ரங்கூன் மாப்பிள்ளை
"ஆமாம்; நான் பித்துக்கொளிதான்! பைத்தியந்தான்.
நாளைக்கு ஜப்பான்காரன் வந்து படார், படார் என்று குண்டு போடுகிற போது
யார் பைத்தியம் என்று தெரியும்" என்று ராகவாச்சாரி அடிக்கடி சொல்வான்.
இந்தோ-சைனா, ஸயாம், மலாய், பர்மா, டச்சு இந்தீஸ் ஆகிய தேசங்களின் 'மாப்பு'களை எடுத்து வைத்துக் கொண்டு அம்புக் குறிகள் போட்ட வண்ணம் இருப்பான். "ஐயோ! பார் மோஸாவுக்கு வந்து விட்டானே? இந்தோசைனாவுக்கு வந்து விட்டானே? ஸயாமை எட்டிப் பார்க்கிறானே? இன்னும் இங்கிலீஷ்காரன் தூங்குகிறானே?" என்று பொலபொல என்று அடித்துக் கொள்வான்.
ஸர் ராபர்ட் புரூக் போப்ஹாம், "மலாய் நாடு யுத்தத்துக்குத் தயார்" என்று சொன்ன போதெல்லாம், யு.பி. ராகவாச்சாரி தலையில் போட்டுக் கொள்வான். "இந்தப் பொறுக்கி எடுத்த அசட்டைச் சேனாதிபதியாக அனுப்பியிருக்கிறார்களே!" என்பான். "ஏன்?" என்று கேட்டால், "யுத்தத்துக்குத் தயாராமே தயார்! ஆகாச விமானம் எத்தனை இவர்களிடம் இருக்கிறது? ஆயிரம் பதினாயிரம் ஐம்பதினாயிரம் என்று ஆகாச விமானங்கள் வந்து ஆகாசத்தை மறைக்கும் போதல்லவா யுத்தத்துக்கு நாம் தயார் என்று சொல்லலாம்" என்பான்.
"ஜப்பான் தான் சைனாவில் மாட்டிக் கொண்டு முழிக்கிறதே!" என்று சொல்லிவிட்டால் போதும், உடனே ராகவாச்சாரிக்கு பிரமாத கோபம் வந்துவிடும். "அட பைத்தியக்காரப் பிள்ளை! யார் சொன்னது? சைனாவிலே ஜப்பான்காரன் யுத்தமா செய்கிறான்? பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் சண்டை போடுவதற்காகச் சீனாவை ராணுவப் பயிற்சிக் கூடமாகவல்லவா உபயோகிக்கிறான்?"
இன்னும் அவனுடைய நோட்டுப் புத்தகத்தில், யுத்த 'மாப்பு'களுடன் சண்டை விமானம் பாம்பர் விமானம் முதலிய படங்களை ஒட்டி அவற்றின் கீழ் 'ஜப்பானை முறியடிக்க இம்மாதிரி 20,000 விமானம் வேண்டும்" என்று ஏதாவது எழுதி வைத்திருந்தான்.
கடைசியில் ஜப்பானுக்கும் பிரிட்டனுக்கும் உண்மையாகவே யுத்தம் ஆரம்பமானபோது யு.பி. ராகவாச்சாரியின் பைத்தியம் தலைக்கேறி விட்டது. யுத்தம் ஆரம்பித்தவுடன் நான் தமையன்மார்களுடன் ஆலோசனை செய்வதற்காக, மோல்மீனிலிருந்து ரங்கூனுக்குப் போயிருந்தேன். அப்போது யு.பி. ராகவாச்சாரி என்னை பிடித்துக் கொண்டான்.
"இதைக் கேள் வரதா! இனிமேல் பிறத்தியாரை நம்பியிருப்பதில்லையென்று தீர்மானித்து விட்டேன். ஆகாச விமானப் படை தயாரிக்க நானே ஆரம்பித்து விட்டேன்!" என்றான்.
நான் இதை அலட்சியம் செய்தது ராகவாச்சாரிக்குப் பொறுக்கவில்லை. என் கையைப் பிடித்து, அவனுடைய வீட்டுக்கு இழுத்துக் கொண்டு போனான். வீட்டில் ஜன்னல் எல்லாம் அடைத்து இருட்டாக வைத்திருந்த ஒரு அறையைத் திறந்து காட்டினான்.
"இதென்ன ஆகாசத் தாக்குதலுக்கு ஒளிந்து கொள்ளும் இடமா?" என்று கேட்டேன்.
"சீச்சீ நன்றாய்ப் பார்! அதோ என் ஆகாசப்படை!" என்றான் ராகவாச்சாரி. எவ்வளவோ உற்றுப் பார்த்தும் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. மேல் கூரையில் நாலைந்து வௌவால் தொங்கிக் கொண்டிருந்தது மட்டும் தெரிந்தது.
"அதோ பார்த்தாயா?" என்று ராகவாச்சாரி வௌவாலைச் சுட்டிக் காட்டினான்.
"ஆஹா! டைவ் பாம்பிங் (Dive Bombing) பார்த்தாயா!" என்று ராகவாச்சாரி கதறினான்.
இன்னொரு வௌவால் சிறகை அடித்துக் கொண்டு பறந்து, அறையை ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுப் போய் மறுபடியும் கூரையில் தொத்திக் கொண்டது.
அது பறந்த போது "பார்த்தாயா, ரோந்து விமானத்தை! Reconnaissance Flight செய்துவிட்டுப் போகிறது! ஜப்பானை ஜாக்கிரதையாய் இருக்கச் சொல்!" என்றான்.
"பார்த்துக் கொண்டே இரு; அந்த ஜப்பான் குள்ளன் ரங்கூனுக்கு வருவதற்குள், இந்த மாதிரி இருபதினாயிரம் சண்டை விமானம் தயார் செய்து விடுகிறேன். அப்புறம் எதிரி விமானங்கள் எல்லாம் தவிடு பொடிதான்!" என்றான்.
ஒவ்வொரு வௌவாலின் கழுத்திலும் ஒரு சீட்டுக் கட்டித் தொங்குவதை அப்போதுதான் பார்த்தேன். "அது என்ன சீட்டு?" என்று கேட்டேன். ராகவாச்சாரி சட்டைப் பையிலிருந்து ஒரு சீட்டை எடுத்தான். அதில் 'ஜப்பானே! ஓடிப்போ!' என்று எழுதியிருந்தது.
பைத்தியம் தலைக்கேறி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் மோல்மீனுக்குப் போய்விட்டேன்.
அப்புறம் இரண்டு நாளைக்கொரு தடவை யு.பி. ராகவாச்சாரியிடமிருந்து எனக்குக் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் "ஐம்பது விமானம் தயார்; நூறு தயாராகி விட்டது" என்று எழுதிக் கொண்டிருந்தான்.
*****
ஒரு நாள் தபாலாபீஸில் எனக்கு வரும் கடிதங்களைப் பிரித்துப் பார்க்கிறார்களென்று தெரிய வந்தது. இன்னும் இரண்டு தினங்களுக்கெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை ஐந்தாம் படைக்காரன் என்று சந்தேகித்துக் கைது செய்து விட்டார்களென்று பத்திரிகைகளில் வெளியாயிற்று.
*****
மோல்மீனில் ஜப்பான் தாக்குதல் ஆரம்பித்ததும் நான் என் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். வரும் வழியில் ரங்கூனில் ஒரு நாள் தங்க வேண்டியிருந்தது. அங்கே யு.பி. ராகவாச்சாரியைப் பார்த்ததும் திகைத்துப் போனேன். விசாரித்ததில் அவனை அதிகாரிகள் 'அபாயமற்ற பைத்தியம்' என்று தீர்மானித்து, விடுதலை செய்துவிட்டதாகத் தெரிந்தது. "வரதா! இன்று இராத்திரி நடக்கப் போகும் வேடிக்கையைப் பார்!" என்று சொல்லி விட்டு ராகவாச்சாரி போய் விட்டான். அவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள மாட்டேனென்று பிடிவாதமாக இருந்தது எவ்வளவு நல்லதாய்ப் போயிற்று என்றெண்ணி நான் ஒருவாறு ஆறுதல் அடைந்தேன்.
அன்று இரவு ரங்கூனில் ஆகாச விமானத் தாக்குதல் நடந்தது. அதனால் நாசமான வீடுகளில் ஒன்று என் நண்பன் ராகவாச்சாரி இருந்த வீடு என்று மறுநாள் காலையில் அறிந்து மிகவும் துக்கப்பட்டேன். "பாவம்! அவன் என்ன கதியானானோ? அவனுடைய இருட்டறையில் இருந்த ஆகாசப் படைதான் என்ன கதியடைந்ததோ?" என்று வருந்தினேன்.
இந்த விமானத் தாக்குதலில் ஒரு ஜப்பான் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதாகக் கேள்விப்பட்டேன். அங்கு விழுந்த ஜப்பான் விமானத்தைப் பார்ப்பதற்காகப் போன தமையன்மார்களுடன் நானும் போனேன்.
விமானத்தைச் சுற்றி வந்த போது, அதன் என்ஜினில் சிக்கிக் கொண்டிருந்த ஒரு பொருளின் மீது தற்செயலாக என் பார்வை விழுந்தது. உற்றுப் பார்த்தபோது அது வௌவாலைப் போல் தோன்றியது. சொல்ல முடியாத ஆவலுடன் அதன் அருகில் சென்று பார்த்தேன். என்ன ஆச்சரியம்! என்ன அற்புதம்! அது வௌவால்தான். அதன் கழுத்தில் ஒரு சீட்டும் இருந்தது! அதில் "ஜப்பானே ஓடிப்போ!" என்று எழுதி இருந்தது.
மேற்படி ஜப்பான் விமானம் என்ன காரணத்தினால் கீழே விழுந்தது என்பது சரியாகத் தெரியவில்லையென்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். ஆனால், எனக்கு அது தெரிந்துவிட்டது. யு.பி. ராகவாச்சாரியின் வீடு இடிந்த போது அதன் இருட்டறையில் அடைந்து கிடந்த வௌவால்கள் வெளிக் கிளம்பியிருக்க வேண்டும்! அவற்றில் ஒன்று இசைகேடாக விமானத்தின் இன்ஜின் சக்கரத்தில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும். அதன் காரணமாகவே அந்த ஜப்பான் விமானம் விழுந்திருக்க வேண்டும்.
இப்போது நீங்களே சொல்லுங்கள்! யு.பி. ராகவாச்சாரி பைத்தியமா? அவனைப் பைத்தியமென்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் பைத்தியமா?
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கூன் மாப்பிள்ளை - Rangoon Mappillai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ராகவாச்சாரி, விமானம், கொண்டு, ஜப்பான், என்ன, நான், வந்து, தயார், வேண்டும், என்றான், போது, ஆகாச, பைத்தியம், பார்த்தாயா, எனக்கு, விட்டேன், சண்டை, பார், இன்னும், அவனுடைய, விட்டது