ரங்கூன் மாப்பிள்ளை
பர்மாவிலிருந்து பத்திரமாய்
திரும்பி வந்த பெண்ணையும் மாப்பிள்ளையையும் வரவேற்பதற்காக என்னுடைய நண்பர்
ஒருவர் விருந்து நடத்தினார். விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது,
"ஏன் ஸார்! இன்னும் உங்கள் பெண் - மாப்பிள்ளை யாராவது ஜோஹோரிலோ, ஸுரபயாவிலோ,
கொச்சின் சைனாவிலோ, போனியாவிலோ இருந்து திரும்பி வரப் போகிறார்களா?"
என்று கேட்டேன். சாப்பாடு அவ்வளவு ருசியாயிருந்தது. ஆனால், அதைக் காட்டிலும்
விருந்துக்கு வந்திருந்தவர்களின் பேச்சு ஸ்வாரஸ்யமாயிருந்தது.
சாப்பாட்டுக்கு முன்னால் மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, அவரை நாங்கள் எல்லோரும் சுற்றிச் சுற்றி வந்து பார்த்தோம். எங்கேயாவது குண்டு பட்டுச் சேதம் ஏற்பட்டிருக்கிறதா என்று பரிசோதித்தோம். ஒரு சேதத்தையும் காணவில்லை. காது, மூக்கு, கைகால், விரல்கள் எல்லாம் அப்படி அப்படியே இருந்தன. வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தோம். பல்லெல்லாம் கூட அப்படியே இருந்தது.
"மாப்பிள்ளை! கொஞ்சங்கூடச் சுகமில்லை. இப்படித்தானா எங்களை ஏமாற்றுகிறது? இத்தனைக்கும் மோல்மீனிலிருந்து வந்ததாகச் சொல்கிறீர்! ஒரு வேளை அந்த ஊரில் ஜப்பான் குண்டு போடுவதற்கு முன்னால் கிளம்பி விட்டீரோ?" என்று கேட்டேன்.
மாப்பிள்ளை வரதராஜன், ரோசத்துடன் "இல்லை; இல்லை! ஐந்து நாள் குண்டு விழுந்த பின் தான் கிளம்பினேன்" என்றார்.
அவரை விட மாமனாருக்கு அதிக ரோஸம் வந்து விட்டது. "நீங்கள் என்னமோ சொல்கிறீர்கள்? முந்தா நாள் பாதி நிசிக்கு இங்கே என்ன நடந்தது தெரியுமோ, இல்லையோ? திடீரென்று 'ஏ பழனி ஆண்டவனே! என்னைக் காப்பாற்று! சுவாமி! என் குழந்தையைக் காப்பாற்று! ஐயையோ! நான் என்ன செய்வேன்?' என்று கூச்சல் கிளம்பவே, நாங்கள் எல்லாரும் பயந்து போய் விட்டோம்."
"என்ன மாப்பிளை! இப்படியா பயமுறுத்தி விட்டீர்?" என்றேன்.
"இல்லை, இல்லை! அவர் பெண்ணின் பெருமையைச் சொல்கிறார்! அங்கே இருந்த வரையில் எப்படியோ தைரியமாய் இருந்து விட்டாள். இங்கே வந்த பிறகு இப்படி திடீர் திடீரென்று கூச்சல் போட்டு மூர்ச்சையாகி விடுகிறாள்" என்று வரதராஜன் சொன்னதும், எங்களுக்கெல்லாம் என்னமோ மாதிரி ஆகிவிட்டது. அப்புறம் கொஞ்ச நேரம் தமாஷாகப் பேச யாருக்கும் மனம் வரவில்லை.
*****
"நீங்கள் சென்னையில் தான் இருக்கப் போகிறீர்களா? ஊருக்குக் கிளம்பும் உத்தேசம் உண்டா?" என்று ஒருவர் கேட்டார்.
"நன்றாயிருக்கிறது. இந்தச் சமயத்தில் யாராவது சென்னையை விட்டுக் கிளம்புவார்களோ? ராஜாஜி சொன்னது போலக் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காகக் கிராமாந்திரங்களிலிருந்து பட்டணத்திற்கு வர வேண்டிய சமயமல்லவா இது. இந்தச் சமயத்தில் பட்டணத்தை விட்டுப் போகலாமா?" என்றார் ஒருவர்.
"ஆமாம்! ரங்கூனில் இப்படித்தான் அநேகர் குண்டு விழுகிற வேடிக்கையைப் பார்ப்பதற்காக வீதியில் நின்றார்களாம்! அவர்கள் பார்த்த கடைசி வேடிக்கை அதுதானாம்! ஏன் மாப்பிள்ளை! அப்படித்தானே?"
"ஆமாம்" என்றார் மாப்பிள்ளை சுருக்கமாக. அவருக்கு அந்தப் பயங்கரத்தைப் பற்றிப் பேசவே இஷ்டமில்லையென்று தோன்றியது.
"வேடிக்கைப் பார்க்கிறதென்றால், வெளியில் போய் நிற்க வேண்டுமா என்ன? வீட்டிற்குள்ளேயே இருந்து பார்த்தால் போதாதா?" என்று இன்னொருவர் கேட்டார்.
"வீட்டுக்குள் இருந்தால் என்ன வேடிக்கை தெரியும்! வெளியில் இருந்தாலும் அண்ணாந்து பார்க்கலாம்."
"வீட்டுக்குள் இருந்தால் வேடிக்கை ஒரு வேளைப் பார்க்க முடியாது. ஆனால் வேடிக்கையைக் கேட்கலாம்! குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுச் சிலருக்குக் காது செவிடாகவே போய்விட்டதாம். சில குழந்தைகள் திறந்த வாய் திறந்தபடியே இருக்கின்றனவாம்!" என்றார் ஒருவர்.
"ஆனால் மாப்பிள்ளை மட்டும் வாயையே திறக்க மாட்டேனென்கிறாரே? ஒரு வேளை குண்டு சத்தத்தில் மாப்பிள்ளையின் வாய் மூடிவிட்டதோ?" என்றேன் நான்.
"சாப்பாட்டுக்கு மட்டும் வாய் திறக்கும் போலிருக்கிறது!" என்றார் ஒருவர்.
மாப்பிள்ளை கொஞ்சம் பல் தெரியும்படி சிரித்துவிட்டு, "ஆமாம்; குண்டு விழும்போது வாயைக் கெட்டியாக மூடிக் கொள்ளத்தான் வேண்டும். பல்லைக் கடித்துக் கொள்ள வேண்டும். வெறுமனே கடித்துக் கொண்டால் போதாது; வாயில் கைக்குட்டையை அடைத்துக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டிருக்க வேண்டும். காதிலும் பஞ்சை அடைத்துக் கொள்ள வேண்டும். குண்டு விழும் சப்தம் அவ்வளவு பயங்கரம்!" என்றார்.
"ஒரு குண்டு விழுந்தால் அதைச் சுற்றிலும் எவ்வளவு தூரத்துக்கு அபாயம் உண்டாகும்?" என்று கேட்டேன்.
"குண்டு வெடித்ததும் கிளம்பும் இரும்புத்துண்டுகள் மூன்று நாலு பர்லாங்கு தூரம் வரையில் பரவும்" என்று வரதராஜன் சொன்னார்.
"குண்டு விழும்போது வீட்டுக்குள் இருந்தால் நல்லதா? குழியில் பதுங்கிக் கொண்டிருந்தால் நல்லதா?" என்று விவாதம் நடந்தது.
"வீடாவது? குழியாவது? இதனாலெல்லாம் ஒரு வேளை ஜப்பான் குண்டிலிருந்து தப்பிக்கலாம், யமனிடமிருந்து தப்பிக்க முடியுமா?" என்று வேதாந்தி கேட்டார்.
அப்போது மாப்பிள்ளை, "ஆமாம், விதியும் முக்கியமானதுதான், ரங்கூனில் என்பந்துக்கள் இருக்கும் வீட்டுக்கு அடுத்த வீட்டிலிருந்து ஒரு தெருப் பூராவும் நாசமாகி விட்டது. என் பந்துக்கள் வீட்டில் ஒரு ஓடு செங்கல் பெயரவில்லை" என்றார்.
"ஆமாம், எல்லாம் விதிதான்" என்று சிலர் ஆமோதித்தார்கள்.
"நாளை, பொழுது விடிந்தால் யாருடைய விதி எப்படி இருக்குமோ? எல்லோருக்கும் இன்னும் ஒரு தொன்னை பாதாம் கீர் போட்டுவிடு!" என்றார் விருந்து கொடுத்த சிநேகிதர்.
சாப்பிட்டு எழுந்திருந்ததும், எல்லோரும் தாம்பூலதாரணத்துக்கு உட்கார்ந்தார்கள்.
"இனிமேலாவது ஏதாவது சந்தோஷமான விஷயத்தைப் பற்றிப் பேசலாம்" என்றார் சந்தோஷப் பிரியர்.
"ராயபுரம் கடற்கரையில் 'ஓடிப் போங்கள்' என்று துண்டுப் பிரசுரங்கள் கிடந்ததாமே!" என்று ஒரு சந்தோஷமான பேச்சை ஆரம்பித்தார்.
"அது நிஜந்தானா? யாராவது அந்தப் பிரசுரத்தைப் பார்த்தீர்களா?" ஒவ்வொருவரும் கேட்டார்கள்.
ஒருவரும் நேரில் பார்க்கவில்லையென்று தெரிந்தது. பத்திரிகைகளில் வெளியான சர்க்கார் அறிக்கையைப் பார்த்துத்தான் எல்லாரும் தெரிந்து கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை, "பிரசுரத்தில் என்ன எழுதியிருந்தது" என்று கேட்டார்.
"'ஓடிப்போங்கள்' என்று எழுதியிருந்தது?"
"நிச்சயந்தானே? 'ஜப்பானே! ஓடிப்போ?' என்று எழுத வில்லையே!"
"இல்லவே இல்லை."
"அப்படியானால் இது யு.பி. ராகவாச்சாரியின் வேலை அல்ல" என்றார் மாப்பிள்ளை.
"அது என்ன சமாசாரம்? யு.பி. ராகவாச்சாரி என்பது யார்?" என்று கேட்டோம். ரொம்பவும் தூண்டிக் கேட்ட பிறகு மாப்பிள்ளை சொன்னதாவது:-
யு.பி. ராகவாச்சாரிக்கு ரங்கூன் போஸ்டு ஆபீஸில் வேலை. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். எனக்கு அவன் அத்தான் முறை ஆக வேணும். நான் மோல்மீனுக்குப் போவதற்கு முன் இரண்டு பேரும் ரங்கூனில் ஒரே வீட்டில் குடியிருந்தோம்.
யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து ராகவாச்சாரியின் போக்கு ஒரு மாதிரி ஆகிக் கொண்டு வந்தது. ஆபீஸ் வேலையைக் கூட நன்றாய்க் கவனியாமல் யுத்தச் செய்திகளைப் படிப்பதில் ஈடுபட்டான். தினசரிப் பத்திரிகைகள் வந்ததும் முதலில் யுத்த 'மாப்பை' வெட்டி எடுத்து, அவனுடைய பெரிய நோட்டுப் புத்தகத்தில் ஒட்டி விடுவான்; பத்திரிகை எத்தனை பிரதி கிடைக்கிறதோ அவ்வளவு 'மாப்பு'களையும் வெட்டி எடுத்துக் கொள்வான். ஒரே படத்தை குறுக்கு நெடுக்காகவும், மேல் கீழாகவும் பல விதமாக ஒட்டியிருப்பான். அவைகளை நீலப் பென்ஸிலாலும், சிகப்புப் பென்ஸிலாலும் கோடுகள் இழுப்பான். எப்போது யாரைக் கண்டாலும் யுத்தச் செய்திகளைப் பற்றியே பேசுவான். இதனாலெல்லாம் யு.பி. ராகவாச்சாரியை 'யுத்தப் பித்து ராகவாச்சாரி' என்று எல்லோரும் அழைக்க ஆரம்பித்தார்கள்.
1 | 2 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ரங்கூன் மாப்பிள்ளை - Rangoon Mappillai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குண்டு, மாப்பிள்ளை, என்றார், என்ன, ஒருவர், இல்லை, ஆமாம், கேட்டார், வேண்டும், வேடிக்கை, வாய், கடித்துக், இருந்தால், வீட்டுக்குள், நான், ரங்கூனில், வரதராஜன், இருந்து, யாராவது, விருந்து, கேட்டேன், அவ்வளவு, எல்லோரும், வந்து, கொண்டு, வேளை