புஷ்பப் பல்லக்கு
"ஆனால் கொஞ்சம் தர்மசங்கடமாய்ப் போய்
விட்டது. இருந்தாலும் நீங்கள் எல்லோரும் இருக்கிறீர்களே? பார்த்துக்
கொள்கிறீர்கள்."
"அதற்கென்ன சந்தேகம்? பேஷா பார்த்துக் கொள்கிறோம்" என்றார்கள். எதைப் பார்த்துக் கொள்வது என்று மட்டும் அவர்களுக்கு விளங்கவில்லை.
"செல்லக்கிளியைப் பெரிய இடத்தில் கொடுத்திருக்கு. உங்களுக்குத் தான் தெரியுமே, சம்பந்தி சப்ஜட்ஜ். ஒருவேளை அவர்கள் வந்தாலும் வருவார்கள். கல்யாணம் ஜெரப்பா நடத்த வேண்டும்."
இப்பொழுது கொஞ்ச விளங்க ஆரம்பித்தது. ஆனால் இவர்களுடைய ஆச்சரியமும் திகைப்பும் அதிகமாயின. இந்த ஸ்திரீயின் துணிச்சல்தான் என்ன? காம்ப்புக்கு வந்த இடத்தில் தங்கைக்கு ருது ஸ்நானக் கல்யாணம் நடத்த வேண்டுமென்று சொல்கிறாளே?
இந்தச் சமயத்தில் தாசில்தார் உள்ளே வந்தார். "என்ன, ஆர்.ஐ.! (ரெவின்யூ இன்ஸ்பெக்டர்) சமாசாரம் கேட்டீர்களல்லவா? எக்கச்சக்கமாய் வந்து கல்யாணம் ஏற்பட்டிருக்கிறதே? இரண்டு வண்டி வைத்து இவர்களை ஊருக்கு அனுப்பி விடலாமென்று தோன்றுகிறது; நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"அவர்கள் நினைக்கிறது என்ன? அதெல்லாம் பேஷாய் 'நாங்கள் இருக்கிறோம், பார்த்துக் கொள்கிறோம்' என்று சொல்லி விட்டார்கள். இனி மேல் கிளம்பி ஊருக்குப் போய் எல்லா ஏற்பாடுகளும் பண்ணுகிறதென்றால் முடியுமோ? நீங்களும் காம்ப்பிலிருந்து வர முடியாது. நான் தனியாய் ஒண்டிக்காரி என்ன செய்வது? என்ன, விகாரம்பிள்ளை, என்ன சொல்கிறீர்கள்?"
"அம்மா சொல்கிறதும் வாஸ்தவந்தானே?" என்றார் விகாரம் பிள்ளை.
தாசில்தார், ரிவின்யூ இன்ஸ்பெக்டர் முகத்தைப் பார்த்தார்.
"எல்லாம் இங்கேயே பேஷாய் நடத்தி விடலாம்னா!" என்றார் ஆர்.ஐ.அய்யங்கார்.
சற்று நேரத்துக்கெல்லாம் அங்கே கூடியிருந்த கிராம முனிசீப், கணக்கப்பிள்ளைகள் எல்லாரும் மேளக்காரன், பூக்காரன் முதலியவர்களைத் தேடிச் சென்றார்கள்.
அன்றிரவு கணக்கப் பிள்ளை ராயர் தமது மனைவியிடம் பின்வருமாறு சொல்லிக் கொண்டிருந்தார்:- "நீங்களும் பதினெட்டு முழம் புடைவை கட்டிக் கொண்டு பொம்மனாட்டிகள் என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறீர்களே! தாசில்தார் சம்சாரம் வந்திருக்கிறாள். என்ன சாமார்த்தியம்! என்ன சாமர்த்தியம்! அவளுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. இன்றைக்குக் குஞ்சாலாடு பிடிப்பதற்கான சாமான் வேண்டியிருந்தது. பரிசாரகன் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கொண்டு ஜாபிதா போட்டிருந்தான். 'ஏண்டா, முந்நூறு குஞ்சாலாடுக்கு மூன்றே முக்கால் வீசை சர்க்கரைதானே திட்டம்? எப்படி நாலு வீசை போட்டிருக்கிறாய்?' என்று தாசில்தார் சம்சாரம் கேட்டாள். பரிசாரகன் விழித்துப் போய் விட்டான். பொம்மனாட்டி என்றால் அப்படியல்லவா நாலும் தெரிந்திருக்க வேண்டும்?"
"இவ்வளவு தெரிந்தவன் என்கிறீர்களே! நம்பாத்திலும் இரண்டு குழந்தைகள் இருக்கே! 'ராயரே, இந்தாரும் இரண்டு குஞ்சாலாடு. எடுத்துக் கொண்டு போய்க் குழந்தைகளிடம் கொடும்' என்று சொல்லத் தெரிந்ததா? என்னமோ காணாதது கண்டது போல் ஆகாசத்தில் தூக்கி வைக்கிறீர்களே?" என்றாள் ராயர் மனைவி.
ராயருக்கும் இந்த விஷயத்தில் கொஞ்சம் தாசில்தார் மனைவி மேல் தாங்கல் இருந்தது. அந்த அம்மாள் அந்தண்டை, இந்தண்டை போனால் மெதுவாக ஒரு குஞ்சாலாடு சாப்பிட்டு விடலாமென்று அவர் சமையலறைப் பக்கம் அடிக்கடி போய்க் கொண்டிருந்தார். ஆனால், அது பலிக்கவில்லை. குஞ்சாலாடு பூராவும் பிடித்துக் கூடையில் அடுக்கிச் சாமான் அறையில் வைத்துப் பூட்டிய பிறகுதான் அம்மாள் நகர்ந்தாள்.
ஆயினும் அது கூட ராயருக்கு அந்த அம்மாளிடம் ஒரு விதத்தில் பக்தி விசுவாசத்தையே உண்டாக்கிற்று. "நம்ப வீட்டுப் பசங்களாயிருந்தால், எங்கேயாவது போய், யார் வாயையாவது பார்த்துக் கொண்டு நிற்கும். வந்தவர்கள், போனவர்கள் எல்லோரும் தலைக்கு ஒன்று எடுத்துக் கொண்டு போவார்கள். இந்த அம்மாளிடம் நடக்குமா, அது?" என்று எண்ணி வியந்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புஷ்பப் பல்லக்கு - Pushpa Pallaaku - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்ன, பார்த்துக், தாசில்தார், போய், குஞ்சாலாடு, கொண்டு, இரண்டு, கல்யாணம்