மகாகவி பாரதியார் நூல்கள் - பக்திப் பாடல்கள்
11. சிவசக்தி
இயற்கை யென்றுரைப்பார் - சிலர் இணங்கும்ஐம் பூதங்கள் என்றிசைப்பார், செயற்கையின் சக்தியென்பார் - உயிர்த் தீயென்பர் அறிவென்பர், ஈசனென்பர், வியப்புறு தாய்நினக்கே - இங்கு  nbsp; வேள்விசெய் திடுமெங்கள் ஓம் என்னும் நயப்படு மதுவுண்டே? - சிவ நாட்டியங் காட்டிநல் லருள் புரிவாய். அன்புறு சோதியென்பார் - சிலர் ஆரிருட் காளியென் றுனைப்புகழ்வார், இன்பமென் றுரைத்திடுவார் - சிலர் எண்ணருந் துன்பமென் றுனைஇசைப்பார், புன்பலி கொண்டுவந்தோம் - அருள் பூண்டெமைத் தேவர்தங் குலத்திடுவாய் மின்படு சிவசக்தி - எங்கள் வீரைநின் திருவடி சரண்புகுந்தோம். உண்மையில் அமுதாவாய் - புண்கள் ஒழித்திடு வாய்களி, உதவிடுவாய், வண்மைகொள் உயிர்ச்சுடராய் - இங்கு வளர்ந்திடு வாய்என்றும் மாய்வதிலாய், ஒண்மையும் ஊக்கமுந்தான் - என்றும் ஊறிடுந் திருவருட் சுனையாவாய் அண்மையில் என்றும் நின்றே - எம்மை ஆதரித் தருள்செய்யும் விரதமுற்றாய். தெளிவுறும் அறிவினை நாம் - கொண்டு சேர்த்தனம், நினக்கது சோமரசம், ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை ஓங்கிடு மதிவலி தனிற்பிழிந்தோம், களியுறக் குடித்திடுவாய் - நின்றன் களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம், குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர் குலத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம். அச்சமும் துயரும் என்றே - இரண்டு அசுரர்வந் தெமையிங்கு சூழ்ந்துநின்றார், துச்சமிங் கிவர்படைகள் - பல தொல்லைகள் கவலைகள் சாவுகளாம், இச்சையுற் றிவரடைந்தார் -எங்கள் இன்னமு தைக்கவர்ந் தேகிடவே, பிச்சையிங் கெமக்களித்தாய் - ஒரு பெருநகர் உடலெனும் பெயரினதாம். கோடிமண் டபந்திகழும் - திறற் கோட்டையிங் கிதையவர் பொழுதனைந்தும் நாடிநின் றிடர்புரிவார் - உயிர் நதியினைத் தடுத்தெமை நலித்திடுவார், சாடுபல் குண்டுகளால் - ஒளி சார்மதிக் கூட்டங்கள் தகர்த்திடுவார் பாடிநின் றுனைப்புகழ்வோம் - எங்கள் பகைவரை அழித்தெமைக் காத்திடுவாய். நின்னருள் வேண்டுகின்றோம் - எங்கள் நீதியுந் தர்மமும் நிலைப்பதற்கே, பொன்னவிர் கோயில்களும் - எங்கள் பொற்புடை மாதரும் மதலையரும், அன்னநல் லணிவயல்கள் - எங்கள் ஆடுகள் மாடுகள் குதிரைகளும், இன்னவை காத்திடவே - அன்னை இணைமலர்த் திருவடி துணைபுகுந்தோம். எம்முயி ராசைகளும் - எங்கள் இசைகளும் செயல்களும் துணிவுகளும் செம்மையுற் றிடஅருள்வாய் - நின்றன் சேவடி அடைக்கலம் புகுந்துவிட்டோம். மும்மையின் உடைமைகளும் - திரு முன்னரிட் டஞ்சலி செய்து நிற்போம், அம்மைநற் சிவசக்தி - எமை அமரர்தம் நிலையினில் ஆக்கிடுவாய். |
12. காணி நிலம் வேண்டும்
காணி நிலம் வேண்டும் - பராசக்தி காணி நிலம் வேண்டும், - அங்கு தூணில் அழகியதாய் - நன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய் - அந்தக் காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை கட்டித் தரவேண்டும் - அங்கு கேணியருகினிலே - தென்னைமரம் கீற்று மிளநீரும். பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம் பக்கத்திலே வேணும் - நல்ல முத்துச் சுடர்போலே - நிலாவொளி முன்பு வரவேணும், அங்கு கத்துங் குயிலோசை - சற்றே வந்து காதிற் படவேணும், - என்றன் சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந் தென்றல் வரவேணும். பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும் - எங்கள் கூட்டுக் களியினிலே - கவிதைகள் கொண்டுதர வேணும் - அந்தக் காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன் காவலுற வேணும், - என்றன் பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப் பாலித்திட வேணும். |
13 நல்லதோர் வீணை
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? சொல்லடி சிவசக்தி - எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ, - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி, சிவசக்தி - நிலச் சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? விசையுறு பந்தினைப்போல் - உள்ளம் வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், நசையறு மனங்கேட்டேன் - நித்தம் நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன், தசையினைத் தீசுடினும் - சிவ சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன், அசைவறு மதிகேட்டேன் - இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ? |
14. மஹாசக்திக்கு விண்ணப்பம்
மோகத்தைக் கொன்றுவிடு - அல்லா லென்றன் மூச்சை நிறுத்திவிடு, தேகத்தைச் சாய்த்துவிடு - அல்லா லதில் சிந்தனை மாய்த்துவிடு, யோகத் திருத்திவிடு - அல்லாலென்றன் ஊனைச் சிதைத்துவிடு, ஏகத் திருந்துலகம் - இங்குள்ள யாவையும் செய்பவளே! பந்தத்தை நீக்கிவிடு - அல்லா லுயிர்ப் பாரத்தைப் போக்கிவிடு, சிந்தை தெளிவாக்கு - அல்லா லிதைச் செத்த உடலாக்கு, இந்தப் பதர்களையே - நெல்லா மென எண்ணி இருப்பேனோ? எந்தப் பொருளிலுமே - உள்ளே நின்று இயங்கி யிருப்பவளே! உள்ளம் குளிராதோ? பொய்யாணவ ஊனம் ஒழியாதோ? கள்ளம் உருகாதோ? - அம்மா! பக்திக் கண்ணீர் பெருகாதோ? வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு வேட்கை தவிராதோ? விள்ளற் கரியவளே - அனைத்திலும் மேவி யிருப்பவளே! |
15. அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும், திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவமெல்லாம் பரிதிமுன் பனியே போலே, நண்ணிய நின்முன் இங்கு நசித்திட வேண்டும் அன்னாய்! |
16. பூலோக குமாரி
பல்லவி
பூலோக குமாரி ஹே அம்ருத நாரி! |
அனுபல்லவி
ஆலோக ஸ்ருங்காரி, அம்ருத கலச குச பாரே கால பய குடாரி காம வாரி, கன லதா ரூப கர்வ திமிராரே. |
சரணம்
பாலே ரஸ ஜாலே, பகவதி ப்ரஸீத காலே, நீல ரத்ன மய நேக்ர விசாலே நித்ய யுவதி பத நீரஜ மாலே லீலா ஜ்வாலா நிர்மிதவாணீ, நிரந்தரே நிகில, லோகேசாநி நிருபம ஸுந்தரி நித்யகல்யாணி, நிஜம் மாம் குருஹே மன்மத ராணி. |
17. மஹா சக்தி வெண்பா
தன்னை மறந்து சகல உலகினையும் மன்ன நிதங்காக்கும் மஹாசக்தி - அன்னை அவளே துணையென்று அனவரதம் நெஞ்சம் துவளா திருத்தல் சுகம். நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி, அஞ்சிஉயிர் வாழ்தல் அறியாமை, - தஞ்சமென்றே வையமெலாங் காக்கும் மஹாசக்தி நல்லருளை ஐயமறப் பற்றல் அறிவு. வையகத்துக் கில்லை! மனமே! நினைக்குநலஞ் செய்யக் கருதியிவை செப்புவேன் - பொய்யில்லை எல்லாம் புரக்கும் இறைநமையுங் காக்குமென்ற சொல்லால் அழியும் துயர். எண்ணிற் கடங்காமல் எங்கும் பரந்தனவாய் விண்ணிற் சுடர்கின்ற மீனையெல்லாம் பண்ணியதோர் சக்தியே நம்மை சமைத்ததுகாண், நூறாண்டு பக்தியுடன் வாழும் படிக்கு. |
18. ஓம் சக்தி
நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் நிறைந்த சுடர்மணிப் பூண். பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் பார்வைக்கு நேர் பெருந்தீ. வஞ்சனை யின்றிப் பகையின்றிச் சூதின்றி வையக மாந்த ரெல்லாம், தஞ்சமென் றேயுரைப்பீர் அவள் பேர், சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். நல்லதுந் தீயதுஞ் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப் பாள், அல்லது நீங்கும் என்றே யுலகேழும் அறைந்திடுவாய் முரசே! சொல்லத் தகுந்த பொருளன்று காண்! இங்கு சொல்லு மவர் தமையே! அல்லல் கெடுத்தம ரர்க்கிணை யாக்கிடும் ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். நம்புவ தேவழி யென்ற மறைதன்னை நாமின்று நம்பி விட்டோம் கும்பிட்டெந் நேரமும் சக்தி யென் றாலுனைக் கும்பிடுவேன் மனமே! அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில் லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். பொன்னைப் பொழிந்திடு மின்னை வளர்த்திடு, போற்றி உனக்கிசைத் தோம், அன்னை பராசக்தி என்றுரைத் தோம், தளை அத்தனையுங் களைந்தோம், சொன்ன படிக்கு நடந்திடு வாய், மன மே தொழில் வேறில்லை, காண், இன்னு மதே யுரைப்போம், சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம். வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடு வாய்! தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு விண்ணப்பஞ் செய்திடுவேன், எள்ளத் தனைபொழுதும் பயனின்றி இரா தென்றன் நாவினிலே வெள்ள மெனப்பொழி வாய்சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்! |
19. பராசக்தி
கதைகள் சொல்லிக் கவிதை எழுதென்பார், காவி யம்பல நீண்டன கட்டென்பார், விதவி தப்படு மக்களின் சித்திரம் மேவி நாடகச் செய்யுளை வேவென்பார், இதயமோ எனிற் காலையும் மாலையும் எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால், எதையும் வேண்டில தன்னை பராசக்தி இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே. நாட்டு மக்கள் பிணியும் வறுமையும் நையப் பாடன் றொரு தெய்வங் கூறுமே, கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டு வையம் முழுதும் பயனுறப் பாட்டிலே யறங் காட்டெனு மோர்தெய்வம், பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே. நாட்டு மக்கள் நலமுற்று வாழவும் நானி லத்தவர் மேனிலை எய்தவும் பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும் பண்ணிலே களி கூட்டவும் வேண்டி, நான்Y முட்டும் அன்புக் கனலொடு வாணியை முன்னு கின்ற பொழிதி லெலாங்குரல் காட்டி அன்னை பராசக்தி ஏழையேன் கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள். மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான் வானி ருண்டு கரும்புயல் கூடியே இழையு மின்னல் சரேலென்று பாயவும் ஈரவாடை இரைந்தொலி செய்யவும் உழைய லாம்இடையின் றிஇவ் வானநீர் ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால் "மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்! வாழ்க தாய்!" என்று பாடுமென் வாணியே. சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள் சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள், அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர் அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார், கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால் கால வெள்ளத் திலேநிலை காணுங்கால், புல்லி னில்வயி ரப்படை காணுங்கால் பூத லத்தில் பராசக்தி தோன்றுமே! |
20. சக்திக் கூத்து
ராகம் - பியாக்
பல்லவி
தகத் தகத் தகத் தகதகவென் றோடோமோ? - சிவ சக்தி சக்தி சக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்) |
சரணங்கள்
அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள் - அவள் அம்மை யம்மை எம்மைநாடு பொய்வென்றாள் தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்) புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம் புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம் குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே - அது குழந்தையதன் தாயடிக்கீழ் சேய்போலே. (தகத்) மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர - உன் வீரம்வந்து சோர்வை வென்று கைதேர சகத்தினிலுள்ளே மனிதரெல்லாம் நன்றுநன்றென -நாம் சதிருடனே தாளம் இசை இரண்டு மொன்றொன (தகத்) 21. சக்தி
துன்ப மங்லாத நிலையே சக்தி, தூக்க மிலாக்கண் விழிப்பே சக்தி, அன்பு கனிந்த கனிவே சக்தி, ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி, இன்ப முதிர்ந்த முதிர்வே சக்தி, எண்ணத் திருக்கும் எரியே சக்தி, முன்புநிற் கின்ற தொழிலே சக்தி, முக்தி நிலையின் முடிவே சக்தி. சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி, சொல்லில் விளங்கும் சுடரே சக்தி, தீம்பழந் தன்னில் சுவையே சக்தி, தெயவத்தை எண்ணும் நினைவே சக்தி, பாம்பை அடிக்கும் படையே சக்தி, பாட்டினில் வந்த களியே சக்தி, சாம்பரைப் பூசி மலைமிசை வாழும் சங்கரன் அன்புத் தழலே சக்தி. வாழ்வு பெருக்கும் மதியே சக்தி, மாநிலங் காக்கும் மதியே சக்தி, தாழ்வு தடுக்குஞ் சதிரே சக்தி, சஞ்சலம் நீக்குந் தவமே சக்தி, வீழ்வு தடுக்கும் விறலே சக்தி, விண்ணை யளக்கும் விரிவே சக்தி, ஊழ்வினை நீக்கும் உயர்வே சக்தி, உள்ளத் தொளிரும் உயர்வே சக்தி. |
22. வையம் முழுதும்
கண்ணிகள்
வையம் முழுதும் படைத்தளிக் கின்ற மஹாசக்தி தன்புகழ் வாழ்த்து கின்றோம், செய்யும் வினைகள் அனைத்திலுமே வெற்றி சேர்ந்திட நல்லருள் செய்க வென்றே. பூதங்கள் ஐந்தில் இருந்தெங்குங் கண்ணிற் புலப்படும் சக்தியைப் போற்று கின்றோம், வேதங்கள் சொன்ன படிக்கு மனிதரை மேன்மையுறச் செய்தல் வேண்டுமென்றே. வேகம் கவர்ச்சி முதலிய பல்வினை மேவிடும் சக்தியை மேவு கின்றோம், ஏக நிலையில் இருக்கும் அமிர்தத்தை யாங்கள் அறிந்திட வேண்டு மென்றே. உயிரெனத் தோன்றி உணவுகொண் டேவளர்ந் தோங்கிடும் சக்தியை ஓது கின்றோம், பயிரினைக் காக்கும் மழையென எங்களைப் பாலித்து நித்தம் வளர்க்க வென்றே. சித்தத்தி லே நின்று சேர்வ துணரும் சிவசக்தி தன்புகழ் செப்பு கின்றோம், இத்தரை மீதினில் இன்பங்கள் யாவும் எமக்குத் தெரிந்திடல் வேண்டு மென்றே. மாறுத லின்றிப் பராசக்தி தன்புகழ் வையமிசை நித்தம் பாடு கின்றோம், நூறு வயது புகழுடன் வாழ்ந்துயர் நோக்கங்கள் பெற்றிட வேண்டு மென்றே. ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி என்றுரை செய்திடு வோம், ஓம்சக்தி என்பவர் உண்மை கண்டார், சுடர் ஒண்மை கொண்டார், உயிர் வண்மை கொண்டார். |
23. சக்தி விளக்கம்
ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் - அதை அன்னை எனப்பணிதல் ஆக்கம், சூதில்லை காணுமிந்த நாட்டீர்! - மற்றத் தொல்லை மதங்கள் செய்யும் தூக்கம். மூலப் பழம்பொருளின் நாட்டம் - இந்த மூன்று புவியுமதன் ஆட்டம்! காலப் பெருங்களத்தின் மீதே - எங்கள் காளி நடமுலகக் கூட்டம். காலை இளவெயிலின் காட்சி - அவள் கண்ணொளி காட்டுகின்ற மாட்சி, நீல விசும்பினிடை இரவில் - சுடர் நேமி யனைத்துமவள் ஆட்சி. நாரண னென்று பழவேதம் - சொல்லும் நாயகன் சக்திதிருப் பாதம், சேரத் தவம் புரிந்து பெறுவார் - இங்கு செல்வம் அறிவு சிவபோதம். ஆதி சிவனுடைய சக்தி - எங்கள் அன்னை யருள் பெறுதல் முக்தி, மீதி உயிரிருக்கும்போதே - அதை வெல்லல் சுகத்தினுக்கு யுக்தி. பண்டை விதியுடைய தேவி - வெள்ளைப் பாரதி யன்னையருள் மேவி கண்ட பொருள் விளக்கும் நூல்கள் - பல கற்றலில் லாதவனோர் பாவி. மூர்த்திகள் மூன்று பொருள் ஒன்று - அந்த மூலப் பொருள் ஒளியின் குன்று நேர்த்தி திகழும் அந்த ஒளியை - எந்த நேரமும் போற்று சக்தி என்று. |
24. சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
ராகம் - பூபாளம்
தாளம் - சதுஸ்ர ஏகம்
கையைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சாதனைகள் யாவினையுங் கூடும் - கையைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுற்றுக் கல்லினையுஞ் சாடும். கண்ணைச், சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சக்தி வழியதனைக் காணும் - கண்ணைச் சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சத்தியமும் நல்லருளும் பூணும். செவி, சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி சொலும் மொழியது கேட்கும் - செவி சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்திதிருப் பாடலினை வேட்கும். வாய், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி புகழினையது முழங்கும் - வாய் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி நெறி யாவினையும் வழங்கும். சிவ, சக்திதனை நாசி நித்தம் முகரும் - அதச் சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி தங்ருச் சுவையினை நுகரும் - சிவ சக்தி தாக்கே எமது நாக்கு. மெய்யைச், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி தருந் திறனதி லேரும் - மெய்யைச் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சாதலற்ற வழியினை தேறும். கண்டம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சந்ததமும் நல்லமுதைப் பாடும் - கண்டம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுடன் என்றும் உறவாடும். தோள், சக்தி தனக்கே கருவியாக்கு - அது தாரணியும் மேலுலகுந் தாங்கும் - தோள் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி பெற்று மேருவென ஓங்கும். நெஞ்சம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியுற நித்தம் விரிவாகும் - நெஞ்சம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதைத் தாக்க வரும் வாளொதுங்கிப் போகும். சிவ, சக்தி தனக்கே எமது வயிறு - அது சாம்பரையும் நல்லவுண வாகும் - சிவ சக்தி தனக்கே எமது வயிறு - அது சக்தி பெற உடலினைக் காக்கும். இடை, சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் - இடை சக்தி தனக்கே கருவியாக்கு - நின்றன் சாதிமுற்றும் நல்லறத்தில் ஊன்றும். கால், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சாடியெழு கடலையுந் தாவும் - கால் சக்தி தனக்கே கருவி யாக்கு - அது சஞ்சலமில் லாமலெங்கும் மேவும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் - மனம் சக்தி தனக்கே கருவி யாக்கு - அதில் சாத்துவீகத் தன்மையங்னைச் சூடும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தங்யற்ற சங்ந்தனைகள் தீரும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல் சாரும் நல்ல உறுதங்யும் சீரும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி சக்தி சக்தியென்று பேசும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதங்ல் சார்ந்தங்ருக்கும் நல்லுறவும் தேசும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி நுட்பம் யாவினையும் நாடும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தி சக்தி யென்று குதித் தாடும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சக்தியினை எத்திசையும் சேர்க்கும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அது தான் விரும்பில் மாமலையைப் பேர்க்கும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - அது சந்தமும் சக்திதனைச் சூழும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - அதில் சாவுபெறும் தீவினையும் ஊழும். மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - எதைத் தான் விரும்பி னாலும்வந்து சாரும் - மனம் சக்தி தனக்கே உரிமையாக்கு - உடல் தன்னிலுயர் சக்திவந்து சேரும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - இந்தத் தாரணியில் நூறுவய தாகும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - உன்னைச் சாரவந்த நோயழிந்து போகும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - தோள் சக்தி பெற்றுநல்ல தொழில்செய்யும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - எங்கும் சக்தியருள் மாரிவந்து பெய்யும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - சிவ சக்தி நடையாவும் நன்கு பழகும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - முகம் சார்ந்திருக்கும் நல்லருளும் அழகும். மனம், சக்தி தனக்கே கருவியாக்கு - உயர் சாத்திரங்கள் யாவும் நன்குதெரியும் - மனம் சக்தி தனக்கே கருவியாக்கு - நல்ல சத்திய விளக்கு நித்தம் எரியும். சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - நல்ல தாளவகை சந்தவகை காட்டும் - சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில் சாரும் நல்ல வார்த்தைகளும் பாட்டும். சித்தம், சக்தி தனக்கே உரிமை யாக்கு - அறு சக்தியை யெல்லோர்க்கு முணர் வுறுத்தும் - சித்தம் சக்தி தனக்கே உரிமை யாக்கு சக்திபுகழ் திக்கனைக்கும் நிறுத்தும். மனம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்தி சக்தி என்று குழலூதும் - சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு - அதில் சார்வதில்லை அச்சமுடன் சூதும். சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்தி யென்று வீணைதனில் பேசும் - சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்திபரி மளமிங்கு வீசும். சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்தி யென்று தாளமிட்டு முழக்கும் - சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சஞ்சலங்கள் யாவினையும் அழிக்கும். சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்திவந்து கோட்டை கட்டி வாழும் - சித்தம் சக்தி தனக்கே உரிமையாக்கு - அது சக்தியருட் சித்திரத்தில் ஆழும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சங்கடங்கள் யாவினையும் உடைக்கும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அங்கு சத்தியமும் நல்லறமும் கிடைக்கும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சாரவருந் தீமைகளை விலக்கும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சக்தி செய்யும் விந்தைகளைத் தேடும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சக்தியுறை விடங்களை நாடும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீக்கும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் தள்ளிவிடும் பொய்ந்நெறியும் தீங்கும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் சக்தியொளி நித்தமுநின் றிலகும். மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் சார்வதில்லை ஐயமெனும் பாம்பு - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் தான் முளைக்கும் முக்திவிதைக் காம்பு. மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தாரணியில் அன்புநிலை நாட்டும் - மதி சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சர்வசிவ சக்தியினைக் காட்டும். மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது சக்திதிரு வருளினைச் சேர்க்கும் - மதி சக்தி தனக்கே அடிமையாக்கு - அது தாமதப் பொய்த் தீமைகளைப் போக்கும். மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் - மதி சக்தி தனக்கே அடிமையாக்கு - அது தாக்கவரும் பொய்ப்புலியை ஓட்டும். மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது சத்தியநல் லிரவியைக் காட்டும் - மதி சக்தி தனக்கே அடிமையாக்கு - அதில் சாரவரும் புயல்களை வாட்டும். மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - அது சக்திவிர தத்தை யென்றும் பூணும் - மதி சக்தி விரதத்தை யென்றுங் காத்தால் - சிவ சக்திதரும் இன்பமும்நல் லூணும். மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு - தெளி தந்தமுதம் பொய்கையென ஒளிரும் - மதி சக்தி தனக்கே அடிமையாக்கு - அது சந்ததமும் இன்பமுற மிளிரும். அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தன்னையொரு சக்தியென்று தேரும் - அகம் சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தாமதமும் ஆணவமும் தீரும். அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தன்னையவள் கோயிலென்று காணும் - அகம் சக்தி தனக்கே உடைமையாக்கு - அது தன்னை யெண்ணித் துன்பமுற நாணும். அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சக்தியெனும் கடலிலோர் திவலை - அகம் சக்தி தனக்கே உடைமையாக்கு - சிவ சக்தி யுண்டு நமக்கில்லை கவலை. அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு - அதில் சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் - அகம் சக்தி தனக்கே உடைமையாக்கு - அது சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும். சிவ, சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ சக்திசக்தி யென்று குதித்தாடு - சிவ சக்தி என்றும் வாழி! என்றுபாடு - சிவ சக்திசக்தி என்றுவிளை யாடு. |
25. சக்தி திருப்புகழ்
சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தி சக்தி என்றோது, சக்திசக்தி சக்தீ என்பார் - சாகார் என்றே நின்றோது. சக்திசக்தி என்றே வாழ்தல் - சால்பாம் நம்மைச் சார்ந்தீரே! சக்திசக்தி என்றீ ராகில் - சாகா உண்மை சேர்ந்தீரே! சக்திசக்தி என்றால் சக்தி - தானே சேரும் கண்டீரே! சக்திசக்தி என்றால் வெற்றி - தானே நேரும் கண்டீரே! சக்திசக்தி என்றே செய்தால் - தானே செய்கை நேராகும், சக்திசக்தி என்றால் அஃது -தானே முத்தி வேராகும். சக்திசக்தி சக்தீ சக்தீ என்றே ஆடோமோ? சக்திசக்தி சக்தீ யென்றே - தாளங்கொட்டிப் பாடோமோ? சக்திசக்தி என்றால் துன்பம் - தானே தீரும் கண்டீரே! சக்திசக்தி என்றால் இன்பம் - தானே சேரும் கண்டீரே! சக்திசக்தி என்றால் செல்வம் - தானே ஊறும் கண்டீரோ? சக்திசக்தி என்றால் கல்வி - தானே தேறும் கண்டீரோ? சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ! சக்திசக்தி சக்தீ சக்தீ சக்தீ சக்தீ வாழீ நீ! சக்திசக்தி வாழீ என்றால் சம்பத் தெல்லாம் நேராகும், சக்திசக்தி என்றால் சக்தி தாசன் என்றே பேராகும். |
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பக்திப் பாடல்கள் - Subramaniya Bharathiyar Books - மகாகவி பாரதியார் நூல்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வெண்பா, போற்றி, விருத்தம், கலித்துறை, நெஞ்சே, கற்பகமே, சனத்துக், யார்க்கும், மஞ்சோம், விநாயகா, கடவுளே, வேண்டேன், வேண்டினேன், தெய்வமே, முறையே, பொருளை, கொண்டு, நின்று