ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம்
2
ஸ்ரீகாந்தன் பிறந்து வளர்ந்து பிங்-பாங்
ஆடிய அந்நகரத்தில் அவ்வருஷ ஆரம்பத்தில், சாத்வீக மறியல் தீவிரமாக நடந்து
கொண்டிருந்தது. சர்க்கார் பிரதிநிதிகள் தங்கள் கடமையைத் தடி கொண்ட மட்டும்
நடத்தி வந்தனர். அவர்கள் இன்னும் பல தீவிரமான நடவடிக்கைகளையும் கைக்கொண்டனர்.
காங்கிரஸ் ஆபீஸ்களையும், தொண்டர் ஜாகைகளையும் பூட்டிவிட்டார்கள். தொண்டர்களுக்குத்
தங்க இடமோ, உண்ண உணவோ கொடுக்கக் கூடாதென்ற உத்தரவைத் தண்டோ ராப் போட்டுப்
பகிரங்கப்படுத்தினார்கள்.
சில நாளைக்கு நகரமே கதிகலங்கிக் கிடந்தது. தூரத்தில் எங்கேயாவது வெள்ளைக் குல்லாவைப் பார்த்துவிட்டால் கிருகஸ்தர்கள் உடனே கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டார்கள்.
இப்படிப்பட்ட அதிகார அமுலை மீறுவதற்குறிய ஆண்மை அந்த நகரில் ஒரே ஒருவருக்குத்தான் இருந்ததென்று வெளியாயிற்று. அந்த ஒருவரோ பெண்ணாய்ப் பிறந்தவராயிருந்தார். அவர் பெயர் ஸ்ரீமதி வஸுந்தரா தேவி.
இந்நகரத்திற்கு ஸ்ரீமதி வஸுந்தராதேவி வந்து சில மாத காலந்தான் ஆகியிருந்தது. அந்நகரின் முனிசிபாலிடியினால் நடத்தப்பட்ட பெண்கள் பள்ளிக்கூடமொன்றுக்குத் தலைமை உபாத்தியாயினியாக அவள் வந்திருந்தாள். வயது இருபது, இருபத்திரண்டு தானிருக்கும். அவளும் அவளுடைய வயது முதிர்ந்த தந்தையும் ஒரு சிறிய தனி வீட்டில் குடித்தனம் இருந்தார்கள். ஹோட்டலிலிருந்து சாப்பாடு வரவழைத்துக் கொண்டு சாப்பிட்டார்கள். வஸுந்தரா பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கும் சமயங்களில், அவள் தகப்பனார் ஒரு பழைய பிடிலை வைத்துக் கொண்டு அப்பியாசம் செய்து கொண்டிருப்பார்.
இவர்களுடைய வீட்டு வாசலில் ஒரு நாள் தடியடியால் நொந்து, பசியினால் மெலிந்த இரண்டு சத்தியாக்கிரஹத் தொண்டர்கள் வந்து சேர்ந்தார்கள். அச்சமயம் கிழவர் பிடில் அப்பியாசம் செய்ததைக்கூட அவர்கள் பொருட்படுத்தாமல், திண்ணையில் சோர்ந்து விழுந்தார்கள். ஏறக்குறைய அதே சமயத்தில் பள்ளிக்கூடத்திலிருந்து வஸுந்தரா திரும்பி வந்தாள். ஊரில் நடப்பதெல்லாம் அவள் கேள்விப் பட்டிருந்தாள். இதனால் ஏற்கனவே அவள் மனம் இளகியிருந்தது. இப்போது நேருக்கு நேர் அத்தொண்டர்களைப் பார்த்ததும் அவளால் சகிக்க முடியவில்லை. அவர்களை உள்ளே அழைத்துச் சென்று தங்களுக்கு வைத்திருந்த ஹோட்டல் சாப்பாட்டை அவர்களுக்கு இட்டாள்.
இந்தச் செய்தி நகரமெங்கும் பரவியது. அன்று முழுதும் எல்லாரும் இதைப் பற்றியே பேசினார்கள். டவுன் ஹால் கிளப்பில் பிங்-பாங் ஆடுமிடத்தில் கூட இந்தப் பேச்சு எட்டிற்று. "இதற்குத்தான் தைரியம் வேண்டுமென்கிறது. தைரியமில்லாவிட்டால் ஒருவன் என்ன மனுஷனோடு ஸார், சேர்த்தி? இத்தனைக்கும் அவள் ஒரு பெண் பிள்ளைதான். இந்த ஊரில் எந்த மீசை முளைத்த ஆண்பிள்ளைக்காவது அவளுடைய தைரியம் இருந்ததா? நான் கேட்கிறேன்" என்று ஒருவர் ஆவேசமாய்க் கேட்டார். இதெல்லாம் ஸ்ரீகாந்தனுடைய காதில் விழுந்தது. ஆனால் மனத்தில் இலேசாகத்தான் பதிந்தது. உண்மையில் அவன் அதைப் பற்றிச் சிறிதாவது சிரத்தை கொண்டான் என்று சொல்வதற்கே இல்லை.
இரண்டு வாரங்கழித்து அதே மனுஷர் வஸுந்தரா என்னும் பெயரை மறுபடி பிரஸ்தாபித்தபோதுதான் ஸ்ரீகாந்தன் சிறிது கவனிக்கத் தொடங்கினான். "கேட்டயளா ஸார்! இன்று பெரிய மீட்டிங் கூடப் போகிறதாம். அதில் வஸுந்தரா தேவி தேசிய கீதம் பாடப் போகிறாளாம்" என்றார் அந்தச் சினேகிதர்.
"அதென்ன, ஸார்! புதுப் பெயராயிருக்கிறது? அவள் வங்காளியா, குஜராத்தியா?" என்று ஸ்ரீகாந்தன் கேட்டான்.
"அதுதானே வேடிக்கை? அவள் தமிழ்நாட்டு ஸ்திரீ தான்! பெயரை அப்படி மாற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் தகப்பனார் பெயர் ராமகிருஷ்ணய்யர். தகப்பனும் பெண்ணுந்தான் தனியாக வசிக்கிறார்கள்."
"நிஜமாகவா? எதற்காக அப்படிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டாள்? அவர்கள் யார்? எந்த ஊர்?"
"அதெல்லாம் ஒன்றும் தெரியாது. அவர்களுடைய பூர்வீகம் பெரிய மர்மமாயிருக்கிறது. அவளுக்குக் கல்யாணமாகவில்லையென்கிறார்கள் சிலர். புருஷன் செத்துப் போய்விட்டான் என்கிறார்கள் சிலர். புருஷன் எங்கேயோ இருக்கிறான் என்று வேறு சிலர் சொல்கிறார்கள். மொத்தத்தில் ரொம்பக் கஷ்டப்பட்டவர்கள் என்று தெரிகிறது."
ஸ்ரீகாந்தன் அன்று பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தான். அந்தப் பொதுக்கூட்டம், காந்தி-இர்வின் ராஜி உடன்படிக்கையைக் கொண்டாடுவதற்காகக் கூட்டப் பெற்றது. வஸுந்தரா தொண்டர்களுக்கு அன்னமளித்த மறுநாளே, மகாத்மா விடுதலையடைந்து வைஸ்ராயின் மாளிகைக்குப் பிரயாணமானார். இது காரணமாகவே வஸுந்தராவின் மீது நடவடிக்கை எதுவும் அதிகாரிகள் எடுக்கவில்லை. சில நாளைக்கெல்லாம் ராஜி உடன்படிக்கையில் காந்திமகானும் வைஸ்ராய் இர்வினும் கையொப்பமிட்டார்கள். இந்தச் சந்தோஷச் செய்தியின் நிமித்தம் அந்த ஊரில் நடந்த கொண்டாட்டங்களில், ஸ்ரீமதி வஸுந்தரா நடுநாயமாக விளங்கினாள். அந்தப் பிரமாண்டமான ஜனசமுத்திரத்தின் மத்தியில் வஸுந்தரா தேசியகீதம் பாட ஆரம்பித்ததும் ஏதோ மந்திரசக்தியினால் சமுத்திரம் திடீரென்று அலை ஓய்ந்தது போல், நிசப்தம் ஏற்பட்டது. சென்ற இரண்டு மாத காலமாக யாரைப் பற்றி இடைவிடாமல் பேசியும் சிந்தித்தும் வந்தார்களோ, அப்படிப்பட்டவளை முதன் முதலாக நேருக்கு நேர் பார்க்கும்போது, அதிலும் அவள் சௌந்தர்யமும், கம்பீரமும், நாகரீகமும் வாய்ந்த யௌவன ஸ்திரீயாகவும் இருந்துவிட்டால் எவரும் பேச்சிழந்து பிரமித்து நிற்பதில் வியப்பில்லையல்லவா? ஸ்ரீகாந்தனும் இப்படித் தன் வசமிழந்து நின்றான்.
அன்று பொதுக்கூட்டத்தில் பேசிய பிரசங்கி ஒருவராவது ஸ்ரீமதி வஸுந்தரா தேவியின் துணிவைக் குறிப்பிட்டு அதை உதாரணமாக எடுத்துக் காட்டாமல் முடிக்க வில்லை. மத்தியில் ஓர் உற்சாகமுள்ள இளைஞன் எழுந்திருந்து, "ஸ்ரீமதி வஸுந்தரா தேவி நாலு வார்த்தையாவது பேசவேண்டுமென்று இங்கு அனேகருடைய கோரிக்கை" என்று இடிமுழக்கம் போன்ற குரலில் கூவினான். உடனே அந்தப் பெரிய கூட்டத்தின் எல்லாப் புறங்களிலிருந்தும் காது செவிடுபடும்படியான கோஷம் எழுந்தது. மேடையிலிருந்த தலைவர்களும் வற்புறுத்தியதன் பேரில் வஸுந்தரா எழுந்து ஒரு கும்பிடு போட்டு விட்டுப் பின்வரும் ஐந்தாறு வாக்கியங்களைச் சொன்னாள்: "சகோதரிகளே, சகோதரர்களே! நீங்கள் எல்லாரும் இவ்வளவு தூரம் என்னைக் கௌரவப்படுத்தியதற்காக மிகவும் வந்தனம். நீங்கள் எனக்குச் செய்யும் கௌரவத்தைத் தேசத் தொண்டுக்குச் செய்யும் கௌரவமாகவே நான் பாவிக்கிறேன். வாஸ்தவத்தில் நான் அப்படிப் பிரமாதமான காரியம் ஒன்றும் செய்துவிடவில்லை. பசித்து வந்தவர்களுக்குச் சாப்பாடு போடுவதென்பது நம்முடைய புராதன தர்மம். அதை நாம் ஒரு நாளும் கைவிட முடியாது. பசியுடன் என்னுடைய வீட்டு வாசலுக்கு வந்த இரண்டு தொண்டர்களுக்குச் சாப்பாடு போட்டதில் நான் என்னுடைய கடமையைச் செய்தேனே தவிர வேறொன்றுமில்லை. அத்தகைய சந்தர்ப்பம் உங்களுக்கு வந்திருந்தால், நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே உங்கள் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் கிடையாது. வந்தே மாதரம், மகாத்மா காந்திக்கு ஜே!"
அன்று பொதுக்கூட்டம் முடிந்து திரும்பிப் போகும் போது எல்லோரும் வஸுந்தராவைப் பற்றியே பேசிக் கொண்டு போனார்களென்று சொல்ல வேண்டியதில்லை.
"ஒரு சூடு கொடுத்தாள், பார்த்தயளா, ஸார்! 'சந்தர்ப்பம் வந்தால் நீங்கள் ஒவ்வொருவரும் அப்படியே செய்திருப்பீர்கள், என்று சொன்னாளே! பயந்து கதவை மூடிக் கொண்ட பயல்களுக்கெல்லாம் அது மனதிலே நன்றாய்த் தைத்திராதா?" என்றார் ஒருவர்.
"பிறத்தியாரைச் சொல்லப் போய்விட்டீரே! நீரும் நானும் என்ன செய்து விட்டோம்?" என்றார் இன்னொருவர்.
"நான் சொல்கிறேன், கேளுங்கள்; இனிமேல் நாமெல்லாம் வளையல் போட்டுக் கொண்டு வீட்டுக்குள்ளேயே இருந்துவிட வேண்டியதுதான்" என்று மிகவும் உற்சாகத்தோடு ஒருவர் கூறினார்.
"பாருங்களேன், ஸார்! ஒரு புடவை உடுத்திய ஸ்திரீக்குள்ள தைரியம் இந்த ஊரிலே வேஷ்டி கட்டிய ஆண் பிள்ளைகளுக்கெல்லாம் இல்லையே? என்ன பிரயோஜனம்?" என்று ஒருவர் வைராக்கியமாய்ப் பேசினார்.
"அவள் புடவை உடுத்திக் கொண்டிருந்தாளே, அது ஒன்று போதும்! நம் வீடுகளிலும் தரித்திரங்கள் பதினெட்டு முழத்தைப் பிரி மாதிரி சுத்திக்கிறதே!" என்றார் இன்னும் பரவச நிலையிலிருந்த மற்றொருவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஸ்ரீகாந்தன் புனர்ஜன்மம் - Srikandhan Punarjenmam - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - வஸுந்தரா, அவள், நான், ஸ்ரீமதி, ஸார், ஒருவர், என்றார், நீங்கள், ஸ்ரீகாந்தன், அன்று, கொண்டு, இரண்டு, தேவி, சிலர், அந்த, பெரிய, அந்தப், சாப்பாடு, தைரியம், என்ன, ஊரில், பெயரை