முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 36. வரவுரைத்த பத்து
ஐங்குறுநூறு - 36. வரவுரைத்த பத்து
பொருளீட்டச் சென்ற தலைவன் மீண்டான். தலைவி மகிழ்கிறாள். தோழி சொல்கிறாள். தலைவன் சொல்கிறான்.
அத்த பலவின் வெயில்தின் சிறுகாய் அருஞ்சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடுபின் ஒழிய வந்தனர் தீர்கினிப் பல்லிதல் உண்கண் மடந்தைநின் நல்லெழில் அல்குல் வாடிய நிலையே. | 351 |
வழியில் பலாப்பழம் வெயிலில் வெம்பியிருக்கும். அந்த வழியாகச் செல்வோர் அதனைத் தின்றுகொண்டு செல்வர். அப்படிச் சென்றவர் காடுகளைக் கடந்து வந்துவிட்டார். மலரிதழ் போன்ற கண்ணை உடையவளே உன் அல்குல் வாட்டம் தீரும்.
விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோர் எழுத்துடை நடுகிஅல் அன்ன விழுப்பிணர்ப் பெருங்கை யானை இருஞ்சினம் உறைக்கும் வெஞ்சுரம் அரிய என்னார் வந்தனர் தோழிநம் காத லோரே. | 352 |
தோழி, வில்லாற்றல் மிக்க மறவர் வில்லில் அம்பு விடத் தொலைந்தவருக்கு பெயர் எழுதி நடப்பட்ட நடுகல் போலச் சுற்றிக்கொண்டிருக்கும் குடிகளை அறுக்கும் யானை தோற்றமளிக்கும் காட்டு வழியில் சென்ற காதலர் வந்துள்ளார்.
எரிக்கொடி கலை இய செவ்வரை போலச் சுடர்ப்பூண் விளங்கும் எந்தெழில் அகலம் நீ இனிது முயங்க வந்தனர் மாயிருஞ் சோலை மலையிறந் தோரே. | 353 |
எரி என்பது செந்நிறம் கொண்ட ஒருவகைக் கொடி. அது மண்டிச் சிவப்பு நிறத்தில் தோன்றும் மலை போல மார்பு கொண்ட உன் காதலர் – இருண்ட சோலையை உடைய மலையைக் கடந்து சென்றவ்வர் – நீ தழுவுமாறு வந்துள்ளார்.
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றாஇ மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன்வந் தனரே தெரியிழை அரிவைநின் பண்புதர விரைந்தே. | 354 |
குட்டிகளை உடைய பெண் செந்நாயைப் புணர்ந்த ஆண் செந்நாய் குட்டியை உடைய மானைப் பிடிக்காமல் செல்லும் காடு அது. அந்தக் காட்டு வழியாகச் சென்றவர் வந்துள்ளளார். அந்தப் பண்பைப் பின்பற்றுவார்.
திருந்திழை அரிவை நின்னலம் உள்ளி அருஞ்செயல் பொருட்பிணி பெருந்திரு உறுகெனச் சொல்லாது பெயர்தந் தேனே பல்பொறிச் சிறுகண் யானை திரிதரும் நெறிவிலங்கு அதர கானத் தானே. | 355 |
திருந்திய இழையணி கொண்டவளே... பெருஞ்செல்வத்தை நீ அடையவேண்டும் என்று உன் நலத்துக்காகப் பொருள் ஈட்டிக்கொண்டு வர, உன்னிடம் சொல்லாமல் சென்றவர், பல புள்ளிகள் கொண்ட முகமும், சிறிய கண்ணும் கொண்ட யானை திரிந்துகொண்டிருக்கும் சென்று பெரும்பொருளுடன் வந்துள்ளார்.
உள்ளுதற்கு இனிய மன்ற செல்வர் யானை பிணித்த பொன்புனை கயிற்றின் ஒள்ளெரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்தநின் குணனே. | 356 |
நினைப்பதற்கு இன்பமாக உள்ளது. யானை கட்டி வைத்திருக்கும் இரும்புச் சங்கிலி போலத் தீ பற்றி எரிந்ததால் தோற்றமளிக்கும் காட்டு வழியில் சென்றவர் உன்னை நினைத்துக்கொண்டு கிட்டிய பொருளுடன் மீண்டுள்ளார்.
குரவம் மலர மரவம் பூப்பச் சுரன்அணி கொண்ட கானம் காணூஉ அழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின் அம்கலிழ் மாமை கவின வந்தனர் தோழிநம் காத லோரே. | 357 |
குரவம் பூ மலர்ந்து, மரவம் பூ பூத்து, காடே அழகுடன் திவழ்வதைப் பார்த்து, வாக்களித்த வேனில் பருவம் வந்துவிட்டது என்று எண்ணி, பொருள் தேட மேலும் செல்லலாமல், உன் மேனியின் மாமை நிறம் மேலும் பொலிவு பெற அவர் வந்துள்ளார்.
கோடுயர் பன்மலை இறந்தனர் ஆயினும் நீடவிடுமோ மற்றே நீடுநினைந்து துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி உடிஅத்தெழு வெள்ள மாகிய கண்ணே. | 358 |
முகடுகள் உயர்ந்துள்ள பல மலைகளைத் தாண்டி அவர் சென்றாலும், துடைக்கத் துடைக்கக் கொட்டும் உன் கண்ணீர் வெள்ளம் அவர் நினைவுக்கு வராதா? மேலும் செல்ல விடுமா? திரும்பிவிட்டார்,
அரும்பொருள் வேட்கைய மாகிநின் துறந்து பெருங்கல் அதரிடைப் பிரிந்த காலைத் தவநனி நெடிய வாயின இனியே அணியிழை உள்ளியாம் வருதலின் அணிய வாயின சுரத்தைடை யாறே. | 359 |
அரிய பொருளைத் தேடவேண்டும் என்பது என் பேராவல். அதற்காக உன்னை விட்டுவிட்டு மலைப்பாதை வழியில் சென்றேன். பொருளை ஈட்டினேன். திரும்பி வருவது நீண்ட வழிதான். என்றாலும் உன்னை நினைத்தேன். தொலைவு சிறிதாகிவிட்டது.-- தலைவன் சொல்கிறான்.
எரிகவர்ந் துண்ட என்றூழ் நீளிடை அரிய வாயினும் எளிய அன்றே அவவூறு நெஞ்சம் கலவுநனி விரும்பிக் கடுமான் திண்தேர் கடைஇ நெடுமான் நோக்கிநின் உள்ளி வரவே. | 360 |
தீ பற்றி எரிந்த காட்டடு வழி. கோடைக் காலம். கடத்தற்கு அரியதுதான். என்றாலும் அது எளிமை ஆயிற்று. எதனால்? நெஞ்சில் ஆசை உன்னைக் கட்டி அணைக்கவேண்டும்ஃ என்னும் விருப்பம். என் தேரிலே குதிரைகளைப் பூட்டி விரைந்து வந்துவிட்டேன். மானைப் போல் நெடிது நோக்கும் உன் கண்கள் என் நினைவில் நிற்கின்றன.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 34 | 35 | 36 | 37 | 38 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - வந்தனர், அரிய, யானை, துடைத்தொறும், வாயின, உள்ளி, தோழிநம், கழியும், லோரே