இது என்ன சொர்க்கம்
1
ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த
வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும்
ஆவலுடன் நோக்கின. 'தெரிந்த முகம் ஏதாவது கண்ணுக்குத் தென்படாதா' என்ற
ஏக்கம் அவருடைய உள்ளத்தை அரித்துக் கொண்டிருந்தது. "அம்மா! இங்கு வந்து
வருஷம் பன்னிரண்டுக்கு மேலாகிறது. பன்னிரண்டு வருஷந்தானா பன்னிரண்டு
யுகம் போல் அல்லவா தோன்றுகிறது? - இருக்கட்டும்; இந்தப் பன்னிரண்டு வருஷத்தில்
பழக்கமான முகம் ஒன்றைக் கூட காணமுடியவில்லை. பழைய ஞாபகங்களைப் பற்றிக்
குஷாலாகப் பேசிக் கொண்டிருக்க ஒரு ஆத்மா கூட அகப்படவில்லை. இது என்ன
சொர்க்கம்?" என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார் வியாக்ரபாத சாஸ்திரிகள்.
விஷயம் என்னவென்றால், அவருக்குச் சொர்க்கம் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.
இந்தச் சொர்க்கத்தை அடைவதற்காகப் பூலோகத்தில் அவர் செய்த காரியங்களை
நினைத்தால், அவருக்குச் சிரிப்புச் சிரிப்பாய் வந்தது. இந்தச் சொர்க்கத்தை
அடைவதற்காக அவர் செய்யாத காரியங்களை நினைத்தால் அவருக்கு அழுகையாய் வந்தது.
ஆனால், தரித்திரம் பிடித்த இந்த சொர்க்கத்தில் சிரிக்க முடியுமா? முடியாது!
அழத்தான் முடியுமா? அதுவும் முடியாது! இதற்குப் பெயர் சொர்க்கமாம். சிவ!சிவ!
ராம! ராம! இல்லை. பிசகு! வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். சிவனையும் ராமனையும்
பிரார்த்தித்துத்தான் இந்தச் சொர்க்கத்துக்கு வந்து சேர்ந்தேனே! போதாதா?
சொர்க்கத்திலிருந்து பூலோகத்துக்குப் போவதற்கு யாரைப் பிரார்த்திக்கலாம்?
சனீசுவரனைப் பிரார்த்தித்துப் பார்க்கலாமா? "சனிசுவர! சனீசுவர! சனீசுவர!
சனீசுவர!"
"யார் சாஸ்திரிகள்வாளா?" என்று பழகிய குரல் காதில் விழுந்தது. சாஸ்திரிகள் மூன்று துள்ளி துள்ளி ஒரே குதியாய்க் குதித்தார். பார்த்தால் சாக்ஷாத் திவான்பகதூர் கச்சபேசுவர முதலியார் எதிரே வந்து கொண்டிருக்கிறார்.
"அடாடா!, முதலியார்வாளா? வாருங்கோ வாருங்கோ வாருங்கோ! பார்த்துப் பதினைந்து வருஷத்துக்கு மேலாச்சே! எப்போது வந்தீர்கள்? என்ன சேதி? என்ன சமாச்சாரம்?" என்று உற்சாகமாகக் கேட்டு சாஸ்திரிகள் முதலியாரின் கையைப் பிடித்துக் குலுக்க முயன்றார். ஆனால் கையில் ஒன்றும் அகப்படாமற் போகவே, முகத்தில் ஏமாற்றம் தோன்றியது.
"என்ன சாஸ்திரிகள் வாள்! இது சொர்க்கம் என்கிறதே மறந்து போய்விட்டாற் போலிருக்கிறது! பூலோகத்தில் இருப்பதாகவே ஞாபகமோ?" என்றார் கச்சபேசுவர முதலியார்.
"அப்படித்தான்னா அப்படித்தான்! உங்களைப் பார்த்த சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் இது சொர்க்கம் என்கிறதே மறந்துதான் போச்சு! பூலோகமென்றே நினைச்சுட்டேன்!" என்று சாஸ்திரிகள் கூறி 'ஹிஹ்ஹிஹ்ஹி' என்று சிரித்தார்.
அப்போது அந்தப் பக்கமாகப் போன தேவர்களும் தேவிகளும் அவரை நோக்கி ஏளனமாகப் பார்த்துக் கொண்டு போனார்கள்.
"இந்த மாதிரி சிரிப்பைக் கேட்டுப் பத்து வருஷத்துக்கு மேலாகி விட்டது?" என்றார் முதலியார்.
"ஆமான்னா! அதை நினைத்தால் துக்கம் துக்கமாய் வருகிறது. ஊம் ஊம்!" என்று சாஸ்திரிகள் பலமாக அழுதார்.
"வேண்டான்னா, அழாதேங்கோ!" என்று முதலியார் கூறி, "இப்படி அழுகைக் குரலைக் கேட்டு எத்தனை நாள் ஆச்சு தெரியுமா? ஊம் ஊம்" என்று தாமும் அழத் தொடங்கினார்.
இரண்டு பேரும் ஒருவருடைய கண்ணை ஒருவர் துடைக்க முயன்று, அதில் பிரயோஜனமில்லையென்று கண்டபோது, அதனுடைய ஹாஸ்ய ரசத்தை அநுபவித்துப் பலமாகச் சிரித்தார்கள்.
"அப்படின்னா, உங்களுக்கும் சொர்க்கம் பிடிக்கவில்லையென்று சொல்லுங்கோ?" என்றார் முதலியார்.
"பிடிக்கவில்லையா? அழகுதான். பிடிக்கவில்லையான்னா கேட்கிறீர்கள்? சொர்க்கம் என்கிறது இந்த மாதிரி இருக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால் அவ்வளவு தானம் தர்மம் தலையிலே குட்டிக்கிறது, மூக்கைப் பிடிக்கிறது, கோவிலுக்குப் போகிறது - ஒன்றுமே பண்ணியிருக்க மாட்டேனே? இந்த அழகான சொர்க்கத்துக்காகப் பூலோகத்தை நன்றாக அனுபவிக்காமல் போனது என்ன முட்டாள்தனம் என்பதை எண்ணும் போது..."
"என் மனத்திலிருக்கிறதை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிறீர்கள். சாஸ்திரிகள்வாள்! எங்கேயாவது ஓரிடத்தில் சாவகாசமாக உட்கார்ந்து பேச வேணும். இருக்கட்டும் இப்போ எங்கே கிளம்பிப் போய்க் கொண்டிருந்தீர்கள்" என்று முதலியார் கேட்டார்.
"எங்கே கிளம்பினேனா? ஓரிடத்துக்கும் இல்லை. இந்த அழகான சொர்க்கத்திலே எங்கே போனால் தான் என்ன? எல்லாம் ஒரே லட்சணந்தான்!" என்று சாஸ்திரிகள் அலுப்புடன் கூறினார்.
"அப்படியானால் வாருங்கள்! அதோ அந்த மந்தார மரத்தடியில் உட்கார்ந்து சாவகாசமாகப் பேசலாம்" என்றார் முதலியார்.
இரண்டு பேரும் சமீபத்தில் தென்பட்ட மந்தார மரத்தடிக்குப் போய் உட்கார்ந்தார்கள்.
1 | 2 | 3 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இது என்ன சொர்க்கம் - Ithu Enna Sorgam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாஸ்திரிகள், முதலியார், சொர்க்கம், என்ன, என்றார், வாருங்கோ, எங்கே, இந்தச், வந்து, பன்னிரண்டு, நினைத்தால், சனீசுவர