அரசூர் பஞ்சாயத்து
3
சந்திரகாசு பினாங்குக்குப் புறப்பட்டுச்
சென்ற நான்காவது மாதத்தில் அமிருதம்மாளுக்கு ஒரு கடிதம் வந்தது. தபால்காரன்
கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு இரண்டணா கேட்டான். அமிருதம் வீட்டிற்குள்
ஓட்டமாய் ஓடிப் பழைய பெட்டியொன்றில் துழாவி, இரண்டணா எடுத்துக் கொண்டு
வந்து கொடுத்தாள். கடிதத்தை வாங்கி உடைத்துப் படித்தாள். அதிலே சந்திரகாசன்
எழுதியிருந்த மொழிகளையும், பிரியமான வசனங்களையும் அவன் எங்கேதான் கற்றுக்
கொண்டானோ தெரியாது. ஒவ்வொரு வரி படிக்கும் போதும் அமிருதத்துக்கு மயிர்க்
கூச்சல் எறிந்தது. நாலுவரி படித்துவிட்டு, அவள் அழுதாள். இன்னும் நாலு
வரி படித்துவிட்டுச் சிரித்தாள். இடையிடையே கடிதத்தை கண்ணில் ஒற்றிக்
கொண்டாள். இரண்டு மூன்று தடவை படித்தாள். பிறகு அதைக் கிழவியிடம் கொண்டு
போய்ப் படித்துக் காட்டினாள். மறுபடி குழந்தையின் பக்கத்தில் உட்கார்ந்து
கடிதம் முழுவதையும் அதற்குப் படித்துக் காட்டினாள். குழந்தையும் ஏனோ
சிரித்தது. அதன் முகத்தில் கடிதத்தை வைத்து முத்தமிடச் செய்தாள். கடைசியாகப்
பெட்டியில் பத்திரமாக வைத்துப் பூட்டினாள்.
இரண்டு மாதங் கழித்து இன்னொரு கடிதம் வந்தது. அடுத்த மாதம் கட்டாயம் பணம் அனுப்புவதாக அதில் எழுதியிருந்தது. பின்னர் இரண்டு மாதங் கழித்து வந்த கடிதத்திலும் இப்படியே எழுதியிருந்தது. இதற்குள் குதிரில் இருந்த நெல்லெல்லாம் தீர்ந்து போயிற்று. பணத்திலும் பத்து ரூபாய் செலவழிந்து விட்டது. பாக்கி இருபது ரூபாயும் ஆபத்துக்கு வேண்டுமென்று அமிருதம் பத்திரப் படுத்திவிட்டுக் கூலி வேலை செய்ய ஆரம்பித்தாள். நெல்லுக் குத்தவும் களையெடுக்கவும் போனாள். அந்த நேரங்களில் கிழவி குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே ஒன்றரை வருஷ காலம் சென்றது. இரண்டு மாதத்திற்கொரு முறை சந்திரகாசுவிடமிருந்து தவறாமல் கடிதம் வந்து கொண்டிருந்தது. ஆனால் பணம் மட்டும் ஒரு தம்பிடி கூட வந்தபாடில்லை. அமிருதத்துக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பகலெல்லாம் வெளியிலும், இரவில் வீட்டிலும், உழைத்து உழைத்து அவள் அலுத்துப் போயிருந்தாள். வெகுநாளாய், 'அனுப்புகிறேன், அனுப்புகிறேன்' என்று தன் புருஷன் ஆசை காட்டி வரும் பணம், உண்மையில் எப்போதுதான் வந்து சேருமோவென்று அவள் ஏக்கப்படலானாள். தபால்காரனைக் கண்டபோதெல்லாம் விசாரித்தாள். ஆனால் அவள் சந்திரகாசனுக்கு எழுதிய கடிதங்களில் இந்த ஆவலை அதிகம் வெளிக்காட்டவில்லை. கடைசியாக எழுதிய ஒரு கடிதத்தில் பணம் வந்து சேரவில்லையென்றும், மணியார்டர் தப்பிப் போயிருக்குமோவென்று சந்தேகப்படுவதாகவும், ஒருவேளை இதுவரை அனுப்பியிராவிட்டால் தெரிவிக்க வேண்டுமென்றும், கொஞ்சம் பணம் வந்தால் குழந்தைக்கும் கிழவிக்கும் சௌகரியமாய்த்தான் இருக்குமென்றும் எழுதினாள்.
இதற்குச் சந்திரகாசுவிடமிருந்து வந்த பதிலை படித்ததும் அமிருதம் இடி விழுந்ததுபோல் திடுக்கிட்டுப் போனாள். அவன் எழுதியிருந்தான்:- "உன்னிடம் இத்தனை காலமாய் ஒரு விஷயம் மறைத்து வைத்திருந்தேன். இனிமேல் சொல்லாமலிருக்கக்கூடாது. நான் கிளம்பிய அன்றைக்கு முதல் நாளிரவு நாம் நிலவில் உட்கார்ந்து பேசியது நினைவிலிருக்கிறதா? முக்கியமாக, கள்ளுக்கடையை மறப்பதற்குத்தான் நான் அக்கரை சீமைக்குப் போவதாகச் சொன்னேன். இங்கே கடை இராதென்று நினைத்தேன். ஐயோ! ஏமாந்து போனேன். அந்தப் பாழும் கடைகள் இங்கேயும் இருக்கின்றன. சம்பளம் அதிகம்தான் கொடுக்கிறார்கள். ஆனால் சாப்பாடுப்போக மிச்சமெல்லாம் குடிக்குத்தான் போகிறது. ஊரிலாவது எனக்குப் புத்தி சொல்லித் தடுக்க நீ இருந்தாய். இங்கே நீயும் இல்லை. அப்படியும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முப்பது வெள்ளி சேர்த்து உனக்கு அனுப்பலாமென்று வைத்திருந்தேன். பத்து நாட்களுக்கு முன்பு நான் குடித்துவிட்டுப் புத்தி தப்பியிருக்கையில் யாரோ பாவிகள் அதைக் கொண்டுபோய் விட்டார்கள். ஐயோ! நீங்கள் படும் கஷ்டத்தை நினைத்தால் வயிறு பகீரென்கிறது. ஒவ்வொரு நாளும் உங்கள் நினைவாகவே யிருக்கிறேன். கூடிய சீக்கிரத்தில் எப்படியும் பணம் அனுப்புகிறேன்."
அமிருதம் அன்று இரவெல்லாம் தூங்கவேயில்லை. ஓயாமல் அழுதுகொண்டேயிருந்தாள். புருஷன் க்ஷேமமாய் ஊர் வந்து சேர வேண்டுமென்று தெய்வங்களையெல்லாம் வேண்டினாள். மறுநாள் ஒரு கடிதம் எழுதினாள்.
பணம் சம்பாதித்தது போதுமென்றும், உடனே புறப்பட்டு வந்து விடும்படியும் மன்றாடிக் கேட்டுக் கொண்டாள். "உங்கம்மாள் மேல் ஆணை; என் தலை மேல் ஆணை; குழந்தை மேல் ஆணை; மாரியம்மன் மேல் ஆணை; நீ இனிமேல் கள்ளுக்கடை வழிபோகக்கூடாது" என்று சபதம் வைத்தாள்.
சந்திரகாசு இதற்கெழுதிய பதிலில் தான் குடிப்பதை விட்டு விட்டதாகவும், இனிமேல் பணம் சேர்ந்து விடுமென்றும், இரண்டு மாதத்தில் நூறு ரூபாய் அனுப்புவதாகவும், பின்னர் ரூபாய் இரு நூறு சம்பாதித்துக் கொண்டு திரும்பி விடுவதாகவும் எழுதியிருந்தான்.
இப்படியே ஐந்து வருஷம் சென்றது. சந்திரகாசனாவது, பணமாவது வந்து சேர்ந்தபாடில்லை. இதற்கிடையில் கிழவி செத்துப் போனாள். அமிருதம் ஆபத்துக்கென்று வைத்திருந்த இருபது ரூபாயைக் கிழவியின் அந்நிய காலத்தில் அவளுக்கு வேண்டியது செய்வதற்குச் செலவழித்து விட்டாள். அடுத்த வருஷம் அவளே காயலாவாய்ப் படுத்துக் கொண்டாள். ஒரு மாதம் ரொம்பவும் கஷ்டப்பட்டாள். அந்தச் சமயத்தில் கல்லும் உருகும்படியான ஒரு கடிதம் அவள் சந்திரகாசுவுக்கு எழுதினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசூர் பஞ்சாயத்து - Arasur Panchayathu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பணம், வந்து, கடிதம், அமிருதம், அவள், இரண்டு, மேல், கொண்டு, எழுதினாள், இனிமேல், அனுப்புகிறேன், நான், இப்படியே, கடிதத்தை, கொண்டாள், ரூபாய், போனாள்