ஐங்குறுநூறு - 1. வேட்கைப் பத்து

இதில் உள்ள 10 பாடல்களும் தாயும் மகளும் அவரவர் வேறுபட்ட விருப்பத்தைத் தெரிவிக்கும் பொருள் மேல் அடுக்கி வந்துள்ளன. எல்லாப் பாடல்களும் அரசன் ஆதன் என்பவனையும், இளவரசன் அவினி என்பவனையும் வாழ்த்தித் தொடங்குகின்றன.
| வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோளே யாயே யாமே நனைய காஞ்சிச் சினைய சிறுமீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க எனவேட் டேமே. | 1 |
தாய் நெல்லின் விளைச்சல் பெருகி பொன்வளம் சிறக்கவேண்டும் வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் கணவனும் அவனைப் பாதுகாக்கும் பாணனும் நலமுடன் வாழவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறாள்.
|
வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வருக இரவலர் எனவேட் டோளே யாயே யாமே பல்லிதல் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண்துறை யூரன் கேண்மை வழிவ்ழிச் சிறக்க எனவேட் டேமே. | 2 |
விளைச்சல் பெருகவேண்டும், நான் வழங்க இரவலர் மிகுதியாக வரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, கணவனுக்கும் எனக்கும் உள்ள நட்புறவு வழிவழியாகத் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
|
வாழி ஆதன் வாழி அவினி பால்பல ஊறுக பகடுபல சிறக்க எனவேட் டோளே யாயே யாமே வித்திய உழவர் நெல்லோடு பெயரும் பூக்கஞு லூரன் தன்மனை வாழ்க்கை பொலிக என்வேட் டேமே. | 3 |
தாய் பசு பால் ஊறவேண்டும், உழும் எருதுகள் பெருகவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, கணவன் வாழ்க்கை பொலிவுற வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
|
வாழி ஆதன் வாழி அவினி பகைவர்புல் ஆர்க பார்ப்பார் ஓதுக எனவேட் டோளே யாயே யாமே பூத்த கரும்பிற்காய்த்த நெல்லிற் கழனி யூரன் மார்பு பழன் மாகற்க எனவேட் டேமே. | 4 |
தாய் பகைவர் இறந்து பார்ப்பார் ஓதித் தரும் புல்லுணவை உண்ண வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் கணவன் மார்பு தனக்குப் பழயதாக மாறக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள்.
|
வாழி ஆதன் வாழி அவினி பசியில் ஆகுக பிணீகேன் நீங்குக எனவேட் டோளே யாயே யாமே முதலை போத்து முழுமீன் ஆரும் தண்துறை யூரன் தேரேம் முன்கடை நிற்க எனவேட் டேமே. | 5 |
தாய் உலகில் எல்லாரும் பசி, பிணி இல்லாமல் இருக்கோண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரனின் தேர் ஊர்தி எப்போதும் தன் இல்லத்தின் முன்னர் நிற்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
| வாழி ஆதன் வாழி அவினி வேந்துபகை தணிக யாண்டுபல நந்துக எனவேட் டோளே யாயே யாமே மல்ர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண்துறை யூரண் வரைக எந்தையும் கொடுக்க எனவேட் டேமே. | 6 |
வேந்தன் பகைமை உள்ளம் தணிந்து நெடிது வாழவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். தன் தந்தையும் தன்னைத் தன் ஊரனுக்குத் தரவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
| வாழி ஆதன் வாழி அவினி அறநனி சிறக்க அல்லது கெடுக என வேட்டோளே யாயே யாமே உளை மருதத்துக்கி கிளைக்குரு தண்துறை யூரன் தன்னூர்க் கொண்டனன் செல்க எனவேட் டேமே. | 7 |
தாய், ஊரில் அறம் சிறக்க வேண்டும், அறமல்லாத மறம் இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் அவன் ஊருக்குத் தன்னைக் கொண்டுசெல்ல வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
| வாழி ஆதன் வாழி அவினி அரசுமுறை செய்க களவில் லாகுக எனவேட் டோளே யாயே யாமே அலங்குசினை மாஅத்து அணிமயில் இருக்கும் புக்கஞல் ஊரன் சுளீவண் வாய்ப்ப தாக எனவேட்டோமே. | 8 |
தாய், அரசன் நடுவுநிலை தவறாமல் தீர்ப்பு வழங்க வேண்டும், நாட்டில் திருட்டு இருக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, தன் ஊரன் தன்னைப் பிரியமாட்டேன் எனச் சூளுரைத்தானே அது பலிக்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
| வாழி ஆதன்வாழி அவினி நன்றுபெரிது சிறக்க தீதில் ஆகுக என வேட் டோளே யாயே யாமே கயலார் நாரை போர்வின் சேக்கும் தண்துறை யூரன் கேண்மை அம்பல் ஆகற்க எனவேட் டேமே. | 9 |
தாய், நல்லதே நடக்க வேண்டும். தீது நடக்கக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, ஊரனுக்கும் தனக்கும் உள்ள நட்பு ஊருக்குத் தெரியக்கூடாது என வேண்டிக்கொள்கிறாள்.
| வாழி ஆதன் வாழி அவினி மாரி வாய்க்க வளநனி சிறக்க எனவேட் டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன் தண்துறை யூரன் தன்னோடு கொண்டனன் செல்க எனவேட் டேமே. | 10 |
தாய், மழை பொழிந்து வளம் கொழிக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறாள். மகளோ, ஊரன் தன்னோடு தன்னையும் அழைத்துக்கொண்டு செல்லவேண்டும் என வேண்டிக்கொள்கிறாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - எனவேட், வாழி, யாயே, யாமே, அவினி, டேமே, ஆதன், டோளே, தண்துறை, யூரன், சிறக்க, ஆகுக, கொண்டனன், செல்க, ஊரன், பொலிக, சிறுமீன், பூத்த

