முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பத்தாம் திருமுறை - திருமந்திரம் » ஆறாம் தந்திரம்
பத்தாம் திருமுறை - திருமந்திரம் - ஆறாம் தந்திரம்

ஆறாம் தந்திரம்
1. சிவகுரு தரிசினம்
1573 |
பத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச் சுத்த வுரையால் துரிசறச் சோதித்துச் சத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற் சித்தம் இறையே சிவகுரு வாமே. |
1 |
1574 |
பாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு நேசித்த காயம் விடிவித்து நேர்நேரே கூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த தாசற்ற சற்குரு அம்பலமாமே. |
2 |
1575 |
சித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச் சத்தியும்மந்திர சாதக போதமும் பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. |
3 |
1576 |
எல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய் நல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால் எல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற் சொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. |
4 |
1577 |
தேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள் யாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே மூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால் யாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. |
5 |
1578 |
சுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய் தத்தனை நல்கருள் காணா அதிமூடர் பொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர் அத்தன் இவனென் றடிபணிவாரே. |
6 |
1579 |
உண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார் திண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன் வண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும் அண்ணல் அருளன்றி யாரறி வாரே. |
7 |
1580 |
சிவனே சிவஞானி யாதலாற் சுத்த சிவனே யெனஅடி சேரவல் லார்க்கு நவமான தத்துவ நன்முத்தி நண்ணும் பவமான தின்றிப் பரலோக மாமே. |
8 |
1581 |
குருவே சிவமெனக் கூறினன் நந்தி குருவே சிவமென் பதுகுறித் தோரார் குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும் குருவே யுரையுணர் வற்றதோர் கோவே. |
9 |
1582 |
சித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும் அத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே சித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால் அத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. |
10 |
1583 |
தாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை வானந்தி யென்று மகிழும் ஒருவற்குத் தானந்தி யங்கித் தனிச்சுட ராமே. |
11 |
1584 |
திருவாய சித்தியும் முத்தியும் சீர்மை மருளா தருளும் மயக்கறும் வாய்மைப் பொருளாய வேதாந்த போதமும் நாதன் உருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. |
12 |
1585 |
பத்தியும் ஞானவை ராக்கிய மும்பர சித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான் முத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை சத்தி யருள்தரில் தானெளி தாமே. |
13 |
1586 |
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு மன்னெய்த வைத்த மனமது தானே. |
14 |
1587 |
சிவமான ஞானந் தெளியவொண் சித்தி சிவமான ஞானந் தெளியவொண் முத்தி சிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச் சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. |
15 |
1588 |
அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ் செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன் மறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. |
16 |
1589 |
தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன் இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார் பிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங் கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. |
17 |
2. திருவடிப் பேறு
1590 |
இசைந்தெழும் அன்பில் எழுந்த படியே பசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச் சிவந்த குருவந்து சென்னிகை வைக்க உவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. |
1 |
1591 |
தாடந்த போதே தலைதந்த எம்மிறை வாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு வீடந்த மின்றியே யாள்கென விட்டருட் பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. |
2 |
1592 |
தானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு ஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின ஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி தானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. |
3 |
1593 |
உரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத் திரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக் கரையற்ற சத்தாதி நான்குங் கடந்த சொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. |
4 |
1594 |
குரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண் டரிய பொருள்முத் திரையாகக் கொண்டு பெரிய பிரானடி நந்தி பேச்சற் றுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. |
5 |
1595 |
பேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே மாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக் காச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு வாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. |
6 |
1596 |
இதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும் பதிவித்த பாதப் பராபரன் நந்தி கதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும் விதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. |
7 |
1597 |
திருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப் பெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக் குருவடி விற்கண்ட கோனையெங் கோவைக் கருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. |
8 |
1598 |
திருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந் திருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந் திருவடி ஞானஞ் சிறைமல மீட்குந் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. |
9 |
1599 |
மேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை மால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும் பால்வைத்த சென்னிப் படரொளி வானவன் தாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. |
10 |
1600 |
கழலார் கமலத் திருவடி என்னும் நிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா அழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங் குழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. |
11 |
1601 |
முடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர் அடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின் முடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன் குடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. |
12 |
1602 |
வைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான் பொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல் எய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு மெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. |
13 |
1603 |
அடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும் முடிசார வைத்தனர் முன்னை முனிவர் படிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக் குடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. |
14 |
1604 |
மந்திரமாவதும் மாமருந் தாவதுந் தந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ் சுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும் எந்தை பிரான்தன் இணையடி தானே. |
15 |
3. ஞாதுரு ஞான ஞேயம்
1605 |
நீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப் பாங்கான பாசம் படரா படரினும் ஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே நீங்கா அமுத நிலைபெற லாமே. |
1 |
1606 |
ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும் ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும் ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர் ஆயத்தில் நின்ற அறிவறி வாரே. |
2 |
1607 |
தானென் றவனென் றிரண்டாகும் தத்துவந் தானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு தானென்ற பூவை யவனடி சாத்தினால் நானென் றவனென்கை நல்லதொன் றன்றே. |
3 |
1608 |
வைச்சன வாறாறு மாற்றியெனவைத்து மெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு நிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால் அச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. |
4 |
1609 |
முன்னை யறிவறியாதஅம் மூடர்போற் பின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான் தன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்து தென்னை யறிவித் திருந்தனன் நந்தியே . |
5 |
1610 |
காணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங் கோணாத போகமுங் கூடாத கூட்டமும் நாணாத நாணமும் நாதாந்த போதமுங் காணா யெனவந்து காட்டினன் நந்தியே. |
6 |
1611 |
மோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும் மோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும் மோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண் மோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. |
7 |
1612 |
முத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால் வைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி உய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே பெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. |
8 |
1613 |
மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி பாலித்த முத்திரை பற்றும் பரஞானி ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற மூலச் சொரூபன் மொழிஞா துருவனே. |
9 |
4. துறவு
1614 |
இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித் துறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட் கறப்பதி காட்டும் அமரர் பிரானே. |
1 |
1615 |
பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே மறந்து பலஇருள் நீங்க மறைந்து சிறந்த சிவனருள் சேர்பரு வத்துத் துறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. |
2 |
1616 |
அறவன் பிறப்பிலி யாரும் இலாதான் உறைவது காட்டகம் உண்பது பிச்சை துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப் பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே |
3 |
1617 |
நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் நெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும் நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு நெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. |
4 |
1618 |
கேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும் நாடி வளைந்தது நான்கட வேனலேன் ஆடல் விடையுடை அண்ணல் திருவடி கூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. |
5 |
1619 |
உழவன் உழஉழ வானம் வழங்க உழவன் உழவினிற் பூத்த குவளை உழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட் டுழவன் அதனை யுழவொழிந் தானே. |
6 |
1620 |
மேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன் நாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி கார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும் பார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. |
7 |
1621 |
நாகமும் ஒன்று படம்ஐந்து நாலது போகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது ஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந் தேகப் படம்செய் துடம்பிட மாமே. |
8 |
1622 |
அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும் இவன்றா னெனநின் றெளியனும் அல்லன் சிவன்றாள் பலபல சீவனு மாகும் நயன்றான் வரும்வழி நாமறி யோமே. |
9 |
1623 |
தூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும் ஆம்பற் குழலியின் கஞ்சுளிப் பட்டது வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற் கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. |
10 |
5. தவம்
1624 |
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. |
1 |
1625 |
எம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ் செம்மா தவத்தின் செயலின் பெருமையும் அம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து) இம்மா தவத்தின் இயல்பறி யாரே. |
2 |
1626 |
பிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர் சிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர் மறப்பில ராகிய மாதவஞ் செய்வார் பிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. |
3 |
1627 |
இருந்து வருந்தி எழிறவஞ் செய்யும் பெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே இருந்திந் திரனே யெவரே வரினுந் திருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. |
4 |
1628 |
கரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான் பரந்த சடையன் பசும்பொன் நிறத்தன் அருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான் விரைந்து தொழப்படும் வெண்மதி யானே. |
5 |
1629 |
பின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை முன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும் மன்னெய்த வைத்த மனமது தானே. |
6 |
1630 |
அமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும் பகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே அமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி இமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. |
7 |
1631 |
சாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர் மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின் பார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல் ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே |
8 |
1632 |
தவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில் தவம்வேண்டா ஞான சமாதிகை கூடில் தவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு தவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. |
9 |
6. தவ நிந்தை
1633 |
ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற் காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற் சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. |
1 |
1634 |
கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற் சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற் சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற் சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. |
2 |
1635 |
விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார் விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார் விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. |
3 |
1636 |
கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல் தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந் தூடிற் பலவுல கோரெத் தவரே. |
4 |
1637 |
மனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித் தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார் பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின் முகத்திடை நந்தியை முந்தலு மாமே. |
5 |
1638 |
மனத்திடை நின்ற மதிவாள் உருவி இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப் புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால் தவத்திடை யாறொளி தன்னொளி யாமே. |
6 |
1639 |
ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ் சத்தான செய்வது தான்தவந் தானே. |
7 |
1640 |
இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன் தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந் தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. |
8 |
1641 |
படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க் கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும் இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில் உடரடை செய்வ தொருமனத் தாமே. |
9 |
1642 |
ஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய் ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும் நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர் சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. |
10 |
1643 |
பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங் குழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற் குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள் இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. |
11 |
1644 |
சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால் சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால் சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ் சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. |
12 |
7. அருளுடைமையின் ஞானம் வருதல்
1645 |
பிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம் பிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு பிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. |
1 |
1646 |
தமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம் உமிழ்வது போல உலகந் திரிவார் அவிழு மனமும்எம் ஆதியறிவுந் தமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. |
2 |
1647 |
புண்ணிய பாவம் இரண்டுள பூமியில் நண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள் எண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத் தண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. |
3 |
1648 |
முன்னின் றருளு முடிகின்ற காலத்து நன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும் பின்னின் றருளும் பிறவியை நீக்கிடும் முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. |
4 |
1649 |
சிவனரு ளாற்சிலர் தேவரு மாவர் சிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர் சிவனரு ளால்வினை சேரகி லாமை சிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. |
5 |
1650 |
புண்ணியன் எந்தை புனிதன் இணையடி நண்ணி விளக்கென ஞானம் விளைந்தது மண்ணவ ராவதும் வானவர் ஆவதும் அண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. |
6 |
1651 |
காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தே ரேறி மயங்கு மவையுணர் நேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தே ரேறி யவனிவ னாமே. |
7 |
1652 |
அவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும் அவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர் அவ்வுல கத்தே யரனடி கூடுவர் அவ்வுல கத்தே யருள்பெறு வாரே. |
8 |
1653 |
கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம் மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ் சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம் எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. |
9 |
1654 |
நாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத் தேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று கூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல வீடும் அளவும் விடுகின் றிலெனே. |
10 |
8. அவ வேடம்
1655 |
ஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன் வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள் ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந் தேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. |
1 |
1656 |
ஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை ஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும் மான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம் ஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. |
2 |
1657 |
இன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள நன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம் என்ப இறைநாடி நாடோறும் நாட்டினின் மன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. |
3 |
1658 |
இழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த வழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப் பழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார் கழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. |
4 |
1659 |
பொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப் பொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற் பொய்த்தவம்மெய்த்தவம் போகத்துட்போக்கியஞ் சத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. |
5 |
1660 |
பொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக மெய்வேடம் பூண்போர்மிகு பிச்சைகைக்கொள்வர் பொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும் உய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. |
6 |
9. தவவேடம்
1661 |
தவமிக் கவரே தலையான வேடர் அவமிக் கவரே யதிகொலை வேடர் அவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந் தவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. |
1 |
1662 |
பூதி யணிவது சாதன மாதியிற் காதணி தாம்பிர குண்டலங் கண்டிகை ஓதி யவர்க்கும் உருத்திர சாதனந் தீதில் சிவயோகி சாதனந் தேரிலே. |
2 |
1663 |
யோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி தோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று றாகத்து நீறனி யாங்கக் கபாலஞ் சீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. |
3 |
1664 |
காதணி குண்டலங் கண்டிகை நாதமும் ஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை ஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம் ஏதமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. |
4 |
10. திருநீறு
1665 |
நூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள் நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம் பாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர் ஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. |
1 |
1666 |
கங்காளன் பூசுng கவசத் திருநீற்றை மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி சேர்வரே. |
2 |
1667 |
அரசுட னாலத்தி யாகும்அக் காரம் விரவுகனலில் வியனுரு மாறி நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர் உருவம் பிரமன் உயர்குலம் ஆமே. |
3 |
11. ஞான வேடம்
1668 |
ஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர் ஞானமுள்ளார்வேடம்இன்றெனில்நன்முத்தர் ஞானமுளதாக வேண்டுவோர் நக்கன்பால் ஞானமுள வேட நண்ணிநிற் பாரே. |
1 |
1669 |
புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித் துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர் பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. |
2 |
1670 |
சிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும் அவமான சாதனம் ஆகாது தேரில் அவமா மவர்க்கது சாதன நான்கும் உவமான மில்பொருள் உள்ளுற லாமே. |
3 |
1671 |
சுத்தித் திரிவர் கழுவடி நாய்போற் கொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. |
4 |
1672 |
அடியா ரவரே யடியா ரலாதார் அடியாரு மாகார்அவ் வேடமு மாகார் அடியார் சிவஞான மானது பெற்றோர் அடியா ரலாதார் அடியார்கள் அன்றே. |
5 |
1673 |
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந் தானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே ஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம் ஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. |
6 |
1674 |
ஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி தானத்தில் வைத்த தனியால யத்தனாம் மோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம் ஏனைத் தவசி இவனென லாகுமே. |
7 |
1675 |
தானன்ற தன்மையுந் தானவ னாதலும் ஏனைய வச்சிவ மான இயற்கையுந் தானுறு சாதக முத்திரை சாத்தலு மேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. |
8 |
12. சிவ வேடம்
1676 |
அருளால் அரனுக் கடிமைய தாகிப் பொருளாந் தனதுடற் பொற்பதி நாடி இருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர் தெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. |
1 |
1677 |
உடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா உடல்கழன் றால்வேடம் உடனே கழலும் உடலுயிர் உண்மையென் றோர்ந்துகொள்ளாதார் கடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. |
2 |
1678 |
மயலற் றிருளற்று மாமன மற்றுக் கயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத் தயலற் றவரோடும் தாமே தாமாகிச் செயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. |
3 |
1679 |
ஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின் வேடங்கொண் டென்செய்வீர் வேண்டாமனிதரே நாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத் தேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. |
4 |
13. அபக்குவன்
1680 |
குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார் குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக் குருடுங் குருடுங் குழிவிழு மாறே. |
1 |
1681 |
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி நினைப்பின் அதனின் நிழலையுங் காணார் வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார் புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. |
2 |
1682 |
ஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள் வாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந் தாய்முலை யாவ தறியார் தமருளோர் ஊனிலை செய்யும் உருவிலி தானே. |
3 |
1683 |
வாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து நீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய் நீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின் பேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. |
4 |
1684 |
பஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை யஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம் விஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற் பஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. |
5 |
1685 |
தவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ் சிவத்திடை நின்றது தேவர் அறியார் தவத்திடை நின்றறி யாதவர் எல்லாம் பவத்திடை நின்றதோர் பாடது வாமே. |
6 |
1686 |
கன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும் தின்றலுஞ் சுவைத்தலுந் தீமைசெய்தலும் பின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும் என்றிவை இறைபால் இயற்கை அல்லவே. |
7 |
1687 |
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவு மாட்டார் கடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே. |
8 |
1688 |
வைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப் பெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத் தத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு பித்தான சீடனுக் கீயப் பெறாதானே. |
9 |
1689 |
மன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான் துன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான் பின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான் அன்னிய னாவன் அசற்சீட னாமே. |
10 |
14. பக்குவன்
1690 |
தொழுதறி வாளர் கருதிகண் ணாகப் பழுதறியாத பரம குருவை வழியறி வார்நல் வழியறி வாளர் அழிவறி வார்மற்றை யல்லா தவரே. |
1 |
1691 |
பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன் சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. |
2 |
1692 |
பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச் சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. |
3 |
1693 |
கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று தெள்ளி யறியச் சிவபதந் தானே. |
4 |
1694 |
சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு ஓதிய நாளே உணர்வது தானென்று நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது ஆதியும் ஏதும் அறியகி லானே. |
5 |
1695 |
தொழிலார மாமணித் தூய்தான சிந்தை எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே விழலார் விறலாம் வினையது போகக் கழலார் திருவடி கண்டரு ளாமே. |
6 |
1696 |
சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி சாத்தவல் லானவன் சற்சீட னாமே. |
7 |
1697 |
சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச் சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப் பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச் சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. |
8 |
1698 |
அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா அடிவைத்த மாமுடி மாயப் பிறவி அடிவைத்த காய அருட்சத்தி யாலே அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. |
9 |
1699 |
சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல வாராத காதல் குருபரன் பாலாகச் சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன் ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. |
10 |
1700 |
உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக் குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண் டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. |
11 |
1701 |
இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக் குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச் சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. |
12 |
1702 |
வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால் வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. |
13 |
1703 |
சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல் அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. |
14 |
ஆறாம் தந்திரம் முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆறாம் தந்திரம் - பத்தாம் திருமுறை - திருமந்திரம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவடி, செய்வார், அவ்வுல, மோனங்கை, சித்தஞ், தவத்திடை, விளைவறி, முத்திரை, சிவஞானி, சிவமான, குருடுங், குருவே, மாட்டார், கண்டேன், குருவினைக், வார்பண்டை, தோர்வேடம், திரிவர், சிவனரு, தவம்வேண்டா, வாறும், எம்மிறை, பிறப்பினை, இன்பப், நந்தியே, சிவனருள், சமாதிகை, தத்துவ, அண்ணல், வேண்டாஞ்