புஷ்பப் பல்லக்கு
அந்த வருஷம் பெரிய கலெக்டர் ஜமாபந்தி.
பெரிய கலெக்டர் பல்டன் துரை 'நெறி தவறாத நேர்மையாளர்' 'இந்திய ஜனங்களிடம்
மிக்க அபிமானமுள்ளவர்' என்றெல்லாம் பெயர் பெற்றவர். இதை நம்பி மேற்படி
கர்ணம் தாம் எழுதிய ஹாஸ்யக் கட்டுரையை ஜமாபந்தியின் போது கலெக்டர் முன்பு
சமர்ப்பித்தார். அவ்வளவுதான்! கொஞ்ச நாளைக்கு அந்தத் தாலுக்கா எமலோகம்
படும்பாடு பட்டது. விசாரணையில் கணக்குப் பிள்ளையின் புகாரை ஆதரித்துச்
சாட்சி சொல்ல ஒரு கிராம உத்தியோகஸ்தர் கூட முன் வரவில்லை. கர்ணத்திற்குக்
கர்ணம் வேலை போயிற்று. ஸ்ரீமான் பெத்த பேராசைப் பிள்ளைக்கும் தாசில்
உத்தியோகம் போயிற்று. (ஆனால் 'ஆக்டிங் டிபுடி கலெக்டர்' உத்தியோகம் கிடைத்தது.)
மேற்படி சம்பவம் சமீபத்திலேதான் நடந்திருந்ததாகையால் திருவாளர் பெத்த பேராசைப் பிள்ளையின் ஸ்தானத்துக்கு இப்போது வந்திருந்த பிரம்ம ஸ்ரீ லஞ்சநாத சாஸ்திரியை வரவேற்பதில் கிராம உத்தியோகஸ்தர்கள் தீவிர கவனம் செலுத்தி வந்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் ரிவினியூ இன்ஸ்பெக்டர் தீராத்துயரமய்யங்காரும், தாசில்தாரின் காம்ப் கிளார்க் விகாரம் பிள்ளையும் வந்து சேர்ந்தனர். சுற்றுப் பக்கத்திலிருந்து எல்லாக் கர்ணம் கிராம முனிசீப்புகளும் வந்திருக்கிறார்களா என்று அவர்கள் சோதனை செய்தபின், உக்கிராண அறைக்குச் சென்று போஜன பதார்த்தங்களைப் பார்வையிட்டனர். ஒரு பெரிய செம்பின் அடிவாரத்தில் ஒட்டிக் கொண்டிருந்த பாலைக் கண்டதும் விகாரம் பிள்ளைக்குப் பெருங் கோபம் வந்தது. அவர் கிராம முனிசீப்பை ஓட விடவே, அவர் வெட்டி தலையாரிகளை ஓட விட்டார். விகாரம் பிள்ளை அப்பால் போனதும், ரிவினியூ இன்ஸ்பெக்டர் கிராம முனிசீப்பின் காதோடு, "ஓய்! சுத்த மோசமாயிருக்கிறீரே! பாலைத் தீர்த்தமாட்டி வைக்கிறதானேங்காணும்! வருகிறவர் சாஸ்திரிகளாச்சே!" என்றார்.
சுபதின, சுபயோக, சுப முகூர்த்தத்தில் தாசில்தார் லஞ்சநாத சாஸ்திரியும், அவருடைய தர்மபத்தினி ஸ்ரீமதி கற்பகாம்பாளம்மாளும், மைத்துனி சௌபாக்கியவதி செல்லக் கிளியும், குழந்தைகள் அரை டஜனும் மேற்கத்தி மாடு கட்டிய இரண்டு வில் வண்டிகளில் ஜாம் ஜாமென்று வந்து இறங்கினார்கள். வந்த களைப்பு நீங்கியதும், அம்மாள் உக்கிராண அறையைப் பார்வையிடச் சென்றாள். கணக்கப்பிள்ளை ராயர் பயபக்தியுடன் முன் வந்து "டிபன் என்ன போடச் சொல்கிறது?" என்று கேட்டார்.
"நீர் யார்?"
"நான் தான் உள்ளூர் கர்ணம்"
"பரிசாரகன் எங்கே?"
அம்மாளைக் கண்டதும் கதவிடுக்கில் ஒளிந்து கொண்ட பரிசாரக முத்துவையர் இப்போது வெளியே வந்தார். "இதோ இருக்கேன்" என்றார்.
"நீதானா? உன் துணியைப் பார்த்தாலே சாப்பாடு வேண்டியிராது போலிருக்கே! இருக்கட்டும், சேமியா கேஸரி போடத் தெரியுமா?"
"தெரியும்" என்றார் முத்துவையர். ஆனால் ராயருக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஏனென்றால், சேகரித்திருந்த சாமான்களில் சேமியா இல்லை. 'இந்த அம்மாள் வெகு கெட்டிக்காரி; எது இல்லையோ அதைப் பார்த்துக் கேட்கிறாள், பார்த்தாயா?' என்று நினைத்துக் கொண்டு, "இதோ வாங்கி வரச் சொல்லுகிறேன்" என்றார்.
"ரொம்ப பேஷ்! சேமியா கூட வாங்கவில்லையா?" என்று அம்மாள் உதட்டை ஒரு மடிப்பு மடித்தாள். ராயர் "இதோ வந்து விட்டது" என்று ஓட்டம் பிடித்தார்.
மறுநாள் ஸ்ரீமதி தாசில்தாரிணி அவர்கள், தீராத்துயரமய்யங்காரையும், விகாரம் பிள்ளையையும் கூப்பிட்டனுப்பிய போது, அவர்கள் அஸ்தியில் சுரத்துடன் தான் போனார்கள். ஆனால் அம்மாள் வழக்கத்தை விட அதிக முக மலர்ச்சியுடன் இருந்ததைக் கண்டதும் கொஞ்சம் மனம் தேறினார்கள்.
"அய்யங்காரே! நம்மாத்திலே கல்யாணம் வந்திருக்கு" என்றாள் அம்மாள்.
இவர்களுக்கு ஒன்றும் புரியாவிட்டாலும் "சந்தோஷம்" என்றார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புஷ்பப் பல்லக்கு - Pushpa Pallaaku - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கிராம, அம்மாள், வந்து, என்றார், விகாரம், கலெக்டர், கர்ணம், சேமியா, கண்டதும், பெரிய