வீடு தேடும் படலம்
2
தேனாம்பேட்டையில் செல்லாக்காசுச் செட்டியார்
சந்தில் எழுபத்தேழாம் நம்பர் வீடு பூட்டிக் கிடந்தது. வெகு காலமாக அதில்
யாரும் குடியில்லை என்பதும் தெளிவாகத் தெரிந்தது. அந்த வீட்டின் சொந்தக்காரர்
எங்கே இருக்கிறார் என்று அக்கம்பக்கத்தில் உள்ளவர்களைக் கடோ த்கஜராயர்
விசாரித்தார். அவர்கள் வீட்டுச் சொந்தக்காரரின் விலாசத்தை சொல்லிவிட்டு,
"இந்த வீட்டுக்குக் குடி வந்தவர் யாரும் இரண்டு நாளைக்கு மேல் இருப்பதில்லை"
என்ற செய்தியையும் தெரிவித்தார்கள். ராயர் காரணம் என்ன என்று கேட்டதற்கு
முதலில் தயங்குவதுபோல் தயங்கிவிட்டு, பிறகு "இராத்திரியில் அந்த வீட்டில்
பேய்கள் நடமாடுவதாகக் கேள்வி!" என்று சொன்னார்கள்.
"இவ்வளவுதானே! என்னைக் கண்டால் பேய்கள் எல்லாம் பறந்துவிடும்!" என்று கடோ த்கஜராயர் சொல்லிவிட்டு வீட்டின் சொந்தக்காரரிடம் போய், வாடகைக்கு வீடு வேண்டும் என்றும், வீட்டின் சாவி தரும்படியும் கேட்டார்.
"எத்தனையோ பேர் இம்மாதிரி வந்து வீட்டுச் சாவி கேட்டு வாங்கிக் கொண்டு போனார்கள். மறுநாளே சாவி திரும்பி வந்துவிடும்! நீரும் அப்படித்தான் செய்யப் போகிறீர். என்னத்திற்கு வீண் சிரமம்?" என்றான் வீட்டுக்காரன்.
"எத்தனை நாளாக இப்படி அந்த வீடு காலியாக இருக்கிறது?" என்று கடோ த்கஜராயர் கேட்டார்.
"நாள் கணக்குச் சொல்ல முடியாது. மூன்று வருஷத்திற்கு மேலாகிறது."
"என்ன வாடகை கேட்கிறீர்கள்?"
"இந்த மாதிரி வீட்டுக்கு, இப்போது இருக்கும் வீடு கிராக்கியில், முந்நூறு ரூபாய் வாடகை வரும். எனக்கு இந்தப் பட்டணத்தில் ஆறு வீடு இருக்கிறது. இருநூறு, இருநூற்றைம்பது, முந்நூறு வரையில் வாடகை வாங்குகிறேன். இந்த வீட்டை நீர் நிஜமாக எடுத்துக் கொள்வதாயிருந்தால் எண்பது ரூபாய்க்குக் கொடுக்கிறேன்."
"சரி! இப்போதே ஒரு மாத வாடகை அட்வான்ஸு தருகிறேன். வாங்கிக் கொள்கிறீரா?" என்றார் ராயர்.
"அது எப்படி முடியும்? வீட்டுக் கண்ட்ரோல் அதிகாரி உத்தரவு போட்டால் அல்லவா நான் வாடகை அட்வான்ஸு வாங்கிக் கொள்ளலாம்!"
"சரி; வீட்டை எனக்கு வாடகைக்குக் கொடுக்க உமக்குச் சம்மதம் என்று எழுதிக் கொடும். மற்றதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."
"அப்புறம் பேச்சு மாறக்கூடாது. எல்லாவற்றுக்கும் ஒரு நாள், இரண்டு நாள் அந்த வீட்டில் இருந்து பார்த்து விடுங்கள். அப்புறம் என் பேரில் புகார் சொல்ல வேண்டாம்."
"வீட்டில் பேய் நடமாடுகிறது என்ற விஷயத்தைப் பற்றித்தானே சொல்கிறீர்?"
"ஆமாம்; ஊரில் இருக்கிறவர்களுக்கு வேறு என்ன வேலை? இப்படி ஏதாவது கதை கட்டி விடுகிறார்கள். அதனால் பல வருஷமாய் எனக்கு வாடகை நஷ்டம். நீங்கள் வீட்டை எடுத்துக் கொள்வதாயிருந்தால்..."
"இருந்தால் என்கிற பேச்சே கிடையாது. சாவியை இப்படிக் கொடும். பேய்களுக்கு ஆச்சு, எனக்கு ஆச்சு! ஒரு கை பார்த்து விடுகிறேன்."
சாவியை வாங்கிக் கொண்டு அஞ்சா நெஞ்சரான கடோ த்கஜராவ் புறப்பட்டார். அன்று இரவே விஷயத்தைக் கீறிப் பார்த்து முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்தார். திருவல்லிக்கேணியில் அவருடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் டெலிபோன் இருந்தது. அந்த வீட்டுக்காரர்களைக் கூப்பிட்டு, "தயவு செய்து என் வீட்டில் சொல்லி விடுங்கள். நான் இராத்திரி முக்கிய காரியமாக ஒரு சினேகிதர் வீட்டில் தங்க வேண்டியிருக்கிறது" என்று தெரியப்படுத்தினார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
வீடு தேடும் படலம் - Veedu Thedum Padalam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வீட்டில், வாடகை, அந்த, வீடு, வாங்கிக், எனக்கு, வீட்டை, பார்த்து, சாவி, வீட்டின், த்கஜராயர், என்ன, நாள்