லஞ்சம் வாங்காதவன்
3
"மிஸ்டர் பராங்குசம்! உடனே புறப்படும்!"
என்ற பேச்சைக் கேட்டுத் திடுக்கிட்டவராய்ப் பராங்குசம் நிமிர்ந்து பார்த்தார்.
எதிரே சுவர் ஓரத்தில் ஓர் கறுத்த உருவம் நின்றது.
சொல்ல முடியாத பீதியினால் மிஸ்டர் பராங்குசத்தின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.
தட்டுத் தடுமாறி, "நீ யார்?" என்று கேட்டார்.
"மேலேயிருந்து உத்தரவு கொண்டு வந்திருக்கிறேன். உம்மைக் கையோடு அழைத்துக் கொண்டு வரும்படி கட்டளை."
மேலே இருந்து உத்தரவு வரும் என்பது பராங்குசம் எதிர்பார்த்தது தான். ஆனால், இந்த வேளையில் இந்த விதத்தில் இப்படித் திடீரென்று உத்தரவு வரும் என்பதாக அவர் எதிர்பார்க்கவில்லை.
பராங்குசத்தின் மார்பு தட், தட் என்று அடித்துக் கொண்டது.
"ஏன் தாமதம்? கிளம்பும்!"
பராங்குசம் ஈனக் குரலில், "எனக்கு இப்போது வர சௌகரியம் இல்லை" என்றார்.
"உம்முடைய சௌகரியத்தைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உத்தரவு அப்படியில்லை."
பராங்குசத்தின் ஆரம்ப பீதி குறைந்தது, வர வரத் துணிச்சல் ஏற்பட்டது.
"இந்தத் தஸ்தாவேஜிக் கட்டுகளில் எல்லாம் நான் கையெழுத்துப் போட்டு ஆக வேண்டும்."
"நீர் போட வேண்டியதில்லை; உமக்குப் பதில் வருகிறவர் போட்டுக் கொள்வார்."
"முக்கியமான சொந்த ஜோலிகள் இருக்கின்றன."
"இனிமேல் உமக்கு ஒரு சொந்த ஜோலியும் இல்லை."
பராங்குசம் அப்போது மேஜை டிராயரை இழுத்து ஒரு கத்தை நூறு ரூபாய் நோட்டுக்களைக் கையில் எடுத்தார்.
"இதோ பத்தாயிரம் ரூபாய்; திரும்பிப் போய் நான் வீட்டில் இல்லையென்று சொல்லிவிடும்."
"முடியாது, லஞ்சமெல்லாம் உம்முடனே இருக்கட்டும்."
"இருபதனாயிரம் தருகிறேன்."
"பணப்பேச்சே வேண்டாம்."
"இந்த டிராயரில் உள்ள ஐம்பதினாயிரம் ரூபாயையும் எடுத்துக் கொள்ளும்."
"நான் லஞ்சம் வாங்குவது கிடையாது. கிளம்பும் உடனே."
பராங்குசம் சற்று யோசித்து விட்டு, "கொஞ்சம் பொறுத்துக் கொள்ளும்; என் பிள்ளையப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன்" என்றார்.
"முடியாது; நேரம் இல்லை."
"அரைமணி நேரம் கொடும். மேல் மாடிக்குப் போய் என் கடைக் குட்டிக் குழந்தையை ஒரு தடவை கண்ணால் பார்த்து விட்டு வருகிறேன்."
"குழந்தையா? நீர் செய்த அக்கிரமங்களினாலே இன்று இந்த ஜில்லாவில் இருபதினாயிரம் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன."
"இந்த ஐம்பதினாயிரம் ரூபாயும் கொடுத்து இரண்டு லட்சம் ரூபாய்க்குச் செக்கும் தருகிறேன். பத்து நிமிஷமாவது கொடும்."
"முடியாது. ஒரு நிமிஷம் கூடக் கொடுக்க முடியாது."
"அப்படியானால் இந்தாரும்" என்று சொல்லி, மிஸ்டர் பராங்குசம் சடக்கென்று மேஜையின் இன்னொரு டிராயரைத் திறந்தார். அதிலிருந்து ஒரு கைத் துப்பாக்கியை எடுத்து எதிரே நீட்டினார்.
"இப்போது என்ன சொல்கிறீர்?" என்று கூறி மிஸ்டர் பராங்குசம் பயங்கரமாகச் சிரித்தார். அவருடைய சிரிப்பின் எதிரொலியே போல் அந்தக் கறுத்த உருவமும் சிரித்தது.
அடுத்த விநாடி 'படீர்' என்று கைத் துப்பாக்கி வெடித்தது. மிஸ்டர் பராங்குசம் மேஜை மேல் சாய்ந்தார். அவருடைய ஆத்மா தன் நீண்ட பிரயாணத்தைத் தொடங்கிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
லஞ்சம் வாங்காதவன் - Lanjam Vaangaathavan - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - பராங்குசம், முடியாது, மிஸ்டர், உத்தரவு, நான், பராங்குசத்தின், இல்லை