முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 9. புலவி விராய பத்து
ஐங்குறுநூறு - 9. புலவி விராய பத்து
புலவி என்பது உறவு கொள்ளும் ஆணிடம் பெண் கொள்ளும் சிறிய பிணக்கு. இங்குள்ள பாடல்களில் மனைவியின் புலவியும், பரத்தையின் புலவியும் விரவி (கலந்து) வருவதால் இதற்குப் ‘புலவி விராய பத்து எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
குருகு உடைத் தூண்ட வெள் அகட்டு யாமை அரிப்பறை வினைஞர் அல்குமிசை கூட்டும் மலரணி வாயில் பொய்கை ஊரநீ என்னை நயந்தனென் என்றநின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. | 81 |
ஊர! நீ இங்கே வந்து என்னை விரும்புவதாகக் கூறுகிறாய். இதனை உன் மனைவி கேட்டால் பெரிதும் வருந்துவாள், என்று பரத்தை ஊடுகிறாள். குளத்தில் வாழும் வெள்ளைநிற வயிற்றை உடைய ஆமையின் ஓட்டை உடைத்துக் குருகுப்பறவை உண்ணும். அப்போது அங்கு வயலில் நெல் அறுப்பவர் முழக்கும் பறையொலியைக் கேட்டு அது ஓடிவிடும். அந்த ஆமையை அந்தத் தொழிலாளிகள் தன் துணியில் கடி எடுத்துச் சென்று தனக்கு உணவாக்கிக்கொள்வர். இத்தகைய ஊரை உடையவன் அந்த ஊரன்.
வெகுண்டனள் என்ப பாணநின் தலைமகள் மகிழ்நன் மார்பின் அவிழினர் நறுந்தார்த் தாதுன் பறவை வந்துஎம் போதார் கூந்தல் இருந்தன எனவே. | 82 |
மகிழ்நன் மனைவி பாணனிடம் சொல்கிறாள். பாண! உன் தலைவி பரத்தை கோவித்துக்கொண்டாளாமே. தலைவன் மார்பு மாலையில் இருந்த தேனை உண்ட வண்டு பறந்துவந்து என் கூந்தலில் உட்கார்ந்தது என்று கோவித்துக்கொண்டாளாமே.
மணந்தனை அருளாய் ஆயினும் பையத் தணந்தனை யாகி உய்ம்மோ நும்மூர் ஒண்தொடி முன்கை ஆயமும் தண்துறை யூரன் பண்டெனப் படற்கே. | 83 |
என்னை எதற்காக மணந்துகொண்டாய். உன்னைச் சேர்ந்தவர்கள் என்னை உன் மனைவி என்று சொல்லவேண்டும் என்பதற்காகவா? திருமணமான புதிதிலேயே என்னைப் பிரிந்து வளையலை ஆட்டி அழைக்கும் அவளிடம் சென்றுவிட்டாயே – மனைவி ஊடல்
செவியிற் கேட்பினும் சொல்லிறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் எனா குவள்கொல் நறுவீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண்கயம் போலப் பலர்படிந்து உண்ணுநின் பரத்தை மார்பே. | 84 |
தலைமுடி ஐம்பால் ஒப்பனையில் பூச் சூடிக்கொண்டு மகளிர் தை மாதம் குளிர்ந்த குளத்தில் நீராடுவர். அந்தப் பொதுக்குளத்தில் பிறரும் நீராடிவது போலப் பரத்தை மார்பைப் பலரும் துய்ப்பர். நீ அத்தகைய பரத்தையைத் தழுவினாய். இந்தச் செய்தியைக் காதில் கேட்கும்போதே எல்லை கடந்து உன் மனைவி சினம் கொள்வாள். நீ இப்போது நேரில் வந்திருக்கிறாய். என்ன செய்வாளோ தெரியவில்லையே! – சோழி சொல்கிறாள்.
வெண்நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண்நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறுவில் யானர்மலிகேழ் ஊரநீ சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெருமநின் கண்டிசி ணோரே. | 85 |
வெள்ளை நெற்றி கொண்ட கம்புள் (காடை) பறவை வயல்வெளியில் பல பெண் பறவைகளோடு விளையாடும் வளம் மிக்க ஊர்த்தலைவன் நீ. சின்னப் பிள்ளைகள் விள்ளைகள் போல உன் பெண்களோடு விளையாடியதைப் பலரும் பார்த்திருக்கிறார்கள். என்னை நெருங்காதே. விலகிப்போ. – இப்படி மனைவி ஊடுகிறாள்.
வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குறல் நீள்வயல் நண்ணி இமிழும் ஊர எம் இவன் நல்குதல் அரிது நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே. | 86 |
இங்கு என்னைத் தரமாட்டேன். அங்கு உன் மனைக்குச் சென்று உன் பரத்தையரைப் பெற்று இன்புறுக – மனைவி வெகுண்டு கூறியது. வெள்ளைத் தலை கொண்ட குருகு வயலில் இருந்துகொண்டு துணையை அழைக்கும் ஊரன் நீ ஆயிற்றே.
பகன்றைக் கண்ணிப் பல்ஆன் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி யுதிர்க்கும் யாணர் ஊரைநின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மைமற் றெவனோ. | 87 |
உன் மனைவி எல்லாரிடமும் பிணக்குப் போட்டுக்கொள்வாள். என்னை விட்டு வைப்பாளா – இவ்வாறு கூறிப்பரத்தை ஊடல் கொள்கிறாள். பகன்றைப் பூவைத் தலையில் சூடிக்கொள்ளும் கோவலர் கையிலிருக்கும் கரும்பை எறிந்து அடித்து மாலகனிகளை உதிர்க்கும் ஊரன் அல்லவா நீ.
வண்டுறை நயவரும் வளமலர்ப் பொய்கைத் தண்துறை யூரனை எவ்வை எம்வயின் வருதல் வேண்டுதும் என்ப தொல்லேம் போல்யாம் அதுவேண் டுதுமே. | 88 |
இழுத்துப் பிடிக்க எனக்குத் தெரியாது என்று உன் மனைவி சொல்லிவிட்டாளாமே. அதனால்-தான் நான் உன்னை இழுத்துப் பிடித்துக்கொள்கிறேன். எப்போதும் என்னிடம் வரவேண்டும் என்கிறேன் – பரத்தை கூற்று. வளமான பொய்கையில் தாமரை மலரும் ஊரன் நீ.
அம்மவாழி பாண எவ்வைக்கு எவன் பெரி தளிக்கும் என்ப பழனத்து வண்டு தாதூதும் ஊரன் பெண்டென விரும்பின்று அவள்தன் பண்பே. | 89 |
பாண! வயல்தாமரையில் வண்டு தேன் உண்ணும் ஊரன் உன் தலைவன். அவன் தன் மனைவியுடன் வாழ்வது மணந்துகொண்டோமே என்பதற்காகத்தான். இல்லாவிட்டால் என்னிடம்தான் இருப்பான். – காதல்பரத்தையின் கணிப்பு.
மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல் வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல் அன்ன தாகலும் அறியாள் எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே. | 90 |
மகிழ்நன் குணத்தை வண்டு வாங்கிக்கொண்டதா, அல்லது வண்டின் குணத்தை மகிழ்நன் வாங்கிக்கொண்டானா இதுதான் நிலைமை. இது தெரியாமல் மகனைப் பெற்ற தாய் என்னைக் கடிந்துகொள்கிறாளாமே – பரத்ததை கூற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - என்ப, மாண்குணம், தண்துறை, மகிழ்நன், ஊரநீ, மனையோள்