சிதம்பரப்பாட்டியல்
5 |
தொடையெழுவா யெழுத்தொன்றின் மோனையியை பிறுதி சொல்லிரண்டா மெழுத்தொன்றி னெதுகைபொருண் மொழிகள் யுடன்முரணின் முரணளபு வருதலடி யளவே யுயரிசீ ரிணைதலிணை முதலொடுமூன் றாஞ்சீர் அடைபொழிப்பு நடுவிருசீ ரகறலொரூஉ வடியி னடர் தருமுச் சீர்கூழை முதலயற்சீர் நீங்கல் கெடலருமேற் கதுவாயே யீற்றயர்சீர் நீங்கல் கீழ்க்கதுவாய் சீர்முழுதுங் கிடைத்திடின்முற் றாமே. |
" தொடையெழுவாய் எழுத்து ஒன்றின் மோனை"--- என்றது, அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
அடிமோனைத்தொடை.
"இயைபு இறுதி" என்றது, அடிதோறும் இறுதி யெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது அடியியைபுத்தொடை.
" சொல்லிரண்டாம் எழுத்தொன்றின் எதுகை" என்றது, அடிதோறும் இரண்டாமெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது
அடியெதுகைத்தொடை.
"பொருண் மொழிகளுடன் முரணின் முரண்" என்றது, பொருளானே யாயினும் சொல்லானே யாயினும் அடிதோறும் முதன்
மொழிக்கண் மறுதலைப்படத் தொடுப்பது அடிமுரண்டொடை.
"அளபு வருதல் அடியளவே" என்றது, அடிதோறும் முதன் மொழிக்கண் அளபுவரத் தொடுப்பது, அடியளபெடைத்தொடை.
"உயரிருசீரிணை தலிணை..........சீர்முழுதுங் கிடைத்திடின் முற்றாமே" என்றது, முன் சொன்ன மோனை இயைபு எதுகை
முரண் அளபு என்னும் இவ்வைந்தினும் இணை பொழிப்பு ஒரூஉ கூழை மேற்கதுவாய் கீழ்க்கதுவாய் முற்று என்னும் இவை
ஏழுங் கூட்டி உறழ முப்பத்தைந்து தொடையாம்;
வரலாறு:-- இணைமோனைத்தொடை, பொழிப்புமோனைத்தொடை, ஒரூஉமோனைத்தொடை, கூழைமோனைத்தொடை,
மேற்கதுவாய் மோனைத்தொடை, கீழ்க்கதுவாய் மோனைத்தொடை, முற்றுமோனைத்தொடை எனவும்; இவ்வாறே
இயைபு,எதுகை முதலியவற்றோடு ஒட்டியும் ஆகத்தொடை முப்பத்தைந்தாமாறு கண்டு கொள்க.
"மாவும் புள்ளும் வதிவயிற் படர
மாநீர் விரிந்த பூவுங் கூம்ப
மாலை தொடுத்த கோதையுங் கமழ
மாலை வந்த வாடையின்
மயோ ளின்னுயிர்ப் புறத்திறுத் தற்றே"
இஃது அடிதோறும் முதலெழுத்து ஒன்றி வரத் தொடுத்தமையால் அடி மோனைத்தொடை
"இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே
நன்மா மேனிச சுணங்குமா ரணங்கே
ஆடமைத் தோளிக் கூடலு மணங்கே
அரிமதர் மழைக்கணு மணங்கே
திரு நுதற் பொறித்த திலதமு மணங்கே"
இஃது அடிதோறும் இறுதியெழுத்தொன்றிவரத் தொடுத்தமையால் அடியியைபுத் தொடை.
"தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா
மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும்
மாம்பழக் கனிகளும் மதுத்தண் டீட்டமும்
தாம்பழுத் துளசில தவள மாடமே"
இஃது அடிதோறும் இரண்டாமெழுத் தொன்றிவரத் தொடுத்தமையால் அடியெதுகைத்தொடை.
"இருள்பரந் தன்ன மாநீர் மருங்கின்
நிலவுகுவித் தன்ன வெண்மண லொருசிறை
இரும்பி னன்ன கருங்கோட்டுப் புன்னை
பொன்னி னன்ன நுண்டா திறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மடமகள்
பெருமதர் மழைக்கணு முடையவா லணங்கே
இஃது அடிதோறும் முதற்சீர் மறுதலைப்படத் தொடுத்தமையால் அடி முரண்டொடை.
"ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினோ
டீஇ ரிரைகொண் டீரளைப் பள்ளியுட்
டூஉந் திரையலைப்பத் துஞ்சா திறைவன்றோள்
மேஎ வலைப்பட்ட நம்போ னறுநுதால்
ஓஒ வுழக்குந் துயர்."
இஃது அடிதொறும் அளபெடுத்தொன்றி வரத் தொடுத்தமையால் அடியள பெடைத்தொடை என வரும்.
இனி இணைமோனை முதலாகிய தொடை வருமாறு.
"அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி
அரிற்குரற் கிண்கிணி யரற்றுஞ் சீறடி
அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி
அகன்ற வல்கு லந்நுண் மருங்குல்
அரும்பிய கொங்கை யவ்வளை யமைத்தோள்
அவிர்மதி யனைய திருநுத லரிவை
அயில்வே லனுக்கி யம்பலைத் தமர்த்த
கருங்கய னெடுங்க ணோக்கமென்
திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே"
இதனுள் இணைமோனை முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க.
"மொய்த்துடன் றவழு முகிலே பொழிலே
மற்றத னயலே முத்துறழ் மணலே
நிழலே யினியத னயலது கடலே
மாதர் நகிலே வல்லே யியலே
வில்லே நுதலே வேற்கண் கயலே
பல்லே தளவம் பாலே சொல்லே
புயலே குழலே மயிலே யியலே
அதனால்
இவ்வயின் இவ்வுரு வியங்கலின்
எவ்வயி னோரு மிழப்பர்தந் நிறையே
இதனுள் இணையியைபு முதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டுகொள்க.
"பொன்னி னன்ன பொறிசுணங் கேந்தி
பன்னருங் கோங்கி னன்னலங் கவற்றி
மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய
நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி
என்னையு மிடுக்கண் டுன்னுவித் தின்னடை
அன்ன மென்பெடை போலப் பன்மலர்க்
கன்னியம் புன்னை யின்னிழ றுன்னிய
மயிலேய் சாயல் வாணுதல்
அயில்வே லுண்கணெம் மறிவுதொலைத் தனவே."
இதனுள் இணையெதுகை முதலாய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க.
"சீறடிப் பேரக லல்கு லொல்குபு
சுருங்கிய நுசுப்பிற் பெருகுவடந் தாங்கி
குவிந்துசுணங் கரும்பிய கொங்கை விரிந்து
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்
வெள்வளைத் தோளுஞ் சேயரிக் கருங்கணு
மிருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமும்
துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தனை முனியா
தென்று மின்னணம் ஆகுமதி
பொன்றிகழ் நெடுவேற் போர்வல் லோயே."
இதனுள் இணைமுரன் முதலான ஏழுவிகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க.
"தாஅட் டாஅ மரைமல ருழக்கிப்
பூஉக் குவளைப் போஓ தருந்திக்
காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்
மாஅத் தாஅண் மோஒட் டெருமை
தேஎம் புணலிடைச் சோஒர் பாஅல்
மீஇ னாஅர்ந் துகளுஞ் சீஇர்
ஏஎ றாஅ நீஇ ணீஇர்
ஊரன் செய்த கேண்மை
யாய்வளைத் தோளிக் கலரா னாதே."
இதனுள் இணையளபெடைத் தொடைமுதலாகிய ஏழு விகற்பமும் முறையானே வந்தவாறு கண்டு கொள்க.தொடை
முற்றும். (5)
உறுப்பியன் முற்றும்.
வஞ்சியினம்.
6 |
ஆர்வெண்பா வகவல்கலி வஞ்சிப்பா நான்கி னள வடிவெண் பாச்செப்ப லிசைமுச்சீ ரந்தங் கூர்காசு பிறப்புநாண் மலர்முடிவீ ரடிவெண் குறள்குறள்வெண் பாவிரண்டா யோராசீ ராசு நேருகினுந் தனிச்சொற்பெற் ரொன்றிரண்டு விகற்பம் நேரிசைவெண் பாத்தனிச்சொ லின்றியடி நான்காய்ப் பார்விகற்ப மொன்றுபல வின்னிசைவெண் பாவப் படியடியீ ராறுவரும் பஃறொடைவெண் பாவே. |
என்பது,
" ஆர் வெண்பா வகவல்கலி வஞ்சிப்பா நான்கின்"
என்றது வெண்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா எனப் பா நான்காம்.
*ரன்னும் விதப்பினா லினமாவன:-- தாழிசை, துறை, விருத்தம் என வரும்*. அவையாவன:-- வெண்பா, வெண்டாழிசை,
வெண்டுறை, ******விருத்தம் எனவும்; ஆசிரியப்பா, ஆசிரியத்தாழிசை, ஆசிரியத்துறை, ஆசிரிய விருத்தம் எனவும்;
கலிப்பா,கலித்தாழிசை, கலித்துறை,கலிவிருத்தம் எனவும்; வஞ்சிப்பா, வஞ்சித்தாழிசை, வஞ்சித்துறை, வஞ்சிவிருத்தம்
எனவும் வரும். இவற்றிற்குதாரணம் முன்னர்க்காட்டுதும்.
"அளவடிவெண்பாச் செப்பலிசை முச்சீ ரந்தங் கூர்காசு பிறப்புநாண் மலர்முடிவு"
எ-து நான்கு பாவினுள்வெண்பாவாவது, அளவடியுஞ் செப்பலோசையும் முடிவிலடி முச்சீருங்காசு பிறப்பு நாண்மலரென்னும்
முச்சீருள் முடிவிற்சீரும் பெற்று வருமென்பது--வெண்பாக்களுக்குப் பொதுவிலக்கணம்.
"ஈரடிவெண்குறள்" என்பது, இரண்டடியாய் வருவது குறள்வெண்பாவாம்.
"குறள்வெண்பா இரண்டா யோராசு மீராசு நேருகினுந் தனிச்சொற்பெற் றொன்றிரண்டு விகற்பம் நேரிசை வெண்பா".
எ-து குறள்வெண்பா இரண்டாயோரா பெற்று மீராசுபெற்றும், உம்மையாலோராசு மீராசும் பெறுதுமாய்; எடுத்த எதுகைக்
கேற்ற தனிச்சொற்பெற்று ஒருவிகற்பமாகியு மிருவிகற்பமாகியும் வருவன நேரிசை வெண்பா;
"தனிச்சொலின்றி அடிநான்காய் பார் விகற்பமொன்று பல இன்னிசை வெண்பா"
என்பது, தனிச்சொல்லின்றி நாலடியா யொருவிகற்பமும் பல விகற்பமுமாகி வருவன இன்னிசை வெண்பா.
"அப்படி அடியீராறு வரும் பஃறொடை வெண்பா"
என்பது இன்னிசை வெண்பாப்போலத் தனிச்சொல்லின்றி ஒருவிகற்பமும் பலவிகற்பமும் பெற்று ஐந்தடிமுதலாகப்
பன்னிரண்டடியளவும்வருவன பஃறொடைவெண்பா.
இவற்றிற்குதாரணம்:--
"பொன்னார மார்பிற் புனைகழற்காற் கிள்ளிபே
ருன்னேனென் றூழுலக்கை பற்றினேற் - கென்னோ
மனனொடு வாயெல்லா மல்குநீர்க் கோழிப்
புனனாடன் பேரே வரும்."
இஃது அளவடியானுஞ் செப்பலோசையானும் வந்தமையால் வெண்பா.
"இன்னகைத் துவர்வாய்க் கிளவியு மணங்கே
நன்மா மேனிச் சுணங்குமா ரணங்கே
யாடமைத் தோழிக் கூடலு மணங்கே
யரிமதர் மழைக்கணு மணங்கே
திருநுதற் பொறித்த திலதமும் மணங்கே."
இஃது அளவடியானும் அகவலோசையானும் வந்தமையால் ஆசிரியப்பா.
"அரிதாய வறனெய்தி யருளியோர்க் களித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலிற் புணர்ச்சியுந் தருமெனப்
பிரிவெண்ணிப் பொருள்வயிற் சென்றநங் காதலர்
வருவர்கொல் வயங்கிழாய் வலிப்பல்யான் கேளினி."
இது தரவு.
அடிதாங்கு மளவன்றி யழலன்ன வெம்மையாற்
கடியவே கனங்குழாய் காடென்றாரக் காட்டுட்
டுடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே.
இன்பத்தி னிகந்தொரீஇ யிலைதீந்த வுலவையாற்
றுன்புறூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு
ளன்புகொண் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே.
கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலாற்
றுன்னரூஉந் தகையவே காடென்றா ரக்காட்டு
ளின்னிழ லின்மையால் வருந்திய மடப்பிணைக்குத்
தன்னிழலைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே.
இவை மூன்றுந்தாழிசை:-
எனவாங்கு - தனிச்சொல்.
இனைநல முடைய கானஞ் சென்றோர்
புனைநலம் வாட்டுந ரல்லர் மனைவயிற்
பல்லியும் பாங்கொத் திசைத்தன
நல்லெழி லுண்கணு மாடுமா லிடனே.
இது சுரிதகம்:-இஃதளவடியானுந் துள்ளலோசையானும் வந்தமையாற் கலிப்பா.
"சுறமறிவன துறையெல்லா
மிறவீன்பன வில்லெல்லா
மீன்றிரிவன கிடங்கெல்லாந்
தேன்றாழ்வன பொழிலெல்லா
மெனவாங்கு
தண்பணை தழீஇய விருக்கை
மண்கெழு நெடுமதின் மன்ன னூரே." எனவும்,
"தொன்னலத்தின் புலம்பலைப்பத் தொடித்தோண்மேற்
பன்னலத்த கலந்தொலையப் பரிவெய்தி
யென்னலத்ததை யிதுவென்னென வெழில்காட்டிச்
சொன்னலத்தொகைப் பொருள்கருத்தி னிற்சிறந்தாங்
கென்னப் பெரிதும்
கலங்கஞ ரெய்தி விடுப்பவுஞ்
சிலம்பிடைச் செலவுஞ் சேணிவந் தற்றே." எனவும்,
இவை,குறளடிசிந்தடியானுந் தூங்கலோசையானும் வந்தமையால் வஞ்சிப்பா எனவரும்.
இனி வெண்பாவுக்கு வரலாறு:-
"அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே
பெரிய வரைவயிரங் கொண்டு--தெரியிற்
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
பெரிய வரைவயிரங் கொண்டு."
இது காசெனமுடிந்தது.
"உருவுகண் டெள்ளாமை வேண்டு முருள்பெருந்தேர்க்
கச்சாணி யன்னா ருடைத்து."
இது பிறப்பென முடிந்தது.
"பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர்."
இது நாளென முடிந்தது.
"பொன்னார மார்பில்"இது மலரெனமுடிந்தது. அடைவே காசு பிறப்பு நாண் மலரெனவும் ஈற்றடிமுச்சீரும் வந்தவாறு கண்டுகொள்க.
இனி 'பாலொடுதேன்' எனவும், 'உருவுகண்டெள்ளாமை'எனவும்,
ஒருவிகற்பத்தானும் இருவிகற்பத்தானும் வந்தமையாற் குறள்வெண்பா.
"தடமண்டு தாமரையின் றாதா டலவ
னிடமண்டிச் செல்வதனைக் கண்டு-பெடைஞெண்டு
பூழிக் கதவடைக்கும் புத்தூரே பொய்கடிந்
தூழி நடாயினா னூர்" எனவும்,
"அரிய வரைசீண்டு காட்டுவார் யாரோ
பெரிய வரைவயிரங் கொண்டு-தெரியிற்
கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார்
பெரிய வரைவயிரங் கொண்டு" எனவும்,
இவை இரண்டு குறள் வெண்பா நடுவு முதற்றொடைக்கேற்ற தனிச் சொல்லாலடிநிரம்பி இரண்டு விகற்பத்தானு
மொருவிகற்பத்தானும் வந்தமையால் இருகுறள் நேரிசைவெண்பா.
"கருமமு முள்படாப் போகமுந் துவ்வாத்
தருமமுந் தக்கார்க்கே செய்யா-வொருநிலையே
முட்டின்று மூன்று முடியுமே லஃதென்ப
பட்டினம் பெற்ற கலம்" எனவும்,
"வஞ்சியே னென்றவன்ற னூருரைத்தான் யானுமவன்
வஞ்சியா னென்பதனால் வாய்நேர்ந்தேன்-வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியே னென்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார் கோ" எனவும்,
ஓரசையானும் ஈரசையானும் ஆசிட்டு இருவிகற்பத்தானும் ஒருவிகற்பத்தானும் வந்த இருகுறணேரிசை வெண்பா வந்தவாறு
கண்டுகொள்க. இனி:-
"வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும் வைகலை வைகுமென் றின்புறுவர்
வைகலும் வைகற்றம் வாணான்மேன் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்."
இது,நான்கடியாய்த் தனிச்சொல்லின்றி யொருவிகற்பத்தால் வந்த இன்னிசைவெண்பா.
"இன்னாமை வேண்டி னிரவெழுக விந்நிலத்து
மன்னுதல் வேண்டி னிசைநடுக தன்னொடு
றோற்றந் தொழில்வடிவு தம்முட் டடுமாற்றம்
வேற்றுமை யின்றியே யொத்தன மாவேட
ராற்றுக்கா லாட்டியர் கண்."
இஃது ஐந்தடியான்வந்த ஒரு விகற்பப் பஃறொடைவெண்பா.
"பன்மாடக் கூடல் மதுரை நெடுந்தெருவி
லென்னொடு நின்றா ரிருவ ரவருள்ளும்
பொன்னோடை நன்றென்றாள் நல்லளே பொன்னோடைக்
கியானைநன் றென்றாளு மந்நிலையள் யானை
யெருத்தத் திருந்த விலங்கிலைவேற் றென்னன்
றிருத்தார்நன் றென்றேன் றியேன்."
இஃது ஆறடியான் வந்த ஒரு விகற்பப் பஃறொடைவெண்பா.
"வையக மெல்லாங் கழனியா வையகத்துச்
செய்யகமே நாற்றிசையின் றேயங்கள் செய்யகத்து
வான்கரும்பே தொண்டை வளநாடு வான்கரும்பின்
சாறேயந் நாட்டுத் தலையூர்கள் சாறட்ட
கட்டியே கச்சிப் புறமெல்லாங் கட்டியுட்
டானேற்ற மான சருக்கரை மாமணியே
யானேற்றான் கச்சி யகம்."
இது பல விகற்பத்தான் வந்த ஏழடிப்பஃறொடைவெண்பா:- (6)
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிதம்பரப்பாட்டியல், Chidambarapattiyal, Grammar's, இலக்கணங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள்