ஞானக்குறள் - 8. அர்ச்சனை
மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி அண்டரனை யர்ச்சிக்கு மாறு. |
71 |
காலை, மதியம், மாலை என்னும் மூன்று மண்டல காலங்களிலும் அரனை அரவணைத்து உடன் வைத்துக்கொள்ளுதல் என்பது சிவனுக்கு அருச்சனைப் பூசை செய்யும் முறையாகும்.
ஆசனத்தைக் கட்டியரன் றன்னை யர்ச்சித்து பூசனைசெய் துள்ளே புணர். |
72 |
இருக்கையில் அமர்ந்துகொண்டு சிவனை அருச்சனை செய்து, சிவனுக்குப் பூ போட்டுப் பூசை செய்து அவனைப் புணரவேண்டும்.
உள்ளமே பீடமுணர்வே சிவலிங்கத் தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு. |
73 |
உள்ளம் இருக்கையா, உணர்வு சிவலிங்கமா இருத்திக்கொண்டு அருச்சிக்கும் முறைமையைத் தெளிவுடையோர் பின்பற்றுவர்.
ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவைப் பேதமற வர்ச்சிக்கு மாறு. |
74 |
மூலாதாரத்தில் சிவனுருவம் இருப்பினை உணர்ந்து மனம மாறுபாடு இல்லாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும்.
பூரித்திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு. |
75 |
புணர்ச்சியின்போது ஆணுறுப்பு பூரிப்பது போலவும், பெண்ணுறுப்பு பாரித்து விரிவது போலவும் சிவனுரு இலிங்கத்தை அருச்சிக்க வேண்டும்.
விளக்குறு சிந்தையான் மெய்ப்பொருளைக் கண்டு துளக்கற வர்ச்சிக்கு மாறு. |
76 |
விளக்கினைத் தூண்டுவது போல சிந்தையைத் தூண்டிக்கொண்டு பெய்ப்பொருளை மனம் அங்குமிங்கும் ஆடாமல் அருச்சிப்பதே நெறிமுறை ஆகும்.
பிண்டதினுள்ளே பேரா திறைவனைக் கண்டுதா னர்ச்சிக்கு மாறு. |
77 |
தன் உடலாகிய பிண்டத்துக்குள்ளே பெயராமல் இருக்கும் இறைவனைக் கண்டு அருச்சிக்க வேண்டும்.
மந்திரங்களெல்லா மயங்காம லுண்ணினைந்து முந்தரனை யர்ச்சிக்கு மாறு. |
78 |
மந்திரங்கள் எல்லாவற்றையும் மயக்கம் இல்லாமல் உள்ளத்தில் நினைத்துப் பார்த்து தன் அகக் கண் முன்னே நிற்கும் அரன் என்னும் சிவனை அருச்சிப்பதே முறைமை.
பேராக்கருத்தினாற் பிண்டத்தி னுண்ணினைந் தாராதனை செய்யு மாறு. |
79 |
பேராத கருத்தோடு பிண்டத்துக்கொள்ளே இறைவன் இருப்பை நினைத்துக்கொண்டே பூ போடும் ஆராதனை செய்ய வேண்டும்.
உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங் கொண் சுடரை மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. |
80 |
மனத்துக்குள்ளே சுடர் விட்டு எரியும் சிவ-விளக்கை பொருத்திப் பார்த்துக்கொண்டே மென்மையோடு அருச்சிக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
8. அர்ச்சனை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - னர்ச்சிக்கு, வர்ச்சிக்கு, சிவனுருவைப், யர்ச்சிக்கு