பிரபல நட்சத்திரம்
முன்னுரை
நுரையும் நொங்குமாகப் போகும் வேகவதி ஆறு
'வா வா' என்று என்னை அழைத்துக் கொண்டிருக்கிறது. நதியில் அடைக்கலம் புகுவதற்கு
அமாவாசை இரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவரையில் காலத்தைப்
போக்கியாக வேண்டும். அதுவரை என் அறிவையும் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும்.
வேலையில்லாமல் சும்மா இருந்தால் மனம் அதிகமாகக் குழம்புகிறது. தூங்காமல்
விழித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பயங்கரமான அந்தகாரம் வந்து சூழ்கிறது.
ஆகா! அமைதியான நல்ல தூக்கம் தூங்கி எத்தனை காலமாயிற்று.
ஆம், ஏதாவது வேலையில் மனத்தைச் செலுத்த வேண்டுமென்பதற்காகத்தான் என் கதையை எழுதத் தொடங்குகிறேன். ஒரு வருஷத்துக்கு முன்பு நான் 'பிரபல நட்சத்திர'மாயிருந்த காலத்தில் பத்திரிகையில் என்னைப் பற்றி அடிக்கடி ஏதாவது செய்தி பிரசுரித்துக் கொண்டிருப்பார்கள். நான் எந்த தெருவில் எந்த வீட்டில் இருக்கிறேன்; அது சொந்த வீடா, வாடகை வீடா, எத்தனை ரூபாய் வாடகை, தினம் எவ்வளவு தடவை நான் காப்பி சாப்பிடுகிறேன், என்றெல்லாம் கேள்விகளும் பதில்களும் வெளியாகிக் கொண்டிருக்கும். அதெல்லாம் அந்தக் காலம்.
இப்போது 'பிரபல நட்சத்திர'ப் பதவியிலிருந்து நான் விழுந்து ஒரு வருஷத்துக்கு மேலாகி விட்டது. என் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் பற்றித் தெரிந்து கொள்வதில் இப்போது யாருக்காவது சிரத்தை இருக்குமா என்பதை நான் அறியேன். இந்த எனது துயர சரித்திரத்தை, சினிமா நட்சத்திரமாக விரும்பும் எந்தக் குடும்ப ஸ்திரீகளாவது படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு நிச்சயமாய் இது உபயோகமாயிருக்குமென்று நம்புகிறேன். இதை எழுதி முடிக்கும் வரையில் பகவான் என்னுடைய அறிவை மட்டும் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பிரபல நட்சத்திரம் - Prabala Nakchatiram - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - நான், வேண்டும்