முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » எட்டுத்தொகை » ஐங்குறுநூறு » 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.
ஐங்குறுநூறு - 39. உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து.
காதலி காதலனுடன் செல்கிறாள். வழியில் அவளைக் கண்டவர்கள் சொல்கின்றனர்.
பைங்காய் நெல்லி பலவுடன் மிசைந்து செங்கால் மராஅத்த வரிநிழல் இருந்தோர் யார்கொல் அளியர் தாமே வார்சிறைக் குறுங்கால் மகன்றில் அன்ன உடன்புணர் கொள்கைக் காத லோரே. | 381 |
பச்சை நெல்லிக்காய் பலவற்றைத் தின்றுகொண்டு சிவந்த கிளைகளை உடைய மரா மரத்து அரு நிழலில் அமர்ந்திருப்பவர்களே! நீங்கள் யார்? இரக்கம் கொள்ளத் தக்கவராகக் காணப்படுகின்றீர். நீண்ட சிறகுகளையும் குறுகிய கால்களையும் உடைய இணை பிரியாத மகன்றில் பறவைகள் போலக் காணப்படுகிறீர்கள். உடன் போக்கில் இணைந்து வந்த காதலர்கள் போல் காணப்படுகிறீர்கள்.
புன்னொலிக்கு அமர்த்த கண்ணன் வெள்வேல் திருந்துகழ் காளையொடு அருஞ்சுரம் கழிவோள் எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் புனையிழை மகளிர்ப் பயந்த மனைகெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே. | 382 |
பறவைகளின் ஒலியை விரும்பித் தேடிப் பார்க்கும் கண்ணை உடையவளாகக் காணப்படுகிறாள். வீரக் கழல் அணிந்த காளையுடன் காட்டு வழியில் செல்கிறாள். இந்தச் சிற்றூரில் இரவு வேளையில் தங்கியிருக்கிறாள். இவளைப் பெற்ற தாய்க்கு – மனை வாழ் மகளுக்கு – துன்பம் தருவதாக அல்லவா உள்ளது.
கோள்சுரும்பு அரற்றும் நாள்சுரத்து அமன்ற நெடுங்காண் மராஅத்துக் குறுஞ்சினை பற்றி வல்ஞ்சுரி வாலிணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ள மகிழ்கூர்ந்துஅன்றே பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம்சாய் கூந்தல் ஆய்வது கண்டே. | 383 |
தேன் உண்ணும் வண்டுகள் பாடுகின்றன. நீண்ட மரத்துக் குறுகிஇய கிளைகளில் மராம் பூ பூத்துக் கிடக்கிறது. அதன் கிளைகளை இந்த மள்ளன் வளைத்துப் பிடிக்கிறான். இவள் அதன் வெள்ளளைப் பூக்களைக் கொய்கிறாள். அதனைப் பார்த்து அவன் மகிழ்கிறான். அவள் தனக்கும், கோரைப் புல்லில் செய்த தன் பொம்மைக்கும் பூ தொடுக்கிறாள். அதனைக் கண்டு அவன் மகிழ்கிறான்.
சேண்புலம் முன்னிய அசைநடை அந்தணிர் நும்மொன்று இரந்தனென் மொழிவல் எம்மூர் ஆய்நயந்து எடுத்த ஆய்நலம் கலின ஆரிடை இறந்தனள் என்மின் நேர் இறை முன்கைஎன் ஆயத் தோர்க்கே. | 384 |
அசைந்து அசந்து நடக்கும் அந்தணரே வெளியூருக்ககுச் செல்லும் அந்தணரே உங்களை ஒன்று வேண்டுகிறேன் “தாய் பாதுகாத்து வளர்த்த உடல் நலம் மேலும் அழகுற உன் மகள் வழியில் சென்றுகொண்டிருக்ககிறாள்” என்று என் உற்றார் உறவினர்களுக்குச் சொல்லுங்கள்.-- காதலனுடன் செல்லும் காதலி சொல்கிறாள்.
கடுங்கண் காளையொட்ய் நெடுந்தேர் ஏறிக் கோள்வல் வேங்கை மலையிறக்கொழிய வேறுபல் அருஞ்சுரம் இறந்தனள் அவளெனக் கூறுமின் வாழியோ ஆறுசெல் மாக்கள் நல்தோள் நயந்துபா ராட்டி என்கெடுத்து இருந்த அறனில் யாய்க்கே. | 385 |
“வீரம் மிக்க காளை ஒருவனோடு தேரில் ஏறிக்கொண்டு வேங்கைப்புலிகள் நடமாடும் காட்டு வழியைக் கடந்து வேறு பல நிலங்களையும் கடந்து சென்றுகொண்டிருக்கிறாள்” என்று வழியில் என்னைக் காணும் மக்களே என் தாய்க்ககுச் சொல்லுங்கள். என் தோள் நலத்தைப் பேணிப் பாதுகாத்து, என் உள்ளத்தைப் பொருட்படுத்தாத அறன் இல்லாத என் தாய்க்குச் சொல்லுங்கள்.-- காதலனுடன் செல்லும் காதலி சொல்கிறாள்.
புன்கண் யானையொடு புலிவழங்கு அத்தம் நய்ந்த காதலற் புணர்ந்துசென் றனளே நெடுஞ்சுவர் நல்லில் மருண்ட இடும்பை உறவிநின் கடுஞ்சூல் மகளே. | 386 |
சிறிய கண்ணை உடைய யானையும் புலியும் வாழும் காட்டு வழியில் தன்னை விரும்பும் காதலனுடன் கூடித் திளைத்துக்கொண்டு நீ கருவிருந்து பெற்ற உன் மகள் சென்றுகொண்டிருக்கிறாள். சுவரில் சாய்ந்துகொண்டு துன்புறும் தாயே! கவலைப்படாதே.-- வழியில் கண்டவர்கள் தாய்க்குச் சொல்கின்றனர்.
அறம்புரி அருமறை நவின்ற நாவில் திறம்புரி கொள்கை அந்தணீர் தொழுவலென்று ஒள்தொடி வினவும் பேதையம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இந்துணை இனிதுபா ராட்டக் குன்றுயர் பிறங்கல் மலையிறந்த் தோளே. | 387 |
“அறம் புரியும்படிச் சொல்லும் அரிய வேதத்தை எடுத்துச் சொல்லி, நல்ல செயல்களைச் செய்யும் அந்தணரே, உன்னைத் தொழுகிறேன்” என்று தொழும் தாயே உன் மகளை வழியில் கண்டேன். இனிய துணைவன் பாராட்ட குன்று மலைகளைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறாள்.-- அந்தணர் தாய்க்குச் சொல்கிறார்.
நெரும்பவிர் கனலி உர்ப்புசினந் தணியக் கருங்கால் யாத்து வரிநிழல் இரீஇச் சிறுவரை இறப்பின் காண்குவை செறிதொடிப் பொன்னேர் மேணி மடந்தையொடு வென்வேல் விடலை முன்னிய சுரனே. | 388 |
நெருப்புப் போன்ற வெயில் தணியும் வேளையில் கருமையான அடிமரம் கொண்ட யா மர நிழலில் இளைப்பாறிவிட்டு இந்தச் சிறுமலையைத் தாண்டிச் சென்றால் பொன் போன்று அழகிய மேனி கொண்ட மடந்தையும் வெற்றி வேலைக் கையில் ஏந்திய காளையும் செல்வதைக் காணலாம்.-- தேடிச் சென்ற செவிலிக்கு இடைச் சுரத்துக் கண்டார் அவளைக் கண்ட திறம் கூறியது.
செய்வினை பொலிந்த செறிகழல் நோந்தாள் மையணல் காளையொடு பைய இயலிப் பாவை யன்னஎன் ஆய்தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றின வோஅவள் அம்சிலம் படியே. | 389 |
அவன் வேலைப்பாடு அமைந்த வீரக் கழலைக் காலில் அணிந்தவன். இளந்தாடியும் மீசையும் கொண்டவன் அவனுடன் எழுதிய ஓவியம் போன்ற என் மகள் செல்கிறாள் – என்கிறீர்கள். ஐய அவள் காலில் சிலம்பு அணிந்திருந்தாளா?-- சொவிலி அடையாளம் சொல்லிக் கேட்கிறாள்.
நல்லோர் ஆங்கண் பர்ந்துகை தொழுது பல்லூழ் மறுகி வனவு வோயே திண்தோள் வல்வில் காளையொடு கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே. | 390 |
நல்லவர்களை எல்லாம் கைதொழுது வணங்கித் திரும்பத் திரும்பக் கேட்கும் தாயே வலிமை மிக்க தோளினையும், வலிமையான வில்லினையும் கொண்டுள்ள காளையோடு உன் மகளைக் கண்டோம்.-- பலரும் செவிலிக்குக் கூறல்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 37 | 38 | 39 | 40 | 41 | ... | 49 | 50 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு, Ainkurunooru, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - காளையொடு, கண்டனெம், சுரத்திடை, இறந்தனள், முன்னிய, அருஞ்சுரம், வரிநிழல்