முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 8.04. அதிபத்த நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 8.04. அதிபத்த நாயனார் புராணம்

8.04. அதிபத்த நாயனார் புராணம்
3992 |
மன்னி நீடிய செங்கதிரவன் வழி மரபின் தொன்மையாம் முதல் சோழர் தம் திருக்குலத்து உரிமைப் பொன்னி நாடு எனும் கற்பகப் பூங்கொடி மலர் போல் நன்மை சான்றது நாகப் பட்டினத் திரு நகரம் | 8.4.1 |
3993 | தாம நித்திலக் கோவைகள் சரிந்திடச் சரிந்த தேமலர்க் குழல் மாதர் பந்து ஆடும் தெற்றிகள் சூழ் காமர் பொற் சுடர் மாளிகைக் கரும் கடல் முகந்த மாமுகில் குலம் மலை என ஏறுவ மருங்கு | 8.4.2 |
3994 | பெருமையில் செறி பேரொலி பிறங்கலின் நிறைந்து திருமகட்கு வாழ் சேர் இடம் ஆதலில் யாவும் தருதலின் கடல் தன்னினும் பெரிது எனத் திரை போல் கரி பரித் தொகை மணி துகில் சொரிவதாம் கலத்தால் | 8.4.3 |
3995 | நீடு தொல் புகழ் நிலம் பதினெட்டினும் நிறைந்த பீடு தங்கிய பல பொருள் மாந்தர்கள் பெருகிக் கோடி நீள் தனக் குடியுடன் குவலயம் காணும் ஆடி மண்டலம் போல்வது அவ்வணி கிளர் மூதூர் | 8.4.4 |
3996 | அந்நெடும் திரு நகர் மருங்கு அலை கடல் விளிம்பில் பன்னெடும் திரை நுரை தவழ் பாங்கரின் ஞாங்கர் மன்னும் தொன்மையின் வலை வளத்து உணவினில் மலிந்த தன்மை வாழ்குடி மிடைந்தது தட நுளைப் பாடி | 8.4.5 |
3997 | புயல் அளப்பன என வலை புறம்பு அணை குரம்பை அயல் அளப்பன மீன் விலைப் பசும் பொனின் அடுக்கல் வியல் அளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த கயல் அளப்பன பரத்தியர் கரு நெடும் கண்கள் | 8.4.6 |
3998 | உணங்கல் மீன் கவர் உறு நசைக் குருகு உடன் அணைந்த கணம் கொள் ஓதிமம் கரும் சினைப் புன்னையங் கானல் அணங்கு நுண்ணிடை நுளைச்சியர் அசை நடைக் கழிந்து மணம் கொள் கொம்பரின் மருங்கு நின்று இழிய மருளும் | 8.4.7 |
3999 | வலை நெடும் தொடர் வடம் புடை வலிப்பவர் ஒலியும் விலை பகர்ந்து மீன் குவை கொடுப்பவர் விளி ஒலியும் தலை சிறந்த வெள் வளை சொரிபவர் தழங்கு ஒலியும் அலை நெடுங்கடல் அதிர் ஒலிக்கு எதிர் ஒலி அனைய | 8.4.8 |
4000 | அனையதாகிய அந்நுளைப் பாடியில் அமர்ந்து மனை வளம் பொலி நுளையர் தம் குலத்தினில் வந்தார் புனை இளம் பிறை முடி அவர் அடித்தொண்டு புரியும் வினை விளங்கிய அதி பத்தர் என நிகழ் மேலோர் | 8.4.9 |
4001 | ஆங்கு அன்பர் தாம் நுளையர் தம் தலைவராய் அவர்கள் ஏங்கு தெண் திரைக் கடல் இடைப் பலபட இயக்கிப் பாங்கு சூழ்வலை வளைத்து மீன் படுத்து முன் குவிக்கும் ஓங்கு பல் குவை உலப்பில உடையராய் உயர்வார் | 8.4.10 |
4002 | முட்டில் மீன் கொலைத் தொழில் வளத்தவர் வலை முகந்து பட்ட மீன்களில் ஒரு தலை மீன் படும் தோறும் நட்டம் ஆடிய நம்பருக்கு என நளிர் முந்நீர் விட்டு வந்தனர் விடாத அன்பு உடன் என்றும் விருப்பால் | 8.4.11 |
4003 | வாகு சேர் வலை நாள் ஒன்றில் மீன் ஒன்று வரினும் ஏக நாயகர் தங்கழற் கென விடும் இயல்பால் ஆகும் நாளில் அநேக நாள் அடுத்து ஒரு மீனே மேக நீர் படி வேலையில் பட விட்டு வந்தார் | 8.4.12 |
4004 | மீன் விலைப் பெருகு உணவினில் மிகு பெரும் செல்வம் தான் மறுத்தலின் உணவு இன்றி அரும் கிளை சாம்பும் பான்மை பற்றியும் வருந்திலர் பட்ட மீன் ஒன்று மான் மறிக் கரத்தவர் கழற்கு என விட்டு மகிழ்ந்தார் | 8.4.13 |
4005 | சால நாள் இப்படி வரத் தாம் உணவு அயர்த்து கோல மேனியும் தளரவும் தம் தொழில் குறையாச் சீலமே தலை நின்றவர் தம் திறம் தெரிந்தே ஆலம் உண்டவர் தொண்டர் அன்பு எனும் அமுது உண்பார் | 8.4.14 |
4006 | ஆன நாள் ஒன்றில் அவ்வொரு மீனும் அங்கு ஒழித்துத் தூ நிறப் பசும் கனக நல் சுடர் நவமணியால் மீன் உறுப்பு உற அமைத்து உலகு அடங்கலும் விலையாம் பான்மை அற்புதப் படியது ஒன்று இடுவலைப் படுத்தார் | 8.4.15 |
4007 | வாங்கு நீள் வலை அலைகடல் கரையில் வந்து ஏற ஓங்கு செஞ்சுடர் உதித்து என உலகெலாம் வியப்பத் தாங்கு பேரொளி தழைத்திடக் காண்டலும் எடுத்துப் பாங்கு நின்றவர் மீன் ஒன்று படுத்தனம் என்றார் | 8.4.16 |
4008 | என்று மற்று உளோர் இயம்பவும் ஏறு சீர்த் தொண்டர் பொன் திரள் சுடர் நவமணி பொலிந்தமீன் உறுப்பால் ஒன்றும் மற்றிது என்னை ஆள் உடையவர்க்கு ஆகும் சென்று பொன் கழல் சேர்க எனத் திரை யொடும் திரிந்தார் | 8.4.17 |
4009 | அகில லோகமும் பொருள் முதற்றாம் எனும் அளவில் புகலும் அப்பெரும் பற்றினைப் புரை அற எறிந்த இகலில் மெய்த் திருத் தொண்டர்முன் இறைவர் தாம் விடைமேல் முகில் விசும்பிடை அணைந்தார் பொழிந்தனர் முகைப்பூ | 8.4.18 |
4010 | பஞ்ச நாதமும் எழுந்தன அதிபத்தர் பணிந்தே அஞ்சலிக் கரம் சிரம் மிசை அணைத்து நின்று அவரை நஞ்சு வாண்மணி மிடற்று அவர் சிவலோகம் நண்ணித்து அஞ்சிறப்புடை அடியர் பாங்கு உறத்தலை அளித்தார் | 8.4.19 |
4011 | தம் மறம் புரி மரபினில் தகும் பெருந் தொண்டு மெய்ம்மையே புரி அதிபத்தர் விளங்கும் தாள் வணங்கி மும்மையாகிய புவனங்கள் முறைமையில் போற்றும் செம்மை நீதியார் கலிக்கம்பர் திருத்தொண்டு பகர்வாம் | 8.4.20 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
8.04. அதிபத்த நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விட்டு, பாங்கு, ஒலியும், அளப்பன, மருங்கு