சிதம்பரப்பாட்டியல்
9 |
ஆசிலிசை துள்ளலள வடிகலிப்பாத் தரவொன் றடைவிற்றா ழிசைமூன்றுந் தனிச்சொல்சுரி தகமா மாசிலநே ரிசையொத்தா ழிசைக்கலிப்பா வளவே மன்சிந்து குறளடித்தா ழிசைப்பின்பு வருமே லேசிலம்போ தரங்கவொத்தா ழிசைக்கலிப்பா விவற்றோ டிடையரா கம்வரில்வண் ணகவொத்தா ழிசையே பேசியவெண் பாவியைந்து சிந்தடியீற் றடியாய்ப் பிறதளைதன் றளையோசை பெறுவதுவெண்கலிப்பா. |
"ஆசிலிசை துள்ளலளவடி கலிப்பா"
எ-து, துள்ளலோசையினையு மளவடியினையு முடையது கலிப்பா;
"தரவொன்றடைவிற்றாழிசை மூன்றுந் தனிச்சொல்சுரிதகமா மாசில நேரிசையொத்தாழிசைக்கலிப்பா"
எ-து, தரவொன்றும் தாழிசைமூன்றுந் தனிச்சொல்லுஞ் சுரிதகமுமாய் வருவது நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா;
"அளவே மன்சிந்து குறளடித்தாழிசைப் பின்பு வருமேல் ஏசில் அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா"
எ-து, முன்போலத்தரவுந் தாழிசையும்,பின்பு நாற்சீரடியானு முச்சீரடியானும் இருசீரடியானும் வந்து
அம்போதரங்கமுமுடைத்தாய்த் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று வருவது அம்போதரங்கவொத்தாழிசைக் கலிப்பா:
"இவற்றோடிடைஅராகம் வரில் வண்ணகவொத்தாழிசையே"
என்பது, இந்த அம்போதரங்க வுறுப்பையுமுடைத்தாய்த் தாழிசைக்குமம்போதரங்கத்துக்கு மிடையே அராகவுறுப்பைப்
பெற்றுவருவது வண்ணக வொத்தாழிசைக்கலிப்பா.
"பேசியவெண்பாவியைந்து சிந்தடியீற்றடியாய்ப் பிறதளைதன்றளையோசை பெறுவது வெண்கலிப்பா"
என்பது,வெண்பாவினடைத்தாயீற்றடிசிந் தடியாய்த் தன்றளையாகிய கலித்தளையையும் பிறதளையையும் பெற்றுக்கலி
யோசையினையுடைத்தாய் வருவது வெண்கலிப்பா:-
இவற்றிற்குதாரணம்
"வாணெடுங்கண் பனிகூர வண்ணம்வே றாய்த்திரிந்து
தோணெடுந் தகைதுறந்து துன்பங்கூர் பசப்பினவாய்ப்
பூணொடுங்கு முலைகண்டும் பொருட்பிரிதல் வலிப்பவோ"
சூருடைய கடுங்கடங்கள் சொலற்கரிய வெண்பவாற்
பீருடைய நலந்தொலையப் பிரிவரோ பெரியவரே.
சேணுடைய கடுங்கடங்கள் செலற்கரிய வென்பவால்
நாணுடைய நலந்தொலைய நடப்பரோ நலமிலரே.
சிலம்படைந்த வெங்கானஞ் சீரிலவே என்பவால்
புலம்ப டைந்த நலந்தொலையப் போவரோ பொருளிலரே.
இவை மூன்றுந்தாழிசை என வாங்கு-தனிச்சொல்
அருளெனு மிலராய்ப் பொருள்வயிற் பிரிவோர்
பன்னெடுங் காலமும் வாழியர்
பொன்னெடுந்தேரொடுந்தானையிற்பொலிந்தே"
இது, தரவு மூன்றடியாய்த் தாழிசை மூன்று மிரண்டடியாய்த் தனிச் சொற்பெற்று மூன்றடியாசிரியச் சுரிதகத்தாலிற்ற நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா.
"கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தத்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழல்விரி சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
வார்புனல் இழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான்மார்பிடந்தகொலைமலி தடக்கையோய்"
"முரைசதிர வியன்மதுரை முழுவதூஉந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோட் போர்மலைந்த மறமல்லர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவ ணிலஞ்சேரப்
பொடியெழ வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ.
கலியொலி வியனுலகங் கடந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெதிர்த்த மருட்சோர்வு
மாணாதா ருடம்போடு மறம்பிதிர வெதிர்கலங்கிச்
சேணுயர் நெடுவிசும்பிற் சிதைத்ததுநின் சினமாமோ.
படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேறு
வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறல் வேறாக
எருமலி பெருந்தொழுவி லிறுத்ததுநின் னிகலாமோ.
இலங்கொளி மரகத வெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை* மாஅ னின்னிறம்.
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையு நின்னுடை.
கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை.
தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை.
யொலியிய லுவண மோங்கிய கொடியினை.
வலிமிகு சகட மாற்றிய வடியினை.
போரவுணர்க் கடந்தோய் நீஇ; புணர்மருதம் பிளந்தோய் நீஇ;
நீரகல மளந்தோய் நீஇ; நிழறிகழும் படையோய் நீஇ.
-
ஊழி நீஇ; உலகு நீஇ; உருவு நீஇ; அருவு நீஇ;
ஆழி நீஇ; அருளு நீஇ; அறமு நீஇ; மறமு நீஇ;
என வாங்கு-தனிச்சொல்.
அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
றொடுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரிப்
புயலுறழ் தடக்கைப் போர்வே லச்சுதன்
றொன்றுமுதிர் கடலுலக முழுதுட
னொன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே-
இஃது எட்டும் பதினாறுமென்றும் சொல்லப்பட்டவை குறைந்து முச்சீரடி நான்கும் இருசீரடியெட்டுமாய்வந்த அம்போதரங்க வொத்தாழிசைக்கலிப்பா. எட்டும் பதினாறுமென்பன குறையாமல்வந்தவாறு யாப்பருங்கலவிருத்தியுட் கண்டுகொள்க.
"விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்று
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்ப்
பரூஉத்தடக்கை மதயானைப் பகட்டெழி லெரிகுஞ்சிக்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முன்னாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குந்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்.
காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் றிரியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
வணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ.
அன்பினா லமுதளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாக்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ.
பாங்கனையே வாயிலாப் பல்காலும் வந்தொழுகுந்
தேங்காத கர்வினையுந் தெளியாத விருளிடைக்கட்
குடவரைவேய்த் தோளினைகள் குளிர்ப்பிப்பான் றமியையாய்த்
தடமலர்த்தா ரருளுநின் றகுதியுந் தகுதியோ.
தாதுறு முறிசெறி தடமல ரிடையிடை தழலென விரிவன பொழில்.
போதுறு நறுவிரை புதுமலர் தெரிதரு கருநெய்தல் விரிவன கழி.
தீதுறு திறமறு கெனநனி துணையொடு சினமொடு பிணைவன துறை.
மூதுறு மொலிகலி நிரைதரு திரையொடு கழிதொடர் புடையது கடல்.
கொடுந்திற லுடையன சுறவேறு கொட்பதனா
லிடுங்கழி யிராவருதல் வேண்டாமென் றுரைத்திலமோ.
கருநிறத் தெறுழ்வலிக் கராம்பெரி துடைமையா
விருணிறத் தொருகான லிராவார லென்றிலமோ.
நாற்சீரீரடியிரண்டபோதரங்கம்.
நாணொடு கழிந்தற்றாற் பெண்ணரசி நலத்தகையே.
துஞ்சலு மொழிந்தன்றாற் றொடித்தோளி தடங்கண்ணே.
அரற்றொடு கழிந்தன்றா லாரிருளு மாயிழைக்கே.
நயப்பொடு கழிந்தன்றா னனவினும் நன்னுதற்கே.
அத்திறத்தா லசைந்தன தோள்; அலர்தற்கு மெலிந்தன கண்:
பொய்த்துரையாற் புலர்ந்த முகம்; பொன்னிறத்தாற் போர்த்த முலை;
அழலினா லசைந்த நகை; அணியிலா லொசிந்த திடை;
குழலினா லவிர்ந்த முடி; குறையினாற் கோடிற்று நிறை;
உட்கொண்ட தகைத்தொருபால்; உலகறிந்த வலத்தொருபால்;
கட்கொண்ட துளித்தொருபால்: கழிவெய்தும் படித்தொருபால்;
பரிவுறூஉந் தகைத்தொருபால்; படர்வுறூஉம் பசப்பொருபால்;
இரவுறூஉந் துயரொருபால்; இளிவந்த வெழிற்றொருபால்;
மெலிவுறூஉந் தகைத்தொருபால்; விளர்ப்புவந் தடைந்தொருபால்;
பொலிவுசென் றகன்றொருபால்; பொறைவந்து கூர்ந்தொருபால்;
காதலிற் கதிர்ப்பொருபால்; கட்படாத் துயரொருபால்;
ஏதிலர்ச்சென் றணைத்தொருபால்; இயனாணிற் செறிவொருபால்;
இவை இருசீரோரடி பதினாறம்போதரங்கம்.
எனவாங்கு-தனிச்சொல்
இன்னதிவ் வழக்க மித்திற மிவணல
மென்னவு முன்னாட் டுன்னா யாகிக்
கலந்தவ ணிலைமை யாயினு நலந்தகக்
கிளையொடு கெழீஇய தளையவிழ் கோதையைக்
கற்பொடு காணிய யாமே
பொற்பொடு பொலிகநும் புணர்ச்சி தானே"
.
இது,தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதமென்னும் ஆறுறுப்புங் குறைவின்றிவந்த
வண்ணகவொத்தாழிசைக் கலிப்பா.
"வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்கக்
கோளார்ந்த பூணாகங் குழைபுரளக் கோட்டெருத்தின்
மாலைதாழ் கூந்தலார் வான்முறையால் வந்தேத்தச்
சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தஞ் சொன்முறையால்
மனையறமுந் துறவறமு மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதெரிந்து வீடொடுகட் டிவையுரைத்த
தொன்மைசான் மிகுகுணத்துத் துறவரசைத் தொழுதேத்த
நன்மைசால் வீடெய்து மாறு.
இது,கலித்தளைதட்டுக் கலியோசை தழுவிவந்தமையால் வெண்கலிப்பா.
"ஏர்மலர் நறுங்கோதை யெருத்தலைப்ப விறைஞ்சித்தன்
வார்மலர்த் தடங்கண்ணார் வலைப்பட்டு வருந்தியவென்
றார்வரை யகன்மார்பன் றனிமையை யறியுங்கொல்
சீர்மலி கொடியிடை சிறந்து."
இஃது ஆசிரியநிரையசைத் தளையான் வந்த வெண்கலிப்பா.
10 |
பெறுதரவு தரவிணையே சிலபலதா ழிசையாற் பிறழ்விலவு மயங்கினவு மப்பெயர்க்கொச் சகமாம் இறுதிநீண் டளவொத்தல் பலவடிதா ழிசையே யெழிலைஞ்சீ ரடிநான்கு கலித்துறைநே ரடிநான் குறுதல்கலி விருத்தமிசை தூங்கலடி குறள்சிந் தொடுதனிச்சொற் பெற்றகவ லிறும்வஞ்சி யிருசீ ரறையடிநான் கொருமூன்று தாழிசையாங் கவற்றொன றாந்துறைமுச் சீரடிநான் காம்வஞ்சி விருத்தம். |
என்பது "பெறுதரவு தரவிணையே ......கொச்சகமாம்'
எ-து, தரவொன்றே வந்தால் தரவுகொச்சகக் கலிப்பா எனவும், தரவிரண்டாய் வந்தால் தரவிணைக்கொச்சகக் கலிப்பா எனவும், சிலதாழிசை வந்தால் சிஃறாழிசைக்கொச்சகக் கலிப்பா எனவும், பலதாழிசை வந்தால் பஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனவும், பலவடியு மயங்கிவந்தால் மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா எனவும் பெயராம்.
"இறுதிநீண்...தாழிசையே" எ-து, பலவடியாய் எல்லாவடியுந் தம்முள்ளவொத்து ஈற்றடி நீண்டுவருவது கலித்தாழிசை.
"எழில் ஐஞ்சீர்....கலித்துறை"
எ-து, ஐஞ்சீரால்வரும் நாலடியையுடையது கலித்துறை.
"நேரடிநான் குறுதல் கலிவிருத்தம்"
எ-து, நாற்சீர் நாலடியாய் வருவது கலிவிருத்தம். இனி,வஞ்சிப்பாவுக்குவரலாறு;
"இசை தூங்கலடி... அகவலிறும் வஞ்சி"
எ-து, தூங்கலோசையினையுடைத்தாய், இருசீரடியினையும் முச்சீரடியினையு முடைத்தாய்த் தனிச்சொற் பெற்று ஆசிரியச்
சுரிதகத்தான் முடிவது வஞ்சிப்பா.
'குறள்சிந்தொடு' என்னும் விதப்பினால், குறளடி வஞ்சிப்பாவென்றும் சிந்தடி வஞ்சிப்பா வென்றும் பெயருடன் வழங்கும்
என்க.
"இருசீர் அறையடி....தாழிசை"
எ-து இருசீர் நாலடியாய் ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவருவது வஞ்சித்தாழிசை.
"ஆங்கவற்றொன்றாந்துறை"
எ-து அந்தத்தாழிசை யொன்று தனியே வருவது வஞ்சித்துறை.
"முச்சீரடி நான்காம் வஞ்சிவிருத்தம்"
எ-து, முச்சீர்* நாலடியாய் வருவது வஞ்சிவிருத்தம்.எ-று.
இவற்றுக்கு முறையே உதாரணம் வருமாறு:-
"செல்வப்போர்க்கதக் கண்ணள்....மருமம்பாய்ந்தொளித்ததே."
இது, சுரிதகமில்லாத தரவுகொச்சகக் கலிப்பா.
"குடநிலைத் தண்புறவிற் கோவல ரெடுத்தார்ப்பத்
தடநிலைப் பெருந்தொழுவிற் றகையுறூஉ மரம்பாய்ந்து
வீங்குமணிக் கயிறொரீஇத் தாங்குவனந் தோன்றப்போய்க்
கலையினொடு முயலிரியக் கடிமுல்லை முறுவலிப்ப
எனவாங்கு--
ஆனொடு புல்லிய பெரும்புதன் முனையுங்
கானுடைத் தவர்தேர் சென்ற வாறே"
இது தனிச்சொற்பெற்றுச் சுரிதகத்தாலிற்ற தரவு கொச்சகக்கலிப்பா.
"வடிவுடை நெடுமுடி வானவர்க்கும் வெலற்கரிய
கடிபடு நறும்பைந்தார்க் காவலர்க்குங் காவலனாம்
கொடிபடு வரைமாடக் கூடலார் கோமானே"-
துணைவளைத்தோ ளிணைமெலியத் தொன்னலந் தொடர்ப்புண்டாங்
கிணைமலர்த்தா ரருளுமே லிதுவதற்கோர் மாறென்று
துணைமலர்த் தடங்கண்ணார் துணையாகக் கருதாரோ -
அதனால்-தனிச்சொல்.
செவ்வாய்ப் பேதை யிவடிறத்
தெவ்வா றாங்கொலிஃ தெண்ணிய வாறே"-சுரிதகம்.
இஃது, இடையிடை தனிச்சொற்பெற்றுச் சுரிதகத் தாலிற்ற தரவிணைக் கொச்சகக் கலிப்பா. இனிச் சுரிதகமில்லாததூஉம் வந்தவழிக் கண்டுகொள்க.
"பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்றிக்
குரூஉக்கொண்ட வெண்குடைக்கீழ்க் குடைமன்னர் புடைசூழப்
படைப்பரிமான் றேரினொடும் பரந்துலவு மறுகினிடைக்
கொடித்தானை யிடைப்பொலிந்தான் கூடலார் கோமானே-
ஆங்கொருசார்
உச்சியார்க் கிறைவனா யுலகமெலாங் காத்தளிக்கும்
பச்சையார் மணிப்பைம்பூட் புரந்தரனாப் பாவித்தார்
வச்சிரங்கைக் காணாத காரணத்தான் மயங்கினரே.
ஆங்கொருசார்
அக்கால மணிநிரைகாத் தருவரையாற் பனிதவிர்த்து
வக்கிரனை வடிவழித்த மாயவனாப் பாவித்தார்
சக்கரங்கைக் காணாத காரணத்தாற் சமழ்த்தனரே.
ஆங்கொருசார்
மால்கொண்ட பகைதணிப்பான் மாத்தடிந்து மயங்காச்செங்
கோல்கொண்ட சேவலங் கொடியவனாப் பாவித்தார்
வேல்கண்ட தின்மையால் விம்மிதராய் நின்றனரே.
அதா அன்று,
கொடித்தே ரண்ணல் கொற்கைக் கோமான்
இன்புக ழொருவன் செம்பூட் சேஎய்
யென்றுநனி யறிந்தனர் பலரே தானு
மைவரு ளொருவனென் றறிய லாகர்
மைவரை யானை மடங்கா வென்றி
மன்னவன் வாழியென் றேத்தத்
தென்னவன் வாழி திருவோடும் பொலிந்தே"
இஃது, இடையிடையே தனிச்சொற்பெற்று,நேரிசையொத்தாழிசைக் கலிப்பாவிற் சிறிது வேறுபட்டுத் தன்றளையான்
வந்தமையாற் சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.
"தண்மதியேர் முகத்தாளைத் தனியிடத்து நனிகண்டாங்
குண்மதியு முடனிறையு முடன்றளர முன்னாட்கட்
கண்மதியோர்ப் பிவையின்றிக் காரிகையி னிறைகவர்ந்து
பெண்மதியின் மகிழ்ந்தநின் பேரருளும் பிறிதாமோ -
இளநல மிவள்வாட விரும்பொருட்குப் பிரிவாயேற்
றளநல முகைவெண்பற் றாழ்குழ றளர்வாளோ.
தகைநல மிவள்வாடத் தரும்பொருட்குப் பிரிவாயேல்
வகைநல மிவள்வாடி வருந்தியில் லிருப்பாளோ.
அணிநல மிவள்வாட வரும்பொருட்குப் பிரிவாயேல்
மணிநல மகிழ்மேனி மாசொடு மடிவாளோ.
நாம்பிரியே மினியென்று நன்னுதலைப் பிரிவாயேல்
லோம்பிரியே மெனவுரைத்த வுயர்மொழியும் பழுதாமோ.
குன்றளித்த திரடோளாய் கொய்புனத்துக் கூடியஞான்
றன்றளித்த வருண்மொழியா லருளுவது மருளாமோ.
சில்பகலு மூடியக்காற் சிலம்பொலிச்சீ றடிபரவிப்
பல்பகலுந் தலையளித்த பனிமொழியும் பழுதாமோ.
எனவாங்கு-தனிச்சொல்.
அரும்பெற லிவளினுந் தரும்பொரு ளதனினும்
பெரும்பெற லரியன வெறுக்கையு மற்றே
அதனால்-விழுமிய தறிமதி வாழி
கெழுமிய காதலிற் றரும்பொருள் சிறிதே" -இது சுரிதகம்.
இது, நான்கடித்தரவும் ஈரடித்தாழிசையாறும் தனிச்சொல்லும் ஆசிரி
யச்சுரிதகமுமாய் வந்தமையாற் பஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா.
"மணிகிளர் நெடுமுடி மாயவனுந் தம்முனும்போன்
றணிகிளர் நெடுங்கடலுங் கானலுந் தோன்றுமால்
நுரைநிவந் தவையன்ன நொய்ப்பறைய சிறையன்ன
மிரைநயந் திறைகூரு மேமஞ்சா றுறைவகேள்.
மலையென மழையென மஞ்செனத் திரைபொங்கிக்
கனலெனக் காற்றெனக் கடிதுவந் திசைப்பினும்
விழுமியோர் வெகுளிபோல் வேலாழி யிறக்கலா
தெழுமுந்நீர் பெயர்ந்தோடு மேமஞ்சா றுறைவகேள்.
கொடிபுரையு நுழைநுசுப்பிற் குழைக்கமர்ந்த திருமுகத்தோ
டொடிநெகிழ்ந்த தோள்கண்டும் துறவலனே என்றியால்;
கண்கவரு மணிப்பைம்பூட் கயில்கவைஇய சிறுபுறத்தோ
டெண்பனிகணுகக்கண்டுந் திரியலனே யென்றியால்;
நீர்பூத்த நிரையிதழ்க்கண் ணின்றொசிந்த புருவத்தோள்
பீர்பூத்த நுதல்கண்டும் பிரியலனே யென்றியால்;
கனைவால்யாற் றிருகரைபோற் கைநில்லா துண்ணெகிழ்ந்து
நினையுமென் னிலைகண்டு நீங்கலனே யென்றியால்;
வீழ்சுடரி னெய்யேபோல் விழுமநோய் பொறுக்கல்லாத்
தாழுமென் னிலைகண்டுந் தாங்கலனே யென்றியால்;
கலங்கவிழ்ந்த நாய்கன்போற் களைந்துணை பிறிதின்றிப்
புலம்புமென் னிலைகண்டும் போகலனே யென்றியால்.
அடும்பம லிறும்பி னெடும்பணை மிசைதொறுங்
கொடும்புற மடலிடை யொடுங்கின குருகு;
செறிதரு செருவிடை யெறிதொழி லிளையவர்
நெறிதரு புரவியின் மறிதருந் திமில்;
அரசுடை நிரைபடை விரைசெறி முரசென
நுரைதரு திரையொடு கரைபெருங் கடல்;
அலங்கொளி ரவிர்சுட ரிலங்கொளி மறைதொறுங்
கலந்தெறி காலொடு புலம்பின பொழில்.
விடாஅது கழலுமென் வெள்வளையுஞ் செறிப்பாய்மன்
கெடாஅது பெருகுமென் கேண்மையு நிறுப்பாயோ.
ஒல்லாது கழலுமென் னொளிவளையுஞ் செறிப்பாய்மன்
நில்லாது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.
தாங்காது கழலுமென் தகைவளையுஞ் செறிப்பாய்மன்
நீங்காது பெருகுமென் னெஞ்சமு நிறுப்பாயோ.
மறவாத வன்பினேன் மனநிற்கு மாறுரையாய்
துறவாத தமருடையேன் துயர்தீரு மாறுரையாய்.
காதலார் மார்பின்றிக் காமக்கு மருந்துரையாய்
யேதிலார் தலைசாய யானுய்யு மாறுரையாய்.
இனணபிரிந்தார் மார்பின்றி யின்பக்கு மருந்துரையாய்
துணைபிரிந்த தமருடையேன் றுயர்தீரு மாறுரையாய்.
எனவாங்கு-தனிச்சொல். [இவையாறுந் தாழிசை.
பகைபோன் றதுதுறை, பரிவா யினகுறி
நகையிழந் ததுமுக, நனிநா ணிற்றுளந்
தகையிழந் ததுதோ, டலைசிறந் ததுதுயர்
புகைபரந் ததுமெய், பொறையாகின் றென்னுயிர்.
இவை இருசீரோரடியெட்டம் போதரங்கம்.
அதனால்---தனிச்சொல்.
-
இனையது நிலையா லனையது பொழுதா
னினையல் வாழி தோழி துனைவாற்
பனியொடு கழிக வுண்கண்
என்னொடு கழிகவித் துன்னிய நோயே".
இது, தரவிரண்டுந் தாழிசையாறும தனிச்சொல்லும் அராகம் நான்கும் பெயர்த்தாறுதாழிசையும் தனிச்சொல்லும்
எட்டம்போதரங்கவுறுப்பும் தனிச்சொல்லுஞ் சுரிதகமும் பெற்று நான்கடியாய் ஈற்றுக்கலிக் கோதப்பட்ட ஆறுறுப்பும்
மிக்குங் குறைந்தும் பிறழ்ந்தும் மயங்கியும் வந்தமையால் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.
இனியாசிரியத்தினோடும் வெண்பாவினோடும் மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா வருமாறு:-
"காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவா
டாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலா
னீணாக நறுந்தண்டார் தயங்கப்பாய்ந் தருளினாற்
பூணாக முறத்தழீஇப் போதந்தா னகனகலம்
வருமுலை புணர்ந்தன வென்பதனா லென்றோழி
யருமழை தரல்வேண்டிற் றருகிற்கும் பெருமையளே;
அவனுந்தான், ஏன லிதணத் தகிற்புகை யுண்டியங்கும்
வானூர் மதியம் வரைசேரி னவ்வரைத்
தேனி னிறாலென வேணி யிழைத்திருக்குங்
கானக னாடன் மகன்;
சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
வள்ளி கீழ்விழா வரைமிசைத் தேன்றொடா
கொல்லை குரல்வாங்கி யீனா மலைவாழ்ந
ரல்ல புரிந்தொழுக லான்;
காந்தள் கடிகமழுங் கண்வாங் கிருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோட் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதெழலாற் றம்மையருந்
தாம்பிழையார் தாந்தொடுத்த கோல்;
எனவாங்கு,
அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட
வென்னையர்க் குய்த்துரைத்தாள் யாய்;
அவருந், தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்
தொருபக லெல்லா முருத்தெழுந் தாறி
யிருவர்கட் குற்றமு மில்லையா லென்று
தெருமந்து சாய்த்தார் தலை;
தெரியிழாய் நீயுநின் கேளும் புணர
வரையுறை தெய்வ முவப்ப வுவந்து
குரவை தழீஇயா மாடக் குரவையுட்
கொண்டு நிலைபாடிக் காண்;
நல்லாய், நன்னா டலைவரு மெல்லை நமர்மலைத்
தந்நாண்டாந் தாங்குவா ரென்னோற் றனர்கொல்;
புனவேங்கைத் தாதுறைக்கும் பொன்னறை முன்றி
னனவிற் புணர்ச்சி நடக்குமா மன்றோ
கனவிற் புணர்ச்சி நடக்கலு மாங்கே
கனவிற் புணர்ச்சி கடிதுமா மன்றோ;
விண்டோய்கன் னாடனு நீயும் வதுவையுட்
பண்டறியா தீர்போற் படர்கிற்பீர் மற்கொலோ
பண்டறியா தீர்போற் படர்ந்தீர் பழங்கேண்மை
கண்டறியா தேன்போற் கரக்கிற்பென் மற்கொலோ;
மைதவழ் வெற்பன் மணவணி காணாமற்
கையாற் புதைபெறூஉங் கண்களுங் கண்களோ;
என்னைமன், நின்கண்ணாற் காண்பென்மன் யான்;
நெய்த லிதழுண்கண், நின்கண்ணா தென்கண் மன்;
எனவாங்கு,
நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்
தகைமிகு தொகைவகை யறியுஞ் சான்றவ ரினமாக
வேய்புரை மென்றோட் பசலையு மம்பலு
மாயப் புணர்ச்சியு மெல்லா முடனீங்கச்
சேயுயர் வெற்பனும் வந்தனன்
பூவெழி லுண்கணும் பொலிகமா வினியே."
இஃது ஆசிரியத்தினோடும் வெண்பாவினோடும்வந்த மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா.
"கொய்தினை காத்துங் குளவி யடுக்கத்தெம்
பொய்தற் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;
ஆய்தினை காத்து மருவி யடுக்கத்தெம்
மாசில் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;
மென்றினை காத்து மிகுபூங் கமழ்கானற்
குன்றச் சிறுகுடில் வாரனீ யைய நலம்வேண்டின்;"
இவை யிரண்டடியா யீற்றடி மிக்கு ஒருபொருண்மேன் மூன்றடுக்கி வந்தமையாற் கலித்தாழிசை.
"வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறுநெறியெங்
கேள்வரும் போழ்தி னெழா அல்வழி வெண்டிங்காள்
கேள்வரும் போழ்தி னெழாதாய்க் குறாலியரோ
நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்."
இஃதீற்றடி மிக்கு ஏனையடி மூன்று மொத்துவந்த கலித்தாழிசை.
"பூண்ட பறையறையப் பூதமருள
நீண்ட சடையா னாடுமே
நீண்ட சடையா னாடு மென்ப
மாண்ட சாயன் மலைமகள் காணவே காணவே."
இஃது ஈற்றடிமிக்கு இரண்டாம் அடி குறைந்து முதலடியும் மூன்றாம் அடியுமொத்து வந்த கலித்தாழிசை.
"யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித்
தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான்
றேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேற்
கானும் புள்ளுங் கைதையு மெல்லாங் கரியன்றே" எனவும்,
வென்றான் வினையின்" எனவும்,
இவை ஐஞ்சீர் நான்கடியாய் வந்தமையாற் கலித்துறை.
"வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி
னாய்தலி னொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன்
னீதலை சென்றுரை நீள்கடை காப்போய்" எனவும்,
"தேம்பழுத் தினியநீர் மூன்றும்" எனவும், நாற்சீரடியால் வந்தமையால் கலிவிருத்தம்.
இனிவஞ்சிப்பாவுக்குவரலாறு ;-
"பூந்தாமரைப் போதலமரத் ...."
இது நாளென்னுந் தனிச்சொற் பெற்றுச் சுரிதகத்தாலிற்ற குறளடி வஞ்சிப்பா.
கொடியவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாளெயிற் றழலுளையன வள்ளுகிரன
பணையெருத்தி னிணையரிமா னணையேறித்
துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
யெயினடுவ ணினிதிருந் தெல்லார்க்கும்
பயில்படுவினை பத்தியினாற் செப்பியோன்
புணையெனத்
திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி யெளிதே.
இது,"புணையென" என்னுந்தனிச் சொற்பெற்று ஆசிரியச் சுரிதகத்தாலிற்ற சிந்தடிவஞ்சிப்பா.
"தொன்னலத்தின்" என்பது, "பெரிதும்" என்னுந் தனிச்சொற்பெற்றது. இதுவுமது.
மதப்பிடியை மதவேழந் தடக்கையான் வெயின்மறைக்கு
மிடைச்சுர மிறந்தோர்க்கே நடக்குமென் மனனேகாண்;
பேடையை யிரும்போத்துத் தோகையான் வெயின்மறைக்குங்
காடக மிறந்தோர்க்கே யொடுமென் மனனேகாண்;
இரும்பிடியை யிகல்வேழம் பெருங்கையான் வெயின்மறைக்கு
மருஞ்சுர மிறந்தோர்க்கே விரும்புமென் மனனேகாண்;
இவை ஒருபொருண்மேன் மூன்றடுக்கிவந்தமையால் வஞ்சித்தாழிசை.
"மைசிறந்தன மணிவரை
கைசிறந்தன காந்தளும்
பொய்சிறந்தனர் காதலர்
மெய்சிறந்திலர் விளங்கிழாய்" என்பதும்,
"திரைத்தசாலிகை" என்பதும்,
"சோலை யார்ந்த சுரத்திடைக்
காலை யார்கழ லார்ப்பவும்
மாலை மார்பன் வருமாயி
னீல வுண்கணிவள் வாழுமே" என்பதும்,
"இருதுவேற்றுமையின்மையால்" என்பதும்,
இவை முச்சீர் நான்கடியாய்வந்த வஞ்சிவிருத்தம். (10)
வஞ்சியினமுற்றும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்