ஞானக்குறள் - 7. அமுததாரணை
அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில் விண்ணோர்க்கு வேந்தனு மாம். |
61 |
தூய காற்றானது அண்ணாக்கை அடைந்து வெளிவருமாறு பயிற்சி செய்தால், தேவர்களுக்கே அரசன் ஆகலாம்.
ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில் பூரண மாகும் பொலிந்து. |
62 |
16 கலைகளில் நிறைந்திருக்கும் அமிழ்தக் காற்றை உட்கொண்டால் உடம்பும் உயிரும் நிறைவுற்றதாகப் பொலிவு பெறும்.
ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில் போங்காலமில்லை புரிந்து. |
63 |
“ஓம்” என்னும் ஒலியுடன் அமிழ்தக் காற்றை உண்டால் சாகாமல் வாழலாம்.
ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில் போனகம் வேண்டாமற் போம். |
64 |
துரியம் என்னும் கலசத்தில் நினைவை நிலைநிறுத்தினால் உணவு இல்லாமல் வாழமுடியும்.
ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம். |
65 |
நினைவாக ஊறும் அமிழ்தத்தை உணவாக்கிக்கொண்டு பார்த்தால், பிறவியை அறுக்க முடியும்.
ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில் ஆன சிவ யோகி யாம். |
66 |
ஞானம் என்னும் விளக்கில் ஒளி ஏற்றி அமிழ்தம் உண்டால் “சிவயோகி” ஆகலாம்.
மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில் காலனை வஞ்சிக்க லாம். |
67 |
நாச்சுவையாகிய மேலை அமிழ்தத்தை விளங்காமல் அடக்கி காற்றமிழ்தத்தை உண்டால் எமனை ஏமாற்றலாம்.
காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில் ஞான மதுவா நயந்து. |
68 |
மூச்சுக் காற்று என்னும் அனல்-சூடு கலந்த அமிழ்தத்தை உண்டால் அதுதான் “ஞானம்”.
எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில் தொல்லை முதலொளியே யாம். |
69 |
எல்லை இல்லா இந்த இனிய அமிழ்தை உண்ட நிலையில் இருந்தால் அதுதான் ஆதியில் தோன்றிய முதல் மூச்சொளி ஆகும்.
நிலாமண்டபத்தி னிறைந்த வமிர்துண்ணில் உலாவலா மந்தரத்தின் மேல். |
70 |
பிறை நிலா மண்டபமாகிய ஆக்கினையில் அமிழ்தம் உண்டால் அந்தரத்தில் உலாவலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
7. அமுததாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - துண்ணில், வமிர்துண்ணில்