முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 9.01. கணம்புல்ல நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 9.01. கணம்புல்ல நாயனார் புராணம்

9.01. கணம்புல்ல நாயனார் புராணம்
4055 |
திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கி பெருக்கு வட வெள் ஆற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில் வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும் இருக்கு வேளூர் என்பது இவ் உலகில் விளங்கும் பதி | 9.1.1 |
4056 | அப்பதியில் குடி முதல்வர்க்கு அதிபராய் அளவு இறந்த எப்பொருளும் முடிவு அறியா எய்து பெரும் செல்வத்தார் ஒப்பில் பெருங்குணத்தினால் உலகில் மேம்பட நிகழ்ந்தார் மெய் பொருளாவன ஈசர் கழல் என்னும் விருப்பு உடையார் | 9.1.2 |
4057 | தாவாத பெரும் செல்வம் தலை நின்ற பயன் இது என்று ஓவாத ஒளிவிளக்குச் சிவன் கோயிலலுள் எரித்து நா ஆரப் பரவுவார் நல்குரவு வந்து எய்தத் தேவதி தேவர்பிரான் திருத்தில்லை சென்று அடைந்தார் | 9.1.3 |
4058 | தில்லை நகர் மணி மன்றுள் ஆடுகின்ற சேவடிகள் அல்கிய அன்புடன் இறைஞ்சி அமர்கின்றார் புரம் எரித்த வில்லியார் திருப் புலீச் சரத்தின் கண் விளக்கு எரிக்க இல்லிடை உள்ளன மாறி எரித்துவரும் அந்நாளில் | 9.1.4 |
4059 | ஆய செயல் மாண்டதற்பின் அயல் அவர் பால் இரப்பஞ்சி காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து மேய விலைக்குக் கொடுத்து விலைப் பொருளால் நெய்மாறித் தூயதிரு விளக்கு எரித்தார் துளக்கறு மெய்த் தொண்டனார் | 9.1.5 |
4060 | இவ்வகையால் திருந்து விளக்கு எரித்து வர அங்கு ஒரு நாள் மெய் வருந்தி அரிந்து எடுத்துக் கொடுவந்து விற்கும்புல் எவ்விடத்தும் விலை போகாது ஒழியவும் இப்பணி ஒழியார் அவ்வரிபுல் வினைமாட்டி அணி விளக்காயிட எரிப்பார் | 9.1.6 |
4061 | முன்பு திருவிளக்கு எரிக்கும் முறையாமம் குறையாமல் மென் புல்லும் விளக்கு எரிக்கப் போதாமை மெய்யான அன்பு புரிவார் அடுத்த விளக்குத் தம் திருமுடியை என்புருக மடுத்து எரித்தார் இருவினையின் தொடக்கு எரித்தார் | 9.1.7 |
4062 | தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப் பொங்கிய அன்புடன் எரித்த பொருவில் திருத்தொண்டருக்கு மங்கலமாம் பெரும் கருணை வைத்து அருளச் சிவலோகத்து எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது இறைஞ்சி அமர்ந்திருந்தார் | 9.1.8 |
4063 | மூரியார் கலி உலகின் முடி இட்ட திருவிளக்குப் பேரியாறு அணிந்தாருக்கு எரித்தார் தம் கழல் பேணி வேரியார் மலர்ச் சோலை விளங்கு திருக்கடவூரில் காரியார் தாம் செய்த திருத்தொண்டு கட்டுரைப்பாம் | 9.1.9 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
9.01. கணம்புல்ல நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - எரித்தார், விளக்கு, பெரும்