பாங்கர் விநாயகராவ்
நான்காம் காட்சி
நேரம் : இரவு ஒன்பது மணி.
இடம் : "பத்ம விலாஸம்" தோட்டத்தில் சலவைக் கல் மேடை.
பாத்திரங்கள் : விநாயகராவ்; சிவகாமி அம்மாள்; கங்காதரன்; மாப்பிள்ளை பரமேஸ்வரன்.
*****
பரமேஸ்வரன் : நாளை சட்டசபையில் பிரேரேபணை வரப்போகிறதல்லவா? நீங்கள் எப்படி வாக்களிக்கப் போகிறீர்கள்?
விநாயக : நான் தான் அரசாங்கக் கட்சியாயிற்றே?
பரமே : அதற்காக மனச்சாட்சியை அடியோடு விற்றுவிடலாமா?
விநாயக : ரொம்பத் தெரிந்தவன் போல் பேசுகிறாயே? உண்மையில், இந்த விஷயத்தில் அரசாங்கத்தின் கொள்கைதான் சரி என்பது என் கருத்து. நீங்கள் யோசனையே செய்யாமல் பிறர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு குதிக்கிறீர்கள்.
சிவகாமி : என்ன சண்டை? எனக்கும் சொல்லுங்களேன்.
கங்கா : கள்ளு, சாராயக் கடைகளை எல்லாம் எடுத்துவிட வேண்டுமென்று நாளை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டுவரப் போகிறார்களாம். அப்பா அதற்கு விரோதமாக ஓட்டுக் கொடுக்கிறாராம். இதற்காக மாப்பிள்ளை சண்டை பிடிக்கிறார்.
சிவகாமி : அந்த இழவு கடைகள் என்னத்திற்காக? நான் மாப்பிள்ளை கட்சிதான்.
விநாயக : நீ கலால் மந்திரியாகும்பொழுது அப்படியே செய்யலாம்.
பரமே : சந்தேகமென்ன? சட்டசபையில் ஸ்திரீகள் மட்டும் பெரும்பான்மையோரா யிருந்தால் இன்னும் எவ்வளவோ நல்ல காரியங்கள் எல்லாம் செய்திருப்பார்கள்.
சிவகாமி : இன்று காலையில் வேலைக்காரி சொன்னாள். எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் புருஷனுக்கு ஆலையில் இருபத்தைந்து ரூபாய் சம்பளமாம். முக்கால்வாசிக்குமேல் குடியில் தொலைத்து விடுகிறானாம். ஏழைகள் ஏன் இப்படி அவதிப்பட வேண்டும்?
விநாயக : ஏனா? நீ சுகமாகக் கைகால் அசக்காமல் உட்கார்ந்து சாப்பிடுவதற்கும், உன் மாப்பிள்ளை எஞ்ஜினியருக்குப் படித்து உத்யோகம் பெறுவதற்கும், கங்காதான் மோட்டாரில் சவாரி செய்வதற்கும் தான்.
சிவகாமி : ஏதாவது தத்துப் பித்தென்று பேசாதீர்கள். அதற்கும் இதற்கும் என்ன வந்தது?
விநாயக : கள்ளுக்கடைக்குச் சென்று குடிக்கத்தான் வேண்டுமென்று சர்க்கார் ஜனங்களைக் கட்டாயப்படுத்துகிறார்களா?
கங்கா : கள்ளுக்கடையை வைத்துக் கொண்டு குடிக்காதே என்றால் என்ன பிரயோஜனம்?
பரமே : விளக்கில் வந்து விழுந்து சாகும்படி விட்டில் பூச்சிகளை யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா?
விநாயக : நீங்கள் உலகமறியாதவர்கள். ஆலையில் வேலை செய்வதும், மூட்டைகள் சுமப்பதும் எவ்வளவு கஷ்டமான வேலைகள் தெரியுமா? இத்தகைய வேலை செய்பவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சந்தோஷம் வேண்டாமா? குடி ஒன்று தான் இருக்கிறது. அதையும் நீங்கள் ஒழித்துவிடச் சொல்கிறீர்கள்.
பரமே : குடியினால் உடம்புக்குக் கெடுதல் என்று எத்தனையோ வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்களே?
விநாயக : வைத்தியர்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்வார்கள். கள்ளு உடம்புக்கு ரொம்பக் குளிர்ச்சி என்று சிலர் அபிப்பிராயப்படுகிறார்கள்.
சிவகாமி : எப்படியிருந்தாலும் ஏழைகள் பணமெல்லாம் கள்ளுக்கடைக்குப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டாமா?
விநாயக : பத்துப் பாத்திரம் தேய்க்கவும், வீடு வாசல் பெருக்கி மெழுகவும் நீ தயாராய் இருக்கிறாயா, சொல்.
சிவகாமி : எனக்கேன் தலையிலெழுத்து? ஏதாவது கேட்டால் ஏதாவது சொல்கிறீர்களே?
விநாயக : அவசரப்படாதே! உன் பெண்ணாவாது நாட்டுப் பெண்ணாவது அந்த வேலைகளைச் செய்யத் தயாரா?
சிவகாமி : ஒரு நாளும் செய்யமாட்டார்கள்.
விநாயக : வேலைக்காரி உங்களுக்கு அவசியம் வேண்டுமல்லவா?
சிவகாமி : ஆமாம்.
விநாயக : சரி, உன் வேலைக்காரி புருஷன் வாங்கும் சம்பளம் ரூபாய் இருபத்தைந்தையும் வீட்டுக்குக் கொண்டு வந்தால், அவல் ஒன்றரை ரூபாய் சம்பளத்துக்கு உனக்கு வேலை செய்ய வருவாளா? யோசித்துப் பார்.
சிவகாமி : ஏன் வரமாட்டாள்?
விநாயக : ஏனா? அந்த இருபத்தைந்து ரூபாயைக் கொண்டு அவர்கள் சௌக்கியமாகக் காலட்சேபம் செய்வார்கள். புருஷன் அவளை வேலைக்கு அனுப்ப மாட்டான். அப்படி வந்தாலும் பணிந்து வேலை செய்ய மாட்டாள். ஒரு வார்த்தை அதட்டிப் பேசினால் "போ, அம்மா, போ" என்று சொல்லிவிட்டுப் போய்விடுவாள்.
பரமே : அது உண்மைதான். நமக்கு அவசியமானால் அதிகச் சம்பளம் கொடுத்துத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்.
விநாயக : இப்பொழுதே நமது கிராமத்தில் பண்ணை ஆட்கள் சொன்னபடி கேட்பதில்லை என்று காரியஸ்தர் எழுதுகிறார். கள்ளுக்கடையும் இல்லா விட்டால் என்ன ஆகும் தெரியுமா? இருக்கட்டும். நீ எஞ்ஜினியரிங் காலேஜுக்குச் சம்பளம் என்ன கொடுக்கிறாய்?
பரமே : 140 ரூபாய்.
விநாயக : கங்காதரன் காலேஜுக்கு 180 ரூபாய் சம்பளம் கொடுக்கிறான். ஆனால் உங்களுடைய படிப்புக்காக மொத்தம் எவ்வளவு செலவு ஆகிறது தெரியுமா? நீங்கள் கொடுக்கும் சம்பளத்தைப் போல் குறைந்தது ஐந்து மடங்கு செலவாகிறது. சமீபதத்தில் முத்துக்கருப்பஞ் செட்டியார் கலா சாலைக்காக கணக்குப் பார்த்தார்கள். மொத்தம் வருஷத்தில் ஐந்து லட்சம் ரூபாய் செலவாகுமென்றும், அதில் ஒரு லட்சம் ரூபாய்கூட மாணாக்கர் சம்பளத்தில் கிடைக்காதென்றும் ஏற்பட்டன. இதற்குத்தான் கள் வருமானம் வேண்டும்.
பரமே : இது அதர்மமல்லவா? ஒரு சிலர் படித்து ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் வாங்குவதற்காக எத்தனையோ ஏழைகள் கண்ணீர் விட வேண்டுமா? இது என்ன நியாயம்?
விநாயக : அதற்கென்ன செய்வது? ஹிம்ஸை தான் இயற்கை தருமம். புழு, பூச்சிகளைத் தின்று பட்சிகள் உயிர்வாழுகின்றன. பட்சிகளைத் தின்று மிருகங்கள் பிழைக்கின்றன. மிருகங்களைக் கொன்று தின்றும், வேலை வாங்கியும் மனிதன் ஜீவிக்கிறான். மனிதர்களுக்குள்ளே ஏழைகளை வேலை வாங்கிப் பணக்காரர்கள் வாழ்கிறார்கள். எல்லாவற்றையும் துறந்து சன்னியாசியாய்ப் போவதாயிருந்தால் ஒன்றும் வேண்டியதில்லை. உலகத்தில் வாழ்வதாய் இருந்தால் பிறருக்குத் துன்பம் கொடுத்தே ஆக வேண்டும்.
சிவகாமி : எல்லாம் அவரவர் தலை எழுத்தின் படிதான் நடக்கும் போலிருக்கிறது.
பரமே : தலையாவது? எழுத்தாவது? எல்லாம் மனிதன் செய்வதுதான். கள்ளுக்கடைப் பணம்தான் கல்விக்கு என்பது ஏன்? மற்றும் எத்தனையோ செலவுகளைக் குறைக்கக்கூடாதா?
விநாயக : அதுதான் முடியாத காரியம். அரசாங்கத்தார் இராணுவச் செலவைக் குறைக்க மாட்டார்கள். உத்தியோகஸ்தர் சம்பளத்தையும் குறைக்க முடியாது. பாக்கி எல்லாம் போகட்டும். தென்னை மரங்களைக் கள்ளுக் குத்தகைக்கு விடுவதில் நமக்குச் சராசரி மாதம் எண்ணூறு ரூபாய் வருகிறது. ஒரு சிரமம் கிடையாது. இந்த வருமானத்தை நான் எப்படி விட முடியும்? வேறு யார்தான் விடுவார்கள்?
சிவகாமி : ஏழைகளின் பாவம் வீண் போகாது.
[எழுந்து போகிறார்கள்.]
*****
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாங்கர் விநாயகராவ் - Banker Vinayakrao - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - விநாயக, சிவகாமி, பரமே, ரூபாய், வேலை, என்ன, சம்பளம், எல்லாம், நீங்கள், தான், மாப்பிள்ளை, வேண்டும், தெரியுமா, எத்தனையோ, கொண்டு, சட்டசபையில், ஏழைகள், நான், எப்படி, அந்த, வேலைக்காரி, ஏதாவது