விதூஷகன் சின்னுமுதலி
3
கலியாணம் ஆன புதிதில் பத்மாவதிக்குத்
தன் கணவனைப் பற்றி மிகவும் பெருமையா யிருந்தது. எல்லாரும் அவனைப் பற்றிப்
புகழ்ந்து பேசினார்கள். ஆனால் அவள் மட்டும் அவன் கூத்தைப் பார்க்கப்
போகாமலிருந்தாள். பார்க்கவேண்டு மென்னும் ஆவல் அவள் மனத்திற்குள் நிரம்பி
யிருந்தது. ஆனால் வெட்கம் தடை செய்தது. கடைசியாக ஒருநாள் பக்கத்து ஊரில்
கூத்துப் போட்டபோது அயல் வீட்டுப் பெண்கள் வற்புறுத்தி அவளைக் கூட்டிச்
சென்றார்கள். கூட்டத்தின் ஓரத்தில் உட்கார்ந்து பத்மாவதி தன் புருஷன்
மேடைக்கு வருவதை ஆவலுடன் எதிர் நோக்கி யிருந்தாள்.
கோணங்கிக் குல்லாவும், விகாரமான உடைகளும் தரித்து, கூத்தாடிக்கொண்டு சின்னுமுதலி மேடைக்கு வந்ததைப் பார்த்ததும் பத்மாவதிக்கு 'பகீர்' என்றது. அவன் செய்த கோரணி ஒவ்வொன்றும் பத்மாவதிக்கு அளவிலாத மனவேதனையை அளித்தது. அசங்கியமாகவும், அர்த்தமில்லாமலும் அவன் பேசிய பேச்சு அவளுக்கு நாராசமா யிருந்தது. இதற்கிடையில் மேடைக்கு மோகினிப் பெண் வந்தாள். விதூஷகன் அவளிடம் சென்று சிங்காரப் பேச்சுகள் பேசலானான். "கண்ணே பெண்ணே" என்று ஏதேதோ பிதற்றினான். பல்லைக் காட்டி இளித்தான். மோகினிப் பெண் அவன் கன்னத்தில் ஓர் இடி இடித்தாள். எல்லாரும் 'கொல்'லென்று சிரித்தார்கள். சின்னுமுதலியும் சிரித்தான். பத்மாவதிக்குக் கண்ணில் நீர் ததும்பிற்று. அவள் மெதுவாய் எழுந்திருந்து தன் ஊரை நோக்கி நடந்தாள். கண்ணீர்விட்டு அழுதுகொண்டே போனாள்.
இதற்குப் பிறகு, கூத்தாடப் போக வேண்டாமென்றும், குடிக்க வேண்டாமென்றும் அவள் சின்னுமுதலிக்கு எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். அவன் கேட்கவில்லை. அவன் ஒரு வேளை கேட்பதாயிருந்தாலும் ஊரார் அதற்கு இடங்கொடுக்கவில்லை. இவ்வாறு நாள் போய்க்கொண்டிருந்தது. அவனைச் சீர்திருத்தலாம் என்ற எண்ணத்தையே பத்மாவதி விட்டுவிட்டாள். தன் குழந்தைகளே கதி என்றிருந்தாள். வீட்டுக்கு வந்தால் அவனுக்குச் சோறு போடுவாள். மற்றபடி அவன் எங்கே போகிறான், என்ன செய்கிறான் என்று கேட்பதில்லை. அவனும் எப்போதும் ஊர் ஊராய்ச் சுற்றிக்கொண்டிருந்தான். ஊரிலிருந்தால் சாப்பாட்டு வேளைக்கு வருவான். உடனே போய்விடுவான். குடித்துவிட்டு வீட்டுக்கு மட்டும் வருவதில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விதூஷகன் சின்னுமுதலி - Vidhushagan Chinnumudhali - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அவன், அவள், மேடைக்கு, யிருந்தது