முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 5.2. திருஈங்கோய்மலை எழுபது
பதினோராம் திருமுறை - 5.2. திருஈங்கோய்மலை எழுபது

5.2. திருஈங்கோய்மலை எழுபது
402 |
அடியும் முடியும் அரியும் அயனும் படியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால் இன்ன தென அறியா ஈங்கோயே - ஓங்காரம் அன்னதென நின்றான் மலை. |
1 |
403 |
அந்தஇள மாக்குழவி ஆயம் பிரிந்ததற்குக் கொந்தவிழ்தேன் தோய்த்துக் குறமகளிர் - சந்தின் இலைவளைக்கை யாற்கொடுக்கும் ஈங்கோயே மேரு மலைவளைக்கை வில்லி மலை. |
2 |
404 |
அம்பள வாய்மகளிர் அம்மனைக்குத் தம்மனையைச் செம்பவளந் தாவென்னச் சீர்க்குறத்தி - கொம்பின் இறுதலையி னாற்கிளைக்கும் ஈங்கோயே நம்மேல் மறுதலைநோய் தீர்ப்பான் மலை. |
3 |
405 |
அரிகரியைக் கண்டவிடத் தச்சலிப்பாய் ஓடப் பிரிவரிய தன்பிடியைப் பேணிக் - கரிபெரிதும் கையெடுத்து நீட்டிக் கதஞ்சிறக்கும் ஈங்கோயே மையடுத்த கண்டன் மலை. |
4 |
406 |
அரியும் உழுவையும் ஆளியுமே ஈண்டிப் பரியிட்டுப் பன்மலர்கொண் டேறிச் - சொரிய எரியாடி கண்டுகக்கும் ஈங்கோயே கூற்றம் திரியாமற் செற்றான் சிலம்பு. |
5 |
407 |
ஆளி தொடர அரிதொடர ஆங்குடனே வாளி கொடுதொடரும் மாக்குறவர் - கோளின் இடுசிலையி னாற்புடைக்கும் ஈங்கோயே நம்மேற் கொடுவினைகள் வீட்டுவிப்பான் குன்று. |
6 |
408 |
இடுதினைதின் வேழங் கடியக் குறவர் வெடிபடு வெங்கவண்கல் ஊன்ற - நெடுநெடென நீண்டகழை முத்துதிர்க்கும் ஈங்கோயே ஏங்குமணி பூண்டகழை யேறி பொருப்பு. |
7 |
409 |
ஈன்ற குறமகளிர்க் கேழை முதுகுறத்தி நான்றகறிக் கேறசலை நற்கிழங் - கூன்றவைத் தென்னன்னை உண்ணென் றெடுத்துரைக்கும் ஈங்கோயே மின்னன்ன செஞ்சடையான் வெற்பு. |
8 |
410 |
ஈன்ற குழவிக்கு மந்தி இறுவரை மேல் நான்ற நறவத்தைத் தான்நணுகித் - தோன்ற விரலால்தேன் தோய்த்தூட்டும் ஈங்கோயே நம்மேல் வரலாம்நோய் தீர்ப்பான் மலை. |
9 |
411 |
உண்டிருந்த தேனை அறுபதங்கள் ஊடிப்போய்ப் பண்டிருந்த யாழ்முரலப் பைம்பொழில்வாய்க் -கண்டிருந்த மாமயில்கள் ஆடி மருங்குவரும் ஈங்கோயே பூமயிலி தாதை பொருப்பு. |
10 |
412 |
ஊடிப் பிடியுறங்க ஒண்கதலி வண்கனிகள் நாடிக் களிறு நயந்தெடுத்துக் - கூடிக் குணமருட்டிக் கொண்டாடும் ஈங்கோயே வானோர் குணமருட்டுங் கோளரவன் குன்று. |
11 |
413 |
எய்யத் தொடுத்தோன் குறத்திநோக் கேற்றதெனக் கையிற் கணைகளைந்து கன்னிமான் - பையப்போ என்கின்ற பாவனைசெய் ஈங்கோயே தூங்கெயில்கள் சென்றன்று வென்றான் சிலம்பு. |
12 |
414 |
ஏழை இளமாதே என்னொடுநீ போதென்று கூழை முதுவேடன் கொண்டுபோய் - வேழ இனைக்குவால் வீட்டுவிக்கும் ஈங்கோயே நந்தம் வினைக்குவால் வீட்டுவிப்பான் வெற்பு. |
13 |
415 |
ஏனம் உழுத புழுதி இனமணியைக் கானவர்தம் மக்கள் கனலென்னக் - கூனல் இறுக்கங் கதிர்வெதுப்பும் ஈங்கோயே நம்மேல் மறுக்கங்கள் தீர்ப்பான் மலை. |
14 |
416 |
ஏனங் கிளைத்த இனபவள மாமணிகள் கானல் எரிபரப்பக் கண்டஞ்சி - யானை இனம்இரிய முல்லைநகும் ஈங்கோயே நம்மேல் வினைஇரியச் செற்றுகந்தான் வெற்பு. |
15 |
417 |
ஒருகணையுங் கேழல் உயிர்செகுத்துக் கையில் இருகணையும் ஆனைமேல் எய்ய - அருகணையும் ஆளரிதான் ஓட அரிவெருவும் ஈங்கோயே கோளரிக்கும் காண்பரியான் குன்று. |
16 |
418 |
ஓங்கிப் பரந்தெழுந்த ஒள்ளிலவத் தண்போதைத் தூங்குவதோர் கொள்ளி எனக்கடுவன் - மூங்கில் தழையிறுத்துக் கொண்டேச்சும் ஈங்கோயே சங்கக் குழையிறுத்த காதுடையான் குன்று. |
17 |
419 |
ஓடும் முகிலை உகிரால் இறஊன்றி மாடுபுக வான்கை மிகமடுத்து - நீடருவி மாச்சீயம் உண்டு மனங்களிக்கும் ஈங்கோயே கோச்சீயம் காண்பரியான் குன்று. |
18 |
420 |
கண்ட கனிநுகர்ந்த மந்தி கருஞ்சுனைநீர் உண்டு குளிர்ந்திலஎன் றூடிப்போய்க் -கொண்டல் இறைக்கீறி வாய்மடுக்கும் ஈங்கோயே நான்கு மறைக்கீறு கண்டான் மலை. |
19 |
421 |
கருங்களிற்றின் வெண்கொம்பால் கல்லுரல்வாய் நல்லார் பெருந்தினைவெண் பிண்டி இடிப்ப - வருங்குறவன் கைக்கொணருஞ் செந்தேன் கலந்துண்ணும் ஈங்கோயே மைக்கொணருங் கண்டன் மலை. |
20 |
422 |
கனைய பலாங்கனிகள் கல்லிலையர் தொக்க நனைய கலத்துரத்தில் ஏந்தி - மனைகள் வரவிரும்பி ஆய்பார்க்கும் ஈங்கோயே பாங்கார் குரவரும்பு செஞ்சடையான் குன்று. |
21 |
423 |
கடக்களிறு கண்வளரக் கார்நிறவண் டார்ப்பச் சுடர்க்குழையார் பாட்டெழவு கேட்டு - மடக்கிளிகள் கீதந் தெரிந்துரைக்கும் ஈங்கோயே ஆல்கீழ்நால் வேதந் தெரிந்துரைப்பான் வெற்பு. |
22 |
424 |
கறுத்தமுலைச் சூற்பிடிக்குக் கார்யானை சந்தம் இறுத்துக்கை நீட்டும்ஈங் கோயே - செறுத்த கடதடத்த தோலுரிவைக் காப்பமையப் போர்த்த விடமிடற்றி னான்மருவும் வெற்பு. |
23 |
425 |
கங்குல் இரைதேரும் காகோ தரங்கேழற் கொம்பி னிடைக் கிடந்த கூர்மணியைப் - பொங்கி உருமென்று புற்றடையும் ஈங்கோயே காமன் வெருவொன்றக் கண்சிவந்தான் வெற்பு. |
24 |
426 |
கலவிக் களிறசைந்த காற்றெங்குங் காணா திலைகைக்கொண் டேந்திக்கால் வீச - உலவிச்சென் றொண்பிடிகாற் றேற்றுகக்கும் ஈங்கோயே பாங்காய வெண்பொடிநீற் றான்மருவும் வெற்பு. |
25 |
427 |
கன்னிப் பிடிமுதுகிற் கப்பருவ முட்பருகி அன்னைக் குடிவர லாறஞ்சிப் - பின்னரே ஏன்தருக்கி மாதவஞ்செய் ஈங்கோயே நீங்காத மான்தரித்த கையான் மலை. |
26 |
428 |
கள்ள முதுமறவர் காட்டகத்து மாவேட்டை கொள்ளென் றழைத்த குரல்கேட்டுத் -துள்ளி இனக்கவலை பாய்ந்தோடும் ஈங்கோயே நந்தம் மனக்கவலை தீர்ப்பான் மலை. |
27 |
429 |
கல்லைப் புனம்மேய்ந்து கார்க்கொன்றைத் தார்போர்த்துக் கொல்லை எழுந்த கொழும்புறவின் - முல்லையங்கள் பல்லரும்பு மொய்த்தீனும் ஈங்கோயே மூவெயிலும் கொல்லரும்பக் கோல்கோத்தான் குன்று. |
28 |
430 |
கல்லாக் குரங்கு பளிங்கிற் கனிகாட்ட எல்லாக் குரங்கும் உடன்ஈண்டி - வல்லே இருந்துகிராற் கற்கிளைக்கும் ஈங்கோயே மேனிப் பொருந்தஅராப் பூண்டான் பொருப்பு. |
29 |
431 |
கண்கொண் டவிர்மணியின் நாப்பண் கருங்கேழல் வெண்கோடு வீழ்ந்த வியன்சாரல் -தண்கோ டிளம்பிறைசேர் வான்கடுக்கும் ஈங்கோயே வேதம் விளம்பிறைசேர் வான்கடுக்கும் வெற்பு. |
30 |
432 |
காந்தளங் கைத்தளங்கள் காட்டக் களிமஞ்ஞை கூந்தல் விரித்தடனே கூத்தாடச் - சாய்ந்திரங்கி ஏர்க்கொன்றை பொன்கொடுக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் கார்க்கொன்றை ஏற்றான் கடறு. |
31 |
433 |
குறமகளிர் கூடிக் கொழுந்தினைகள் குத்தி நறவமாக் கஞ்சகங்கள் நாடிச் - சிறுகுறவர் கைந்நீட்டி உண்ணக் களித்துவக்கும் ஈங்கோயே மைந்நீட்டுங் கண்டன் மலை. |
32 |
434 |
கூழை முதுமந்தி கோல்கொண்டு தேன்பாய ஏழை இளமந்தி சென்றிருந்து - வாழை இலையால்தேன் உண்டுவக்கும் ஈங்கோயே இஞ்சி சிலையால்தான் செற்றான் சிலம்பு. |
33 |
435 |
கொல்லை இளவேங்கைக் கொத்திறுத்துக் கொண்டுசுனை மல்லைநீர் மஞ்சனமா நாட்டிக்கொண் - டொல்லை இருங்கைக் களிறேறும் ஈங்கோயே மேல்நோய் வருங்கைக் களைவான் மலை. |
34 |
436 |
கொவ்வைக் கனிவாய்க் குறமகளிர் கூந்தல்சேர் கவ்வைக் கடிபிடிக்கும் காதன்மையாற் -செவ்வை எறித்தமலர் கொண்டுவிடும் ஈங்கோயே அன்பர் குறித்தவரந் தான்கொடுப்பான் குன்று. |
35 |
437 |
கொடுவிற் சிலைவேடர் கொல்லை புகாமல் படுகுழிகள் கல்லுதல்பார்த் தஞ்சி - நெடுநாகம் தண்டூன்றிச் செல்லுஞ்சீர் ஈங்கோயே தாழ்சடைமேல் வண்டூன்றுந் தாரான் மலை. |
36 |
438 |
கோங்கின் அரும்பழித்த கொங்கைக் குறமகளிர் வேங்கைமணி நீழல் விளையாடி - வேங்கை வரவதனைக் கண்டிரியும் ஈங்கோயே தீங்கு வரவதனைக் காப்பான் மலை. |
37 |
439 |
சந்தனப்பூம் பைந்தழையைச் செந்தேனில் தோய்த்தியானை மந்த மடப்பிடியின் வாய்க்கொடுப்ப - வந்ததன் கண்களிக்கத் தான்களிக்கும் ஈங்கோயே தேங்காதே விண்களிக்க நஞ்சுண்டான் வெற்பு. |
38 |
440 |
சந்தின் இலையதனுள் தண்பிண்டி தேன்கலந்து கொந்திஇனி துண்ணக் குறமகளிர் - மந்தி இளமகளிர் வாய்க்கொடுத்துண் ஈங்கோயே வெற்பின் வளமகளிர் பாகன் மலை. |
39 |
441 |
சாரற் குறத்தியர்கள் தண்மருப்பால் வெண்பிண்டி சேரத் தருக்கி மதுக்கலந்து - வீரத் தமர்இனிதா உண்ணுஞ்சீர் ஈங்கோயே இன்பக் குமரன்முது தாதையர் குன்று. |
40 |
442 |
தாயோங்கித் தாமடருந் தண்சாரல் ஒண்கானம் வேயோங்கி முத்தம் எதிர்பிதுங்கித் - தீயோங்கிக் கண்கன்றித் தீவிளைக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கொன்றைத் தாரான் வரை. |
41 |
443 |
செடிமுட்டச் சிங்கத்தின் சீற்றத்தீக் கஞ்சிப் பிடியட்ட மாக்களிறு பேர்ந்து - கடம்முட்டி என்னேசீ என்னுஞ்சீர் ஈங்கோயே ஏந்தழலிற் பொன்னேர் அனையான் பொருப்பு. |
42 |
444 |
சுனைநீடு தாமரையின் தாதளைந்து சோதிப் புனைநீடு பொன்னிறத்த வண்டு - மனைநீடி மன்னி மணம்புணரும் ஈங்கோயே மாமதியம் சென்னி அணிந்தான் சிலம்பு. |
43 |
445 |
செந்தினையின் வெண்பிண்டி பச்சைத்தே னாற்குழைத்து வந்தவிருந் தூட்டும் மணிக்குறத்தி - பந்தியாத் தேக்கிலைகள் இட்டுச் சிறப்புரைக்கும் ஈங்கோயே மாக்கலைகள் வைத்தான் மலை. |
44 |
446 |
தடங்குடைந்த கொங்கைக் குறமகளிர் தங்கள் இடம்புகுந்தங் கின்நறவம் மாந்தி - உடன்கலந்து மாக்குரவை ஆடி மகிழ்ந்துவரும் ஈங்கோயே கோக்குரவை ஆடிகொழுங் குன்று. |
45 |
447 |
தாமரையின் தாள்தகைத்த தாமரைகள் தாள்தகையத் தாமரையிற் பாய்ந்துகளும் தண்புறவில் - தாமரையின் ஈட்டம் புலிசிதறும் ஈங்கோயே எவ்வுயிர்க்கும் வாட்டங்கள் தீர்ப்பான் மலை. |
46 |
448 |
தெள்ளகட்ட பூஞ்சுனைய தாமரையின் தேமலர்வாய் வள்ளவட்டப் பாழி மடலேறி -வெள்ளகட்ட காராமை கண்படுக்கும் ஈங்கோயே வெங்கூற்றைச் சேராமற் செற்றான் சிலம்பு. |
47 |
449 |
தேன்பலவின் வான்சுளைகள் செம்முகத்த பைங்குரங்கு தான்கொணர்ந்து மக்கள்கை யிற்கொடுத்து - வான்குணங்கள் பாராட்டி யூட்டுஞ்சீர் ஈங்கோயே பாங்கமரர் சீராட்ட நின்றான் சிலம்பு. |
48 |
450 |
தேன்மருவு பூஞ்சுனைகள் புக்குச் செழுஞ்சந்தின் கானமர்கற் பேரழகு கண்குளிர - மேனின் றருவிகள்தாம் வந்திழியும் ஈங்கோயே வானோர் வெருவுகடல் நஞ்சுண்டான் வெற்பு. |
49 |
451 |
தோகை மயிலினங்கள் சூழ்ந்து மணிவரைமேல் ஓகை செறியாயத் தோடாட - நாகம் இனவளையிற் புக்கொளிக்கும் ஈங்கோயே நம்மேல் வினைவளையச் செற்றுகந்தான் வெற்பு. |
50 |
452 |
நறவம் நனிமாந்தி நள்ளிருட்கண் ஏனம் இறவி லியங்குவான் பார்த்துக் - குறவர் இரைத்துவலை தைத்திருக்கும் ஈங்கோயே நங்கை விரைத்துவலைச் செஞ்சடையான் வெற்பு. |
51 |
453 |
நாக முழைநுழைந்த நாகம்போய் நன்வனத்தில் நாகம் விழுங்க நடுக்குற்று -நாகந்தான் மாக்கையால் மஞ்சுரிக்கும் ஈங்கோயே ஓங்கியசெந் தீக்கையால் ஏந்தி சிலம்பு. |
52 |
454 |
நாகங் களிறுநு(ங்)க நல்லுழுவை தாமரையின் ஆகந் தழுவி அசைவெய்த - மேகங் கருவிடைக்க ணீர்சோரும் ஈங்கோயே ஓங்கு பொருவிடைக்க ணூர்வான் பொருப்பு. |
53 |
455 |
பணவநிலைப் புற்றின் பழஞ்சோற் றமலை கணவ னிடந்திட்ட கட்டி - உணவேண்டி எண்கங்கை ஏற்றிருக்கும் ஈங்கோயே செஞ்சடைமேல் வண்கங்கை ஏற்றான் மலை. |
54 |
456 |
பன்றி பருக்கோட்டாற் பாருழுத பைம்புழுதித் தென்றி மணிகிடப்பத் தீயென்று - கன்றிக் கரிவெருவிக் கான்படரும் ஈங்கோயே வானோர் மருவரியான் மன்னும் மலை. |
55 |
457 |
பாறைமிசைத் தன்நிழலைக் கண்டு பகடென்று சீறி மருப்பொசித்த செம்முகமாத் - தேறிக்கொண் டெல்லே பிடியென்னும் ஈங்கோயே மூவெயிலும் வில்லே கொடுவெகுண்டான் வெற்பு. |
56 |
458 |
பிடிபிரிந்த வேழம் பெருந்திசைதான் கோடிப் படிமுகிலைப் பல்காலும் பார்த்திட் - டிடரா இருமருப்பைக் கைகாட்டும் ஈங்கோயே வானோர் குருவருட்குன் றாய்நின்றான் குன்று. |
57 |
459 |
பொருத கரியின் முரிமருப்பிற் போந்து சொரிமுத்தைத் தூநீரென் றெண்ணிக் - கருமந்தி முக்கிவிக்கி நக்கிருக்கும் ஈங்கோயே மூவெயிலும் திக்குகக்கச் செற்றான் சிலம்பு. |
58 |
460 |
மறவெங் களிற்றின் மருப்புகுத்த முத்தம் குறவர் சிறார்குடங்கைக் கொண்டு - நறவம் இளவெயில்தீ யட்டுண்ணும் ஈங்கோயே மூன்று வளவெயில்தீ யிட்டான் மலை. |
59 |
461 |
மலைதிரிந்த மாக்குறவன் மான்கொணர நோக்கிச் சிலைநுதலி சீறிச் சிலைத்துக் - கலைபிரிய இம்மான் கொணர்தல் இழுக்கென்னும் ஈங்கோயே மெய்ம்மான் புணர்ந்தகையான் வெற்பு. |
60 |
462 |
மரையதளும் ஆடு மயிலிறகும் வேய்ந்த புரையிதணம் பூங்கொடியார் புக்கு -நுரைசிறந்த இன்நறவுண் டாடி இசைமுரலும் ஈங்கோயே பொன்நிறவெண் ணீற்றான் பொருப்பு. |
61 |
463 |
மலையர் கிளிகடிய மற்றப் புறமே கலைகள் வருவனகள் கண்டு -சிலையை இருந்தெடுத்துக் கோல்தெரியும் ஈங்கோயே மாதைப் புரிந்திடத்துக் கொண்டான் பொருப்பு. |
62 |
464 |
மத்தக் கரிமுகத்தை வாளரிகள் பீறஒளிர் முத்தம் பனிநிகர்க்கும் மொய்ம்பிற்றால் - அத்தகைய ஏனற் புனம்நீடும் ஈங்கோயே தேங்குபுனல் கூனற் பிறையணிந்தான் குன்று. |
63 |
465 |
மந்தி இனங்கள் மணிவரையின் உச்சிமேல் முந்தி இருந்து முறைமுறையே - நந்தி அளைந்தாடி ஆலிக்கும் ஈங்கோயே கூற்றம் வளைந்தோடச் செற்றான் மலை. |
64 |
466 |
மந்தி மகவினங்கள் வண்பலவின் ஒண்சுளைக்கண் முந்திப் பறித்த முறியதனுள் -சிந்திப்போய்த் தேனாறு பாயுஞ்சீர் ஈங்கோயே செஞ்சடைமேல் வானாறு வைத்தான் மலை. |
65 |
467 |
முள்ளார்ந்த வெள்ளிலவம் ஏறி வெறியாது கள்ளார்ந்த பூப்படியும் கார்மயில்தான் - ஒள்ளார் எரிநடுவுட் பெண்கொடியார் ஏய்க்கும்ஈங் கோயே புரிநெடுநூல் மார்பன் பொருப்பு. |
66 |
468 |
வளர்ந்த இளங்கன்னி மாங்கொம்பின் கொங்கை அளைந்து வடுப்படுப்பான் வேண்டி - இளந்தென்றல் எல்லிப் புகநுழையும் ஈங்கோயே தீங்கருப்பு வில்லிக்குக் கூற்றானான் வெற்பு. |
67 |
469 |
வான மதிதடவல் உற்ற இளமந்தி கான முதுவேயின் கண்ணேறித் - தானங் கிருந்துயரக் கைநீட்டும் ஈங்கோயே நம்மேல் வருந்துயரந் தீர்ப்பான் மலை. |
68 |
470 |
வேய்வனத்துள் யானை தினைகவர வேறிருந்து காய்வனத்தே வேடன் கணைவிசைப்ப - வேயணைத்து மாப்பிடிமுன் ஓட்டும்ஈங் கோயே மறைபரவு பூப்பிடிபொற் றாளான் பொருப்பு. |
69 |
471 |
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகிய தென் றஞ்சிமுது மந்தி -பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று. |
70 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
5.2. திருஈங்கோய்மலை எழுபது - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஈங்கோயே, வெற்பு, குன்று, பொருப்பு, சிலம்பு, குறமகளிர், தீர்ப்பான், நம்மேல், தாமரையின், செற்றான், வானோர், செஞ்சடையான், செஞ்சடைமேல், முத்தம், குறவர், கண்டன், கொல்லை, மூவெயிலும்