முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 11. தாய்க்கு உரைத்த பத்து.
ஐங்குறுநூறு - 11. தாய்க்கு உரைத்த பத்து.
அன்னை என்பவள் இங்குச் செவிலித்தாய். செவிலித் தாயிடம் தோழி கூறும் செய்திகள் இந்தப் பத்துப் பாடல்களில் சொல்லப்பட்டுள்ளன. காதலன் காதலி உறவு திருமணமாக மாறுகிறது. தலைவனின் தேர் கடலோரக் கானல் மணலில் வருகிறது. திருமணச் செய்தியுடன் வருகிறது. தோழிக்கும் தலைவிக்கும் மகிழ்ச்சி. தாயும் மகிழவேண்டும் என்பது அவர்களின் ஆவல்.
அன்னை வாழிவேண் டன்னை உதுக்காண் ஏர்கொடிப் பாசடும்பு பரியஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று நின்மகள் பூப்போல் உண்கண் மரீஇய நோய்க்குமருந் தாகிய கொண்கன் தேரே. | 101 |
அன்னை! பூ பிறரைக் கவர்வது போலப் பிறரை உண்ணும் கண்ணை உடையவள் உன் மகள். அவளை நினைவு நோயால் வருத்திக்கொண்டிருக்கும் அவளது கொண்கன் தேர், அதோ பார், வந்துகொண்டிருக்கிறது. நிலத்தில் ஏறிப் படரும் அடும்புக் கொடி அறுபடவும், நீரில் பூக்கும் நெய்தல் அலைமோதவும் வந்துகொண்டிருக்கிறது. திருமணத்துக்காக வந்துகொண்டிருக்கிறது.
அன்னை வாழிவேண் டன்னை நம்மூர் நீல்நிறப் பெருங்கடல் புள்ளின் ஆனாது துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் அவர் தேர்மணிக் குரலே. | 102 |
அவர் தேரில் ஒலிக்கும் மணியோசை நம் ஊர்க் கடலில் பறவைக் கூட்டம் குரல் எழுப்புவது போல் கேட்கிறது.
அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணந் துறைவன் இவட்குஅமைந் தனெனால் தானே தனக்கு அமைந்த தன்றுஇவள் மாமைக் கவினே. | 103 |
அவன் ஊரிலுள்ள துறை புன்னை, ஞாழல் ஆகிய பூக்கள் உதிராவா என ஏங்கிக்கொண்டிருக்கும். அப்படியே அவனுக்காக இவள் அழகு ஏங்கிக்கொண்டிருக்கும்.
அன்னை வழிவேண் டன்னை நம்மூர்ப் பலர்மடி பொழுதின் நலம்மிகச் சாஅய் நள்ளென வந்த இயல்தேர்ச் செல்வக் கொண்கன் செல்வன தூரே. | 104 |
நம் ஊரில், பலரும் உறங்கும் நேரத்தில், மெல்ல மெல்ல (நள்ளென) வருகிறதே தேர், அதில் வரும் மகன், உன் மகளின் பெருமகன் ஊரும் அவனைப் போலவே செல்வ-வளம் மிக்கது.
அன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல் திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்கும் தணம் த்றவன் வந்தெனப் பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நூதலே. | 105 |
முத்து மணலில் ஏறி மின்னும் துறையை உடையது அவன் கடல். அவன் வருவது அறிந்து உன் மகளின் நெற்றி பொன்னைக் காட்டிலும் சிவந்து பொலிவு பெற்றுள்ளது.
அன்னை வாழிவேண் டன்னை அவர்நாட்டுத் துதிக்கால் அன்னம் துணைசெத்து மிதிக்கும் தன்கடல் வளையினும் இலங்கும்இவள் அம்கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே. | 106 |
அவர் நாட்டில் ஆண்-அன்னம் தன் பெண்-அன்னத்தை மிதிப்பதாக எண்ணிக்கொண்டு சங்கின் மேல் ஏறி அமர்ந்திருக்கும். இவள் மார்பகம் அந்தச் சங்கு போல் உருண்டுகொண்டிருப்பதைப் பார்.
அன்னை வாழிவேண் டன்னைஎன் தோழி சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து தண்கடல் படுதிரை கேட்டொறும் துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே. | 107 |
இவள் அவனை நினைத்து மெலிந்துகொண்டிருக்கிறாள். (படர் நினைந்து) கடல்-அலை ஓசை கேட்கும்போதெல்லாம் அவன் தேரோசையோ என்று தூங்காமல் கிடக்கிறாள்.
அன்னை வாழிவேண் டன்னை கழிய முண்டக மலரும் தண்கடற் சேர்ப்பன் எந்தோள் துறந்தனன் ஆயின் எவன்கொல் மற்றவன் நயந்த தோளே. | 108 |
அவன் முண்டகப் பூ மலரும் கடல் சேர்ந்த நிலத்தின் தலைவன். அவன் இவள் தோளை விட்டு விலகியிருக்கிறான். அவள் தோள் என்ன ஆகுமோ?
அன்னை வாழிவேண் டன்னை நெய்தல் நீர்படர் தூம்பின் பூக்கெழு துறைவன் எந்தோள் துறந்த காலை எவன்கொல் பன்னாள் வரும்அவன் அளித்த போழ்தே. | 109 |
அவன் ஊர் நெய்தல் மலர் தன் துளை கொண்ட காம்பை உயர்த்திப் பூத்திருக்கிறது. அவன் இவளுக்குத் தலையளி (முதல் உடலுறவு) செய்தான். அவன் இவளை விட்டுவிட்டு இருக்கும்போதும் அந்தத் தலையளி-நேரம் பலநாளாக ஒவ்வொரு நாளும் வந்துகொண்டிருக்கிறதே!
அன்னை வாழிவேண் டன்னை புன்னை பொன்னிறம் விரியும் பூக்கெழு துறைவனை என்னை என்றும் யாமே இவ்வூர் பிறதொன் றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே. | 110 |
இவள் மேனியில் பொன்-நிறம் பூத்திருப்பதைப் பார்த்து “ஏன்” என்று வினவுகின்றனர். புன்னைப் பூக்கள் கொட்டி அவன் துறை பொன்னிறம் பெற்றிருக்கிறது. அங்கேயும் இந்த வினா எழும்புமோ? இதுதான் விதியோ..
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - அன்னை, டன்னை, வாழிவேண், எவன்கொல், பூக்கெழு, எந்தோள், கொண்கன், நெய்தல், துறைவன், கண்டிசின்