இது என்ன சொர்க்கம்
3
இதற்குப் பிறகு சாஸ்திரிகளும் முதலியாரும்
பேசிய விஷயங்கள் கொஞ்சம் விரஸமாயும் அப்படியே பிரசுரிப்பதற்கு லாயக்கற்றவையாயும்
இருந்தன. கடைசியாக அந்த "லோசனா தத்தின் பெயர் பத்திரிகையிலே கூடக் கொஞ்ச
நாள் அடிபட்டதில்லையா?" என்றார் முதலியார்.
"ஆமான்னா ஆமாம். பத்திரிகை என்ற உடனே ஞாபகம் வருகிறது. இந்தச் சொர்க்கத்திலே ஒரு நியூஸ் பேப்பர் கூடக் கிடையாது. பார்த்தீரா? மற்றதெல்லாம் ஒரு புறம் இருக்க, நியூஸ் பேப்பர் இல்லை என்கிறதை நினைத்தால் தான், 'இது என்ன தரித்திரம் பிடித்த சொர்க்கம்' என்று தோன்றுகிறது."
"வாஸ்தவந்தான். நியூஸ் பேப்பர் இல்லாததுதான் பெரிய குறை. சாஸ்திரிகளே! சமாசாரம் தெரியுமா? பூலோகத்திலே இப்போது பெரிய யுத்தம் நடக்கிறதாமே? நம்ம காலத்திலே நடந்த யுத்தத்தை இந்த யுத்தத்தின் காலில் கட்டி அடிக்க வேணுமாம்!"
"நிஜமாகவா? அடாடாடா! இப்பேர்ப்பட்ட சமயத்திலா நாம் பூலோகத்தில் இல்லாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறோம்? ஆனால் உங்களுக்கு எப்படித் தெரியும், முதலியார்!"
"நாலு நாளைக்கு முன்னால் ஒரு பிள்ளையாண்டான் பூலோகத்திலிருந்து வந்தான். அவனைப் பார்த்துப் பேசிக் கொண்டிருந்தேன்."
"நீர் அதிர்ஷ்டசாலி ஓய்! பூலோகத்திலிருந்து வந்தவனைப் பார்த்தீரா? அவன் இன்னும் என்னென்ன சொன்னான்?"
"யுத்தம் என்றால் உங்க வீட்டு யுத்தம், எங்க வீட்டு யுத்தம் இல்லையாம். ஆகாச விமானங்களிலே கொண்டு வந்து குண்டு போடுகிறார்களாம். ஊர் ஊராய்ப் பற்றி எரிகிறதாம். ஆமாம் சாஸ்திரிகளே! பூலோகத்திலே நாமெல்லாம் புராணங்களிலே வாசித்துக் கொண்டிருந்தோமே, தேவர்களும் அசுரர்களும் பிரமாத யுத்தம் செய்தார்கள் என்று, இங்கே ஒரு மண்ணாங்கட்டியையும் காணோமே."
"அது தெரியாத உமக்கு? அசுரர்களையெல்லாம் கொன்றாகி விட்டதாம்! இனிமேல் இங்கே யுத்தம் என்பதே வராதாம்!"
"சட்சட்! இவ்வளவுதானா?"
"ஆமாம் முதலியார்வாள்! யாரோ பூலோகத்திலிருந்து புதிதாய் வந்தான் என்றீரே? அவனை எங்கே பார்த்தீர்? என் கண்ணிலே ஒருவனும் தட்டுப்படவில்லையே?"
"எங்கே பார்த்தேன் என்றா கேட்கிறீர்?"
"அதைத்தான் கேட்கிறேன்?"
"சொல்லப் பயமாயிருக்கிறது."
"பயமா? என்னத்திற்குப் பயம்?"
"இந்த சொர்க்கம் எங்கே தான் போய் முடிகிறது என்று பார்ப்பதற்காக நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். வெகு தூரம் போன பிறகு, பூலோகத்திலே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே, மலைக் கணவாய் - அந்த மாதிரி ஒரு இடம் வந்தது. அந்தக் கணவாய் வழியாய்க் கொஞ்ச நேரத்துக்கு ஒரு தடவை ஒரு புது மனிதர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்."
"ஆமாம்; அந்தக் கணவாய்க்குள் புகுந்து அது எங்கே போகிறது என்று பார்த்தீரா?"
"இல்லை, பயமாயிருந்தது."
"என்ன பயம்?"
"சில பேர் அதற்குள் புகுந்து போனதைப் பார்த்தேன். அவர்கள் திரும்பி வரவேயில்லை."
"என்ன நிஜந்தானா?"
"ஆமாம்."
"சபாஷ்!" என்றார் சாஸ்திரியார்.
"எதற்கு சபாஷ்!"
"அந்தக் கணவாய்தான் பூலோகத்துக்குப் போகும் வழியாயிருக்க வேண்டும். முதலியார்வாள்! சத்தியமாகச் சொல்லும். உமக்கு இந்தச் சொர்க்கம் பிடிக்கிறதா?"
"கட்டோடே பிடிக்கவில்லை."
"பூலோகத்துக்குப் போக வேண்டுமென்றிருக்கிறதல்லவா?"
"இருக்கிறது!"
"சரி, அப்படியானால் கிளம்பும்" என்று சாஸ்திரிகள் எழுந்தார். இரண்டு பேரும் காற்று வெளியில் மிதந்து வெகுதூரம் போனார்கள்.
"அதோ!" என்றார் முதலியார்.
"ஒரு நீண்ட மேக மலைத் தொடர் தெரிந்தது. அதன் நடுவில் ஒரு பிளவு தென்பட்டது.
இருவரும் அந்தப் பிளவுக்குள் போனார்கள். கொஞ்ச தூரம் போனதும் சட்டென்று முடிந்து விட்டது. அப்புறம் ஒன்றுமே இல்லை. வெறும் வெளிதான். விளிம்பினருகில் போய்ப் பார்த்தால் கீழே அதல பாதாளம்.
"அம்மம்மா! எவ்வளவு பெரிய பள்ளம்! இதில் விழுந்தால்..."
"பூலோகத்துக்குப் போகலாமே" என்று முதலியாரின் குரல் கேட்டது.
அவ்வளவுதான்! சாஸ்திரியார் கீழே கீழே கீழே விழுந்து கொண்டிருந்தார். காலவரம்பென்பதே இல்லாமல் அனந்தகாலம் கீழே போய்க் கொண்டிருந்ததாகத் தோன்றியது. அப்புறம் அவருடைய ஞாபகம் போய் விட்டது.
*****
சாஸ்திரியாருக்கு மறுபடியும் சுயப் பிரக்ஞை வந்த போது படார், படார் என்று வெடிச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அவருக்குக் கீழேயும் பக்கங்களிலும் ஏதோ மிருதுவான வஸ்து இருப்பது போல் உணர்ச்சி உண்டாயிற்று. அடே! இதென்ன? சொர்க்கத்திலே ஸ்பரிச உணர்ச்சிதான் கிடையாதே! பார்க்கிறதோடு சரிதானே - ஜம்மென்று பூலோகத்தில் பஞ்சு மெத்தையில் படுத்துக் கொண்டிருப்பது போல் அல்லவா தோன்றுகிறது? - ஆமாம் கச்சபேசுவர முதலியார் எங்கே?
ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. ஆனால் முதலியாரின் குரல் இல்லை. ஸ்திரீகள் குரல். யாரோ குனிந்து பார்ப்பது போல் இருந்தது. ஓஹோ நமது பாரியாள் சீதாலக்ஷ்மி அம்மாள் அல்லவா? ஆனால், இதென்ன மாறுதல்? முகத்தில் இவ்வளவு சுருக்கங்கள் - தலை மயிர் ஒரே வெள்ளை! சரிதான்; பன்னிரண்டு வருஷம் கழித்துப் பார்க்கிறோமல்லவா?
"தாத்தாவையே உரித்து வச்சிருக்கு!" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.
இன்னொரு குரல் பக்கத்திலிருந்து, "அபசகுனம் மாதிரி அப்படியெல்லாம் சொல்லாதேங்கோ. தாத்தாவுக்கு என்னைக் கண்டாலே பிடிக்காது. அவர் என் வயிற்றிலே பிறந்திருக்க மாட்டார்" என்றது. அவருடைய மாட்டுப் பெண் ஸுலோசனாவின் குரல் அது என்று தெரிந்து கொண்டார்.
"அப்படிச் சொல்லாதேடி, மனத்துக்குள்ளே உன் மேலே அவருக்கு ரொம்ப வாஞ்சை. கடைசி வரையில் குழந்தை மாதிரி தீபாவளிக்குப் பட்டாசுச் சுட்டு விடுவாரோல்யோ? அதுதான் தீபாவளியன்றைக்குப் பிறந்திருக்கிறார்" என்றாள் சீதாலக்ஷ்மி அம்மாள்.
அப்போது சாஸ்திரியார் மனப்பூர்வமாக வெறுத்த அவருடைய மாட்டுப் பெண்ணின் முகம் - முன்னே பார்த்ததைக் காட்டிலும் பெருத்து உப்பியிருந்த முகம் - பவுடர் வாசனை மூக்கைத் துளைத்த முகம் - அவருடைய முகத்தின் மிக அருகில் வந்தது. அதைத் தடுத்துத் தள்ளுவதற்காகச் சாஸ்திரியார் கையைத் தூக்கினார். என்ன வேடிக்கை! கை துளியுண்டு இருக்கிறதே!
"என் கண்ணே! அதற்குள்ளே அம்மான்னு தெரிஞ்சு போச்சா!" என்றாள் ஸுலோசனா.
அப்போதுதான் சாஸ்திரியாருக்கு விஷயம் தெரிந்தது. விதி தன்னை எவ்விதம் கேலிக்கூத்துக்கு உள்ளாக்கி விட்டதென்று! தன்னுடைய சொந்த வீட்டில் தான் தொட்டிலில் படுத்திருப்பதையும், தன் மாட்டுப் பெண்ணுக்குக் குழந்தையாய்ப் பிறந்திருப்பதையும் உணர்ந்தார். பிரமாதமான ஆத்திரமும், அழுகையும் வந்தது. கையையும் காலையும் உதைத்துக் கொண்டு 'வீல்' என்று அழுதார்.
"அம்மா நீங்கள் சொன்னது சரிதான். தொண்டையைப் பாருங்கோ! அசல் தாத்தாதான்" என்றாள் ஸுலோசனா.
வெளியிலிருந்து சாஸ்திரிகளுடைய குமாரன் பஞ்சாமியின் குரல் சொல்லிற்று: "எத்தனை பகவத் கீதையைப் பிரசங்கம் பண்ணி, இருக்கிறவாள் பிராணனை எல்லாம் வாங்கப் போகிறாரோ."
இதைக் கேட்டதும் சாஸ்திரியார் மூர்ச்சையடைந்தார்.
மறுபடியும் பிரக்ஞை வந்தது; ஆனால் நல்ல வேளையாய்ப் பூர்வ ஞாபகம் வரவில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இது என்ன சொர்க்கம் - Ithu Enna Sorgam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - குரல், யுத்தம், ஆமாம், கீழே, சாஸ்திரியார், எங்கே, அவருடைய, முதலியார், என்ன, வந்தது, என்றாள், இல்லை, அந்தக், பூலோகத்துக்குப், போல், முகம், மாட்டுப், அம்மாள், சீதாலக்ஷ்மி, வந்து, பேப்பர், பார்த்தீரா, நியூஸ், ஞாபகம், என்றார், தான், சொர்க்கம், கொஞ்ச, பூலோகத்திலிருந்து, இங்கே, பூலோகத்திலே, பெரிய, மாதிரி