முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் » 12.05. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
பன்னிரண்டாம் திருமுறை - பெரிய புராணம் - 12.05. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்

12.05. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம்
4215 |
எருக்கத்தம் புலியூர் மன்னி வாழ்பவர் இறைவன் தன் சீர் திருத்தகும் யாழில் இட்டுப் பரவுவார் செழுஞ்சோணாட்டில் விருப்புறு தானம் எல்லாம் பணிந்து போய் விளங்கும் கூடல் பருப்பதச் சிலையார் மன்னும் ஆலவாய் பணியச் சென்றார் | 12.5.1 |
4216 | ஆலவாய் அமர்ந்தார் கோயில் வாயிலை அடைந்து நின்று பாலை ஈர் ஏழு கோத்த பண்ணினில் கருவி வீக்கிக் காலம் ஆதரித்த பண்ணில் கை பல முறையும் ஆராய்ந்து ஏவலார் குழலாள் பாகர் பாணிகள் யாழில் இட்டார் | 12.5.2 |
4217 | மற்றவர் கருவிப் பாடல் மதுரை நீடு ஆலவாயில் கொற்றவன் திருவுள்ளத்துக் கொண்டு தன் தொண்டர்க்கு எல்லாம் அற்றைநாள் கனவில் ஏவ அருள் பெரும் பாணனாரைத் தெற்றினார் புரங்கள் செற்றார் திரு முன்பு கொண்டு புக்கார் | 12.5.3 |
4218 | அன்பர்கள் கொண்டு புக்க பொழுதினில் அரிவை பாகன் தன் பெரும் பணியாம் என்று தமக்கு மெய் உணர்த்தலாலே மன் பெரும் பாணனாரும் மா மறை பாட வல்லார் முன்பு இருந்து யாழில் கூடல் முதல்வரைப் பாடுகின்றார் | 12.5.4 |
4219 | திரிபுரம் எரித்த வாறும் தேர்மிசை நின்ற வாறும் கரியினை உரித்த வாறும் காமனைக் காய்ந்தவாறும் அரி அயற்கு அரிய வாரும் அடியவர்க்கு எளிய வாறும் பரிவினால் பாடக் கேட்டுப் பரமனார் அருளினாலே | 12.5.5 |
4220 | அந்தரத்து எழுந்த ஓசை அன்பினில் பாணர் பாடும் சந்த யாழ் தரையில் சீதம் தாக்கில் வீக்கி அழியும் என்று சுந்தரப் பலகை முன்நீர் இடும் எனத் தொண்டர் இட்டார் செந்தமிழ் பாணனாரும் திரு அருள் பெற்றுச் சேர்ந்தார் | 12.5.6 |
4221 | தமனியப் பலகை ஏறித் தந்திரிக் கருவி வாசித்து உமையொரு பாகர் வண்மை உலகு எலாம் அறிய ஏத்தி இமையவர் போற்ற ஏகி எண்ணில் தானங்கள் கும்பிட்டு அமரர் நாடாளாது ஆரூர் ஆண்டவர் ஆரூர் சேர்ந்தார் | 12.5.7 |
4222 | கோயில் வாயில் முன் அடைந்து கூற்றம் செற்ற பெரும் திறலும் தாயின் நல்ல பெருங் கருணை அடியார்க்கு அளிக்கும் தண் அளியும் ஏயும் கருவியில் தொடுத்து அங்கு இட்டுப் பாடக் கேட்டு அங்கண் வாயில் வேறு வடதிசையில் வகுப்பப் புகுந்து வணங்கினார் | 12.5.8 |
4223 | மூலத் தானத்து எழுந்து அருளி இருந்த முதல்வன் தனை வணங்கிச் சாலக் காலம் அங்கு இருந்து தம்பிரான் தன் திரு அருளால் சீலத்தார்கள் பிரியாத திருவாரூரின் நின்றும் போய் ஆலத்தார்ந்த கண்டத்தார் அமரும் தானம் பல வணங்கி | 12.5.9 |
4224 | ஆழி சூழும் திருத் தோணி அமர்ந்த அம்மான் அருளாலே யாழின் மொழியாள் உமை ஞானம் ஊட்ட உண்ட எம்பெருமான் காழி நாடன் கவுணியர் கோன் கமல பாதம் வணங்குதற்கு வாழி மறையோர் புகலியினில் வந்தார் சந்த இசைப்பாணர் | 12.5.10 |
4225 | ஞானம் உண்டார் கேட்டு அருளி நல்ல இசை யாழ்ப் பெரும் பாணர்க்கு ஆன படியால் சிறப்பு அருளி அமரும் நாளில் அவர் பாடும் மேன்மை பதிகத்து இசை யாழில் இடப் பெற்று உடனே மேயபின் பானற் களத்தார் பெருமணித்தில் உடனே பரமர் தாள் அடைந்தார் | 12.5.11 |
4226 | வரும் பான்மையினில் பெரும் பாணர் மலர்த்தாள் வணங்கி வயல் சாலிக் கரும்பார் கழனித் திருநாவலூரில் சைவக் கலை மறையோர் அரும்பா நின்ற அணி நிலவும் பணியும் அணிந்தார் அருள் பெற்ற சுரும்பார் தொங்கல் சடையனார் பெருமை சொல்லல் உறுகின்றோம் | 12.5.12 |
திருச்சிற்றம்பலம்
தேடல் தொடர்பான தகவல்கள்:
12.05. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார் புராணம் - பன்னிரண்டாம் திருமுறை - திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பெரும், யாழில், வாறும், கொண்டு