தந்தையும் மகனும்
2
மேற்கண்ட சம்பவம் நடந்து எழெட்டு வருஷங்களுக்கு
அப்பால், வடக்கே பண்டரிபுரத்திலிருந்து ஒரு பெரியவர் திருப்பதி மலைக்கு
வந்திருந்தார். அவருக்குச் 'சமர்த்த ராமதாஸ்' என்ற பெயர் வழங்கிற்று.
அவர் ஆஞ்சநேயருடைய அவதாரம் என்றும், பகவானை நேருக்கு நேர் தரிசித்தவர்
என்றும் ஜனங்கள் பேசிக் கொண்டார்கள். ஆறு மாத காலம் அவர் மரக்கிளைகளிலேயே
"ராம், ராம்" என்று ஜபித்துக் கொண்டு காலம் கழித்தாராம்.
அந்த மகானிடம் உபதேசம் பெறுவதற்காகத் தமிழ் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் ஜனங்கள் வந்தார்கள். ஆனால் அவர்களில் அநேகர் இவருடைய உபதேசம் பிடிக்காமல் திரும்பிப் போய்விட்டனர்.
அப்படிப்பட்டவரிடம் ஒரு நாள் கேசவனும், அவனுடைய மகன் திருவேங்கடமும் வந்து சேர்ந்தனர். திருவேங்கடம் இப்போது இருபது வயதைக் கடந்த திடகாத்திர வாலிபனாக இருந்தான்.
கேசவன், ராமதாஸரின் பாதங்களில் விழுந்து, "ஸ்வாமி! இந்த ஏழைகள் இருவரையும் தேவரீரின் சிஷ்யர்களாக ஏற்றுக் கொண்டு அருள் புரியவேண்டும்" என்று இறைஞ்சி வேண்டினான்.
அப்போது திருவேங்கடத்தின் கண்களில் கண்ணீர் துளிப்பதை ராமதாஸர் பார்த்தார். அவனுடைய மார்பில் கையை வைத்துச் சற்று நேரம் அவன் முகத்தை உற்று நோக்கினார். பிறகு, கேசவனைப் பார்த்து, "அப்பா! இந்தப் பிள்ளையாண்டான் உலகத்தைத் துறப்பதற்கு இன்னும் பக்குவம் அடையவில்லையே; இவனை ஏன் அழைத்து வந்தாய்?" என்று கேட்டார்.
அப்போது கேசவன் கண்ணீர்விட்டுக் கதறி அழ ஆரம்பித்தான். அம்மகானுடைய தேர்தல் மொழியால் கொஞ்சம் ஆறுதல் பெற்றதும், தன் மனைவியின் கதியையும், தான் செய்த பிரதிக்ஞையையும் விவரித்தான். பிறகு, "ஸ்வாமி! அந்த விரதத்தை இந்தப் பையன் கெடுத்து விடுவான் போல் இருக்கிறது. எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் ரங்கம் என்று ஒரு பெண் இருக்கிறாள். அவள் எப்படியோ சொக்குப் பொடி போட்டு இவனை மயக்கி விட்டாள். 'ரங்கத்தைக் கலியாணம் செய்து கொள்வேன்; இல்லாவிட்டால் உயிரை விடுவேன்' என்று பிடிவாதம் பிடிக்கிறான். ஸ்வாமிகள் இவன் மனத்தை மாற்றி அருள் புரிய வேண்டும்" என்றான்.
சமர்த்த ராமதாஸர் சிறிது யோசனை செய்துவிட்டுக் கூறினார்: "அப்பா! உன் மகன் மனத்தை மாற்ற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. இவனை அழைத்துக் கொண்டு மகாராஷ்டிரத்துக்குப் போ. அங்கே சிவாஜி மகாராஜா தர்மராஜ்யத்தை ஸ்தாபனம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய சைன்யத்தில் நீயும் இவனும் சேர்ந்து விடுங்கள். அப்போது இந்தப் பையனுடைய மனம் மாறும். மேலும் உங்களைப் போன்ற திடகாத்திர சரீரங்களுக்கு இந்த நாளில் சந்நியாசம் ஏற்றதல்ல. உங்களுடைய ஜன்மதேசத்தின் விடுதலைக்காகவும், ஹிந்து தர்மத்தைக் காப்பதற்காகவும் நீங்கள் யுத்த களம் சென்று போர் புரியவேண்டும்" என்று சொல்லி, இன்னும் பல நல்லுபதேசங்களும் செய்தார். (அவருடைய உபதேசம் பலருக்குப் பிடிக்காமல் போனதன் இரகசியம் இப்போது தெரிகிறதல்லவா?)
ஆனால் கேசவனும் திருவேங்கடமும் அவ்வுபதேசத்தைச் சிரமேற்கொண்டனர். அவர்கள் உடனே புறப்பட்டு இரவு பகலாகப் பிரயாணம் செய்து, பிரதாபக் கோட்டையை அடைந்து, ராமதாஸர் கொடுத்த அடையாளத்தைக் காட்டி, ஸம்ராட் சிவாஜியின் வீர சைன்யத்தில் சேர்ந்தார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தந்தையும் மகனும் - Thanthaiyum Maganum - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - இவனை, செய்து, இந்தப், ராமதாஸர், உபதேசம், அப்போது, கொண்டு