தெய்வயானை
கள்ளுக்கடைக்குப் போட்டி அதிகம். எடுக்க
முடியவில்லை. சாராயக்கடை மட்டும் எடுத்தேன். வியாபாரம் நன்றாய் நடந்தது.
உத்தியோகஸ்தர்களுக்கு அதிகப் பணம் கொடுத்தேன். ஆனால் என் கையிலும் பணம்
அதிவேகமாகச் சேர்ந்து கொண்டு வந்தது. அடுத்த வருஷம் கள்ளுக்கடை, சாராயக்கடை
இரண்டையும் எடுத்தேன். அப்புக்குட்டி முதலியாருடைய பெண்ணுக்காக நான்
செய்த காரியங்களெல்லாம் அவர் மனதில் பொறாமையைத்தான் உண்டாக்கின. ஏனெனில்
அப்போது அவருடைய கை இறங்கி வந்தது. கடன் அதிகமாயிற்று. "கள்ளுக்கடைக்காரப்
பயல்" என்று என்னைப் பற்றி அவர் அவமதிப்பாய்ப் பேசியதாய்க் கேள்விப்
பட்டேன். அவருடைய அகம்பாவத்தை அடக்குவது எப்படி என்று ஓயாமல் சிந்தித்துக்
கொண்டு வந்தேன். என் எண்ணம் நிறைவேறுவதற்கான ஒரு சம்பவம் விரைவிலேயே
நடந்தது. கடவுள் என் பக்கம் இருக்கிறார் என்று தோன்றிற்று!
ஒரு சமயம் அப்புக்குட்டி முதலியார் தம் குடும்பத்துடன் ஏதோ வியாதியைச் சொஸ்தப்படுத்திக் கொள்ளப் பட்டணத்துக்கு வந்து ஆறுமாதம் தங்கியிருந்தார். இங்கே அவர்களுக்கு பந்துக்கள் பலர் இருக்கிறார்கள். அவர் திரும்ப ஊருக்கு வந்த அன்று அவருடைய ஆள் ஒருவன் சாராயக்கடைக்கு வந்து ஒரு புட்டி சரக்கு வாங்கிக்கொண்டு போனான். எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. பட்டணத்தில் பந்துக்கள் வீட்டில் கற்றுக்கொண்டார் போலும் என்று எண்ணினேன். மூன்று நாள் கழித்து மறுபடியும் அந்த ஆள் வந்து இன்னொரு புட்டி வாங்கிக் கொண்டு போனான்.
அப்போது எனக்குண்டான சந்தோஷத்தை அளவிட முடியாது. "சரி, முதலியார் நமது வலையில் வீழ்ந்தார். அவர் கர்வம் ஒழிந்தது; இந்த ஊரில் நம்மைத் தவிரக் கடன் கொடுப்பார் யாருமில்லை. தெய்வயானை நம்மைத் தப்பி எங்கே போகிறாள்?" என்று இவ்வாறெல்லாம் ஆகாசக் கோட்டை கட்டினேன்.
எல்லாம் நான் எண்ணியபடியே நடந்து வந்தது. ஒரு வருஷத்திற்குள் அப்புக்குட்டி முதலியார் ஊரறிந்த பெருங் குடிகாரர் ஆனார். கடன் விஷம் போல ஏறி வந்தது. ஏராளமான பூமி அவருக்கு இருந்தாலும் வட்டி கொடுப்பது எளிதன்று. நிலத்தை விற்றுக் கடனைத் தீர்ப்பதற்கும் நிலத்தை வாங்குவார் யாருமில்லை. இந்த நிலைமையில் ஒரு கோர்ட்டு வாரண்டு அவர்மீது பிறந்தது. வாரண்டில் தப்புவதற்காகக் கையிலிருந்த சர்க்கார் கிஸ்திப் பணத்தைக் கொடுத்துவிட்டார். இவர் குடிகாரரென்றும், கடன்காரரென்றும் மொட்டை விண்ணப்பத்தின் மூலம் அதிகாரிகளுக்குத் தெரிந்து சோதனைக்கு வந்துவிட்டார்கள். முதலியார் தம் கர்வத்தை எல்லாம் விட்டு என்னிடம் ஓடிவந்தார். என் காலில் விழுந்து கெஞ்சினார். எண்ணூறு ரூபாய் கடன் கொடுத்து அவர் தலைக்கு வந்த விபத்திலிருந்து அவரைத் தப்புவித்தேன்.
நான் கொஞ்சம் குறிப்புக் காட்டியதுதான் தாமதம், முதலியார் தெய்வயானையை எனக்குக் கலியாணம் செய்து கொடுப்பதற்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார். விவாகத்திற்கு நாள் குறிப்பிடுவது தான் பாக்கி. இந்தச் சமயத்தில் அப்புக்குட்டி முதலியார் ஒருநாள் திடீரென்று மரணமடைந்தார். நல்ல திடதேகியாயிருந்த அவர் இப்படி அகால மரணமடைந்ததற்கு மிதமிஞ்சிய குடிதான் காரணமாயிருக்கவேண்டும். இந்தத் துக்க சம்பவத்தினால் என்னுடைய உத்தேசங்களைப் பற்றிப் புனராலோசனை செய்ய வேண்டியதாயிருந்தது. இப்பொழுது நான் தெய்வயானையை விவாகம் செய்து கொண்டால் அவளுடைய குடும்பப் பொறுப்பு முழுவதையும் நானே ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். ஏனெனில் அவர்கள் வீட்டில் வயது வந்த ஆண் மக்கள் யாருமில்லை. அப்புக்குட்டி முதலியாருடைய இரண்டாந்தாரம் சிறு பெண். அவளும், அவளுடைய கைக்குழந்தையும், தெய்வயானையும்தான் வீட்டிலுள்ளவர்கள். இவர்களைக் காப்பாற்றும் பொறுப்பையும், குடும்பத்தின் கடனைத் தீர்த்துச் சீர்ப்படுத்தும் பொறுப்பையும் நானே வகிக்க வேண்டியவனாவேன். இப்படி எல்லாம் மனதில் சந்தேகங்கள் உண்டாயின. ஆனாலும் முடிவில் தெய்வயானையை மணந்துதான் தீர வேண்டும் என்று தீர்மானித்தேன்.
இப்போதெல்லாம் கள்ளு, சாராயக் கடைகளுக்கு நானே நேரில் போவதில்லை. சம்பள ஆள்கள் வைத்துவிட்டேன். அன்றாடம் சாயங்காலத்தில் மட்டும் சென்று கூடுமுதல் தொகையை வாங்கிக் கொண்டு வருவேன். ஒரு நாள் அவ்வாறு சென்றபோது, கிராம முன்சீப்பு வீட்டு வேலைக்காரன் அப்பொழுதுதான் கையில் புட்டியுடன் கடையிலிருந்து வெளியே வருவதைக் கண்டேன். என்னைப் பார்த்ததும் அவன் சாலையோரமாய்ப் பதுங்கிக் கொண்டு சென்றான்.
"இவன் இப்போது யாருக்குச் சாராயம் வாங்கிப் போகிறான்?" என்று எனக்கு ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு குருட்டு எண்ணத்தினால் அதைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று தோன்றிற்று. ஆகவே அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன். அவன் ஊர்த் தெருவின் புறமாய்ச் சென்று அப்புக்குட்டி முதலியாரின் வாயிற்படி வழியாய் நுழைந்தான். இதை முற்றும் ஆராய வேண்டுமென்று எண்ணி, தெருவீதிக்குச் சென்று முதலியார் வீட்டுக்குள் நுழைந்தேன். நடைக்குச் சென்றதும் சிறிது தயங்கி உள்ளே எட்டிப் பார்த்தேன். அப்போது நான் கண்ட காட்சி இடிவிழுந்தாற்போல் என்னைத் திகைக்கச் செய்து விட்டது.
தெய்வயானையும் அவளுடைய சிறிய தாயாரும் ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார்கள். முதலியாருடைய மனைவியின் கையில் சாராயபுட்டி. இரண்டு தம்ளர்களில் ஊற்றி ஒன்றை தெய்வயானையிடம் கொடுத்து மற்றொன்றைத் தான் அருந்த ஆரம்பித்தாள். பலவருஷ காலமாக என் உள்ளத்தில் வளர்ந்து வந்த காதல் அத்தனையும் அந்த ஒரு கண நேரத்தில் விஷமாகிவிட்டது. சொல்ல முடியாத அருவருப்பு எனக்குண்டாயிற்று. சத்தம் செய்யாமல் வெளியே வந்து அவசரமாக வீடு வந்து சேர்ந்தேன்.
என் மனோரதத்தில் இடி விழுந்தது. என் ஆசை எல்லாம் நிராசையாயிற்று. முதலில் அப்புக் குட்டி முதலியார் வீட்டில் சாராயபுட்டி புகுந்ததைப் பார்த்தபோது, நான் ஆசைப்பட்ட பழம் கிட்டிவிட்டது என்று சந்தோஷப்பட்டேன். வீட்டிற்குள் சென்ற அந்த சாராயபுட்டி, பின்னால் செய்த வேலையைப் பார்த்ததும், அந்தப் பழம் விஷமாய்ப் போவதற்கு காரணமாயிற்று. அளவில்லாத துக்கத்துடன் அன்று படுத்தேன். பாட்டன் சொன்ன பழங்கதைகளெல்லாம் நினைவுக்கு வந்தன. நாவல்கள் எல்லாம் ஆபாசமாய்த் தோன்றின.
அதற்குப் பிறகு ஒரு வாரத்திற்குள் கள்ளு, சாராயக் கடைகளைத் தொலைத்துத் தலை முழுகினேன். அக்கடைகளில் சம்பாதித்த சொத்தை எல்லாம் அந்த ஊர்க் கோவிலுக்கும், பஜனை மடத்திற்கும், பள்ளிக்கூடத்திற்குமாகப் பகிர்ந்து எழுதி வைத்தேன். இந்த தர்மங்கள் சரிவர நடப்பதற்கும் ஏற்பாடு செய்தேன். கையில் கொஞ்ச ரூபாய் எடுத்துக்கொண்டு தாயாரும் நானும் இந்தச் சென்னை நகருக்கு வந்து சேர்ந்தோம்" என்று கூறி நண்பர் கதையை முடித்தார்.
‹‹ முன்புறம் | 1 | 2 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தெய்வயானை - Theivayanai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - முதலியார், அவர், நான், வந்து, எல்லாம், அப்புக்குட்டி, கொண்டு, அந்த, வந்த, கடன், வந்தது, நானே, அவளுடைய, சென்று, கையில், சாராயபுட்டி, செய்து, தெய்வயானையை, நாள், வீட்டில், முதலியாருடைய, யாருமில்லை, அவருடைய, அப்போது