புஷ்பப் பல்லக்கு
ஸ்நான தினத்தன்று ஊர்வலம் நடத்த வேண்டிய
விஷயமாக யோசிப்பதற்கு ஓர் ஆலோசனை சபை கூடிற்று. மோட்டார் கிடைக்காது
என்று தெரிந்த போது தாசில்தாரிணிக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவில்லை.
"இது தெரிந்திருந்தால் டவுனுக்கே போயிருக்கலாமே?" என்று கூடச் சொன்னாள்.
முயற்சியில் ஒன்றும் குறைவில்லை. சுற்றுப் பக்கம் பத்து மைல் தூரத்தில்
உள்ள பெரிய மிராசுதார்களின் மோட்டார்களுக்கெல்லாம் ஆள் விடப்பட்டது.
இவர்களெல்லாம், நெல் கலம் கால் ரூபாய் விற்றபோது மோட்டார் வாங்கினார்கள்.
இப்போது அவை கொட்டகைகளில் தூங்கின. ஒன்றுக்கு டயர் இல்லை. ஒன்றுக்கு
கியர் இல்லை. மற்றொன்றின் எஞ்சின் பழுது. எல்லாம் சரியாயிருந்தாலும்
டிரைவர் கிடையாது. இப்படியாக மோட்டார் இல்லையென்று தீர்ந்து போன பிறகு,
ஒருவர் "பழைய நாளைப் போல் புஷ்பப் பல்லக்கு வைத்தால் என்ன?" என்று கேட்டார்.
"பேஷ்! சரியான யோசனை" என்றாள் அம்மாள். உடனே, வீராசாமி நாயுடுக்கு ஆள்
விட்டார்கள். நாயுடு வந்து அச்சாரம் வாங்கிக் கொண்டு சென்றார்.
புதன்கிழமை ஸ்நானம், ஊர்வலம் எல்லாம் நடைபெற வேண்டும். கிராமவாசிகள் எல்லோரும் இந்த வைபவத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். புஷ்பப் பல்லக்குக் காட்சி அவர்கள் பார்த்து இன்றைக்குப் பதினைந்து வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வீராசாமி நாயுடுவின் உற்சாகத்தையோ சொல்ல வேண்டியதில்லை. புஷ்பத்துக்கு அவன் அச்சாரம் கொடுக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டான். ஆகவே, செவ்வாய்க்கிழமை இரவு திண்ணையில் படுத்துக் கொண்டு அவன் மானஸீகமாய்ப் புஷ்பப் பல்லக்கு ஜோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கிராம முனிசீப் கிண்டாமணி முதலியார் வந்து, "ஓய், வீராசாமி நாயுடு! பல்லக்கும் வேண்டாம்; பாடையும் வேண்டாம்" என்று சொன்னதும், நாயுடுவுக்கு எவ்வளவு ஏமாற்றம் ஏற்பட்டிருக்குமென்று நீங்களே யோசியுங்கள்.
மறுநாள் அதிகாலையில் தாசில்தார் தமது பரிவார தேவதைகள் சமேதராய் வில் வண்டிகளில் பிரயாணமானார். ஊரார் எல்லோரும் வியப்பும் ஏமாற்றமும் அடைந்தார்கள். விசாரித்ததில் விஷயம் பின்வருமாறு என்று தெரிய வந்தது:-
ஜில்லா கலெக்டர் பல்டன் துரை அணைக்கட்டைப் பார்வையிடுவதற்காக வருவதாகவும், வழியில் கோவிந்தகுடி முஸாபரி பங்களாவில் புதன்கிழமை மத்தியானம் ஜாகை போடுவாரென்றும், முதல் நாள் சாயங்காலம் செய்தி வந்ததாம். ஆகவே, தாசில்தாரிணி தன்னுடைய உத்தேசத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. சௌபாக்கியவதி செல்லக்கிளியின் ஜாதகத்தில் புஷ்பப் பல்லக்கு ஊர்வலம் செல்லும் பாக்கியம் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
புதன்கிழமை அதிகாலையில் தாசில்தாரையும், அவருடைய பரிவாரங்களையும் மூட்டை கட்டி அனுப்பியதும், ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஏதோ கணக்கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து ரூபாய் அணா பைசாக்களுடன் மல்லுக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்குக் காரணம், லஞ்ச நாத சாஸ்திரியார் தம்முடைய காம்ப்புக்காக மொத்தம் கிராமாதிகாரிகளிடமிருந்து வசூலான தொகை, செலவான தொகை இவைகளுக்குக் கணக்கும், பாக்கித் தொகையும் தம்மிடம் அடுத்த காம்ப்பில் கொண்டு வந்து ஒப்புவிக்க வேண்டுமென்று அவருக்குக் கட்டளையிட்டிருந்ததுதான். மிச்சப் பணத்திலிருந்து ஒரு நிலைக் கண்ணாடி, ஒரு ஷேவிங் செட், ஒரு செண்ட் பாட்டில், இரண்டு பவுண்ட் சாக்லேட், ஒரு செட் பிரெஞ்சுப் படுக்கையறைப் படங்கள் வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று தாசில்தார் சொல்லியிருந்தார்.
உபயவே தீராத்துயரமய்யங்கார் இவ்வாறு கணக்குப் போட்டுக் கொண்டிருக்கையில் கர்ணங்களும், கிராம முனிசீப்புகளும் மூலைகொருவராய் ஓடிக் கொண்டிருந்தார்கள். இந்தத் தடவை அவர்கள் பெரிய கலெக்டர் பல்டன் துரையின் திருக்குஷ்டியை நிரப்புவதற்காகக் கோழி முட்டைகளையும், குள்ள வாத்துகளையும் தேடிச் சென்றார்கள். அவர்களுடைய அவசரத்தில், அன்னங்களைக் கூட வாத்துக்கள் என்று அவர்கள் நினைத்து விடக் கூடுமாதலால், நேயர்களே! சீக்கிரம் எங்கேயாவது ஓடி ஒளிந்து கொள்ளுங்கள்.
ஆனந்தவிகடன் 22.7.1934
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
புஷ்பப் பல்லக்கு - Pushpa Pallaaku - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கொண்டு, புஷ்பப், புதன்கிழமை, வந்து, பல்லக்கு, மோட்டார், ஊர்வலம், வீராசாமி