பாங்கர் விநாயகராவ்
ஐந்தாம் காட்சி
நேரம் : இரவு எட்டரை மணி.
இடம் : "பத்ம விலாஸம்" முன்புறத்து ஹால்.
பாத்திரம் : விநாயக ராவ், சிவகாமி, பரமேசுவரன்.
*****
பரமேசுவரன் : சட்டசபையில் முடிவு என்ன ஆயிற்று?விநாயகராவ் : சரியான முடிவுதான்.
பரமே : பிரேரேபணை தோல்வி யடைந்துவிட்டதல்லவா?
விநாயக : முதல்தரமான தோல்வி; மூன்றில் ஒரு பங்கு வோட்டுக் கூடக் கிடைக்கவில்லை.
பரமே : இந்த அநியாயத்திற்கு எப்போது விமோசனமோ தெரியவில்லை.
சிவகாமி : சாப்பிடப் போகலாமா? கங்கு இன்னும் வரக்காணோமே?
விநாயக : ஏன் இவ்வளவு தாமதம்? சினிமாவுக்குப் போயிருந்தாலும் இதற்குள் திரும்பியிருக்கலாமே?
பரமே : மோட்டார் சத்தம் கேட்கிறது. நான் போய்ப் பார்த்து வருகிறேன்
[வெளியே போகிறான்]
சிவகாமி (இரகசியமாக) : ஒரு சமாசாரம் அல்லவா? ரொம்பக் கவலையாய் இருக்கிறது. கொஞ்ச நாளாகக் கங்கு ஒரு மாதிரியாக இருக்கிறான்.
விநாயக : என்ன சொல்கிறாய்? கங்குவுக்கு என்ன?
சிவகாமி : நாட்டுப் பெண் இன்றுதான் சந்தேகப்பட்டுச் சொன்னாள். அதன் மேல் எனக்கும் சந்தேகமாயிருக்கிறது. இரவில் முன்போல் சீக்கிரம் வருவதில்லை. வாயில் துர்வாசனை வீசுகிறது என்று சொல்கிறாள்.
விநாயக : சீச்சி! என்ன உளறுகிறாய்? கங்காதரனா அப்படி எல்லாம் போகிறவன்?
சிவகாமி : ஒன்றுமில்லாமலிருக்க வேண்டுமென்றுதான் தெய்வங்களை வேண்டிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மனக்கலக்கமா யிருக்கிறது. வெள்ளைக்கார ஓட்டல்கள் இருக்காமே? அங்கே போகிறானோ என்று தோன்றுகிறது. சேர்வாரோடு சேர்ந்து எத்தனையோ பிள்ளைகள் கெட்டுப் போகிறார்களே?
[பரமேசுவரன் உள்ளே வருகிறான்]
பரமே : வேறு யாருடைய வண்டியோ போயிற்று. கங்காதரனைக் காணோம்.
[டெலிபோனில் மணி அடிக்கிறது.]
விநாயக : அது யார், பாரப்பா.
பரமே (டெலிபோனில்) : யார்? போலீஸ் ஸ்டேஷனா? - ஆமாம். - துக்க சமாசாரமா? என்ன? என்ன? - (அரை நிமிஷங் கழித்துத் திரும்பி) ஐயோ விபத்தாம், கங்காதரனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போயிருக்கிறார்களாம். படுகாயமாம்.
சிவகாமி : அடபாவி! மோசம் செய்துவிட்டாயா ஐயோ! என்ன செய்வேன்?
விநாயக (பதைபதைப்புடன்) : ஓடு! டிரைவரைக் கூப்பிட்டு மோட்டார் கொண்டு வரச்சொல்லு. (டெலிபோன் அருகில் சென்று) ஹலோ! யார் அங்கே விபத்து எப்படி ஏற்பட்டது தெரியுமா?
டெலிபோன் குரல் : ராயரிடம் சொல்ல வேண்டாம். நன்றாய்க் குடித்திருந்தானென்று போலீஸ் சார்ஜெண்டு சொல்லுகிறார்.
விநாயக : என்ன? நம்முடைய டிரைவரா குடித்துவிட்டிருந்தான்?
டெலிபோன் குரல் : டிரைவர் அல்ல. ராயர் மகனே வண்டி ஓட்டினானாம். குடிவெறியில் எதிரே வந்த பஸ்ஸுடன் மோதிவிட்டான். நீங்கள் யார்?
விநாயக : ஐயோ!
[கீழே விழுந்து தரையில் தலையை மோதிக் கொண்டு அழுகிறார்.]
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாங்கர் விநாயகராவ் - Banker Vinayakrao - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - விநாயக, என்ன, சிவகாமி, பரமே, யார், டெலிபோன், கொண்டு, பரமேசுவரன்