பார்கள். அவர்கள் அதிகமாகப் பேசுவது கிடையாது. மேலே ஆகாசத்தைப் பார்ப்பார்கள். சில சமயம், ஜான் ஒரு ரொட்டித் துண்டை மறைத்து எடுத்துக் கொண்டு வருவான். (கப்பலில் உணவுப் பண்டம் கிடைப்பது அவ்வளவு கஷ்டம்) ரஜனி வேண்டாம் என்று மறுப்பாள். பிறகு வாங்கிக் கொள்வாள்.
இதெல்லாம் மற்ற பிரயாணிகளுக்குப் பிடிக்கவேயில்லை. "கப்பலில் வந்து கூட யாரோ ஒருவனை வலையில் போட்டுக் கொண்டுவிட்டாள், பார்!" என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள். கப்பல் காப்டனிடம் இதைப் பற்றிப் புகார் செய்ய வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டார்கள்.
அன்று சாயங்காலம் ரஜனி ஜானைச் சந்தித்த போது, "நாம் இரண்டு பேரும் பேசுவது மற்றப் பிரயாணிகளுக்குப் பிடிக்கவில்லை" என்றாள்.
"நாம் இரண்டு பேரும் பேசுகிறோமா, என்ன? நாம் பேசுகிறது இதுவரையில் என் காதிலேயே விழவில்லையே" என்றான்.
ரஜனி, கலீரென்று சிரித்தாள். சொல்ல முடியாத சோகமும் ஆழ்ந்த பீதியும் குடிகொண்டிருந்த அந்தக் கப்பலில் அவளுடைய சிரிப்பின் ஒலி, அபஸ்வரமாய்த் தோன்றியது.
அதை அவளே அறிந்து கொண்டு சுற்று முற்றும் பார்த்துவிட்டு "நாம் வெறுமனே சற்று நேரம் நிற்பது கூட அவர்களுக்கு பொறுக்கவில்லை. காப்டனிடம் புகார் செய்யப் போகிறார்களாம்!" என்றான்.
"உன்மேல் அவர்களுக்கு என்ன கோபம்?" என்று ஜான் கேட்டான்.
"அதுதான் எனக்கும் தெரியவில்லை. அவர்களுடைய சொத்து சுதந்திரத்தையெல்லாம் நானா பறித்துக் கொண்டேன்? ஜப்பான்காரன் மேல் காட்ட வேண்டிய கோபத்தை என் பேரில் காட்டி என்ன பிரயோசனம்? அசட்டு ஜனங்கள்! நான் முகத்தை அலம்பிப் பொட்டு வைத்துக் கொள்வது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கோ நாளைக்கோ சாகப் போகிறோம். இருக்கிற வரையில் சந்தோஷமாக இருந்து விட்டுப் போனாலென்ன? மூதேவி பிடித்தது போல் முகத்தைக்கூட அலம்பாமல் உட்கார்ந்திருப்பதில் என்ன லாபம்?"
"சாவைப் பற்றி ஏன் அடிக்கடி பேசுகிறாய்? செத்துப் போக ஆசையாயிருக்கிறதா?" என்று ஜான் கேட்டான்.
"ஆமாம்" என்று ஒரே வார்த்தையில் ரஜனி பதில் சொன்னாள்.
"ஏன் அப்படி?"
"சாகாமல் இருந்து என்ன ஆகவேண்டும்?"
"இந்தியாவில் பந்துக்கள், தெரிந்தவர்கள், யாரும் இல்லையா?"
"இல்லை"
"உயிரை விடுவதாயிருந்தால், இன்றைக்கு ராத்திரியைப் போல் தக்க தருணம் கிடையாது. ஒன்பது மணிக்குச் சந்திரன் உதயமாகி விடும். அப்புறம் சமுத்திரம் பாற்கடலாயிருக்கும்."
"நான் தயார்" என்றாள் ரஜனி.
1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
எஸ். எஸ். மேனகா - S.S.Menaka - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கப்பல், என்ன, ரஜனி, கொண்டு, அவள், நாற்றம், கப்பலில், அந்த, மற்ற, ஜான், மேல், இல்லை, கிடையாது, போல், நாம், வைத்துக், இரண்டு, அருவருப்புக், பேசிக், போது, கொண்டார்கள், பெயர், பேரும், சமயம், வயது, பேசுவது, காணப்பட்டார்கள், அவர்களில், பிரயாணிகள், கப்பலின், அந்தக், இருந்தார்கள், ஜனங்கள், ஜப்பானுடைய, கடலில், சொல்ல, சிலர், ஸ்திரீயின்