முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 7. கிழத்தி கூற்றுப்பத்து
ஐங்குறுநூறு - 7. கிழத்தி கூற்றுப்பத்து
பரத்தையரிடமிருந்து திரும்பிய கணவனிடம் மனைவி ஊடும் பாங்கினைக் காட்டும் பாடல்கள் இவை. இவற்றில் கருப்பொருளாக வரும் மாம்பழம், நீர்நாய், ஆம்பல், வண்டல் முதலானவை இறைச்சிப் பொருளாக அமைந்து வாழ்க்கைப் பொருளைக் குறிப்பால் உணர்த்துவதை அந்தந்த பாடலின் சூழலுக்கேற்ப எண்ணிப் பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும்.
நறுவடி மாஅத்து விளைந்துகு தீப்பழம் நெடுநீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண்மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே. | 61 |
வள்ளல் மத்தி ஆளும் கழார் நகரில் புளிப்பில்லாத நல்ல மாம்பழம் பொய்கையில் ’துடும்’ என்னும் ஒலியுடன் விழுவது போல, நல்ல நல்ல பெண்களை நாடிச் சென்று இன்பம் காண்பவன் நீ – என்று சொல்லி மனைவி ஊடுகிறாள்.
இந்திர விழவின் பூவின் அன்ன புந்தலைப் பேடை வரிநிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்துஇனி எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் தேரே. | 62 |
இந்திர விழாவில் பூ கொட்டிக்கிடப்பது போலக் காணப்படும் பெட்டைக் கோழியானது கோடு கோடாக இருக்கும் வரிநிழலில் நின்றுகொண்டு சேவலை அழைக்கும் இந்த ஊரில் உள்ள புதுப் பெண்களையெல்லாம் துய்த்துவிட்டு, இப்போது எந்த ஊரில் உன் தேரை நிறுத்தியிருக்கிறாய் – என்று கேட்டு மனைவி ஊடுகிறாள்.
பொய்கைப் பள்ளிப் புலவுநாறு நீர்நாய் வாளை நாளிரை பெறூஉம் ஊர எம்நலம் தொலைவ தாயினும் துன்னலம் பெருமபிறர்த் தோய்ந்த மார்பே. | 63 |
பொய்கையில் புலால் நாற்றம் வீசும் நீர்நாயானது வாளைமீன் இரையை எளிதாகப் பெறும் ஊரன் நீ. என் நலமெல்லாம் அழிவதாயினும் சரி. பிற பெண்களைத் தழுவிய உன் மார்பை நான் தழுவமாட்டேன் – என்று கூறி மனைவி ஊடுகிறாள்.
அலமரல் ஆயமோடு அமர்துணை தழீஇ நலமிகு புதுப்புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்யஎம் மறையா தீமே. | 64 |
சுழன்று விளையாடும் தோழியர் கூட்டத்தில் விரும்பிய பெண்ணைத் தருவிக்கொண்டு நலம் தரும் புதிய ஆற்றுப் புனலில் நீ நீராடியதைக் கண்டவர்கள் ஒருவர், இருவர் அன்று, பலர். இதனை மறைக்க வேண்டா – என்று சொல்லி மனைவி ஊடுகிறாள்.
கரும்புநடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்புபசி களையும் பெரும்புன லூர புதல்வனை ஈன்றஎம் மேனி முயங்கன்மோ தெய்யநின் மார்புசிதைப் பதுவே. | 65 |
கரும்பு நட்ட பாத்தியில் மலர்ந்திருக்கும் ஆம்பல் பூக்கள் தேன் உண்ணும் வண்டுகளின் பசியைப் பசியைப் போக்கும் நீர்வளம் மிக்க ஊரன் நீ. புதல்வனைப் பெற்ற என் மேனியைத் தழுவாதே. உன் மார்பின் அழகு கெட்டுவிடும் – என்று கூறி மனைவி பரத்தையிடமிருந்து வந்த கணவனிடம் ஊடுகிறாள்.
உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ யாரவள் மகிழ்ந தானே தேரொடு தளர்நடைப் பதல்வனை யுள்ளிநின் வளவமனை வருதலும் வெளவி யோனே. | 66 |
மகிழ்ந! எதிர்த்துப் போரிடமாட்டேன், உள்ளதைச்சொல்லிவிடு. யார் அவள்? தள்ளாடி நடைவண்டி உருட்டிக்கொண்டு செல்லும் உன் புதல்வனைக் கண்டதும் தூக்கிக்கொண்டாளே, யார் அவள்? – என்று வினவிக்கொண்டு மனைவி ஊடுகிறாள்.
மடவள் அம்மநீ இனிக்கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெருநலம் தருக்கும் என்ப விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித் தோரே. | 67 |
நீ வைத்திருக்கிறாயே அவள் ஒரு மடச்சி. தனக்கு நிகராக என் நல்லழகை ஒப்பிட்டுப் பார்த்துத் திரிர் கொள்கிறாள். நீ வைத்திருக்கும் பெண்கள் வண்டு தேன் உண்ணும் மலர்களைக் காட்டிலும் அதிகம். எல்லாரும் என் நெற்றியை மட்டும் பசப்படையச் செய்திருக்கின்றனர். உனக்காக ஏங்கும் இந்தப் பசப்பு அவர்களுக்கு உண்டா?
கன்னி விடியல் கணக்கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர பேணா ளோநின் பெண்டே யாந்தன் அடங்கவும் தான்அடங் கலளே. | 68 |
விடியற்காலம் தோன்றும்போது ஆம்பல் பூவானது தாமரைப் பூவைப் போலவே மலரும். அதனால் அதற்குத் தாமரை போன்ற பெருமை வந்துவிடுமா? அப்படி ஆம்பல் மலரும் ஊரை உடையவன் நீ. நீ இங்கு வந்திருக்கிறாய். நீ வைத்திருக்கும் அவள் உன்னைப் பேணவில்லையா? அவளை நான் அடக்கிவைத்தேன். என்றாலும் அடங்காமல் திரிகிறாள்.
கண்டனெம் அல்லமோ மகிழ்நநின் பெண்டே பலராடு பெருந்துரை மலரொடு வந்த தண்புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. | 69 |
மகிழ்ந! பலரும் நீராடும் துறைக்கு நீ என்னைக் கூட்டிச் சென்றாய். அது கண்டு அவள் கண் சிவந்து அழுதுகொண்டு நின்றாள். அதனை நானே பார்த்தேன் அல்லவா? அவளை இல்லை என்கிறாயே. மலரோடு வண்டல் மண்ணையும் ஆற்றுப்புனல் அடித்துக்கொண்டு வருகிறது என்கிறாளே. இது சரியா?
பழனப் பன்மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மாநீர்ப் பொய்கை யாணர் ஊர தூயர் நறியர்நின் பெண்டிர் பேஎய் அனையம்யாம் சேய்பயந் தனமே. | 70 |
வயலில் மேயும் மீன்களை அருந்துவதற்காக நாரை வயலோரம் உள்ள மருதமர உச்சியில் அமர்ந்திருக்கும். அப்படிப்பட்ட வயலும், அதற்கு நீர் தரும் பொய்கையும் கொண்ட ஊரை உடையவன் நீ. நீ வைத்திருக்கும் பெண்கள் தூய்மையானவர்கள். அத்துடன் நல்லவர்களும்-கூட [நறியர் = நல்லவர்]. நான் பேய். உன் மகனைப் பெற்றிருக்கும் பேய். – இப்படிச் சொல்லி மனைவி ஊடுகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 5 | 6 | 7 | 8 | 9 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - ஆம்பல், பெண்டே, பலரே, மகிழ்நநின், நல்லோர், அன்ன