முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பதினோராம் திருமுறை » 12.7. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
பதினோராம் திருமுறை - 12.7. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை

12.7. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை
1358 |
திருந்தியசீர்ச் செந்தா மரைத்தடத்துச் சென்றோர் இருந்தண் இளமேதி பாயப் - பொருந்திய புள்ளிரியப் பொங்கு கயல்வெருவப் பூங்குவளைக் கள்ளிரியச் செங்கழுநீர் கால்சிதையத் - துள்ளிக் குருகிரியக் கூன்இறவம் பாயக் களிறு முருகுவிரி பொய்கையின்கண் மூழ்க -வெருவுற்ற கோட்டகத்துப் பாய்வாளைக் கண்டலவன் கூசிப்போய்த் தோட்டகத்த செந்நெல் துறையடையச் - சேட்டகத்த காவி முகமலரக் கார்நீலம் கண்படுப்ப வாவிக்கண் நெய்தல் அலமர - மேவிய | (5) |
அன்னம் துயில்இழப்ப அஞ்சிறைசேர் வண்டினங்கள் துன்னும் துணைஇழப்பச் சூழ்கிடங்கில் - மன்னிய வள்ளை நகைகாட்ட வண்குமுதம் வாய்காட்டத் தெள்ளுபுனற் பங்கயங்கள் தேன்காட்ட - மெள்ள நிலவு மலரணையின் நின்றிழிந்த சங்கம் இலகுகதிர் நித்திலங்கள் ஈன - உலவிய மல்லைப் பழனத்து வார்பிரசம் மீதழிய ஒல்லை வரம்பிடறி ஓடிப்போய்ப் - புல்லிய பாசடைய செந்நெல் படரொளியால் பல்கதிரோன் தேசடைய ஓங்கு செறுவுகளும் - மாசில்நீர் | (10) | |
நித்திலத்தின் சாயும் நிகழ்மரக தத்தோலும் தொத்தொளி செம்பொன் தொழிற்பரிய - மொய்த்த பவளத்தின் செவ்வியும் பாங்கணைய ஓங்கித் திவளக் கொடிமருங்கில் சேர்த்தித் - துவளாமைப் பட்டாடை கொண்டுடுத்துப் பைந்தோ டிலங்குகுழை இட்டமைந்த கண்ணார் இளங்கமுகும் - விட்டொளிசேர் கண்கள் அழல்சிதறிக் காய்சினத்த வாய்மதத்துத் தண்டலையின் நீழல் தறியணைந்து - கொண்ட கொலைபுரியா நீர்மையவாய்க் கொம்புவளைத் தேந்தி மலையு மரவடிவங் கொண்டாங் - கிலைநெருங்கு | (15) | |
சூதத் திரளும் தொகுகனிக ளால்நிவந்த மேதகுசீர்த் தெங்கின் வியன்பொழிலும் - போதுற் றினமொருங்கு செவ்வியவாய் இன்தேன் ததும்பு கனிநெருங்கு திண்கதலிக் காடும் - நனிவிளங்கு நாற்றத்தால் எண்டிசையும் வந்து நலஞ்சிறப்ப ஊற்று மடுத்த உயர்பலவும் -மாற்றமரும் மஞ்சள் எழில்வளமும் மாதுளையின் வார்பொழிலும் இஞ்சி இளங்காவின் ஈட்டமும் - எஞ்சாத கூந்தற் கமுகும் குளிர்பாட லத்தெழிலும் வாய்ந்தசீர் சண்பகத்தின் வண்காடும் - ஏந்தெழிலார் | (20) | |
மாதவியும் புன்னையும் மண்ணும் மலர்க்குரவும் கேதகையும் எங்கும் கெழீஇஇப் - போதின் இளந்தென்றல் வந்தசைப்ப எண்டிசையும் வாசம் வளந்துன்று வார்பொழிலின் மாடே - கிளர்ந்தெங்கும் ஆலை ஒலியும் அரிவார் குரல்ஒலியும் சோலைக் கிளிமிழற்றும் சொல்லொலியும் - ஆலும் அறுபதங்கள் ஆர்ப்பொலியும் ஆன்றபொலி வெய்தி உறுதிரைநீர் வேலை ஒலிப்ப - வெறிகமழும் நந்தா வனத்தியல்பும் நற்றவத்தோர் சார்விடமும் அந்தமில் சீரார் அழகினால் - முந்திப் | (25) | |
புகழ்வாருந் தன்மையதாய்ப் பூதலத்துள் ஓங்கி நிகழ்கிடங்கும் சூழ்கிடப்ப நேரே - திகழ முளைநிரைத்து மூரிச் சிறைவகுத்து மொய்த்த புளகத்தின் பாம்புரிசூழ் போகி - வளர இரும்பதணஞ் சேர இருத்திஎழில் நாஞ்சில் மருங்கனைய அட்டாலை யிட்டுப் - பொருந்தியசீர்த் தோமரமும் தொல்லைப் பொறிவீசி யந்திரமும் காமரமும் ஏப்புழையும் கைகலந்து - மீமருவும் வெங்கதிரோன் தேர்விலங்க மிக்குயர்ந்த மேருப்போன் றங்கனகத் திஞ்சி அணிபெற்றுப் - பொங்கொளிசேர் | (30) | |
மாளிகையும் மன்னியசீர் மண்டபமும் ஒண்தலத்த சூளிகையும் துற்றெழுந்த தெற்றிகளும் - வாளொளிய நாடக சாலையும் நன்பொற் கபோதஞ்சேர் பீடமைத்த மாடத்தின் பெற்றியும் - கேடில் உருவு பெறவகுத்த அம்பலமும் ஓங்கு தெருவும் வகுத்தசெய் குன்றும் -மருவினிய சித்திரக் காவும் செழும்பொழிலும் வாவிகளும் நித்திலஞ்சேர் நீடு நிலைக்களமும் - எத்திசையும் துன்னி எழில்சிறப்பச் சோதி மலர்மடந்தை மன்னி மகிழ்ந்துறையும் வாய்மைத்தாய்ப் - பொன்னும் | (35) | |
மரகதமும் நித்திலமும் மாமணியும் பேணி இரவலர்கட் கெப்போதும் ஈந்தும் - கரவாது கற்பகமும் காருமெனக் கற்றவர்க்கும் நற்றவர்க்கும் தப்பாக் கொடைவளர்க்குஞ் சாயாத - செப்பத்தால் பொய்ம்மை கடிந்து புகழ்பரிந்து பூதலத்து மெய்ம்மை தலைசிறந்து மேதக்கும் - உண்மை மறைபயில்வார் மன்னு வியாகரணக் கேள்வித் துறைபயில்வார் தொன்னூல் பயில்வார் - முறைமையால் ஆகமங்கள் கேட்பார் அருங்கலைநூல் ஆதரித்துப் போகம் ஒடுங்காப் பொருள்துய்ப்பார் - சோகமின்றி | (40) | |
நீதி நிலைஉணர்வார் நீள்நிலத்துள் ஐம்புலனும் காதல் விடுதவங்கள் காமுறுவார் - ஆதி அருங்கலைநூல் ஓதுவார் ஆதரித்து வென்றிக் கருங்கலிநீங் கக்கனல்வ குப்பார் - ஒருங்கிருந்து காமநூல் கேட்பார் கலைஞானம் காதலிப்பார் ஓமநூல் ஓதுவார் உத்தரிப்பார் - பூமன்னும் நான்முகனே அன்னசீர் நானூற் றுவர்மறையோர் தாம்மன்னி வாழும் தகைமைத்தாய் - நாமன்னும் ஆரணங்கும் மற்றை அருந்ததியும் போல்மடவார் ஏரணங்கு மாடத் தினிதிருந்து - சீரணங்கு | (45) | |
வீணை பயிற்றுவார் யாழ்பயில்வார் மேவியசீர்ப் பாணம் பயில்வார் பயன்உறுவார் - பேணியசீர்ப் பூவைக்குப் பாட்டுரைப்பார் பொற்கிளிக்குச் சொற்பயில்வார் பாவைக்குப் பொன்புனைந்து பண்புறுவார் - ஆய்எங்கும் மங்கையர்கள் கூட்டமும் மன்னு சிறார்குழுவும் பொங்குலகம் எல்லாம் பொலிவடையத் - தங்கிய வேத ஒலியும் விழாவொலியும் மெல்லியலார் கீத ஒலியும் கிளர்ந்தோங்கும் - மாதரார் பாவை ஒலியும் பறைஒலியும் பல்சனங்கள் மேவும் ஒலியும் வியன்நகரம் - காவலர்கள் | (50) | |
பம்பைத் துடிஒலியும் பெளவப் படைஒலியும் கம்பக் களிற்றொலியும் கைகலந்து - நம்பிய கார்முழக்கும் மற்றைக் கடல்முழக்கும் போற்கலந்த சீர்முழக்கம் எங்கும் செவிடுபடப் - பார்விளங்கு செல்வம் நிறைந்தஊர் சீரில் திகழ்ந்தஊர் மல்கு மலர்மடந்தை மன்னும்ஊர் - சொல்லினிய ஞாலத்து மிக்கஊர் நானூற் றுவர்கள்ஊர் வேலொத்த கண்ணார் விளங்கும்ஊர் - ஆலித்து மன்னிருகால் வேலை வளர்வெள்ளத் தும்பரொடும் பன்னிருகால் நீரில் மிதந்தவூர் - மன்னும் | (55) | |
பிரமனூர் வேணுபுரம் பேரொலிநீர் சண்பை அரன்மன்னு தண்காழி அம்பொற் - சிரபுரம் பூந்தராய்க் கொச்சைவயம் வெங்குருப் பொங்குபுனல் வாய்ந்தநல் தோணி புரம்மறையோர் - ஏய்ந்த புகலி கழுமலம் பூம்புறவம் என்றிப் பகர்கின்ற பண்புற்ற தாகித் - திகழ்கின்ற மல்லைச் செழுநகரம் மன்னவும் வல்லமணர் ஒல்லைக் கழுவில் உலக்கவும் - எல்லையிலா மாதவத்தோர் வாழவும் வையகத்தோர் உய்யவும் மேதக்க வானோர் வியப்பவும் - ஆதியாம் | (60) | |
வென்றிக் கலிகெடவும் வேதத் தொலிமிகவும் ஒன்றிச் சிவனடியார் ஓங்கவும் - துன்றிய பன்னு தமிழ்ப்பதினா றாயிர நற்பனுவல் மன்னு புவியவர்க்கு வாய்ப்பவும் - முன்னிய சிந்தனையாற் சீரார் கவுணியர்க்கோர் சேயென்ன வந்தங் கவதரித்த வள்ளலை - அந்தமில்சீர் ஞானச் சுடர்விளக்கை நற்றவத்தோர் கற்பகத்தை மான மறையவற்றின் வான்பொருளை - ஆனசீர்த் தத்துவனை நித்தனைச் சைவத் தவர்அரசை வித்தகத்தால் ஓங்கு விடலையை - முத்தமிழின் | (65) | |
செஞ்சொற் பொருள்பயந்த சிங்கத்தைத் தெவ்வர்உயிர் அஞ்சத் திகழ்ந்த அடல்உருமை - எஞ்சாமை ஆதிச் சிவனருளால் அம்பொன்செய் வட்டிலில் கோதில் அமிர்தநுகர் குஞ்சரத்தைத் - தீதறுசீர்க் காலத் தொகுதியும் நான்மறையின் காரணமும் மூலப் பொருளும் முழுதுணர்ந்த - சீலத் திருஞான சம்பந்தன் என்றுலகம் சேர்ந்த ஒருநாமத் தால் உயர்ந்த கோவை - வருபெருநீர்ப் பொன்னிவள நாடனைப் பூம்புகலி நாயகனை மன்னர் தொழுதிறைஞ்சும் மாமணியை - முன்னே | (70) | |
நிலவு முருகர்க்கும் நீலநக் கற்கும் தொலைவில் புகழ்ச்சிறுத்தொண் டற்கும் - குலவிய தோழமையாய்த் தொல்லைப் பிறப்பறுத்த சுந்தரனை மாழையொண்கண் மாதர் மதனனைச் - சூழொளிய கோதைவேல் தென்னன்தன் கூடல் குலநகரில் வாதில் அமணர் வலிதொலையக் - காதலால் புண்கெழுவு செம்புனலா றோடப் பொருதவரை வண்கழுவில் தைத்த மறையோனை - ஒண்கெழுவு ஞாலத் தினர்அறிய மன்னுநனி பள்ளியது பாலை தனைநெய்தல் ஆக்கியும் - காலத்து | (75) | |
நீரெதிர்ந்து சென்று நெருப்பிற் குளிர்படைத்தும் பாரெதிர்ந்த பல்விடங்கள் தீர்த்துமுன் - நேரெழுந்த யாழை முரித்தும் இருங்கதவம் தான்அடைத்தும் சூழ்புனலில் ஓடத் தொழில்புரிந்தும் - தாழ்பொழில்சூழ் கொங்கிற் பனிநோய் பரிசனத்தைத் தீர்ப்பித்தும் துங்கப் புரிசை தொகுமிழலை - அங்கதனில் நித்தன் செழுங்காசு கொண்டுநிகழ் நெல்வாயில் முத்தின் சிவிகை முதற்கொண்டும் - அத்தகுசீர் மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக் காயிரஞ் செம்பொன் அதுகொண்டும் - மாய்வரிய | (80) | |
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில் ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசில் கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற் சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும் நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள் நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையால் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத் திருப்பதிகம் பாடவல்ல சேயை - விருப்போடு | (85) | |
நண்ணு புகழ்மறையோர் நாற்பத்தெண் ணாயிரவர் எண்ணில் முனிவரர் ஈட்டத்துப் - பண்ணமரும் ஓலக்கத் துள்ளிருப்ப ஒண்கோயில் வாயிலின்கண் கோலக் கடைகுறுகிக் கும்பிட்டாங் - காலும் புகலி வளநகருள் பூசுரர் புக்காங் கிகலில் புகழ்பரவி யேத்திப் - புகலிசேர் வீதி எழுந்தருள வேண்டுமென விண்ணப்பம் ஆதரத்தாற் செய்ய அவர்க்கருளி - நீதியால் கேதகையும் சண்பகமும் நேர்கிடத்திக் கீழ்த்தாழ்ந்த மாதவியின் போதை மருங்கணைத்துக் - கோதில் | (90) | |
இருவேலி தன்னை இடையிருத்தி ஈண்டு மருவோடு மல்லிகையை வைத்தாங் - கருகே கருமுகையைக் கைகலக்க வைத்துக் கழுநீர்ப் பெருகு பிளவிடையே பெய்து - முருகியலும் புன்னாகந் தன்னைப் புணர இருவாச்சி தன்அயலே முல்லை தலையெடுப்ப - மன்னிய வண்செருந்தி வாய்நெகிழ்ப்ப மெளவல் அலர்படைப்பத் தண்குருந்தம் மாடே தலையிறக்க - ஒண்கமலத் தாதடுத்த கண்ணியால் தண்ணறுங் குஞ்சிமேற் போதடுத்த கோலம் புனைவித்துக் - காதிற் | (95) | |
கனவயிர குண்டலங்கள் சேர்த்திக் கழுத்தின் இனமணியின் ஆரம் இலகப் - புனைகனகத் தொத்தடுத்த பூஞ்சுரிகைச் சோதிசேர் தாளிம்பம் வைத்து மணிக்கண் டிகைபூண்டு - முத்தடுத்த கேயூரம் தோள்மேற் கிடத்திக் கிளர்பொன்னின் வாய்மை பெறுநூல் வலந்திகழ - வேயும் தமனியத்தின் தாழ்வடமும் தண்டரளக் கோப்பும் சிமைய வரைமார்பிற் சேர்த்தி - அமைவுற்ற வெண்ணீற்றின் ஒண்களபம் மட்டித்து மேவுதொழில் ஒண்ணூற் கலிங்கம் உடல்புனைந்து - திண்ணோக்கிற் | (100) | |
காற்றுருமோ குன்றோ கடலோ அடல்உருமோ கூற்றுருவோ என்னக் கொதித்தெழுந்து - சீற்றத் தழல்விழித்து நின்றெதிர்ந்து தாலவட்டம் வீசிப் புழைத்தடக்கை கொண்டெறிந்து பொங்கி - மழை மதத்தாற் பூத்த கடதடத்துக் போகம் மிகப்பொலிந்த காத்திரத்த தாகிக் கலித்தெங்கும் - கோத்த கொடுநிகளம் போக்கிநிமிர் கொண்டெழுந்து கோபித் திடுவண்டை யிட்டுக் கலித்து - முடுகி நெடுநிலத்தைத் தான்உழக்கி நின்று நிகர்நீத் திடிபெயரத் தாளந் திலுப்பி - அடுசினத்தால் | (105) | |
கன்ற முகம்பருகிக் கையெடுத் தாராய்ந்து வென்றி மருப்புருவ வெய்துயிர்த் - தொன்றிய கூடம் அரணழித்துக் கோபுரங்க ளைக்குத்தி நீடு பொழிலை நிகரழித் - தோடிப் பணப்பா கரைப்பரிந்து குத்திப் பறித்த நிணப்பாகை நீள்விசும்பின் வீசி - அணைப்பரிய ஓடைக் கருங்களிற்றை ஒண்பரிக்கா ரர்கள்தாம் மாடணையக் கொண்டு வருதலுமே - கூடி நயந்து குரற்கொடுத்து நட்பளித்துச் சென்று வியந்தணுகி வேட்டம் தணிந்தாங் - குயர்ந்த | (110) | |
உடற்றூய வாசிதனைப் பற்றிமேல் கொண்டாங் கடற்கூடற் சந்தி யணுகி - அடுத்த பயில்பலவும் பேசிப் படுபுரசை நீக்கி அயர்வு கெடஅணைத்துத் தட்டி - உயர்வுதரு தண்டுபே ரோசையின்கண் தாள்கோத்துச் சீர்ச்சிறுத் தொண்டர் பிறகணையத் தோன்றுதலும் - எண்டிசையும் பல்சனமும் மாவும் படையும் புடைகிளர ஒல்லொலியால் ஓங்கு கடல்கிளர - மல்லல் பரித்தூரங் கொட்டப் படுபணிலம் ஆர்ப்பக் கருத்தோ டிசைகவிஞர் பாட - விரித்த | (115) | |
குடைபலவும் சாமரையும் தொங்கல்களும் கூடிப் புடைபரந்து பொக்கம் படைப்பக் - கடைபடு வீதி அணுகுதலும் வெள்வளையார் உள்மகிழ்ந்து காதல் பெருகிக் கலந்தெங்கும் - சோதிசேர் ஆடரங்கின் மேலும் அணிமா ளிகைகளிலும் சேடரங்கும் நீள்மறுகும் தெற்றியிலும் - பீடுடைய பேரிளம் பெண் ஈறாகப் பேதை முதலாக வாரிளங் கொங்கை மடநல்லார் - சீர்விளங்கப் பேணும் சிலம்பும் பிறங்கொளிசேர் ஆரமும் பூணும் புலம்பப் புறப்பட்டுச் - சேண்மறுகில் | (120) | |
காண்டகைய வென்றிக் கருவரைமேல் வெண்மதிபோல் ஈண்டு குடையின் எழில் நிழற்கீழ்க் -காண்டலுமே கைதொழுவார் நின்று கலைசரிவார் மால்கொண்டு மெய்தளர்வார் வெள்வளைகள் போய்வீழ்வார் - வெய்துயிர்த்துப் பூம்பயலை கொள்வார் புணர்முலைகள் பொன்பயப்பார் காம்பனைய மென்தோள் கவின்கழிவார் - தாம்பயந்து வென்றிவேற் சேயென்ன வேனில்வேட் கோவென்ன அன்றென்ன ஆமென்ன ஐயுற்றுச் - சென்றணுகிக் காழிக் குலமதலை என்றுதங் கைசோர்ந்து வாழி வளைசரிய நின்றயர்வார் - பாழிமையால் | (125) | |
உள்ளம் நிலைதளர்ந்த ஒண்ணுதலார் வெல்களிற்றை மெள்ள நடவென்று வேண்டுவார் - கள்ளலங்கல் தாராமை அன்றியும் தையல்நல் லார் முகத்தைப் பாராமை சாலப் பயன் என்பார் - நேராக என்னையே நோக்கினான் ஏந்திழையீர் இப்பொழுது நன்மை நமக்குண் டெனநயப்பார் - கைம்மையால் ஒண்கலையும் நாணும் உடைதுகிலும் தோற்றவர்கள் வண்கமலத் தார்வலிந்து கோடுமெனப் - பண்பின் வடிக்கண் மலர்வாளி வார்புருவ வில்மேல் தொடுத்ததரந் தொண்டை துடிப்பப் - பொடித்தமுலைக் | (130) | |
காசைக் கருங்குழலார் காதற் கவுணியன்பால் பூசற் கமைந்து புறப்படுவார் - வாசச் செழுமலர்த்தார் இன்றெனக்கு நல்காதே சீரார் கழுமலர்த்தார் கோவே கழல்கள் - தொழுவார்கள் அங்கோல் வளையிழக்கப் போவது நின்னுடைய செங்கோன்மை யோவென்று செப்புவார்-நங்கைமீர் இன்றிவன் நல்குமேல் எண்பெருங் குன்றத்தில் அன்றமணர் கூட்டத்தை ஆசழித்துப் - பொன்ற உரைகெழுவு செந்தமிழ்ப்பா ஒன்றினால் வென்றி நிரைகழுமேல் உய்த்தானை நேர்ந்து - விரைமலர்த்தார் | (135) | |
பெற்றிடலாம் என்றிருந்த நம்மிலும் பேதையர்கள் மற்றுளரோ என்று வகுத்துரைப்பார் - மற்றிவனே பெண்ணிரக்கம் அன்றே பிறைநுதலீர் மாசுணத்தின் நண்ணு கடுவிடத்தால் நாட்சென்று - விண்ணுற்ற ஆருயிரை மீட்டன் றவளை அணிமருகல் ஊரறிய வைத்த தெனஉரைப்பார் - பேரிடரால் ஏசுவார் தாம்உற்ற ஏசறவைத் தோழியர்முன் பேசுவார் நின்றுதம் பீடழிவார் - ஆசையால் நைவார் நலன்அழிவார் நாணோடு பூண்இழப்பார் மெய்வாடு வார்வெகுள்வார் வெய்துயிர்ப்பார் - தையலார் | (140) | |
பூந்துகிலைப் பூமாலை என்றணிவார் பூவினைமுன் சாந்தம் எனமெய்யில் தைவருவார் - வாய்ந்த கிளியென்று பாவைக்குச் சொற்பயில்வார் பந்தை ஒளிமே கலையென் றுடுப்பார் -அளிமேவு பூங்குழலார் மையலாய்க் கைதொழுமுன் போதந்தான் ஓங்கொலிசேர் வீதி யுலா. |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.7. ஆளுடையபிள்ளையார் திருவுலாமாலை - பதினோராம் திருமுறை - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - ஒலியும், வென்றிக், சீரார், எண்டிசையும்