முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 2.4. அற்புதத் திருவந்தாதி
பதினோராம் திருமுறை - 2.4. அற்புதத் திருவந்தாதி

2.4. அற்புதத் திருவந்தாதி
44 |
பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர் |
1 |
45 |
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் -சுடர்உருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னெஞ் சவர்க்கு |
2 |
46 |
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும் அவர்க்கேநாம் அன்பாவ தல்லாற் - பவர்ச்சடைமேற் பாகப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள் |
3 |
47 |
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற் கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம் செம்மையா னாகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மைஆட் கொண்ட இறை |
4 |
48 |
இறைவனே எவ்வுயிரும் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் - இறைவனே எந்தாய் எனஇரங்கும் எங்கள்மேல் வெந்துயரம் வந்தால் அது மாற்றுவான் |
5 |
49 |
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்நஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான் |
6 |
50 |
யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம் யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக் கைம்மா உரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற அம்மானுக் காளாயி னேன் |
7 |
51 |
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அதன்றே யாமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றான் அருள் |
8 |
52 |
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு |
9 |
53 |
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனிக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே யெனக்கரிய தொன்று |
10 |
54 |
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேஎன் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது |
11 |
55 |
அதுவே பிரானாமா றாட்கொள்ளு மாறும் அதுவே இனியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு |
12 |
56 |
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச் சார்ந்திடுமே லேபாவந் தான் |
13 |
57 |
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து |
14 |
58 |
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வார் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி |
15 |
59 |
இனியோ நாம்உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோ ரிடரில்லோம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண் |
16 |
60 |
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச் சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன் |
17 |
61 |
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழியத் தானவனைப் பாதத் தணிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று |
18 |
62 |
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும் அன்றும் அளப்பரியன் ஆனானை - என்றுமோர் மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு |
19 |
63 |
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன் |
20 |
64 |
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமானனாய் அட்ட மூர்த்தியுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து |
21 |
65 |
வந்திதனைக் கொள்வதே யொக்கும்இவ் வாளரவின் சிந்தை யதுதெரிந்து காண்மினோ- வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீர்உம் சென்னிப் பிறை |
22 |
66 |
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது |
23 |
67 |
இதுவன்றே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு |
24 |
68 |
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று |
25 |
69 |
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு |
26 |
70 |
அரவமொன் றாகத்து நீநயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஓரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண் |
27 |
71 |
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவ தாக இவர் |
28 |
72 |
இவரைப் பொருளுணர மாட்டாதா ரெல்லாம் இவரை இகழ்வதே கண்டீர் -இவர் தமது பூக்கோல மேனிப் பொடிபூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர் |
29 |
73 |
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேருணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து |
30 |
74 |
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு |
31 |
75 |
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான் மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல் |
32 |
76 |
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுவந்த தெக்கோலத் தெவ்வுருவா யெத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம் |
33 |
77 |
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமாறு ஒருகணையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை அடும் |
34 |
78 |
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி யிருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு |
35 |
79 |
மறுவுடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆஆ - உறுவான் தளரமீ தோடுமேல் தான்அதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி |
36 |
80 |
மதியா அடலவுணர் மாமதில்மூண் றட்ட மதியார் வளர்சடையி னானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு |
37 |
81 |
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவம் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு |
38 |
82 |
கொம்பினைஓர் பாகத்துக் கொண்ட குழகன்தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து |
39 |
83 |
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதம் - குறித்தொருவர் கொள்ளாத திங்கள் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு |
40 |
84 |
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து |
41 |
85 |
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளங்குழவித் திங்கள் இது |
42 |
86 |
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றூர்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே அறிவான் தனக்கு |
43 |
87 |
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான் |
44 |
88 |
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது |
45 |
89 |
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலீர் ஆஆ - ஒளிகொள்மிடற் றெந்தைஅராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம் |
46 |
90 |
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவ தல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு |
47 |
91 |
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா ததுமதியொன் றில்லா அரா |
48 |
92 |
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரியஓடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே யொப்பான் சடை |
49 |
93 |
சடைமேல்அக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பால்அக் கோல மதிவைத்தான்தன் பங்கின் குலப்பாவை நீலக் குழல் |
50 |
94 |
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டில் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு |
51 |
95 |
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர் |
52 |
96 |
சீரார்ந்த கொன்றை மலர்தழைப்பச் சேணுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - பேரார்ந்த நாண்பாம்பு கொண்டசைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார் |
53 |
97 |
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஓருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற்செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு |
54 |
98 |
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவு மன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியி னுள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு |
55 |
99 |
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயின் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையின் உள்ளுண் புறம்பேசக் கேட்டோ நிலாத்தலையிற் சூடுவாய் நீ |
56 |
100 |
நீயுலகம் எல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடஅரவம் மேலாட மிக்கு |
57 |
101 |
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன்தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு |
58 |
102 |
பண்புணர மாட்டேன்நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவ மேல் |
59 |
103 |
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல் போலாம் ஒளிபுதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று |
60 |
104 |
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்வுருவோன் உம்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது |
61 |
105 |
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு |
62 |
106 |
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால் நின்முடிமேல் திங்கள் நிலா |
63 |
107 |
நிலாஇலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாஇருந்த செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே புக்கரவங் காலையே போன்று |
64 |
108 |
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணீறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு |
65 |
109 |
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறோ - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலோ பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு |
66 |
110 |
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஓங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு |
67 |
111 |
சிலம்படியாள் ஊடலைத் தான்தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி |
68 |
112 |
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாம்அடிமை கொண்டாடப் பெற்றோம் இனிஅவலம் உண்டோ எமக்கு |
69 |
113 |
எமக்கிதுவோ பேராசை யென்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிரவில் ஏந்தெரிபாய்ந் தாடும் இடம் |
70 |
114 |
இடப்பால வானத் தெழுமதியை நீயோர் மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப் பாகங் கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண் |
71 |
115 |
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்கும் கண்ணாளா ஈதென் கருத்து |
72 |
116 |
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே திருத்தலஞ் சிக்கென நான்சொன்னேன் - பருத்தரங்க வெள்ளநீ ரேற்றேன் அடிக்கமலம் நீவிரும்பி உள்ளமே எப்போதும் ஓது |
73 |
117 |
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏது நிறைந்தில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கமலம் |
74 |
118 |
கலங்கு புனல்கங்கை ஊடால லாலும் இலங்கு மதிஇயங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீண்முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு |
75 |
119 |
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும் எந்தாய் தழும்பேறி யேபாவம் பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி |
76 |
120 |
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேரும் - கடகம் மறிந்தாடு கைபேரின் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு |
77 |
121 |
அரங்கமாய்ப் பேய்க்காட்டில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான்தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து |
78 |
122 |
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு |
79 |
123 |
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்டோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால் |
80 |
124 |
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணார விந்தங்கள் சார்ந்து |
81 |
125 |
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின் |
82 |
126 |
மின்போலும் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றும் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது |
83 |
127 |
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினில்அழியக் கண்டாலும் முக்கணான் கண் |
84 |
128 |
கண்ணாரக் கண்டும்என் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின் |
85 |
129 |
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினும் உறாதொழியு மேனும் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்தன் பேயாய நற்கணத்தி லொன்றாய நாம் |
86 |
130 |
நாமாலை சூடியும் நம்ஈசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் எற்றே தடுமே எறிவினையே என்னும் இருள் |
87 |
131 |
இருளின் உருவென்கோ மாமேகம் என்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி |
88 |
132 |
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவா யதிருப்ப உன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்இதனைக் கூறு |
89 |
133 |
கூறெமக்கீ தெந்தாய் குளிர்சடையை மீதழித் திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்தூரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை |
90 |
134 |
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கும் எல்லாம் அமைந்தோமே எம்மைப் புறம்உரைப்ப தென் |
91 |
135 |
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையோன் வானோர்க் கருளாக வைத்த அவன் |
92 |
136 |
அவன்கண்டாய் வானோர் பிரானாவான் என்றும் அவன்கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய் மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய்நீ விரும்பு |
93 |
137 |
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற் றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள் |
94 |
138 |
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமின்இங் கார் |
95 |
139 |
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை அதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சி னுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து |
96 |
140 |
மறைத்துலகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல் உறைப்போடும் உன்கைக் கொண்டாயோ - நிறைத்திட் டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக் களைந்தெழுந்த செந்தீ யழல் |
97 |
141 |
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயாடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாயிதனைக் செப்பு |
98 |
142 |
செப்பேந் திளமுலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தனலுமிழும் ஐவாய நாகத்தா யாடுன் நடம் |
99 |
143 |
நடக்கிற் படிநடுங்கும் நோக்கிற் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கற் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே றுருமேறோ ஒன்றா உரை |
100 |
144 |
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் பேராத காதல் பிறந்து |
101 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
2.4. அற்புதத் திருவந்தாதி - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - போலும், வானோர், என்றும், கொல்லோ, திங்கள், ஒவ்வாதே, பேரும், லாலும், மடநெஞ்சே, கண்டீர், ரேனும், இறைவனே, எந்தாய், நோக்கும், எம்மானை