ஞானக்குறள் - 4. நாடி தாரணை
எழுபத் தீராயிர நாடி யவற்றுள் முழுபத்து நாடி முதல். |
31 |
துடிக்கும் நாடி நரம்புகள் உடலில் 72 ஆயிரம் (72,000) உள்ளன. அவற்றுள் முழுமையான பத்து நாடித்துடிப்புக்கள் முதன்மையானவை.
நரம்பெனு நாடியிவை யினுக்கெல்லா முரம்பெறு நாடியொன் றுண்டு. |
32 |
நரம்பாக இருக்கும் இந்த நாடித் துடிப்புகளுக்கெல்லாம் உரமூட்டும் நாடித்துடிப்பு ஒன்று உண்டு. | மூலாதாரம்.
உந்திமுதலா யுறுமுடிகீழ் மேலாய்ப் பந்தித்து நிற்கும் பரிந்து. |
33 |
உந்து சக்தி இருக்கும் மூலாதாரத்தை மையமாகக் கொண்டு மேலும் கீழும் கட்டுக்கோப்பாக அவை பிரிந்து செல்லும் | உந்தி – மூலாதாரம் – ஆண், பெண் உணர்வுகளை உந்தும் அடிவயிற்று மையம். | பந்தித்தல் – உறவு கொள்ளுதல் | பரிந்து – ஆவலோடு.
காலொடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து. |
34 |
உடலின் கால், கை, நடுப்பகுதிகளில் தாமரைபூவின் தண்டில் நூல் இழைகள் நுழைந்து இருப்பது போல அந்த நாடி-நரம்புகள் உடலில் நுழைந்து ஓடும். | நீரின் உயரத்துக்கு ஏற்பத் தாமரையின் நூலிழை ஈடுகொடுப்பது போல உடல் வளைவுக்கு ஏற்ப அவை வளைந்து கொடுக்கும்.
ஆதித்தன்றன் கதிர்போல வந்நாடிகள் பேதித்துத் தாம்பரந்த வாறு. |
35 |
சூரிய வெளிச்சம் பாய்வது போல உடம்பை மாறுபடுத்திக்கொண்டு நாடித்துடிப்புகள் பரந்து செல்லும்.
மெய்யெல்லாமாகி நரம்போ டெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப் புணர்வு. |
36 |
நாடித் துடிப்பு உடம்பெங்கிலும் எலும்போடு இசைவாக ஒட்டிக்கொண்டிருக்கும் நரம்பில் நிகழும். இது பொய்மை இல்லாத உண்மை.
உந்திமுதலாகி யோங்காரத்துட் பொருளாய் நின்றது நாடி நிலை. |
37 |
உயிரூற்று உந்தும் மூலாதார முதலில் ஓங்காரத்தின் உட்பொருள் சுழல்வது போல் சுழன்று நிற்பது நாடிநிலை ஆகும்.
நாடிகளூடு போய்ப் புக்க நலஞ்சுடர்தான் வீடு தருமாம் விரைந்து. |
38 |
நாடிகளின் ஊடே புகுந்து போகும் நம் உணர்வு-ஒளி நமக்கு விரைவாக வீடு பேற்றினைத் தரும்.
நாடி வழக்கமறிந்து செறிந்தடங்கி நீடொளி காண்ப தறிவு. |
39 |
நாடித் துடிப்பின் வழக்கம் இது என்பதை அறிந்துகொண்டு, அடக்கமாக வளரும் ஒளியைக் காண்பது அறிவுடைமை ஆகும்.
அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம். |
40 |
அறிந்து, அடங்கி நிற்கும் நாடித் துடிப்பு ஒவ்வொன்றிலும் செறிவாக அடக்கமாக நிற்பதுதான் சிவம் | சிவப் பேறு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
4. நாடி தாரணை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - செறிந்தடங்கி