திருடன் மகன் திருடன்
5
தீபாவளிக்கு முதல் நாள் ராத்திரி ஒரே
கொண்டாட்டமாயிருந்தது. பாலனும், சீனுவும், அம்புலுவும் வீட்டுக்குள்ளே
வளைய வளைய வந்து கூத்தாடினார்கள். அம்மாவுக்குக் காரியம் செய்ய முடியாமல்
அடித்தார்கள். பட்டாசுக் கட்டையும், மத்தாப்பு பெட்டியையும் சுட்டு விடாமல்
தொட்டுத் தொட்டுப் பார்த்தார்கள். ஜானகி செய்த பணியாரங்களைக் கூடக் கொஞ்சம்
ருசி பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்! தீபாவளிப் பட்சணங்களைத் தீபாவளியன்று
காலையிலேதானே சாப்பிட வேண்டும்.
குழந்தைகள் படுத்துக் கொள்ளும் போது மணிபத்து அடித்து விட்டது. அதற்கு அரை மணிக்குப் பிறகு ஜானகியும் வந்து படுத்துக் கொண்டாள். தூங்கும் குழந்தைகளின் பால்வடியும் முகங்களை ஒரு தடவை பார்த்துவிட்டு, விளக்கைச் சிறிதாக்கி ஒரு மூலையில் மறைத்து வைத்தாள். காலையில் சீக்கிரமாக எழுந்திருப்பதற்காக இப்போது சீக்கிரமாக தூங்க விரும்பினாள். ஆனால் தூக்கம் என்னவோ வரவில்லை. இவ்வளவு சமர்த்தான குழந்தைகளைப் பெற்ற தகப்பன் சீர்கெட்டுப் போய்ச் சிறையில் இருப்பதை நினைத்து மனம் உடைந்தாள்.
பாலன் எழுந்து படுக்கையில் உட்கார்ந்தான். மனவேதனையில் ஆழ்ந்திருந்த ஜானகிக்கு அவனிடம் 'என்ன!' என்று கேட்கச் சட்டென்று நா எழவில்லை.
பாலன் இரண்டு பக்கமும் உற்றுப் பார்த்து விட்டு எழுந்து நின்றான். கூடத்து மூலையில் சுவரில் சாத்தியிருந்த ஏணியைச் சத்தம் செய்யாமல் எடுத்துக் கொஞ்ச தூரம் தள்ளி வைத்தான். பிறகு அதன் மேல் மெள்ள மெள்ள ஏறினான்.
பாலனுடைய செயலை ஜானகி அதிசயத்துடன் அரைக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். சட்டென்று அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலும் ஏதாவது கேட்டாலும், குழந்தை திடுக்கிட்டு ஏணியிலிருந்து விழுந்துவிடப் போகிறானே என்ற பயத்தினால் பேசாமலிருந்தாள். மூச்சுகூட மெதுவாக விட முயன்றாள்.
ஏணி உச்சியில் ஏறிய பாலன் அங்கே சுவரில் பொருத்தியிருந்த உத்திரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டான். அங்குமிங்கும் கையை வைத்துத் தடவினான். பிறகு அவன் அணிந்திருந்த முழங்கால் சட்டைப் பையிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான். அதைச் சுவரிலோ உத்திரத்திலோ வைத்தான். பிறகு சத்தம் செய்யாமல் கீழே இறங்கிப் படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான்.
ஜானகிக்கு என்னவெல்லாமோ தோன்றியது. தகப்பனைப்போல் பிள்ளையும் ஏதேனும் திருட்டுக் காரியம் செய்கிறானோ என்று எண்ணியபோது அவளுக்குச் சொல்ல முடியாத வேதனை உண்டாயிற்று. மாமா வீட்டிலிருந்து எதையாவது திருடிக் கொண்டு வந்திருப்பானோ என்று நினைத்தாள். அப்படியெல்லாம் இராது. அம்புலுவுக்கும் சீனுவுக்கும் தெரியாமல் பட்டாசுக் கட்டை ஒளித்து வைக்கிறான் போலிருக்கிறது என்று ஆறுதல் செய்து கொண்டாள். அசட்டுப் பிள்ளை! ஒன்று கிடக்க ஒன்று ஆகப் போகிறதே! பட்டாசு வெடிக்கும் சாமான் ஆயிற்றே. இந்த ஓட்டை வீட்டிலும் நம் அதிர்ஷ்டம் தீப்பிடித்துக் கொண்டால்? இதைப் பற்றிப் பாலனிடம் இப்போதே கேட்டு விட வேண்டியதுதான். ஆனால் என்னவென்று கேட்பது? எப்படி ஆரம்பிப்பது?
ஜானகி இவ்விதம் யோசித்துக் கொண்டிருந்தபோது பாலன் மறுபடியும் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கொண்டான். இது என்ன? குழந்தை விம்மி அழுகிறான் போலிருக்கிறது! விம்மலுக்கிடையில் 'அம்மா!' என்று கூப்பிடுகிறானே?
கூரைமேட்டில் கைவைத்த போது, அவனைத் தேள் கீள் கொட்டி விட்டதோ என்று பீதியுடன் ஜானகி திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்து, "பாலு, என்னடா? ஏண்டா அழுகிறாய்?" என்றாள்.
"சொப்பனம் கண்டேன் அம்மா!" என்றான் பாலன்.
"அது என்ன சொப்பனம்?" என்று அம்மா வற்புறுத்திக் கேட்டதன் பேரில், பாலன் சொன்னான்: "ஏதோ ஒரு தேவதை வந்ததுபோல் இருந்தது. அந்த தேவதை என்னைப் பார்த்து "பாலு! உங்கப்பா பேரிலே எல்லோரும் பொய்க் குற்றம் சாட்டினார்கள். அவர் பேரிலே ஒரு குற்றமும் இல்லை, உங்கள் அம்மா வைத்திருந்த பணம் உச்சி மேட்டில் உத்தரத்துப் பொந்தில் இருக்கிறது! என்று சொல்லிற்று. நான் அதை நம்பவில்லை அந்தத் தேவதை என்னைக் கையைப் பிடித்து ஏணியில் ஏற்றி அழைத்துக் கொண்டு போய் காட்டிற்று. உத்தரத்துப் பொந்தில் நிஜமாப் பணம் இருந்தது அம்மா!" என்று பாலன் சொல்லிவிட்டு மேலும் விம்மி அழுதான்.
ஜானகிக்கு எல்லாம் இப்போது விளங்கி விட்டது. பாலனுடைய தகப்பனாரைப் பற்றி அவன் மாமா வீட்டில் பேசிக் கொண்டிருந்தது குழந்தையின் காதில் விழுந்திருக்க வேண்டும். அப்பாவைக் காட்டிக் கொடுத்தது அம்மா என்கிற செய்தியும் தெரிந்திருக்க வேண்டும். அப்பா திருடவில்லை என்று ருசுப்படுத்துவதற்காக குழந்தை இப்படியெல்லாம் செய்திருக்கிறான்!
ஜானகிக்கு ஒரே பிரமிப்பாய் இருந்தது. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் பெருகிற்று. குழந்தைக்குப் பதில் சொல்ல அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுடன் பேசுவதற்கு வெட்கமாகக் கூட இருந்தது. ஆனால் பாலன் விடவில்லை. "அம்மா! நீ ஏணி வைத்து ஏறிப் பார்க்கிறாயா?" என்றான்.
"ஆகட்டும் பாலு! காலையில் பார்க்கிறேன்!" என்றாள் ஜானகி.
"இல்லை அம்மா! இப்போதே பார்! இல்லாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது!" என்றான் பாலன்.
குழந்தையைத் திருப்தி செய்வதற்காக ஜானகி எழுந்து ஹரிகேன் லாந்தர் விளக்கைப் பெரிது செய்தாள். பாலனை ஏணியின் அடிப்புறத்தைப் பிடித்துக் கொள்ளும்படி செய்துவிட்டு, அதன் மேல் ஏறினாள். உச்சியை அடைந்ததும் உத்தரத்தின் பொந்தில் கையை விட்டாள். அவள் எதிர்பார்த்தது போலவே ஒரு சிறிய பணப்பை இருந்தது. அதைத்தான் பாலன் அந்த உத்தரத்துப் பொந்துக்குள் வைத்திருக்கிறான்.
பணப்பையை எடுத்தபோது அதன் கீழ் வேறு ஏதோ கையில் மெதுவாகத் தட்டுப்பட்டது. துணி மாதிரி இருந்தது. இன்னும் ஏதேனும் வைத்திருக்கிறானோ என்று பார்க்க மறுபடி கையை விட்டுத் துழாவினாள். ஒரு சிறு துணி மூட்டை அகப்பட்டது. அதை எடுத்துப் பார்த்ததும் ஜானகி திக்பிரமை அடைந்தாள்!
ஏணியிலிருந்து அப்படியே விழுந்துவிடாமல் அவள் கீழே இறங்கி வந்ததே ஓர் ஆச்சரியமான விஷயந்தான்!
பொந்திலிருந்து அகப்பட்ட இரண்டு பொருள்களையும் ஹரிகேன் லாந்தர் வெளிச்சத்தில் வைத்துக் கொண்டு ஜானகி பிரித்துப் பார்த்தாள். பாலனும் பார்த்துக் கொண்டுதான் இருந்தான். பாலனுடைய பணப் பையைப் பிரித்த போது, ஒரு நூறு ரூபாய் நோட்டும், எட்டு ரூபாய் நோட்டுகளும் இருந்தன.
எலி கடித்து கொஞ்சம் பொத்தலாகி இருந்த சிறிய துணி மூட்டைக்குள்ளே தகர டப்பா இருப்பது தெரிந்தது. ஜானகி ஆவலுடன் துணியை எடுத்து எறிந்து விட்டு தகர டப்பாவை திறந்து பார்த்தாள். அதற்குள் ஜானகி சேமித்து வைத்திருந்த பத்து பத்து ரூபாய் நோட்டுகளும், எட்டு ரூபாய் வெள்ளிப் பணமும் அப்படியே இருந்தன!
ஜானகி அந்த நோட்டுகளையும் வெள்ளி ரூபாய்களையும் கையினால் துழாவிக் கொண்டு பிரமித்துப் போய் உட்கார்ந்திருந்தாள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருடன் மகன் திருடன் - Thirudan Magan Thirudan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - ஜானகி, பாலன், அம்மா, எழுந்து, கொண்டு, ரூபாய், ஜானகிக்கு, பிறகு, பாலு, துணி, என்றான், தேவதை, உத்தரத்துப், பொந்தில், அந்த, கையை, அவன், படுக்கையில், போது, படுத்துக், வேண்டும், என்ன, மேல், உட்கார்ந்து, குழந்தை, வந்து, பாலனுடைய, கொண்டான்