ஞானக்குறள் - 11. அருள் பெறுதல்
அருளினா லன்றி யகத்தறி வில்லை அருளின் மலமறுக்க லாம். |
101 |
இறையருள் இருந்தாலன்றி நெஞ்சில் இறைவனை உணரும் அறிவு கிட்டாது. அந்த அகத்தறிவால் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று மல மாசுகளை அறுக்கலாம்.
இருளைக் கடிந்தின் றிறைவ னருளால் தெருளும் சிவசிந்தை யால். |
102 |
இறைவன் அருளால் மனத்திருள் நீக்கித் தெளிவான சிவசிந்தை கிட்டும்.
வாய்மையாற் பொய்யா மனத்தினால் மாசற்ற தூய்மையா மீச னருள். |
103 |
வாய்மையோடு பொய்யா மனத்தோடு வாழ்ந்தால் ஈசன் அருள் மாசற்ற தாய் உள்ளத்தோடு கிட்டும்.
ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கால் அவ்வகத்து ளானந்த மாம். |
104 |
ஒப்பிய உள்ளத்தோடு நிற்கின்ற சிவன் அருளைப் பெற்றுவிட்டால் அந்த நெஞ்சு ஆனந்த மயமாகும்.
உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னுமருள் பெற்றக் கால். |
105 |
இறையருளே நிலைபெற்ற அருள். அதனைப் பெற்றுவிட்டால் நினைத்ததைப் புகழத்தக்க வகையில் செய்து முடிக்கலாம்.
எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லையருள் பெற்றக் கால். |
106 |
ஈசனின் பழமையான அருளைப் பெற்றுவிட்டால் எல்லாப் பொருளையும் இனிதே நிறைவேற்றலாம்.
சிந்தையு ணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும். |
107 |
சிவனருள் சிந்தையில் நிற்கும். அதனைப் பெற்றுவிட்டால் கட்டுப்பாடுகளும், ஆசையும் அறுந்துவிடும்.
மாசற்ற கொள்கை மதிபோலத்தான் றோன்றும் ஈசனருள் பெற்றக் கால். |
108 |
ஈசன் அருளைப் பெற்றுவிட்டால் மாசற்ற கோட்பாடு வானத்து மதியம் போல குளுமையாக ஒளி வீசும்.
ஆவாவென் றோதியருள் பெற்றார்க் கல்லாது தாவாதோ ஞான ஒளி. |
109 |
ஆ ஆ என்று ஓதி அருனினைப் பெற்றவரிடம் அல்லது ஞான வெளிச்சம் தங்கி நிற்காது.
ஓவாச் சிவனருள் பெற்றா லுரையின்றித் தாவாத வின்பந் தரும். |
110 |
தடையின்றிச் சிவனருள் பெற்றுவிட்டால் பேச்சொன்றும் இல்லாமல் இன்பம் விளையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
11. அருள் பெறுதல் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - பெற்றக், சிவனருள், முடிக்கலா, பெற்றக்கால், மாசற்ற