தூக்குத் தண்டனை
3
மதகுப்பட்டிக் கலக வழக்கில் முதலாவது
எதிரி திருமலை என்னும் இளைஞன். இவன் பேரில் மொத்தம் ஒன்பது செக்ஷன்கள்
பிரயோகிக்கப்பட்டன. தண்டவாளத்தை பெயர்த்தது முதற்கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குத்
தீ வைத்த வரையில் பல குற்றங்கள் சுமத்தப்பட்டன. திருமலையின் சார்பாகப்
பிரபல வக்கீல்கள் வைத்துப் பலமான எதிர் வழக்கும் ஆடப்பட்டது. திருமலை
அவனுடைய பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. மதகுப்பட்டிக்கே அவன் செல்லப்பிள்ளை.
நல்ல அறிவாளி; முகவெட்டும் வாக்குச் சாதுர்யமும் உள்ளவன். சிறந்த ஒழுக்கம் படைத்தவன்; பொதுக் காரியங்களில் அளவற்ற ஊக்கமுடையவன். இத்தகைய குணங்களினால் அவன் மதகுப்பட்டி வாசிகளின் அன்பையும் மதிப்பையும் கவர்ந்திருந்தான்.
காங்கிரஸ் கமிட்டியானாலும் சரி, சங்கீதசபையானாலும் சரி, பழைய மாணவர் சங்கம் - கூட்டுறவு பண்டக சாலை - இலவச வாசக சாலை - எதுவானாலும் சரி, திருமலைக்கு ஒரு முக்கியமான நிர்வாகப் பொறுப்பு இருந்தே தீரும்.
எந்தப் பொதுக் காரியத்துக்கானாலும் பணம் வசூலிப்பதற்குத் திருமலை கிளம்பினால் ஒரே சுற்றில் வேண்டிய பணத்தைச் சேர்த்துக் கொண்டு கிளம்பி விடுவான். வேறு யார் போனாலும் மதகுப்பட்டி வாசிகளிடம் பணம் கிளம்புவது சிரமமான காரியமாயிருக்கும்.
இம்மாதிரியெல்லாம் பொதுக்காரியங்களில் திருமலை ஈடுபட்டிருந்தமையால் மதகுப்பட்டி அதிகாரிகளுக்கும் அவனுக்கும் எப்போதும் சஷ்டாஷ்டமாகவே இருந்தது.
அப்படிப்பட்ட திருமலைதான் மேற்படி கலக வழக்கில் முதலாவது எதிரி. திருமலையின் சார்பாக சொல்லப்பட்ட எதிர் வழக்கு என்னவென்றால், மதகுப்பட்டியில் கலகம் நடந்த தினம் அவன் ஊரிலேயே இல்லை. அன்று சாயங்காலந்தான் மதகுப்பட்டிக்கு வந்தான் என்பது.
இதற்குத் திருமலையின் சார்பாகச் சாட்சி கூறியவர் உபய வேதாந்தஸார உபந்நியாச சக்கரவர்த்தி சடகோபாச்சாரிய ஸ்வாமிகள் என்பவர். அன்று சாயங்காலம் அவர் ஸ்ரீரங்கத்தில் உபந்நியாசம் செய்துவிட்டு ரயிலுக்கு வந்ததாகவும், ரயில் தவறி அங்கே இருந்த திருமலையைப் பார்த்ததாகவும், அந்தப் பிள்ளையாண்டானைத் தமக்கு ஏற்கனவே தெரியுமென்றும், இரண்டு பேரும் வெகு நேரம் வரையில் பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறினார். "எதைப் பற்றிப் பேசினீர்கள்?" என்று கேட்டதற்கு "முக்கியமாக திவ்யப் பிரபந்தப் பாசுரங்களில் உள்ள கவிதைச் சுவையையும் பக்திப் பெருக்கையும் பற்றிப் பேசினோம்" என்றார்.
"அதைத் தவிர வேறு எந்த விஷயத்தைப் பற்றியாவது பேசினீர்களா?" என்று திருமலையின் வக்கீல் கேட்டார்.
"தேசத்தில் அப்போது நடந்து கொண்டிருந்த விபரீதமான காரியங்களைப் பற்றியும் பேசினோம்."
"விபரீத காரியங்கள் என்றால் என்ன?"
"ரயில் தண்டவாளத்தைப் பெயர்ப்பது முதலிய காரியங்கள்."
"அதைப் பற்றி என்ன பேசினீர்கள்?"
"ரயில் பிரயாணம் ரொம்பவும் அபாயகரமாகப் போனது பற்றிப் பேசினோம். 'இதனாலெல்லாம் என்ன பிரயோஜனம் ஏற்படப் போகிறது? நம்முடைய ஜனங்கள் தானே கஷ்டப்படுவார்கள்? ஒரு ரயில் வண்டி கவிழ்ந்தால், எத்தனை உயிர்ச்சேதம் ஏற்படும்? எத்தனை குடும்பங்கள் துன்பமடையும்' என்று நான் சொன்னேன். திருமலை என்னுடைய அபிப்ராயத்தை முழுவதும் ஆமோதித்தான். தந்தியறுப்பது, தண்டவாளம் பெயர்ப்பது முதலியவை பலாத்காரக் காரியங்கள் தான் என்றும், மகாத்மா காந்தி அந்தக் காரியங்களை ஒருநாளும் அனுமதித்திருக்க மாட்டாரென்றும், ஐந்தாம் படைக்காரர்கள் அவருடைய பெயரைப் பொய்யாக உபயோகப்படுத்துகிறார்கள் என்றும் சொன்னான்."
இந்தச் சமயத்தில் கவர்ன்மெண்ட் தரப்பு வக்கீல் ஆட்சேபித்து, மேற்படி அபிப்ராயங்கள் எல்லாம் சாட்சியம் ஆகாதென்றும், அவைகளைப் பதிவு செய்யக் கூடாதென்றும் கூறினார். இத்துடன் சடகோபாச்சாரிய ஸ்வாமியின் சாட்சியம் முடிந்தது.
சடகோபாச்சாரி ஸ்வாமியின் சாட்சியத்துக்கு நேர் மாறாகப் போலீஸ் தரப்புச் சாட்சிகள் சொன்னார்கள். போலீஸ் ஸ்டேஷனைச் சேர்ந்த கூட்டத்தில் திருமலையும் இருந்தானென்றும், அவன் போலீஸ் காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு, மண்ணெண்ணெய் டின்னை வெளியிலிருந்து வாங்கி உள்ளே இருந்தவர்களிடன் கொடுத்ததைக் கண்ணால் பார்த்ததாகவும் சொன்னார்கள்.
கேஸ் விசாரணையெல்லாம் சாங்கோபாங்கமாக நடந்தது. நூற்றுக்கணக்கான சாட்சிகள் விசாரிக்கப்பட்டார்கள். கடைசியில் தீர்ப்புக் கூறும் நாள் வந்தது.
முதல் எதிரி திருமலை சம்பந்தமாகத் தீர்மானம் செய்வதில் தான் ஜட்ஜ் அஷ்டோ த்தரமய்யங்காருக்கு ரொம்பவும் கஷ்டம் ஏற்பட்டது. அவருக்கும் அவருடைய மனசாட்சிக்கும் பெரிய போராட்டம் நடந்தது. சடகோபாச்சாரிய ஸ்வாமிகளின் சாட்சியம் உண்மையாகவே தோன்றிற்று. அம்மாதிரி ஒரு சம்பவத்தை அவர் கற்பனை செய்திருக்க முடியாது. அவ்வளவு பச்சையான பொய் சொல்லக் கூடியவரல்ல; சொல்ல வேண்டிய அவசியமும் அவருக்கில்லை. ஆனால் போலீஸ் தரப்பின் திட்டமான சாட்சியத்தை நிராகரிப்பது - 'பெரிய இடத்து' அதிருப்திக்கு ஆளாக நேரிடும். அடுத்த பட்டமளிப்பில் தமக்கு ஸி.ஐ.இ. பட்டம் வருமென்று அய்யங்கார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். கேவலம் இதற்காக வேண்டி ஒரு காரியம் செய்யப் போவதில்லை; ஆனால் என்ன முகாந்திரத்தைக் கொண்டு ஐந்து போலீஸ்காரர்களின் சாட்சியத்தை நிராகரித்து ஒரு வைஷ்ணவ உபந்நியாசகரின் சாட்சியத்தை ஒப்புக் கொள்வது? - இப்படிச் செய்தால் தம் பேரிலேயே ஒரு வேளை சந்தேகம் ஏற்பட்டாலும் ஏற்படலாமல்லவா? ஏன் லஞ்சம் வாங்கிக் கொண்டு, விடுதலை செய்ததாகச் சொன்னாலும் சொல்வார்கள்.
பார்க்கப் போனால், ஜட்ஜுனுடைய கடமை என்ன? கோர்ட்டில் தாக்கல் ஆகியிருக்கும் சாட்சியத்தைக் கொண்டு தானே, ஜட்ஜ் தீர்ப்புச் சொல்ல வேண்டும்? எல்லாம் வல்ல தெய்வத்தின் சாட்சியாகத்தான் போலீஸ்காரர்களும் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் - அவர்கள் எல்லாம் பொய் சொல்லியிருக்கிறார்கள் - சடகோபாச்சாரியார் மட்டும் தான் நிஜம் சொன்னார் என்று தீர்மானிப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது?
இவ்விதமெல்லாம் அஷ்டோ த்தரமய்யங்காரின் மனதில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. கடைசியில் போலீஸ் சாட்சிதான் ஜயமடைந்தது!
மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனையும், பன்னிரெண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு இரண்டு வருஷம் முதல் பத்து வருஷம் வரையில் சிறைவாசமும் அளிக்கப்பட்டது.
துக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரில் திருமலையும் ஒருவன்.
தீர்ப்புச் சொல்லப்பட்ட அன்றைக்குக் கோர்ட்டில் திருமலையின் தகப்பனாரும் தாயாரும் வந்திருந்தார்கள். சடகோபாச்சாரியாரின் சாட்சியத்தின் பேரில் திருமலைக்கு விடுதலை கிடைத்துவிடலாமென்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அல்லது சிறைவாச தண்டனையோடாவது போகுமென்று நம்பினார்கள். இதற்கு மாறாக, தூக்குத் தண்டனை என்று கேட்டதும், திருமலையின் தாயார் அங்கேயே பிரக்ஞை தப்பி விட்டாள். திருமலையின் தகப்பனார் "அடேய் திருமலை! அடேய் திருமலை! எங்கேடா போய்விட்டாய்?" என்று கதறிக் கொண்டு சாலையோடு நெறிக் கெட்டு ஓடத் தொடங்கினார்.
திருமலையின் தங்கை கர்ப்பமாயிருந்தாள். தீர்ப்பைக் கேட்டதும், அவளுக்குக் குறைபிரசவம் ஆகி ஆஸ்பத்திரியில் கொண்டு போட்டார்கள். ஐந்தாறு நாளைக்கெல்லாம் அவள் கண்ணை மூடினாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தூக்குத் தண்டனை - Thookku Thandanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - திருமலை, திருமலையின், கொண்டு, என்ன, போலீஸ், ரயில், அவன், சாட்சியம், காரியங்கள், தான், சாட்சியத்தை, எல்லாம், சடகோபாச்சாரிய, வரையில், பேரில், மதகுப்பட்டி, எதிரி, பற்றிப், பேசினோம்