அரசூர் பஞ்சாயத்து
2
இரவு பன்னிரண்டு மணி. இன்பமான வெண்ணிலவு.
சந்திரகாசுவும் அவன் மனைவியும் வீதியில் விரித்திருந்த ஒரு பழம் பாயில்
உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் மத்தியில் இன்னும் ஒரு வயது நிரம்பாத
அவர்கள் குழந்தை பாயில் தூங்கிக் கொண்டிருந்தது. நெற்றியில் தொங்கிய
சுருட்டை மயிர் இளங்காற்றில் சிறிது அசைந்தாடிற்று. குடிசைத் திண்ணையில்
கிழவி - சந்திரகாசுவின் தாயார் - படுத்துப் பெருங் குறட்டை விட்டுத்
தூங்கிக் கொண்டிருந்தாள்.
"எப்படியாவது பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு வருஷம் பொறுத்திரு. உன்னையும் குழந்தையையும் விட்டுவிட்டு நான் ரொம்ப நாள் இருப்பேனா? கையில் ரூபாய் சேர்ந்ததோ இல்லையோ, ஓடிவந்து விடுகிறேன்" என்றான் சந்திரகாசு.
"ஐயோ! அதெல்லாம் முடியாது. நமக்குப் பணமும் வேண்டாம்; எதுவும் வேண்டாம். ஏதோ நாலு காசு நீ சம்பாதித்து வருவதே போதும். கூழோ கஞ்சியோ குடித்துவிட்டுச் சிவனே என்று இருப்போம்" என்றான் அமிருதம்.
"இதுதான் பெண்பிள்ளை புத்தி. கொஞ்சநாள் கஷ்டப்பட்டால் பின்னால் எப்போதும் சுகமாய் இருக்கலாமென்பது உனக்குத் தெரியவில்லையே" என்றான் சந்திரகாசு.
"நீ மாத்திரம் புத்தியாய்ப் பேசுகிறாயா? நீ அக்கரை சீமைக்குப் போய்ப் பணம் தேடி வருவது என்ன நிச்சயம்? அக்கரைச் சீமை போனவர்கள் எத்தனையோ பேர் திரும்பி வருவதேயில்லை" என்று அமிருதம் சொன்னாள்.
சந்திரகாசு சிரித்தான். அன்று மாலை முழுவதும் அவன் கங்காணியிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டுத் திரும்பி வந்தபடியால் அமிருதத்தின் பேச்சைக் கேட்டு அவனுக்குச் சிரிப்பு வந்தது.
"முருகப்பக் கங்காணிக்கு இப்பொழுது ஒரு லட்ச ரூபாய் சொத்திருக்கிறது. அவன் பினாங்குக்குப் போனபோது கையில் ஓட்டாஞ் சல்லிக் கூடக் கிடையாது" என்றான்.
"ஏன் இப்படிப் பணம் பணம் என்று அடித்துக் கொள்கிறாய்? இந்தக் குஞ்சானின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதாதா?" என்று சொல்லி அமிருதம் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.
ரோஜா மொட்டு ஒன்று திடீரென வெடித்து மலர்ந்தாற்போல அப்போது குழந்தையின் இதழ்கள் சற்றே விரிந்து புன்னகை பூத்தது. கண்மட்டும் திறக்கவில்லை. பின்னர் மறுபடியும் அதன் இதழ்கள் குவிந்தன. தூக்கத்திலுங்கூடத் தாயின் அன்பு அதற்கு மகிழ்வூட்டியதோ? அல்லது இன்பக் கனவு கண்டதோ? யார் கண்டார்கள்?
"இவனுக்காகத்தான் நான் போக வேண்டுமென்கிறேன். நீயும் நானும் மட்டுமானால் கவலையில்லை. கிழவி இரண்டொரு வருஷத்துக்குமேல் இருக்கமாட்டாள். ஆனால் குழந்தையை நினைத்தால் தான் எனக்குப் பணம் சேர்க்கும் ஆசை உண்டாகிறது. ஐந்துவயதில் நான் மாடு மேய்த்தது போல் இவனையும் மாடு மேய்க்க விடப் போகிறோமா? பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப வேண்டாமா? சொக்காய் குல்லாய் வாங்கிக் கொடுக்க வேண்டாமா? பார், இப்பொழுதுகூட இவன் கைக்குத் தங்கக் காப்பு செய்துபோட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்!" என்றான் சந்திரகாசு.
"நீ கள்ளுக் குடிக்கிற காசை என்னிடம் கொடு. நாலு மாதத்தில் குழந்தைக்குத் தங்கக் காப்பு அடித்துப் போடுகிறேன்" என்றாள் அமிருதம்.
சந்திரகாசுவுக்குக் கண்ணில் நீர் ததும்பியது. அவன் சொன்னதாவது:- "இந்த மாதிரி நீ எத்தனையோ தடவை சொல்லியாகி விட்டது. நானும் எவ்வளவோ பார்க்கிறேன். என்னால் முடியவில்லை. கள்ளுக் கடையைக் கண்டதும் வெறி வந்து விடுகிறது. ஊரை விட்டுப் போனால்தான் இந்த வெறி போகும். இரண்டு வருஷம் கண்காணாமல் இருந்தால் மறந்து போய்விடும். அதற்காகவே முக்கியமாய் நான் போக வேண்டும்."
"அங்கே மாத்திரம் கள்ளுக்கடை கிடையாதா?" என்று அமிருதம் கேட்டாள்.
"அதெப்படி அங்கே கள்ளுக்கடை இருக்கும்? இருக்காது" என்றான் சந்திரகாசு. பாவம்! போகுமிடத்திலும் 'பீர்'க்கடையும் பிராந்திக் கடையும் இருக்குமென்னும் எண்ணம் அவனுக்கு இதுவரை தோன்றவில்லை. மறுநாள் கங்காணியைக் கேட்டு நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைத்தான். ஆனால் மறுநாள் பிரயாண தடபுடலில் மறந்து போனான்.
"எப்படியானாலும் நீ போகக்கூடாது. உன்னைப் பிரிந்து நான் இருக்க மாட்டேன். அப்படி என்ன பிரமாதமாகக் குடித்து விடுகிறாய்? போனால் போகட்டும். நீ சம்பாதிக்கும் பணம்தானே? இப்போது நாம் பட்டினியா கிடக்கிறோம்? வேணுமானால் இனிமேல் நானும் கூலி வேலைக்குப் போகிறேன்" என்றாள்.
"இப்படியெல்லாம் பேசாதே, அமிர்தி! நீ பிறர் வீட்டில் நெல்லுக் குத்தப் போவதை நான் பார்த்துக் கொண்டிருப்பேனா? எல்லாம் முடிவாகி விட்டது. மாட்டை இன்று விற்றுவிட்டேன் எண்பது ரூபாய்க்கு. ஐம்பது ரூபாய் வழிச் செலவுக்கு எடுத்துக் கொண்டு உனக்கு முப்பது ரூபாய் கொடுத்து விட்டுப் போகிறேன். நாலு மாதத்திற்குக் குதிரில் நெல் இருக்கிறது. அதற்குள் கட்டாயம் பணம் அனுப்புகிறேன். இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்து எனக்குப் போக உத்தரவு கொடு. தடை சொல்லாதே!" என்றான் சந்திரகாசு.
"அப்படியானால் நானும் வருகிறேன். குழந்தையையும் எடுத்துக் கொண்டு இரண்டு பேரும் போவோம்" என்றாள் மனைவி.
"கிழவியை என்ன செய்வது? அவளைச் சோற்றுக்கு ஆலாய்ப் பறக்க விட்டு விடலாமா?" என்று சந்திரகாசு கேட்டான்.
"ஐயோ! எனக்கு அழுகை வருகிறது" என்றாள் அமிருதம். அப்படியே அழத் தொடங்கினாள். சந்திரகாசன் வெகு நேரம் அவளைச் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரசூர் பஞ்சாயத்து - Arasur Panchayathu - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - என்றான், சந்திரகாசு, அமிருதம், நான், பணம், அவன், நானும், என்றாள், ரூபாய், குழந்தையின், என்ன, நாலு, இரண்டு, தூங்கிக், கொண்டு