முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 37. முன்னிலைப் பத்து
ஐங்குறுநூறு - 37. முன்னிலைப் பத்து
தலைவன், தலைவி, தோழி முதலானோர் மற்றவர்களோடு உரையாடுதல்
உயர்கரைக் கான்யாற்று அவிர்மணல் அகந்துறை வேனிற் பாதிரி விரிமலர் குவைஇத் தொடலை தை இய மடவரல் மகளே கண்ணினும் கதவநின் முலையே முலையினும் கதவநின் தடமென் தோளே. | 361 |
மடமைத் தன்மை கொண்ட மகளே உயர்ந்த கரை கொண்ட காட்டாற்று மணலில் வேனில் காலத்தில் பூத்து உதிர்ந்து கிடக்கும் பாதிரி மலரைக் குவித்து தொடலை மாலை கட்டி விள்ளையாடும் மகளே, உன் கண்ணைக் காட்டடிலும் உன் முலை கதகதப்பாகச் சிவந்திருக்கிறது. உன் முலையைக் காட்டிலும் உன் தோள் கதகதப்பாகச் சிவந்திருக்கிறது.
பதுக்கைத் தாய ஒதுக்கருங் கவலைச் சிறுகண் யானை உறுபகை நினையாது யாக்குவந் தனையோ பூந்தார் மார்ப அருள்புரி நெஞ்சம் உய்த்தர இருள்பொர நின்ற இரவி னானே. | 362 |
ஒதுங்கிப் பதுங்குமிடம் இல்லாத பாதைகள். சிறிய கண்ணை உடைய யானை பகை கொண்டு தாக்க வரும் வழி. இத்தகைய பகையைப் பற்றிக் கவலைப்படாமல் எப்படி வந்தாய்? பூமாலை அணிந்த மார்பனே! இவளுக்கு அருள் புரியவேண்டும் என்ற எண்ணம் உன்னை உந்திக்கொண்டு வந்திருக்கிறது. இருள் நிறைந்த இந்த இரவில் வந்திருக்கிறாய்.-- தோழி தலைவனிடம் சொல்கிறாள்..
சிலைவிற் பகழிச் செந்துவ ராடைக் கொலைவல் எயினர் தங்கைநின் முலைய சுணங்கென நினைதி நீயே அணங்கென நினையும்என் அணங்குறு நெஞ்சே. | 363 |
சிவந்த காவி ஆடை உடுத்திக்கொண்டு வளைந்த வில்லுடன் திரிபவர் கொலைத்தொழிலில் வல்ல எயினர். அந்த எயினரின் தங்கை நீ. உன் முலையில் உள்ள அழகைச் சுணங்கு என நீ நினைக்கிறாய். அது சுணங்கு அன்று. என்னைக் கொல்லும் அணங்கு.-- தன்னுடன் வரும் காதலியைக் காதலன் பாராட்டுகிறான்.
முளமா வல்சி எயினர் தங்கை இளமா எயிற்றிக்கும் இந்நிலை அறியச் சொல்லினேன் இரக்கும் அளவை வெள்வேல் விடலை விரையா தீமே. | 364 |
முள்ளம்பன்றியை உணவாக்கிக் கொள்ளும் எயினரின் தங்கை இவள். இளமையும் மாமை நிறமும் கொண்டவள். அவளுக்குத் தெரியும்படி உன்னிடம் ஒன்று சொல்கிறேன். கெஞ்சிக் கேட்டுச் சொல்கிறேன். வெற்றி வேலைக் கையில் கொண்டுள்ள காளையே! விரைந்து நடந்து செல்லாதே. மெதுவாக அழைத்துச் செல்.-- உடன்போக்கின்போது தோழி தலைவனுக்குச் சொல்கிறாள்.
கணமா தொலைச்சித் தன்னையர் தந்த நிணவூன் வல்சிப் படுபுள் ஒப்பும் நலமாண் எயிற்றி போலப் பலமிகு நல்நலம் நயவர உடையை என்நோற் றனையோ மாஇன் தளிரே. | 365 |
மான் கூட்டத்தைக் கொன்று தன் ஐயன்மார் கொண்டுவந்து தந்த இறைச்சியைக் காயவைத்துக்கொண்டு அதனைக் கவர வரும் பறவைகளை ஓட்டிகுகொண்டிருக்கும் எயிற்றி என் காதலி. மாந்தளிரே! நீ அவளைப் போல நிறம் கொண்டிருக்கிறாய். இதற்கு நீ எத்தனைத் தவம் செய்தாய்?-- பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் வழியில் உள்ள மாந்தளிரைப் பார்த்துச் சொல்கிறான்.
அன்னாய் வாழிவேண் டன்னை தோழி பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி யாயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறியிணர்க் கோங்கM பயந்த மாறே. | 366 |
அன்னையே கேள், உன்னை வேண்டிக்கொள்கொள்கிறேன். என் தோழி ஏன்ஃ பசப்புற்றாள் என்று வீணாக வினவுகிறாய்.யாருக்குத் தெரியும்? கோங்கம் பூவுடன் இருக்கும் இலை ஏன் பச்சையாய் இருக்கிறது என்றால் எனக்கு எப்படித் தெரியும்?-- தோழி செவிலிக்குச் சொல்கிறாள்.
பொரியரைக் கோங்கின் பொன்மருள் பசுவீ விரியிணர் வேங்கையொடு வேறுபட மிலைச்சி விரிவுமலர் அணிந்த வேனில் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னைஇவள் உயிரே. | 367 |
பொரிந்த அடிமரம் கொண்டது கோங்க மரம். அதன் பூவையும், பொன்னிறம் கொண்ட வேங்கைப் பூவையும் தனித்தனியே தெரியுமாறு சூடிக்கொண்டு ஒருவன் வந்தான். வேனில் காலத்தில் காட்டாற்றுப் பக்கம் வந்தான். தேரில் வந்தான். இவள், உன் மகள், அவன் பெயரைச் சொல்லிக்கொண்டு உயிர் வாழ்கிறாள்.-- தோழி செவிலியிடம் கூறுகிறாள்.
எரிப்பூ இலவத்து ஊழ்கழி பன்பலர் பொரிப்பூம் புன்கின் புகர்நிழல் வரிக்கும் தண்பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெருமநின் எம்மெல் ஓதி அழிவிலள் எனினே. | 368 |
நீ பிரிந்து சென்றால் இவள் இறந்துவிடுவாள். நீ பிரிந்து சென்று திரும்பி வந்தால், பெருமானே தீ பற்றி எரிவது போல் தோன்றும் இலவம் பூக்கள் புன்கம் மர நிழலில் கொட்டிக் கிடக்கும். அந்த நிழலில் உன் இன்ப நுகர்ச்சி என்னோடுதான் நிகழவேண்டியிருக்கும்.
வளமலர் ததிந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை என்ப அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயில் கௌவையில் பெரிதே. | 369 |
வளம் மிக்க மலர்கள் பூத்து வண்டுகள் மொய்க்கும் பூங்காவில் காதல் விளையாட்டு நடத்த நீ ஒருத்திக்குக் குறி காட்டினாய். அவளும் புன்னகை பூத்துச் சென்றாள், என்கின்றனர். இந்தச் செய்தி ஊர் முழுவதும் அலராகத் தூற்றப்படுகிறது. குரவ மரக் கிளையில் இருந்துண்டு கருங்குயில் கூவுவதைக் காட்டிலும் பெரிதாக அலர் தூற்றப்படுகிறது.-- தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
வண்சினைக் கோங்கின் தண்கமழ் படலை இருஞ்சிறை வண்டின் பெருங்கிளை மொய்ப்ப நீநயந்து உறையப் பட்டோள் யாவ ளோஎம் மறையா தீமே. | 370 |
வளமான கிளையில் பூத்திருக்கும் கோங்கம்பூ மாலை மணக்கும்படி அணிந்துகொண்டு வண்டுக் கூட்டம் அந்த மாலையை மொய்க்க நீ ஆசையுடன் சென்று ஒருத்தியுடன் வாழ்ந்தாயே அவள் யார்? மறைக்காமல் என்னிடம் சொல்.-- மனைவி கணவனை வினவுகிறாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 35 | 36 | 37 | 38 | 39 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வேனில், கோங்கின், தீமே, எயினர், கதவநின்